ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் மேலும் 10 அமைச்சர்கள் பதவியேற்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் புதிய அரசாங்கத்தின் மிகுதி அமைச்சர்கள் இன்று திங்கட்கிழமை பதவியேற்றுள்ளனர்.

பந்துல குணவர்தன – போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சராகவும் பதவியேற்றுள்ளார்.

ரமேