‘சீனா எப்போதும் இலங்கைக்கு ஆதரவளிக்கும்’ சீன வெளிவிவகார அமைச்சர்

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் ஜி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தார்.

ஜனாதிபதியின் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், இலங்கைக்கு மீண்டும் பயணம் செய்துள்ளமை குறித்து மகிழ்ச்சி வெளியிட்டுள்ள சீன வெளிவிவகார அமைச்சர், நெருக்கமான நண்பன் என்ற அடிப்படையில் சீனா எப்போதும் இலங்கைக்கு ஆதரவளிக்கும் என தெரிவித்துள்ளார்.
கோவிட் தடுப்பூசி திட்டத்தினை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காக சீன அரசாங்கம் தொடர்ச்சியாக சினோபார்ம் தடுப்பூசியினை வழங்கியமைக்காக ஜனாதிபதி நன்றியை தெரிவித்துள்ளார்.

கொரோனாவினால் உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடிக்கான தீர்வின் ஒரு பகுதியாக கடனை திருப்பி செலுத்துவதற்கான திறன் குறித்து கவனம் செலுத்தினால் அது நாட்டிற்கு பெரும் நிம்மதியாக அமையும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்த சந்திப்பின் போது கேட்டுக்கொண்டுள்ளார்.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களிற்கு மலிவுவிலையில் சந்தைக் கடனை வழங்கும் முறையை பெற முடிந்தால் தடைகள் இன்றி தொழில்துறையை நடத்துவது இலகுவாகயிருக்கும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

சீனா எமது உயிர் தோழன் – பிரதமர் மஹிந்த

‘சீனா எமது உயிர் தோழன். வரலாற்றில் எவ்விடத்திலும் எம்மத்தியில் மனக்கசப்புகள் நேர்ந்ததில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையே இராஜதந்திர உறவு ஏற்படுத்தப்பட்டு 65 ஆண்டு பூர்த்தி மற்றும் புகழ்பெற்ற இறப்பர் அரிசி ஒப்பந்தத்திற்கு 70 ஆண்டுகள் பூர்த்தியாகின்றமையை முன்னிட்டு சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் யீயின் பங்கேற்புடன் கொழும்பு துறைமுக நகரில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டிருந்தபோதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் யீ ஆகியோர் இதன்போது இலகுரக படகு முற்றத்தின் முன்னால் அமைக்கப்பட்டுள்ள நடைபாதையை பொதுமக்கள் பாவனைக்காக திறந்து வைத்தனர்.

இந்நடைபாதையில் பொதுமக்கள் நடைபயிற்சியில் ஈடுபடக் கூடியதுடன், காலி முகத்திடலில் ஜனாதிபதி செயலக அலுவலகத்திற்கு முன்னால் இதற்கான தற்காலிக நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது.

நடைபாதையின் நிறைவில் வளைவான வடிவத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள உலோக தொங்கு பாலம் வரை பொதுமக்கள் பயணிக்கக்கூடியதுடன், தினமும் முற்பகல் 9.00 மணிமுதல் பிற்பகல் 6.00 மணிவரை அங்கு தங்கியிருக்கலாம்.

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் எண்ணக்கருவிற்கமைய இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவின் 65 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு ‘இலங்கை – சீன நட்புறவு படகோட்டப் போட்டி’ இதன் ஒரு அங்கமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இலங்கைக்கான சீன தூதுவர் அலுவலகத்துடன் இணைந்து ஆரம்பித்து வைக்கப்பட்ட போட்டிக்கான வெற்றிக் கிண்ணம் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் யீ யினால் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவிடம் வழங்கி வைக்கப்பட்டது.

அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் இதன்போது 65 எனக் குறிப்பிடப்பட்ட ‘இலங்கை-சீன நட்புறவு படகோட்டப் போட்டி’க்கான நினைவு டீ-சேர்ட் ஒன்றினை வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் யீக்கு பரிசளித்தார்.

கொழும்பு துறைமுக நகரில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் விளையாட்டுத்திறன் இணைக்கப்பட்டமை இருநாட்டு பிரதிநிதிகளதும் பாராட்டிற்கு உட்பட்டது.

