குருந்தூர் மலை விவகாரம் காலிமுகத்திடலில் எதிரொலிக்காதது ஏனோ?ரெலோ ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் கேள்வி

காலிமுகத்திடலில் முன்னெடுக்கப் படுகின்ற போராட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை. அவர்களுடைய நியாயப் பாட்டினை நாங்கள் நன்றாக புரிந்து கொள்ளுகிறோம்.

ஆனால் தமிழர் பிரச்சினையை பெரும்பான்மை இனத்தினருக்கு தெளிவுபடுத்துகிறோம், விளக்குகிறோம், அவர்களோடு கலந்துரையாடுகிறோம் என்றெல்லாம் கூறியவர்கள் குருந்தூர் மலை விவகாரத்தில் எங்கு சென்றார்கள்?

குருந்தூர் மலை விவகாரம் மதப் பிரச்சினைக்கு அப்பாற்பட்டது. பௌத்த மதத்தின் பெயரால் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளை அபகரித்து, அங்கு சிங்கள குடியேற்றங்களை நிறுவுவதும் அதனூடாக எங்கள் குடிப்பரம்பலை சிதைப்பதற்கும் முயல்வது இனவழிப்பு நடவடிக்கையாகவே கருதப் பட வேண்டும். இந்த நடவடிக்கைக்கு எதிராக காலிமுகத்திடலில் இருக்கும் போராளிகள் ஏன் குரல் கொடுக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது.

அதையும் தாண்டி தமிழர் பிரச்சினையை பெரும்பான்மை இனத்தினருக்கு தெளிவுபடுத்துகிறோம், விளக்குகிறோம், அவர்களோடு கலந்துரையாடுகிறோம் என்றெல்லாம் கூறியவர்கள் குருந்தூர் மலை விவகாரத்தில் தாங்கள் இணைந்து போராடிய பெரும்பான்மையின சகோதரர்களிடம் குருந்தூர் மலையில் பெளத்த சின்னங்களை நிறுவ முயல்வதற்கு எதிராக குரல் கொடுக்க கோரவில்லையா?

காலிமுகத்திடல் போராட்டத்தில் தமிழர்கள் இணைய வேண்டும் என்று மூர்க்கமாக குரல் கொடுத்தவர்கள் சிலர் குருந்தூர் மலை விவகாரத்தில் கள்ள மவுனம் காப்பது ஏன்?

கைதட்டல் கிடைக்காது என்பதற்காகவா அல்லது காலிமுகத்திடலில் போராடும் பெரும்பான்மை இனத்தின் மனம் நோகக்கூடாது என்பதா?
எதற்காக மௌனம் காக்கிறார்கள்?

தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினையை புரிந்து கொள்ளாத எமது அடிப்படை கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளாத அல்லது அங்கீகரிக்காத இந்தப் போராட்டத்தில் தமிழ் மக்களும் இணைந்து கொள்ள வேண்டும் அல்லது தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக நாங்கள் இணைந்து கொண்டு இருக்கிறோம் என்று கூறுபவர்கள் யதார்த்த நிலையை புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் கூடுகின்ற இடங்களில் எல்லாம் சென்று சத்தமெழுப்புவதன் மூலம் தமிழ் மக்களுடைய பிரச்சினையை தீர்த்து விடலாம் என்று தமிழ் மக்களை நம்ப வைக்க முயல்வது கேலிக் கூத்தாகும். அது இன்று நிரூபணமாகியுள்ளது.

ஆகவே தென்னிலங்கையில் நடக்கின்ற அரசியல் அதிகார சதுரங்க ஆட்டத்தில் தமிழ் மக்களை பகடைக் காயாக பயன்படுத்த இடமளித்து நேரத்தை வீணடிப்பதை தவிர்க்க வேண்டும். கடந்த கால அனுபவங்களில் இருந்து , நல்லாட்சி காலம் உட்பட நாம் பாடம் கற்றுள்ளோம். இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி தமிழர் தரப்பாக பேரம் பேசுவதே தேவையானது.

