கூட்டமைப்பின் இராஜதந்திர நம்பகத்தன்மை ? ELANADU Editorial

தமிழ் மக்கள் ஒரு அரசு இல்லாத தரப்பு. அரசு இல்லாத தரப்புக்களுக் கான இராஜதந்திர வாய்ப்புக்கள் மிகவும் பலவீனமானவை. இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றவை எனக் கூறப்படும், மனித உரிமைகள் மீறல்கள் மற்றும் போர்க் குற்றச்சாட்டுக்கள்தான், தமிழ் மக்களுக்கான அரசியலை சர்வதேச அரங்கு களில் நீர்த்துப்போகாமல் பாதுகாத்துவருகின்றன. கொழும்பின் விடாப்படியான அணுகுமுறைகளும் இதற்கொரு காரணமாகும். கொழும்பின் ஆட்சியாளர்கள் சில விடயங்களில் முன்னேற்றத்தை காண்பிப்பார்களாயின், சர்வதேச அவதானமும் நாளடைவில் நீர்த்துப் போய்விடும். இன்றைய நிலை யில், தமிழர் களின் சர்வதேச குரலாக தொழில்படும் புலம்பெயர் சமூகமும் குறிப்பிடத்தக்களவு செல்வாக்கை செலுத்திவருகின்றது.

ஆனால், மறபுறமாக தாயகத்தில் இயங்கும் அரசியல் தரப்புக்களின், இராஜதந்திர அணுகுமுறைகள் எவ்வாறிருக்கின்றன? சில தினங்களாக இடம் பெற்ற சம்பவங்களின் அடிப்படையில் சிந்திப்பதாயின், ‘பனையால் விழுந்த வரை மாடு ஏறி மிதித்த’ – கதையாகவே தமிழ் தேசியவாத தரப்புக்களின் இராஜ தந்திர அணுகுமுறை இருக்கின்றது. ஜனாதிபதியை தெரிவு செய்வதற் கான வாக்கெடுப்பின்போது, ஏற்பட்ட சில சம்பவங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இராஜதந்திர நம்பகத் தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது. எமக்கு கிடைக் கும் தகவல்களின்படி, இந்திய தூதரக சர்ச்சையால், ஏனைய இராஜதந்திரிகள் அதிருப்தி அடைந்திருக்கின்றனர். அவர்கள் மத்தியில், கூட்ட மைப்பின் நம்பகத்தன்மை, பெரியளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றது.

இராஜதந்திர தொடர்புகள் என்பவை பரஸ்பர நம்பகத்தன்மையின் அடிப் படையில் இடம்பெறும் விடயங்களாகும். நம்பகத்தன்மை போய்விட்டால், அதன் பின்னர் அதனை மீளவும் கட்டியெழுப்புவது மிகவும் சவாலானதொரு விடயமாகும்.

2009இற்கு பின்னரான காலத்தில், சம்பந்தன் தலைமையில் கடந்த 13 வருடங்களாக முன்னெடுக்கப்பட்ட அரசியல் முன்னெடுப்புக்களில், பல்வேறு இராஜதந்திர சறுக்கல்கள் இடம்பெற்றிருக்கின்றன. இதில், பாரதூரமானது இந்திய பிரதமர் சிறி நரேந்திர மோடியுடனான சந்திப்பை அற்ப காரணங்களை கூறி நிகராகரித்தமை. கடவுசீட்டைக் காணவில்லை, தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவின் மகனின் திருமணம் என்று கூறியே, சம்பந்தன் அதனை நிராகரித்திருந்தார். 134 கோடி மக்களின் தலைவர், உலகளவில் செல்வாக்குமிக்க தலைவர்களில் ஒருவர், தமிழ் மக்களின் பிரச்னைகள் தொடர்பில் பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்கியபோது, அதனை ஒருவர் நிராகரிக்கின்றார் என்றால், அவரின் இராஜந்திர ஆற்றல் தொடர்பில் என்ன கூறமுடியும்?

சில மாதங்களுக்கு முன்னர், கூட்டமைப்பின் நிபுணர் குழுவென்னும் பெயரில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திற்கு, சுமந்திரன் தலை மையில், மூவரடங்கிய குழுவினர் சென்றிருந்தனர். அதில் சென்ற இருவர், நாடு திரும்பியதும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பேசியதில்லை. அவர்கள் எதற்காக சென்றார்கள் என்று அவர்களுக்கே தெரியாது. இந்தப் பயணம் தொடர்பில் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கு தெரியப்படுத்தப் படவில்லை. நாடு திரும்பியதைத் தொடர்ந்து, ஜனவரி மாதம் நடுப்பகுதிக்குள் அமெரிக்கா கடுமையான முடிவுகளை எடுக்கவுள்ளதாகக் கூறப்பட் டது. ஆனால், அப்படியெதுவும் இடம்பெறவில்லை. ஏனெனில், அனைத்துமே தேர்தல் பிரசார நோக்கம் கொண்ட கதைகளேயேன்றி உண்மை களல்ல.