குறித்த நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆற்றிய முழுமையான உரை வருமாறு,

சீன வெளியுறவுத்துறை அமைச்சரை அன்புடன் வரவேற்கிறேன். அவரை எங்களின் மிக நெருங்கிய நண்பராக வரவேற்கிறோம். வரலாற்று ரீதியாக இலங்கையர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றிய ஒரு அரசின் பிரதிநிதியாகவும் அவரை நாங்கள் வரவேற்கிறோம்.

நமக்கும் சீனாவுக்கும் இடையிலான இந்த உறவு நீண்ட வரலாறு கொண்டது. உலகம் முழுவதும் வர்த்தகம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலேயே சீன அரசாங்கம் இலங்கைக்கு வந்து வர்த்தகம் செய்ததாக சாட்சிகள் உள்ளன.

உங்கள் நாட்டிலிருந்து புனித யாத்திரைக்கு வந்த ஃபாஹியன் துறவி பதித்த பதிவுகள் இன்றும் நம் வரலாற்றின் வண்ணமயமான பகுதியாகும். அன்று பாஹியன் துறவி மிகுந்த மகிழ்ச்சியுடனும் மரியாதையுடனும் எமது நாட்டுக்கு வந்ததைப் போன்று இன்றும் சீன மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இலங்கைக்கு வருகின்றனர்.

சீனா நமது உயிர் தோழன். வரலாற்றில் எவ்விடத்திலும் எம்மத்தியில் மனக்கசப்புகள் நேர்ந்ததில்லை. அதனால் நமது நாடுகள் எப்போதுமே மிகவும் சாதகமான கொடுக்கல்வாங்கல்களை செய்துகொண்டிருக்கின்றன.

அன்று ஏற்படுத்தப்பட்ட இறப்பர்-அரிசி ஒப்பந்தத்தை நம்மவர்கள் இன்னும் நினைவில் வைத்திருக்கிறார்கள். ‘எமது இரப்பர் உங்களிடமிருந்து அரிசி’. அதேபோன்று இலங்கையில் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டபோது, அப்போதைய பிரதமர் சௌசன்லாய் இலங்கைக்கு தேவையான உணவுப் பொருட்களை அனுப்பி மிகவும் மதிப்புமிக்க செய்தியை அனுப்பினார்.

‘உங்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை நீங்களே உற்பத்தி செய்துக் கொள்ளுங்கள். அது சுதந்திரத்திற்கான வழி.’

நாம் அப்பாதையைக் கடைப்பிடித்தோம். இன்று உங்கள் நாடும் முழு உலகமும் ஏற்றுக்கொள்ளும் இயற்கை விவசாயத்தை நாங்கள் ஆரம்பித்துள்ளோம்.

கொரோனா தொற்றால் அது தடைப்பட்ட போதிலும், முழு உலகிற்கு ஒரு முக்கிய முன்மாதிரியாக விளங்கவே முயற்சித்தோம்.

சௌசன்லாய் ஆரம்பித்த அணிசேரா கொள்கையை நாங்கள் அன்புடன் வரவேற்கிறோம். அந்தக் கொள்கை நம்மைப் போன்ற நாடுகளுக்குப் பெரும் பலமாக இருந்தது.

அதேபோன்று 2013 ஆம் ஆண்டு ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கைக்கு எதிராக ஐ.நா பொதுச் சபையில் பிரேரணையை முன்வைத்த காலமும் எனக்கு நினைவிருக்கிறது. பெரிய வல்லரசாக சீன அரசு எங்களுக்காக முன்நின்றது. அது எமது நாடு போன்று ஆசிய நாடுகளின் சுதந்திரத்திற்காக சீனா செய்த மாபெரும் தியாகம் என்றுதான் கூற வேண்டும்.

உங்கள் நாடு கெரோனா தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டது எனக்கு நினைவிருக்கிறது. அந்நேரத்தில் ஒரு சீன பெண் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு நம் நாட்டில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் குணமடைய வேண்டும் என நம் நாட்டு மக்கள் நட்புடன் பிரார்த்தித்தனர். உங்கள் நாடு கொரோனா தொற்றுநோயை மிகச் சிறப்பாகக் கட்டுப்படுத்தி உலகிற்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது. விரைவில் தடுப்பூசியை உருவாக்கி உலகிற்கு தைரியம் அளித்தனர். முதல் சுற்றிலேயே உங்கள் சீன தடுப்பூசியை நாங்கள் நம்பியிருந்தோம்.