தமிழ் மக்களுக்கு பயன் தரும் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுப்பது பற்றியே நமது தரப்புக்கள் சிந்திக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

சுரேந்திரன்
ஊடகப் பேச்சாளர்
தமிழ் ஈழ விடுதலை இயக்கம்
(தமிழ் தேசியக் கூட்டமைப்பு)

Posted in Uncategorized

ரெலோ யாழ் மாவட்ட தலைவரும் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளருமான நிரோஷிற்கு எதிரான வழக்கு நவம்பர் 16 க்கு ஒத்திவைப்பு

நிலாவரையில் தொல்லியல் திணைக்களம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு தடையாக அமைந்ததன் வாயிலாக தொல்லியல் திணைக்களத்தின் அரச கருமங்களுக்கு தடை ஏற்படுத்தினார் என ரெலோ யாழ் மாவட்ட தலைவரும் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளருமான தியாகராஜா நிரோஷிற்கு எதிராகத் தொடாரப்பட்ட வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த வருடம் தொடரப்பட்ட இவ் வழக்கில் வழக்கினை முன்னொண்டு செல்வதாயின் சட்டமா அதிபரின் ஆலோசனையினைப் பெறுமாறு தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று புதன்கிழமை(15.06.2022) மல்லாகம் நீதவான் திருமதி காயத்திரி சைலவன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, அச்சுவேலி பொலிஸார் மேலதிக அறிக்கையினை சமர்ப்பித்ததுடன் சட்டமா அதிபரின் ஆலோனைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதையும் மன்றில் தெரியப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Posted in Uncategorized

நெருக்கடிகளைத் தீர்க்க இதுவரை எவ்வித திட்டமும் தீட்டப்படவில்லை: சுரேஷ் பிரேமச்சந்திரன் அறிக்கை

எரிபொருள், எரிவாயு, உணவுப்பொருட்கள் தொடர்பில் நாட்டில் ஸ்திரமற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக இந்தியா சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அரிசி, எரிபொருள், எரிவாயு, அத்தியாவசிய மருந்துப்பொருட்கள், பசளை போன்றவற்றை வழங்கி வருவதாகவும், அந்த உதவிகள் அடுத்த சில நாட்களில் முடிவடையும் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதன் பின்னர் ஏற்படப்போகின்ற தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கு இதுவரை எத்தகைய திட்டமும் தீட்டப்பட்டுள்ளதாக தெரியவில்லை எனவும் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

அடுத்தடுத்த வாரங்களுக்கு எரிபொருள், எரிவாயு, மின்சாரம், அத்தியாவசிய உணவுப்பொருட்கள், உயிர் காக்கும் மருந்துகள் தடையின்றி கிடைக்குமா என்பது குறித்த நிச்சயமற்ற நிலையில், அச்சமூட்டும் சூழலே நிலவுவதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தால் எதனையும் திட்டமிட முடியாத நிலையில், அரசாங்கத்தின் மோசமான நிர்வாக சீர்கேடுகளினால் பொதுமக்களால் எதனையும் திட்டமிட முடியாத நிலை தோன்றியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனால் தற்போதைய ஆட்சியாளர்கள் தொடர்ந்தும் ஆட்சி அதிகாரத்தில் இருப்பதற்கு தகுதியானவர்களா என்பதை அவர்களது மனச்சாட்சியிடம் கேட்க வேண்டியுள்ளதாக அவரது அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டில் நிலவுகின்ற நெருக்கடியை தீர்த்து, அந்நிய முதலீடுகளை உள்வாங்கி, நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு தேசிய இன பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு கண்டறியப்பட வேண்டியது முதற்படியாகும் எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல்- ஜெனீவா அமர்வில் கவலை

இலங்கையில் அமைதியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டமை குறித்த ஜெனீவாவில் இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கிய பிரித்தானியா தலைமையிலான நாடுகள் வேண்டுகோள் கரிசனை வெளியிட்டுள்ளன.

ஜெனிவாவில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 50ஆவது அமர்வில் கனடா பிரிட்டன் அமெரிக்கா ஜேர்மன் மலாவி மொன்டினீக்ரோ வடமசடோனியா ஆகிய நாடுகள் இணைந்து இந்த கரிசனையை வெளியிட்டுள்ளன.

அமைதியான முறையில் ஒன்றுகூடுதல் கருத்துசுதந்திரம் ஆகியவற்றுக்கான தங்களது உரிமையை ஆர்ப்பாட்டக்காரர்கள் சமீபகாலங்களில் பயன்படுத்தியுள்ளனர் என்பதை நாங்கள் கருத்தில் கொள்கின்றோம்.