இப்போதும் தங்களுடைய திட்டம் வெற்றியளிக்க வேண்டும் என்பதற்காக, இராஜதந்திர தொடர்புகள் தவறாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. சீனத் தூதரக சந்திப்பு தொடர்பில் கூட்டமைப்பில் எவருமே தெரிந்திருக்கவில்லை. உண்மையில், என்ன அடிப்படையில் இராஜதந்திரிகளை கூட்டமைப்பின், பாராளுமன்ற உறுப்பினர்கள் அணுகுகின்றனர்? கூட்டமைப்பின் இராஜதந்திர தொடர்புகள் எவருடைய அனுமதியின் கீழ் கையாளப்படுகின்றன? பதில் இலகுவானது. கூட்டமைப்பில் இராஜதந்திர நெறிமுறையென்று ஒன்றில்லை.
தனிப்பட்ட நபர்களின் விருப்புவெறுப்புக்களின் அடிப்படையிலேயே அனைத்தும்
இடம்பெறுகின்றன. கூட்டமைப்பில் அக்கறையுள்ளவர்கள், இந்த நிலைமையை
மாற்றியமைப்பது தொடர்பில் சிந்திக்க வேண்டும்.

குட்டிமணி, தங்கதுரையின் 39 ஆவது நினைவு நாள் வவுனியா மாவட்ட காரியாலயத்தில் அனுஸ்டிப்பு!

1983ஆம் ஆண்டு கறுப்பு ஜுலை கலவரத்தின்போது, வெலிக்கடை சிறைச்சாலையில் வைத்து படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் முக்கியஸ்தர்களான தங்கத்துரை மற்றும் குட்டிமணி உள்ளிட்ட 53 பேரின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் தமிழ் தேசிய வீரர்கள் தினம் நேற்று அனுஸ்டிக்கப்பட்டது.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட காரியாலயத்தில் மாவட்ட பொறுப்பாளர் புரூஸ் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது குட்டிமணி, தங்கத்துரை மற்றும் ஜெகன் ஆகியோரது உருவப்படங்களுக்கு மலர்மாலை அணிவித்து சுடரேற்றி, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் கட்சியின் வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் மயூரன் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைப்பு : வெளியானது அதிவிசேட வர்த்தமானி

பாராளுமன்ற கூட்டத்தொடரை இன்று (28) நள்ளிரவு முதல் ஒத்திவைத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் சற்றுமுன்னர் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, புதிய பாராளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி காலை 10.30 மணிக்கு இடம்பெறவுள்ளதாக குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, 9 ஆவது பாராளுமன்றத்தின் 2 ஆவது கூட்டத்தொடர் இன்று நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகின்றது. புதிய கூட்டத்தொடர் ஜனாதிபதின் கொள்கை விளக்க உரையுடன் ஆரம்பமாகும்.

Posted in Uncategorized

ஜனாதிபதியுடன் பிரித்தானி உயர்ஸ்தானிகர் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனுக்கும் இடையில் இன்று (28) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் டுவிட்டர் குறிப்பொன்றை வெளியிட்டுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகர், பல விடயங்கள் தொடர்பில் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றதாக குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை தொடர்பான செயல்முறை மற்றும் மனித உரிமைகளுக்கு இணங்குவது உட்பட பல விடயங்களில் கவனம் செலுத்தியதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

இறுதியாக, அவர் தனது ட்விட்டர் பதிவில், அமைதியான மற்றும் ஜனநாயக இடத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்த நம்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

புதிய அரசாங்கத்திற்கு ராஜபக்ச குடும்பத்துடன் உள்ள தொடர்புகளால் இலங்கை அரசியல் ஆபத்துக்களை எதிர்கொள்கின்றது – பிட்ச்

புதிய அரசாங்கத்திற்கு ராஜபக்ச குடும்பத்துடன் உள்ள தொடர்புகள் காரணமாக இலங்கை அரசியல் ஆபத்தினை எதிர்கொள்கின்றது என பிட்ச் தரப்படுத்தல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கை நாணய நெருக்கடி மற்றும் வங்குரோத்து நிலையிலிருந்து மீள்வது தொடர்பில் அரசியல் நெருக்கடிகளை எதிர்கொள்கின்றது என தெரிவித்துள்ள பிட்ச் தரப்படுத்தல் முகவர் அமைப்பு வலுவான பெரும்பான்மையுடன் கடினமான புதிய அரசாங்கம் ஆட்சிபொறுப்பை ஏற்றுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.