அந்தத் தருணத்தில் எமது ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து எமது சார்பாக செய்த தியாகம் எமது மக்களுக்கு பெரும் பலமாக அமைந்தது என்றே கூற வேண்டும்.

அத்தகைய நண்பரின் எதிர்கால வளர்ச்சி குறித்து நாம் மகிழ்ச்சியுடன் பார்த்திருக்கின்றோம். சீன அரசாங்கமானது எமக்கு போன்றே உலகிற்கு அந்நாடுகளின் சுதந்திரத்திற்கு மதிப்பளித்து உதவி செய்கிறது. நிபந்தனைகளை விதித்து தலையிடும் கொள்கை சீனாவிடம் இல்லை. எங்களைப் போன்ற நாடுகள் அத்தகைய கொள்கையையே எதிர்பார்க்கின்றன.

எனவே, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவிற்கு நாங்கள் பெருமையுடன் வாழ்த்துகிறோம். “Belt and road” என்ற எண்ணக்கரு நமது நட்பை மேலும் மேம்படுத்தும்.

வெளியுறவுத்துறை அமைச்சர் அவர்களே, சீன-இலங்கை இராஜதந்திர உறவுகளின் 65ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நாம் அண்மையில் நினைவு நாணயம் ஒன்றை வெளியிட்டோம் என்பதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகின்றேன். நட்பின் அடையாளமாக அதைச் செய்தோம்.

அத்துடன், இலங்கையை பொருளாதார கேந்திர நிலையமாக அபிவிருத்தி செய்வதற்காகவே துறைமுக நகரமொன்றை நிர்மாணிப்பதற்கு நாம் எதிர்பார்த்தோம்.

இதற்கு சீன அரசாங்கத்திடம் இருந்து நாங்கள் பெற்ற ஒத்துழைப்பை நினைவுகூர்வதுடன், சீன அரசாங்கத்துடனான நட்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் உங்கள் வருகையை நாம் காண்கிறோம் என கௌரவ பிரதமர் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அமைச்சர்களான நாமல் ராஜபக்ஷ, பந்துல குணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, இராஜாங்க அமைச்சர்களான பியல் நிசாந்த, தாரக பாலசூரிய, பாராளுமன்ற உறுப்பினர்களான பிரேமநாத் சீ தொலவத்த, முன்னாள் சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சீன வர்த்தக பிரதி அமைச்சர் க்வான் கெமின், உதவி வெளியுறவுத்துறை அமைச்சர் வு ஜின்ஹொங், இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென் ஹொங், மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், பிரதமரின் செயலாளர் காமினி செனரத் உள்ளிட்ட சீன பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Posted in Uncategorized

சுசிலுக்குக் கிடைத்த அதிர்ஷ்ட சீட்டு எனக்கும் விரைவில் – சிறிசேன

தெல்கந்த சந்தைக்குச் சென்றவுடன் சுசில் பிரேம ஜயந்தவுக்கு 24 மணித்தியாலங்களில் அதிர்ஷ்ட சீட்டு கிடைத்துள்ளது என்றும் நாடு முழுவதும் சென்று திரும்பும் போது தனக்கும் அதிர்ஷ்டச் சீட்டு கிடைக்கும் என்றும் முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலைமையை உற்று நோக்கினால் சிறிமாவோ பண்டாரநாயக்க காலத்தைப் போல் தான் காணப்படுகின்றது என்றும் அன்றைய நாட்களில் விவசாயிகளுக்கு உரத்தை வழங்காமை மற்றும் வீட்டு பெண்கள் அடுப்பை மூட்டும் போது தகாத வார்தைகளால் பேசினர். அவற்றை செவிமடுக்க அன்று சிறிமாவோ பண்டார நாயக்க தயாராக இருக்கவில்லை.

நேற்று நான் பேசியதைக் கேட்ட, சமூக ஊடகங்களில் சிலர், நீங்களும் அரசாங்கத்தை கொண்டு வழிநடத்தி னீர்கள் தானே என கேள்வி எழுப்பியதாக அவர் தெரிவித்தார்.