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வன்முறை தாக்குதல் குறித்தும் அரசாங்கத்தின் அரசியல்வாதிகள் ஆதரவாளர்கள் மீதான வன்முறைகள் குறித்தும் நாங்கள் ஆழ்ந்த கவலை அடைந்துள்ளோம்.

இந்த வன்முறைகளிற்கு காரணமானவர்கள் பொறுப்புக் கூறச் செய்யப்பட வேண்டும் என மேலும் அந்நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை

பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.சுற்றுலாத்துறை அதிகாரிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இதேவேளை, இலங்கை மீதான பயணத் தடைகளை நீக்குமாறு இராஜதந்திர ரீதியிலான கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஆறு மாதங்களுக்கு இந்தியாவில் இருந்து சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையிலான திட்டத்தை வகுக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.அவ்வாறு செய்தால் 2025 ல் 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை கவர முடியும் என்றும் இதனால் 3.5 பில்லியன் டொலர்களை வருமானமாக ஈட்டக்கூடிய நிலை ஏற்படும் என்றும் கூறியுள்ளார்.

எனவே அதற்கான நீண்டகாலத் திட்டங்களை வகுக்குமாறும் சுற்றுலாத்துறை அதிகாரிகளிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.இந்த ஆண்டில் சுமார் 800,000 சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து 800 மில்லியன் டொலர் வருமானம் கிடைக்கும் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

Posted in Uncategorized

கடல்வழியாக ஆட்கடத்தலில் ஈடுபடுவோர் தொடர்பில் பாதுகாப்பு தரப்பு வெளியிட்ட பரபரப்பு தகவல்!

இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக நாட்டை விட்டு வெளியேறும் சட்டவிரோதக் இடப்பெயர்வாளர்கள் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருவதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர்களை வேறு நாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி அவர்களிடம் இருந்து பணம் பறிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட மோசடி ஒன்று இடம்பெற்றுள்ளதாக பாதுகாப்புப் படையினர் தற்போது அம்பலப்படுத்தியுள்ளனர்.

கடந்த சில நாட்களாக இலங்கையர்கள் சிலர் படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக செல்ல முயற்சிப்பதாக தகவல் வெளியாகியிருந்தது.

இவர்களில் பெரும்பாலானோர் கடற்படை உள்ளிட்ட பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், நாட்டில் நிலவும் பிரச்சினை காரணமாக நாட்டை விட்டு வெளியேற முயற்சித்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

ஒவ்வொருவரிடமிருந்தும் 700,000 ரூபாய் முதல் 1 மில்லியன் ரூபாய் வரை பணத்தை கடத்தல்காரர்கள் பெற்றுக்கொள்வதாகவும் படகிற்குள் ஏறியதும் கடத்தல்காரர்களே பாதுகாப்புப் படையினருக்கு இடப்பெயர்வாளர்கள் குறித்த தகவல்களை வழங்குவதாகவும் தெரியவந்துள்ளது.

அதேபோல், சிறிய படகுகள் மூலம் கரையில் இருந்து நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகிற்கு இடப்பெயர்வாளர்களை அழைத்துச் செல்வதற்கு 80 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியா நோக்கி பயணித்த 15 இலங்கையர்கள் கடந்த தினம் அவுஸ்திரேலிய கரையோர பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை இலங்கையில் இருந்து படகுகள் மூலம் ஆட்களை ஏற்றிச் செல்லும் போது, கடத்தல் காரர்களே அவர்களை பாதுகாப்பு தரப்பினரிடம் காட்டிக்கொடுத்து விடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Posted in Uncategorized

பொருளாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதே அடிப்படையாக இருக்கும் – மீனாக்ஷி கங்குலி

பொருளாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு அரசியலமைப்பின் ஊடாக பாதுகாப்பு மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதே அடிப்படையாக இருக்கும் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசியப்பிராந்தியப் பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் நாடாளுமன்றில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க கருத்துக்களை மேற்கோள்காட்டி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள மீனாக்ஷி கங்குலி, அரசியலமைப்பின் ஊடாக பாதுகாப்பை உறுதிப்படுத்தல், மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தல் ஆகியவையே கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கான அடிப்படைத் திறவுகோளாகும் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் நாடாளுமன்றில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நாடு எதிர்நோக்கியுள்ள பாரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து பாதிக்கப்பட்ட மக்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து விளக்கமளித்திருந்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை, உலக உணவுத்திட்டம் மற்றும் உணவு மற்றும் விவசாய அமைப்பு ஆகிய கட்டமைப்புக்களின் மூலமான உதவிகள் என்பன தொடர்பாகவும் அவர் தெளிவுபடுத்தியிருந்ததார் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய அவசரக் கூட்டத்தைக்  கூட்டுமாறு பாராளுமன்ற உறுப்பினர் ஜனா அரச அதிபரிடம் கோரிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் அவசரமாகத் தீர்க்கப்படவேண்டிய மக்களது பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கான அவசரக் கூட்டத்தினை ஏற்பாடு செய்யுமாறு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) மாவட்ட அரசாங்க அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்றைய தினம் புதன்கிழமை அரசாங்க அதிபரிடம்  கடிதம் மூலமாக விடுக்கப்பட்டுள்ள இக் கோரிக்கையில்,

நாட்டின் இன்றைய பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பெரும் சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். உணவு, அன்றாடத் தேவைகள், எரிபொருள், எரிவாயு என அனைத்துக்கும் பெரும் இறுக்கமான பிரச்சினைகளுக்கு உள்ளாகியிருக்கும் மக்களுக்கு நிம்மதியைக் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.

முக்கியமாக விவசாயிகளைப் பொறுத்தவரையில் இரசாயன உரப்பினைச்சினை அவர்களது வாழ்வாதாரமான வேளாண்மை மற்றும் பயிர்ச்செய்கையின் விளைச்சலை வீழ்ச்சியடையச் செய்திருக்கிறது. ஆரம்பித்திருக்கும் இப் போகத்திலும் உரம் சரியான முறையில் விநியோகிக்கப்படுமா என்பது புரியாமலிருக்கிறது. இதற்கு நம்முடைய மட்டக்களப்பு மாவட்டம் மாத்திரம் விதிவிலக்கானதல்ல.

இந்த நிலையில் மக்களுக்கான நிவாரணங்கள், உதவிகள் சரியான முறையில் அவர்களைச் சென்றடைவதற்கான வழிவகைகள் மேற்கொள்ளப்படவேண்டும். மக்களுக்குத் தேவையான பொருட்கள் கிடைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

விவசாய உற்பத்திகளை அதிகரிக்கும் வகையில், அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ள தரிசு நிலங்களை பயிர்ச்செய்கைக்குட்படுத்தும் வேலைத்திட்டத்தினை விரைந்து எமது மாவட்டத்திலும் நடைமுறைப்படுத்துவது முக்கியமாகும். அதன் மூலம் எதிர்வரும் மாதங்களில் ஏற்படவுள்ள உணவுத் தட்டுப்பாட்டை ஓரளவுக்கேனும் கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என எண்ணுகிறேன். அதற்கு அனைத்துத் தரப்பினருடைய ஒத்துழைப்பும் அவசியமாகும்.

எனவே இவ்வாறான செயற்பாடுகளை மாவட்டத்தில் விரைந்து நடைமுறைப்படுத்தும் வகையில், பிரதேச சபைத் தவிசாளர்கள், பிரதேச செயலாளர்கள்,  அரச திணைக்களங்களின் பிரதிநிதிகள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள், மேட்டு நிலப் பயிர்ச்செய்கையாளர்கள், கால்நடைப் பண்ணையாளர்கள் உள்ளிட்டோரை உள்ளடக்கிய வகையில் விசேட ஆராய்வுக் கூட்டம் ஒன்றினை ஏற்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மாவட்டத்தின் அரசாங்க அதிபர் என்ற வகையில் இவ்விடயம் குறித்து தங்களது விரைந்த நடவடிக்கையை எதிர்பார்க்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

யாழ். நிலாவரையில் தொல்லியல் திணைக்களத்தின் நடவடிக்கைக்கு தடை : ரெலோ யாழ் மாவட்ட தலைவரை மன்றில் முன்னிலையாகுமாறு பணிப்பு