புதிய ஜனாதிபதிக்கு பெரும்பான்மை உள்ளமை நாடாளுமன்றத்தில் உறுதிசெய்யப்பட்டுள்ளது அரசாங்கம் எதிர்கட்சி உறுப்பினர்கள் சிலரையும் உள்வாங்கியுள்ளது என பிட்ச் தெரிவித்துள்ளது.

இது பொருளாதாரஸ்திரதன்மை மற்றும் கடன் பேண்தகுதன்மை ஆகியவற்றை மீட்டெடுப்பதற்கான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கும் கடினமான சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்குமான போதிய ஆதரவு அரசாங்கத்திற்கு காணப்படும் என்ற நம்பிக்கையை அளிக்கின்றது என பிட்ச் தெரிவித்துள்ளது.

இவ்வாறான சீர்திருத்தங்கள் சர்வதேச நாணயநிதியத்தின் நிதி ஆதரவு கிடைக்கும் நிலையை ஏற்படுத்தலாம்,இலங்கை வங்குரோத்து நிலையிலிருந்து மீள்வதற்கு இது அவசியமானது என நாங்கள் கருதுகின்றோம் என பிட்ச் தெரிவித்துள்ளது.

ராஜபக்ச குடும்பத்தின் உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களால் அகற்றப்பட்டனர் ஆனால் ராஜபக்ச அரசாங்கத்துடன் தொடர்புள்ளதால் இந்த நிர்வாகத்திற்கு மக்கள் ஆதரவு இல்லாத நிலை காணப்படுகின்றது.

அரசாங்கத்திற்கு நாடாளுமன்ற ஆதரவு வலுவானதாக காணப்படுகின்றது ஆனால் மக்கள் ஆதரவு மிகவும் பலவீனமானதாக உள்ளது எனவும் பிட்ச் தரப்படுத்தல் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்களால் பதவியிலிருந்து அகற்றப்பட்ட முன்னாள் ஜனாதிபதியின் அரசாங்கத்தில் பிரதமராக பதவி வகித்தவர் தற்போதைய ஜனாதிபதி- பாரளுமன்றமும் அமைச்சரவையும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன அரசியல்வாதிகளின் ஆதிக்கத்தின் கீழ் காணப்படுகின்றன,இந்த கட்சி ராஜபக்ச குடும்பத்துடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டுள்ளது,என தெரிவித்துள்ள பிட்ச் பொருளாதார நிலைமையில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் அல்லது சீர்திருத்தங்களிற்கு பொதுமக்களின் எதிர்ப்பு உருவானால் ராஜபக்ச குடும்பத்துடனான அரசாங்கத்தின் தொடர்புகளால் நாட்டை ஸ்திரமிழக்கச்செய்யும் ஆர்ப்பாட்டங்கள் மூழக்கூடும் எனவும் பிட்ச் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணயநிதியத்துடன் இலங்கை இணக்கப்பாட்டிற்கு வரக்கூடிய சீர்திருத்தங்கள் உயர்வரிகள்,செலவுகளை கட்டுப்படுத்துதல் நாணயமாற்று விகிதத்தில் நெகிழ்ச்சி தன்மைக்கான அர்ப்பணிப்பு போன்றவற்றை கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கின்றோம் என குறிப்பிட்டுள்ள பிட்ச் இதற்கு கடும் எதிர்ப்பு உருவாகலாம் இதனால் இவற்றை நடைமுறைப்படுத்துவது பாதிக்கப்படலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.

Posted in Uncategorized

இனக் குரோதங்களை மறந்து தமிழ் மக்களின் நியாயமான தீர்விற்காக சிங்கள மக்களும் குரல் கொடுக்க வேண்டும் –   பிரசன்னா

தமிழ் மக்களுடன் சிங்கள மக்களும், சிங்கள மக்களுடன் தமிழ் மக்களும் சேர்ந்து வாழ்வதென்றால் இனக் குரோதங்களை மறந்து தமிழ் மக்களுக்கு நியாயபூர்வமான தீர்வு கிடைப்பதற்காக சிங்கள மக்களும் குரல் கொடுக்க வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரதித் தலைவரும், கிழக்கு மாகாணசபை முன்னாள் பிரதித் தவிசாளருமான இந்திரகுமார் பிரசன்னா தெரிவித்தார்.

இன்றைய தினம் மட்டக்களப்பில் இடம்பெற்ற கடந்த 1983ம் ஆண்டு வெலிகடைச் சிறையில் படுகொலை செய்யப்பட்ட தங்கதுரை, குட்டிமணி உள்ளிட்ட 53 பேரின் நினைவு நிகழ்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

எங்களுடைய தமிழ் போராட்டத் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டது தவறு என இன்று சிங்கள மக்கள் உணர்ந்திருக்கின்றார்கள். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் காலி முகத்திடல் போராட்ட களத்தில் படுகொலை செய்யப்பட்ட எமது தலைவர்களுக்கு அஞ்சலி செலத்தப்பட்டிருந்தது. அவர்கள் நியாயபூர்வமாக தமிழ் மக்களின் விடுதலக்காக தன்னுயிரை அர்ப்பணித்த தலைவர்கள் என்பதை இன்று சிங்கள மக்கள் 39 வருடங்களின் பின்னர் புரிந்துள்ளார்கள்.