என்னுடைய அரசாங்கம் வேறுபட்டது என்றும் இன்று அரசாங்கத்தை நடத்துபவர்கள் அன்று தமது அரசாங்கத்தை எவ்வாறு தாக்கினார்கள் என்பது நினைவில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அன்று தம்மை இழிவுபடுத்தியவர்கள் இன்று மக்களின் அவமானத்துக்கும் நிந்தைக்கும் உள்ளாளாகியுள்ளனர் தானே என அவர் கேள்வி எழுப்பினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

யாழில் திங்களன்று உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலையின் நினைவேந்தல்!

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 4ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின் 48 ஆவது நினைவு தினம் நாளைமறுதினம் திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

அந்த மாநாட்டில் கொல்லப்பட்டவர்களில் நினைவாக யாழ்ப்பாணம், முற்றவெளியில் அமைக்கப்பட்டுள்ள நினைவாலயத்தில் நினைவஞ்சலி நடத்தப்படுவது வழமை.

இதன்போது அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் ஆகியோரைக் கலந்துகொண்டு அஞ்சலியைச் செலுத்துமாறு ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1974ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதிநாள் விருந்துபசார வைபவத்தின்போது வன்முறைக் கும்பலொன்றால் நடத்தப்பட்ட தாக்குதலில் மாநாட்டில் கலந்துகொண்டிருந்த 11 பேர் கொல்லப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

நாட்டுக்காகவும் , மக்களுக்காகவும் புதிய பயணத்தை மேற்கொண்டுள்ளோம் – மைத்திரி

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சிரேஷ்ட அரசியல் கட்சியாகும். நடைமுறை அரசியல் நிலைவரங்களுடன் மிகுந்த பலத்துடனும் உத்வேகத்துடனும் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

இது தெளிவானதொரு நாட்டுக்கானதும் மக்களுக்கானதுமான புதிய பயணத்திற்கான ஆரம்பமாகும் என்று சு.க. தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

சுதந்திர கட்சியின் ஸ்தாபகத்தலைவர் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் 123 ஆவது ஜனன தின அனுஷ்டான நிகழ்வு கொழும்பு – காலி முகத்திடலில் நடைபெற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

கேள்வி : சு.க.வின் தற்போதைய நிலை குறித்து உங்கள் நிலைப்பாடு ?

பதில் : ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சிரேஷ்ட அரசியல் கட்சியாகும். நடைமுறை அரசியல் நிலைவரங்களுடன் மிகுந்த பலத்துடனும் உத்வேகத்துடனும் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

கேள்வி : புதிதாக தனி வழியில் பயணிப்பதற்கு தயாராகிறீர்களா?

பதில் : ஆம். தெளிவாக புதிய பயணத்தையே ஆரம்பித்துள்ளோம். நாட்டுக்காகவும் , மக்களுக்காகவும் புதிய பயணத்தை மேற்கொண்டுள்ளோம்.

கேள்வி : நீங்கள் தற்போது காரசாரமாக கருத்துக்களை வெளியிட ஆரம்பித்துள்ளீர்களல்லவா?

பதில் : நான் எப்போதும் காரசாரமாகவே பேசுவேன்.

கேள்வி : நடைமுறை அரசியல் குறித்து ஏமாற்றமடைந்துள்ளீர்களா?

பதில் : நான் என்றுமே ஏமாற்றமடைபவன் அல்ல. இந்நாட்டு அரசியல் நானே மகழ்ச்சியுடன் இருக்கின்றேன். காரணம் சாதாரண கிராம இளைஞனாக இருந்து ஜனாதிபதியாகியிருக்கின்றேன்.

கேள்வி : நல்லாட்சி அரசாங்கத்தினால் விற்கப்பட்ட தேசிய சொத்துக்களை மீட்பதாகக் கூறினார்களே?

பதில் : நல்லாட்சி அரசாங்கத்தில் தேசிய சொத்துக்களை விற்பதற்கு நான் எதிர்ப்பினை வெளியிட்டேன். எனது எவ்வித தலையீடும் இன்றியே துறைமுகத்தையும் விற்றனர். நான் அறிந்த வகையில் நல்லாட்சியில் வேறெந்த விற்பனையும் இடம்பெறவில்லை என்றார்.

Posted in Uncategorized

தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் குழப்பம்; தற்காலிக நிர்வாகம் தெரிவு!

தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் குழப்பகரமான நிலைமையொன்று தோன்றியுள்ளதாக அக்கட்சியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று(8)தமிழர் விடுதலைக் கூட்டணியினுடைய கூட்டமொன்று கிளிநொச்சியிலுள்ள அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன் போது கட்சியினுடைய செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரி உட்பட கட்சியினுடைய உறுப்பினர்கள் பலரும் கலந்துரையாடிபோது இடைநடுவே வீ.ஆனந்தசங்கரி வெளியேறியதாகவும் அதன் பின்னர் அங்கு கூடியிருந்த ஏனைய உறுப்பினர்கள் புதிதாக ஒரு தற்காலிகமான ஒரு நிர்வாகத்தை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக இன்று மாலை 6 மணியளவில் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த கட்சியின் ஒரு பிரிவினர் கட்சிக்கு தற்காலிகமாக புதிய நிர்வாகத்தை தெரிவு செய்ததாக தெரிவித்தனர்.

இதன்போது பங்கேற்று கருத்து தெரிவித்த அக்கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் ச.அரவிந்தன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தற்காலிகமான நிர்வாக செயலாளர் க.கௌரிகாந்தனும் செயலாளர் நாயகமாக க.யோகராஜாவும் புதிய பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று தமிழர் விடுதலைக் கூட்டணியினுடைய விசேட பொதுச்சபைக் கூட்டம் கிளிநொச்சியிலுள்ள அலுவலகத்தில் இடம்பெற்றது.

2018 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கட்சி தலைமைத்துவத்தில் சில மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும் கட்சியினுடைய நிர்வாக நடவடிக்கையை சரியான முறையில் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டிருந்த போதும் அதற்கு முட்டுக்கட்டையாக செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரி செயற்பட்டதன் காரணமாக அந்த நடவடிக்கையை மேற்கொள்ள முடியாமல் இருந்தது.

2020ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலின் பின்னர் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் பொதுக்கூட்டத்தை கூட்டி கட்சியில் புதிய நிர்வாக மாற்றங்களைக் கொண்டுவந்து கட்சியை தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்து கொண்டு முன் கொண்டு செல்ல வேண்டுமென நாங்கள் எடுத்த முயற்சியை இரண்டு ஆண்டுகளாக கட்சியின் பொதுச் சபைக் கூட்டத்தை நடத்தாமல் பலவிதமான முட்டுக்கட்டைகளை போட்டு கொண்டு இன்றுவரை பல இடர்பாடுகளை தோற்றுவித்தார்.

தற்காலிகமான நிர்வாக செயலாளர் க.கௌரிகாந்தனும் செயலாளர் நாயகமாக க.யோகராஜாவும் புதிய பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் ஜனவரி 29ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடி தீர்க்கமான முடிவை எடுப்போம் என்றார்.

இது தொடர்பில் கட்சியின் செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரியை தொடர்பு கொண்ட பொழுது புதிதாக தெரிவானதாக கூறப்படும் நிர்வாகம் தொடர்பில் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இந்தியப் பிரதமரின் கடித முயற்சிக்கு மலையக மற்றும் முஸ்லிம் கட்சிகளின் பேராதரவுக்கு நன்றி கூறுகிறோம் சுரேந்திரன்

தமிழ் பேசும் மக்களின் கட்சிகள் ஒன்று சேர்ந்து இந்திய பிரதமருக்கு அரசியலமைப்பிலுள்ள 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப் படுத்தக் கோருவதன் மூலம் மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை பகிர்ந்து மக்கள் முகம் கொடுத்திருக்கும் தற்போதைய பிரச்சினைகளில் இருந்து, மீட்கும் முயற்சியை மேற்கொண்டிருந்தோம்.

வடக்கு கிழக்கை மையப்படுத்திய கட்சிகள் ஒருமித்த நிலைப்பாட்டில் அந்த முயற்சியை முன்னெடுத்திருந்த பொழுது, மலையக மற்றும் முஸ்லிம் கட்சிகளின் ஆதரவையும் பலத்தையும் கோரி நின்றோம். எவ்வித தயக்கமும் இல்லாது எமது முயற்சிக்கு நலமும் பலமும் சேர்க்கும் வகையில் நம்மோடு தோளோடு தோள் நின்று பயணிக்க முன் வந்தமைக்கு நன்றி கூறுகிறோம். இதனால் எமக்கு உத்வேகம் தந்துள்ளீர்கள்.