நிலாவரையில் தொல்லியல் திணைக்களத்தின் நடவடிக்கைகளுக்கு ரெலோ யாழ் மாவட்ட தலைவரும் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் உள்ளிட்டவர்கள் தடைகளை ஏற்படுத்தினர் எனக் குற்றம் சாட்டப்பட்டு கடந்த வருடம் ஏப்ரல் மாதம் மல்லாகம் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இவ் வழக்கில் தொல்லியல் திணைக்களத்தின் அரச கருமத்திற்குத் தடை ஏற்படுத்தியதாக மேலும் சிலரை இணைக்கவுள்ளதாகவும் மன்றில் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி விஸ்வலிங்கம் திருக்குமரன் தலைமையிலான சட்டத்தரணிகள் குழாம், தொல்லியல் திணைக்களத்தின் வர்த்தமானியில் நிலாவரைக் கிணறு என்றே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

குற்றவியல் சட்டக் கோவையின் பிரகாரம் இவ் வழக்கை சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெற்றே மேற்படி வழக்கின் குற்றப்பத்திரத்தினைத் பொலிஸார் தாக்கல் செய்திருக்கவேண்டும்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதேசசபையின் தலைவர் என்ற வகையில் தவிசாளார் அங்கு என்ன நடக்கின்றது எனக் கேள்வி எழுப்பியமையை அரச கடமைக்கு தடை ஏற்படுத்தியதாகக் கருத முடியாது.

நிர்வாக ரீதியாக இரு அரச நிறுவனங்களுக்கு இடையே எழும் பிரச்சினையினை குற்றவியல் சட்டக்கோவையின் பிரகாரம் அணுகமுடியாது எனவே இவ்வழக்கினை தள்ளுபடி செய்யவேண்டும் என மன்றில் தமது சமர்ப்பணங்களை முன்வைத்தனர்.

அதேவேளை தனியாராக இருந்தாலென்ன அரச ஸ்தாபனமாக இருந்தாலென்ன பிரதேசசபையின் அனுமதி பெற்றே எந்தக் கட்டுமானத்தினையும் செய்ய முடியும் என்பதும் சட்டத்தரணிகளால் முன்வைக்கப்பட்டது.

அவ் வழக்கினை கடந்த வருடம் விசாரித்த நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா, பொலிசார் தாக்கல் செய்துள்ள குற்றவியல் சட்டக்கோவையின் பிரகாரம் முதலாம் எதிராளியாக மன்றில் முன்னிலையாகியுள்ள வலிகாமம் கிழக்குப் பிரதேசசபைத் தவிசாளரை விசாரிப்பதற்கு சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்பட்டதாக எங்கும் வெளிப்படுத்தவில்லை.

அத்துடன் தொல்லியல் திணைக்களத்தின் வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் கிணறு என்றே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்ததுடன் தொடர்ந்து இவ் வழக்கினை நடத்துவதாயின் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்று வழக்கினைத் தொடருமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தியிருந்தார்.

பிரதேசசபைத் தவிசாளர் இவ்வழக்கில் மேலதிக விசாரணைகள் தேவைப்படின் தவிசாளர் ஒத்துழைக்க வேண்டும் எனவும் தவிசாளர் ஒரு இலட்சம் ரூபா சொந்தப் பிணையில் செல்வதற்கும் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் மீளவும் இவ் வழக்கிற்கு வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளரை முதலாவது சந்தேக நபராக அடையாளப்படுத்தி மன்றில் முன்னிலையாகுமாறு கட்டளை அனுப்பப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

மன்னார் மாவட்டத்தில் இடம்பெறும் கனிய மணல் அகழ்வு குறித்து விசேட நடவடிக்கை தேவை- செல்வம்

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கனிய மணல் அகழ்வு குறித்து விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமெலிற்கு அவசர கடிதம் ஒன்றையும் இன்று அனுப்பி வைத்துள்ளார்.

இந்தக் கடிதத்தில், மன்னார் மாவட்டத்தில் முறையற்ற விதத்தில் இல்மனைட் கனிம வள மண் அகழ்வுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகவும் மன்னார் மாவட்ட மக்கள் மத்தியில் இல்மனைட் மணல் அகழ்வுக்கு பாரிய எதிர்ப்புகள் இருந்தும் கூட அதற்கு எந்தத் தடையும் இன்றி கனிம வள மணல் அகழ்வுகள் தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இந்த விடயம் தொடர்பாக கலந்துரையாடி சில முடிவுகளை எடுத்து அதனை நடைமுறைப் படுத்த வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, இதுதொடர்பாக கலந்துரையாடல் ஒன்றுக்கான ஏற்பாடுகளை செய்து தருமாறும், குறித்த கலந்துரையாடல் ஊடாக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.என குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.