எனவே இந்த கோட்டா கோ கோம் என்னும் காலிமுகத்திடல் போராட்டத்தில் இருந்து போராடிக் கொண்டிருக்கும் இளைஞர் யுவதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், மதகுருமார்கள் ஒன்றை உணர்ந்து கொள்ள வேண்டும். மாறி மாறி ஆட்சி செய்திருக்கின்ற சிங்கள பேரினவாத அரசுகள் இனவாதத்தைக் கக்கி தமிழ் மக்களையும் சிங்கள மக்களையும் பிரித்து ஆண்டதன் காரணமாகவே இவ்வாறான படுகொலைகள் இடம்பெற்றன.

இன்று சிங்கள மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்படுகின்ற அநியாயங்கள், அக்கிரமங்கள், இராணுவ அடக்குமுறைகளை அனுபவித்ததன் விளைவாகவே அவர்கள் தமிழ் மக்களின் போராட்டம் பற்றிய உண்மையை உணர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றார்கள்.

தற்போது அந்த மக்களினால் ஒரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. ஆனாலும் மக்கள் நினைத்தது நடக்கவில்லை. ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ராஜபக்சர்களின் கைப்பொம்மையாக இன்று ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார். இவரால் இந்த நாட்டின் பொருளாதாரப் பி;ரச்சனையைத் தீர்க்க முடியும் என மக்கள் நம்பமாட்டார்கள்.

ஏனெனில் இவர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் புதிய அமைச்சரவையை உருவாக்கிய போது 18 அமைச்சர்களில் 14 பேர் ராஜபக்சர்களின் சகாக்கள். இருந்தவர்களையே மீண்டும் அமைச்சர்களாக ஆக்கி அழகு பாhத்திருக்கின்றார். மக்கள் எவர் எவரையெல்லாம் தற்போது நிராகரித்துள்ளார்களோ அவர்களுடன் இணைந்தே அதிகாரத்திற்கு வந்துள்ளார்.

இந்த விடயங்கள் ஒருபுறம் இருந்தாலும் தமிழ் மக்கள் நாங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். தமிழ் மக்களின் பலமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை மேலும் பலப்படுத்தி எமது மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்க வேண்டும். எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைப் பிரித்தாள்வதற்கும் சில சக்திகள் முனைகின்றன.

தமிழ்த் தேசியத்தின் பால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பினைச் சிதைப்பதற்கு ஒரு போதும் இடமளிக்கக் கூடாது. பல உயிர்த்தியாயங்களின் மத்தியில் உருவாக்கப்பட்டதுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. எமது தலைவர்களின் தீர்க்கதரிசனத்தில் உருவாக்கப்படட இதனைப் பிளவுபடுத்தும் எண்ணத்தோடு யார் இருந்தாலும் அவர்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும்.

எமது தங்கதுரை குட்டிமணி ஆகியோரின் படுகொலையின் பின்னரே பல பல தமிழ் இயக்கங்கள் உருவாக்கப்பட்டு பல்லாயிரக் கணக்கான இளைஞர்கள் விடுதலைப் போராட்டங்களுக்குச் சென்றார்கள். அந்த விடுதலை வேட்கையில் கிடைத்த ஒரு துளிதான் 13வது திருத்தச்சட்டத்தின் மூலம் கிடைத்த வடகிழக்கு இணைப்பு. ஆனால் சிங்களப் பேரின அரசு அந்த ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தாமல் இருக்கின்றது.

எனவே இது தொடர்பில் இந்தியா உரிய கரிசனை செலுத்தி இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு மேல் சென்று வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு நியாயபூர்வமான தீர்வினைப் பெற்றுத் தர வேண்டும். இதற்கான அழுத்தங்களை இலங்கை ஆட்சியாளர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

எனவே தென்னிலங்கை மக்கள் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும். தமிழ் மக்களுடன் சிங்கள மக்களும், சிங்கள மக்களுடன் தமிழ் மக்களும் சேர்ந்து வாழ்வதென்றால் இனக் குரோதங்களை மறந்து தமிழ் மக்களுக்கு நியாயபூர்வமான தீர்வு கிடைப்பதற்காக சிங்கள மக்களும் குரல் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Posted in Uncategorized