அனைத்து தமிழ் பேசும் மக்களின் அபிலாசைகளையும் பிரதிபலிக்கும் வகையான வரைபை தயாரிக்க முற்பட்ட போதும் எமது அடிப்படை கோரிக்கைகளான தாயகம், சுயநிர்ணய உரிமை, சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு என்பவற்றில் நம்மால் விட்டுக்கொடுக்க முடியாத சூழ்நிலையை நீங்கள் புரிந்து கொண்டீர்கள். அதேநேரம் அதில் உங்களால் கையொப்பமிட முடியாத இக்கட்டான நிலையையும் நாங்களும் விளங்கிக் கொண்டோம். இருப்பினும் உங்களால் முன்வைக்கப்பட்ட மலையக மக்களின் கரிசனைகளையும் பிரதிபலித்துள்ளோம் என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்.

எமது மக்கள் எதிர்கொண்டிருக்கும் அரசியல் இக்கட்டிலிருந்து எம் மக்களை மீட்க நாம் முற்பட்ட பொழுது எமது தரப்பிலிருந்து எம்மை விமர்சித்தும், எதிர்ப்புகளை வெளியிட்டும், கருத்துக்களை பதிவிட்டும் தடுக்கும் முயற்சியிலும் சுயவிளம்பரங்களை தேடுவதிலும் ஈடுபட்டிருந்த வேளையில் உங்களது நாகரீகமான நடைமுறை அவர்களுக்கு ஒரு பாடமாக அமையும் என்று நம்புகிறோம்.

உங்களது அனைத்து முயற்சிகளிலும் எங்கள் ஆதரவு என்றும்போல் தொடர்ந்தும் இருக்கும் என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம். அதே வேளை எம்மக்களின் விடிவிற்கான தொடர் பயணத்தில் நீங்கள் தொடர்ந்தும் எம்முடன் பயணிக்க விருப்புடன் கோரி நிற்கிறோம்.

சுரேந்திரன்
ஊடகப்பேச்சாளர்- ரெலோ
தமிழ் தேசியக் கூட்டமைப்பு
கட்சிகளின் ஒருங்கிணைப்பாளர்

Posted in Uncategorized

செய்ய வேண்டிய பணிகளை விட்டுவிட்டு வேறு விடயங்களை ஆளுநர் வடக்கில் செய்கிறார்! ரெலோ யாழ். மாவட்ட அமைப்பாளர் நிரோஷ் குறற்ச்சாட்டு

நாட்டில் 13 ஆவது திருத்தத்தால் செய்ய வேண்டிய பணிகள் அதிகம் உள்ளது, அதை விட்டுவிட்டு ஆளுநர் அரசின் அழுத்தத்தால் பல்வேறு விடயங்களை வடக்கில் செய்கிறார் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட அமைப்பாளரும், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளருமான தி.நிரோஷ் தெரிவித்தார்.

யாழ் ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை அரசு இப்போது என்ன செய்கிறது என்றால், மாகாண சபைகளுக்கு சில அதிகாரங்களை கிள்ளி எறிந்து அதையும் மத்தியின் கீழ் தந்திரமாக எவ்வாறு கையகப்படுத்தலாம் என்று செயற்பட்டு வருகிறது. அதற்கு அவர்கள் பயன்படுத்தி வரும் ஆயுதம் தான் உள்ளூராட்சி சபைகள்.

உள்ளூராட்சி சபைகளின் கீழ் உள்ள பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்கு கூட நாம் மத்தியில் தங்கி நிற்கும் நிலையில், வடக்கு மாகாணத்தில் ஆளுநரை பயன்படுத்தி இப்போது புதிய நாடகங்கள் இங்கு நடைபெறுகிறது.

ஆரியகுளத்தில் மத நல்லிணக்கத்தை இல்லாமல் செய்வது, அரசியலமைப்பை மீறுகிறது என்று ஆளுநர் தெரிவித்துள்ளார். ஆகவே ஆரிய குளம் யாருடைய சொத்து உள்ளிட்ட பல கேள்விகளை ஆளுநர் இப்போது முன்வைத்துள்ளார்.

நாங்கள் இங்கு கேட்கின்றோம் இலங்கை போன்ற நாட்டிலே மத நல்லிணக்க பிரச்சினை காணப்படுகிறது. ஆகவே அதனை பகுத்தாராய வேண்டிய தேவை உள்ளது. அந்த வகையில் மத ரீதியான ஆக்கிரமிப்புக்கள் குருந்தூர் மலையில் இடம்பெற்றுள்ளது. அதே போன்று நாவற்குழியில் விகாரை அமைக்கப் பட்டுள்ளது. இந்த நிலையில் ஆரிய குளத்தில் மத ரீதியான குழப்பங்களை அரசு ஏற்படுத்துவதை நாங்கள் நிராகரிக்கின்றோம்.

வடக்கு மாகாண ஆளுநருக்கு அரசு கொடுக்கும் அழுத்தம் காரணமாகவே இது நடக்கிறது. முன்னரும் கூட குளத்தின் நடுவில் மத நல்லிணக்க மண்டபத்தை கட்டுவதற்கு தேரர் ஒருவர் மாநகர சபைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

அரசியல் அமைப்பில் உள்ளதை இதற்கு மட்டுமே பயன்படுத்து நோக்கில் ஆளுநர் செயற்பட்டு வருகின்றார்.

வேண்டும் என்றால் பகிரங்க வாக்கெடுப்பை எடுக்கட்டும்.இங்கு என்ன செய்வது இப்படி ஒரு மத நல்லிணக்கம் வேண்டுமா என்று.

பொது மக்களுக்கு தேவை நிம்மதி. அவர்களுக்கு சிங்கள பௌத்த மயமாக்கல் தேவை இல்லை என்றார்.

பயத்தினால் நாய் போல மாறியுள்ள வீரவன்ச, கம்மன்பிலவின் ஆடையும் அவிழ்ந்து போயுள்ளதாக தகவல்

சுசில் பிரேமஜயந்தவின் வாயை அடைத்த பின்னர், அரசாங்கத்திற்குள் சிங்கம் போல் இருந்த மேலும் சிலர் நாய் குட்டிகளின் நிலைமைக்கு சென்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி (Chaminda Wijesri) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (07) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

சுசில் பிரேமஜயந்தவின் வாய் அடைக்கப்பட்ட பின்னர் விமல் வீரவங்ச போன்றவர்கள், அரசாங்கத்தின் அனுமதியுடனேயே பேசுகின்றனர். அண்மையில் அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் காதருகே சென்று நான் எதாவது கூறினால் சிக்கலாகுமா என்று வீரவங்ச கேட்டதை பார்க்க முடிந்தது.

சிங்கம் போல் இருந்து விமல் வீரவங்ச போன்றவர்கள் நாய் குட்டிகள் போல் மாறியுள்ளனர். நாட்டில் இனவாதம், தேசப்பற்று பற்றி பேசிய வீரவங்ச போன்றவர்கள் அமைச்சு பதவி பறிப்போய்விடும் என்ற அச்சத்தில் நாய் போல் மாறியுள்ளனர்.

அரசாங்கத்தின் கொள்கை, மோசடிகளை கூற முடியாது இவர்கள் தவிக்கும் போது அருவருப்பாக உள்ளது. அத்துடன் நாட்டின் ஒரு அங்குல நிலத்தை கூட வெளிநாட்டவர்களுக்கு வழங்க போவதில்லை என உதய கம்மன்பில கூறினார்.

திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை 50 வருடங்களுக்கு இந்தியாவுக்கு குத்தகைக்கு வழங்கும் தீர்மானத்துடன் அமைச்சர் உதய கம்மன்பிலவின் தேசப்பற்றாளர் என்ற ஆடை அவிழ்ந்து போயுள்ளது.

எது எப்படி இருந்த போதிலும் டொலருக்கான அரசாங்கம் நாட்டின் வளங்களை விற்பனை செய்வதை நிறுத்த வேண்டும் எனவும் சமிந்த விஜேசிறி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் – தமிழக முதலமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை

இலங்கை கடற்பகுதியில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 56 மீனவர்களையும் விடுவிக்க துரித நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க. ஸ்ராலின் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் தமிழக மீனவர்களின் 75 படகுகளும் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

எனவே எதிர்வரும் பொங்கல் பண்டிகைக்கு முன்னர் அவர்களை விடுவித்து அவர்களது வாழ்வாதாரமாக உள்ள படகுகளையும் விடுவிக்குமாறு அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.