த. தே. கூ. ற்குள் பிளவுகளை ஏற்படுத்த வெளியில் இருந்தும் உள்ளிருந்தும் சிலர் செயற்படுகின்றார்கள் – ஜனா

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பல உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்தாகக் கதைகள் கூறப்படுகின்றன. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றுமே யாரலுமே சிதைக்கப்பட முடியாத ஒரு கூட்டாகும். முடிவெடுக்கும் சந்தர்ப்பத்தில் பல வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றாலும் முடிவொன்று எடுக்கப்பட்டதன் பின்னர் அனைவரும் ஒருமித்தே செயற்படுவர் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் பிளவுகளை ஏற்படுத்தும் செயற்பாடுகளை வெளியில் இருந்தும். கூட்டமைப்புக்கு உள்ளிருந்தும் சிலர் செய்து கொண்டிருக்கின்றார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

இன்றைய தினம் மட்டக்களப்பில் இடம்பெற்ற கடந்த 1983ம் ஆண்டு வெலிகடைச் சிறையில் படுகொலை செய்யப்பட்ட தங்கதுரை, குட்டிமணி உள்ளிட்ட 53 பேரின் நினைவு நிகழ்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் தமிழர்களுக்கெதிரான வன்முறைகள் பல கட்டங்களாக இடம்பெற்றாலும், 1983ம் ஆண்டு ஜுலையில் இடம்பெற்ற இனக்கலவரம் தமிழின சுத்திகரிப்பாகவே பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. கறுப்பு ஜுலை என்று உலகறிந்த இந்த நாட்கள் ஜுலை 23ம் திகதி அனுஸ்டிக்கப்படுவது ஒரு பிழையான விடயம் என்பதை தற்போதைய சந்ததியினர் அறிய வேண்டும்.

ஏனெனில் 1983ம் ஆண்டு ஜுலை 23ம் திகதி யாழ்ப்பாணம் திருநெல்வேலியிலே தமிழீழ விடுதலைப் புலிகளால் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டார்கள். அவர்களது சடலங்கள் கொழும்பைச் சென்றடைந்ததும் தான் அடுத்த நாள் தொடக்கம் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த இன அழிப்பு தொடங்கியது. ஜுலை மாதம் 25 மற்றும் 27ம் திகதிகளில் தமிழ் அரசியற் கைதிகள் வெலிகடை வென்சிறைக்குள்ளே இலங்கை பாதுகாப்புப் படையின் அனுசரணையுடன் காடையர்கள் ஏவப்பட்டு 25ம் திகதி தமிழீழப் போராட்ட ஆரம்ப கர்த்தாக்களான தமிழீழ விடுதலை இயக்கத்தை உருவாக்கிய தங்கதுரை, குட்டிமணி, தேவன், ஜெகன் நடேசன் மாஸ்டர் உள்ளிட்ட 36 பேரும், 27ம் திகதி 17 பேரும் உட்பட 53 பேர் வெலிகடைச் சிறையுள்ளே மிகவும் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார்கள்.

இந்தத் தலைவர்களுக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட போது குட்டிமணி அவர்கள் ‘என்னைத் தூக்கிலிடுவதன் மூலம் மலரும் தமிழீழத்தைத் தடுத்து விட முடியாது. என்னைத் தூக்கிலிட்ட பின்னர் என் கண்களை ஒரு பார்வையற்ற தமிழனுக்குக் கொடுத்து விடங்கள் அந்தக் கண்கள் மூலமாக மலரப் போகும் தமிழீழத்தை நான் காண்பேன்’ என்று கூறியதற்காக அவரின் கண்கள் தோண்டி எடுக்கப்பட்டு சப்பாத்துக் கால்களில் போட்டு மிதிக்கப்பட்ட அநாகரிகமான வரலாறுகளும் அரங்கேற்றப்பட்டது.

வருடத்தில் மே மாதமும், ஜுலை மாதமும் தமிழர்களுக்கு மறக்க முடியாத மாதங்களாக இருக்கின்றது. இவ்விரு மாதங்களிலும் தமிழர்களுக்கு கொடுமைகளை அள்ளி இரைத்த சிங்களத் தலைவர்களுக்கும் தற்போது அவ்விரு மாதங்களும் ஒரு மறக்க முடியாத மாதங்களாகவே மாறியிருக்கின்றது.

கோட்டபாய ராஜபக்ச அவர்கள் ஜனாதிபதியாக இருந்து இன்று இந்த நாட்டு மக்களினாலேயே விரட்டியடிக்கப்பட்டு எந்த நாட்டிலுமே தங்க முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது. அவரது சகோதரர் மஹிந்த ராஜபக்ச அவர்கள் பத்துக்கும் மேற்பட்ட ஆண்டுகள் இந்த நாட்டில் ஜனாதிபதியாக இருந்து இன்று அரசியல் அநாதையாக ஆக்கப்பட்டிருக்கின்றர். மே மாதம் முள்ளிவாய்க்காலிலே ஒரு இலட்சத்து நாற்பதாயிரத்து மேற்பட்ட தமிழ் மக்களையும், போராளிகளையும் கொன்று குவித்த கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக கடந்த ஏப்ரல் மாதம் கோட்ட கோ கோம் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு முள்ளிவாய்க்கால் படுகொலை இடம்பெற்ற மே மாதத்தில் மஹிந்த பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதேபோன்று தமிழர்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட ஜுலைக் கலவரம் இடம்பெற்ற இந்த ஜுலை மாதத்தில் கோட்டபாய ராஜபக்ச அவர்கள் இந்த நாட்டை விட்டு தப்பியோடும் நிலை உருவாகியிருக்கின்றது.

இந்த நிலைமைகளில் இரந்து தமிழர்களின் போராட்டம் எத்தனை நியாயமானது என்பதையும், நியாயமான உரிமைகளைப் பெறுவதற்காகத் தான் அகிம்சை ரீதியாகவும், ஆயுத ரீதியாகவும் போராடினார்கள் என்பதையும் தற்போதை அரசாங்கம் சிந்திக்க வேண்டும்.

இன்று தேசியப் பட்டியல் மூலமாக, தனது கட்சியில் இருந்து ஒரே ஒரு பாராளுமன்ற உறுப்பினராகப் பாராளுமன்றம் வந்தவர், அதுவும் பாராளுமன்றம் கூடி ஒரு வருட காலத்தின் பின்னர் பதவிப் பிரமானம் செய்த ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பிரதமராகவும், பதில் ஜனாதிபதியாவும், தற்போது பாராளுமன்றத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்ட புதிய ஜனாதிபதியாகவும் இருக்கின்றார். அவர் சர்வகட்சி அரசாங்கத்திற்கு அறைகூவல் விடுத்திருப்பதோடு, ஏனைய கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருக்கின்றார்.

கடந்த 2015 தொடக்கம் 2019ம் ஆண்டு காலப்பகுதியில் அவரது தலைமையில் நடைபெற்ற ஆட்சிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவினை வழங்கியிருந்தது. இன்று பாராளுமன்றத்திலே நடைபெற்ற புதிய ஜனாதிபதி தெரிவின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏகமனதானதொரு முடிவினை எடுத்து ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக வாக்களித்திருக்கின்றது. இருந்தும் இது தொடர்பில் சில புனைக்கதைகள் தற்போது வெளிவருகின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் பிளவு ஏற்பட்டிருக்கின்றது. பல உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்தாகக் கதைகள் கூறப்படுகின்றன. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றுமே யாரலுமே சிதைக்கப்பட முடியாத ஒரு கூட்டாகும். எத்தனையோ பாரிய பிரச்சனைகளின் போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்றாகவே பயணித்தது. தமிழ் மக்களின் ஏகோபித்த வாக்குகளைப் பெற்ற தமிழத் தேசியக் கூட்மைப்பின் உறுப்பினர்கள் ஒன்றாகவே முடிவெடுப்பார்கள், ஒன்றாகவேதான் வாக்களிப்பார்கள். தற்போதை ஜனாதிபதி தெரிவில் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் ஒருமித்தே வாக்களித்திருப்பார்கள்.

முடிவெடுக்கும் சந்தர்ப்பத்தில் பல வாதப் பிரதிவாதங்கள் இடம்பெறுவது வழமை இருப்பினும், முடிவொன்று எடுக்கப்பட்டதன் பின்னர் அனைவரும் ஒருமித்து ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராகவே வாக்களித்திருக்கின்றார்கள்.

தற்போது அதள பாதாளத்தில் வீழ்ந்திருக்கும் நாட்டின் பொருளாதார நிலைமை சிங்கள மக்களுக்கு மாத்திரமல்ல தமிழ் மக்களுக்கும் ஒரு பாதிப்பினை ஏற்படுத்தியிருக்கின்றது. அதற்கும் மேலாக தமிழ் மக்களுக்கு இனப்பிரச்சினை, உரிமைப் பிரச்சனை இருக்கின்றது. தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய அளவிலான ஒரு தீர்வினைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே தமிழ் மக்களின் நிலையான வேண்டுகோள் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் நாட்டிலே பொருளாதார ஸ்திரத்தன்மை ஒன்று பேணப்பட வேண்டும் என்பது அனைத்து மக்களதும் அபிலாசையாக இருக்கின்றது.

ரணில் விக்கிரமசிங்க அவர்கள் சர்வ கட்சி அரசாங்கததிற்கு அழைப்பு விடுத்திருக்கின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதில் அமைச்சுப் பதவிகளை ஏற்காது, ஏற்கவும் கூடாது என்பதே என்னுடைய வேண்டுகோள். சர்வகட்சி ஆட்சியொன்று அமைய வேண்டும். பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு மேலாக எமது தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கான தீர்வு அந்த சர்வ கட்சி அரசாங்கத்தின் மூலமாக ஏற்பட வேண்டும் என்பதே எமது கட்சியின் அவா.

இதற்கு நெடிய வரலாற்றுக் காரணம் இருக்கின்றது. தமிழ் மக்கள் சார்ந்து எட்டப்பட்ட ஒவ்வொரு ஒப்பந்தங்களும், தீர்வுகளும் அப்போதைய எதிர்க்கட்சிகளுக்குப் பயந்து கிழித்தெறியப்பட்டதும், எரிக்கப்படடதுமே வரலாறாக இருக்கின்றன. இதிலிருந்து நாங்கள் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும். இந்த நாட்டிலே இனப்பிரச்சனைக்கான ஒரு தீர்வு கிடைக்க வேண்டுமாக இருந்தால் எந்தவித எதிர்ப்புமே தெற்கு அரசியற் கட்சிகளில் இருக்கக் கூடாது. ஒரு கட்சி தீர்வினைக் கொடுக்க முன்வருகின்ற போது மற்றைய எதிர்க்கட்சி எதிர்க்கின்ற வரலாறு இருக்கின்ற காரணத்தினால் எதிர்வரும் இரண்டரை மூன்று வருடங்கள் இந்தப் பாராளுமன்றம் நிலைத்திருக்குமாக இருந்தால், அதில் சர்வ கட்சி அரசாங்கம் அமையுமாக இருந்தால் அந்த அரசாங்கத்தினால் பொருளாதார மீட்சிக்கு மேலாக இனப்பிரச்சினைக்கான ஒரு தீர்வு எட்டப்படுமாக இருந்தால் ஒரு எதிர்ப்பு இல்லாமல் அந்தத் திர்வு நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பு எங்களிடம் இருக்கின்றது.

எனவே சர்வ கட்சி அரசாங்ககம் உருவாக்கப்பட்டு இன்றைய தினம் சமர்ப்பிக்கப்படும் 22ம் திருத்தச் சட்டத்திற்குள்ளே இனப்பிரச்சனைக்கான தீர்வும் உள்ளடக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.

அத்துடன் கடந்த காலங்களிலே போராட்டங்களில் இறந்த ஆத்மாக்கள், அநியாயமாகப் படுகொலை செய்யப்பட்டவர்கள், சிறைச்சாலைகளுக்குள்ளே படுகொலை செய்யப்பட்டவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்றால் எமது தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கான தீர்வு வர வேண்டும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயங்கு நிலையிலே இருந்த காலகட்டத்திலே தமிழ் மக்களுக்கான அரசியற் குரலாக உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று மூன்ற கட்சிகளின் கூட்டாக இருக்கின்றது. தற்போது இந்த மூன்று கட்சிகளுக்குள்ளும் பிளவுகளை ஏற்படுத்தும் செயற்பாடுகளை வெளியில் இருந்தும். உள்ளிருந்தும் சிலர் செய்து கொண்டிருக்கின்றார்கள். அந்த நிலை இருக்கக் கூடாது. தமிழ் மக்கள் ஒன்றாக இருக்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலப்படுத்த வேண்டும். தமித் தேசியக் கூட்மைப்பில் இருந்து விலகிச் சென்றவர்களும் மீண்டும் வர வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களுக்கான ஒரு அரசியற் குரலாக, அரசியற் கட்சியாகப் பதிவு செய்யப்பட்டு எமக்காக உயிர்நீத்த அனைத்து ஆத்மாக்களுக்காகவும் ஒன்றிணைய வேண்டும் என வேண்டிக் கொள்கின்றேன் என்று தெரிவித்தார்.

Posted in Uncategorized

தமிழர்களை எங்கே கொன்று புதைத்தீர்கள்! சபையில் செல்வம் அடைக்கலநாதன் ஆவேசம்

இலங்கையில் இனப்படுகொலை ஆரம்பிக்கப்பட்டு 39 வருடங்கள் ஆகின்றது. அதேபோல அவசரகாலச் சட்டம் உருவாக்கப்பட்டும் 39 வருடங்கள் ஆகின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவின் ஆட்சிக்காலத்திலேயே இவை இரண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டன. அப்போது சிறையில் சிக்குண்ட எமது தமிழர்களை எங்கு கொண்டு புதைத்தீர்கள் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சிங்கள மக்கள் தாக்கப்பட்டதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். ஜனநாயக ரீதியாக இலங்கையில் போராடியவர்களை தாக்கியமை கண்டனத்திற்குரியது.

தாக்கப்பட்ட போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக வடக்கு , கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள தமிழர்கள் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் எங்களுடைய தமிழ் மக்கள் தாக்கப்பட்டபோது யாருமே எங்களுக்காக குரல் கொடுக்கவில்லை. அது ஒரு பயங்கரவாதமாகவே பார்க்கப்பட்டது. தற்போது நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படும் காலமாக மாறி வருகின்றது.

தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர், யுவதிகள், எங்களுடைய தமிழ் தரப்பில் நடந்த போராட்டம் உண்மையானது என்பதை ஏற்றுக் கொண்டு வருகின்றார்கள்.

ஜே.ஆர்.ஜெயவர்தனவின் ஆட்சியின் போதே ஆயுதப் போராட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அத்தோடு அப்போது சிறையில் வைத்து கொல்லப்பட்ட எம் தமிழர்கள் எங்கே கொண்டு புதைக்கப்பட்டார்கள் என்பதை இப்போது வரைக்கும் கண்டுப்பிடிக்க முடியாமல் போயுள்ளது. அவர்கள் எங்கே கொண்டு சென்று கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டார்கள் என்பது தெளிவுப்படுத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

குட்டிமணி, தங்கத்துரையின் 39 ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழில் அனுஷ்டிப்பு

1983 ஆம் ஆண்டு ஆடி மாதம் 25 ஆம், 27 ஆம் திகதிகளில் சிங்களக் காடையர்களால் வெலிக்கடைச் சிறையில் வஞ்சகமான முறையில் அடித்தும், குத்தியும்,வெட்டியும் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) ஆரம்பகாலத் தலைவர் குட்டிமணி, ஈழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடி நடராஜா தங்கத்துரை, முன்னணிப் போராளிகளான ஜெகன்,தேவன், மற்றும் அவர்களுடன் படுகொலை செய்யப்பட்ட போராளிகள் மற்றும் அப்பாவிப் பொதுமக்களை நினைவு கூர்ந்து 39 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு,‘தமிழ் தேசிய வீரர்கள் தினம்’ இன்று புதன்கிழமை(27.7.2022) யாழ்.மாவட்ட ரெலோ அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் மெளன வணக்கத்தைத் தொடர்ந்து பொதுச்சுடரினை ரெலோவின் நிதிச் செயலாளரும், முன்னாள் வட மாகாணசபை உறுப்பினருமான விந்தன் கனகரட்ணம் ஏற்றி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து சுடர் ஏற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் நினைவு உரையும் இடம்பெற்றது.

இதேவேளை, மேற்படி நிகழ்வில் ரெலோவின் யாழ்.மாவட்டத் துணை அமைப்பாளரும், யாழ். மாநகரத் துணை மேயருமான து.ஈசன், ரெலோவின் யாழ்.மாவட்ட இளைஞர் அணித் தலைவரும், நல்லூர் பிரதேச சபையின் உப தவிசாளருமான இ.ஜெயகரன், ரெலோவின் நல்லூர்த் தொகுதி அமைப்பாளரும், நல்லூர் பிரதேசசபை உறுப்பினருமான கு.மதுசுதன்,ரெலோவின் யாழ். பணிமணைப் பொறுப்பாளரும், யாழ்.நகரப் பகுதிப் பொறுப்பாளருமான மு.உதயசிறி,ரெலொவின் சிரேஷ்ட உறுப்பினரான ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மன்னாரில் வெலிக்கடைச்சிறைப் படுகொலையின் 39 ஆவது ஆண்டு நினைவு அனுஷ்டிப்பு!

வெலிக்கடைச் சிறைப் படுகொலையின் 39 ஆவது ஆண்டு நினைவு தினமான ‘தமிழ் தேசிய வீரர்கள் தினம்’ மன்னார் மாவட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் (TELO) அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை ) காலை 11 மணியளவில் நினைவு கூரப்பட்டது.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் மாவட்ட அமைப்பாளர் லுஸ்ரின் மோகன் ராஜ் தலைமையில் இடம்பெற்ற குறித்த நினைவேந்தல் நிகழ்வில் வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட தலைவர் தங்கதுரை, தளபதி குட்டிமணி, முன்னணிப் போராளிகளான ஜெகன், தேவன் உட்பட 53 அரசியல் கைதிகளுக்கு ம் அஞ்சலி செலுத்தப்பட்டது.

உருவப்படத்துக்கு மாலை அணிவித்து சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது கட்சியின் முக்கியஸ்தர், நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.வினோ நோகராதலிங்கம் ,கட்சியின் உறுப்பினர்கள், ஈ.பி.ஆர்.கட்சியின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சுடர் ஏற்றி,மலர் தூவி அஞ்சலி செலுத்திய மை குறிப்பிடத்தக்கது.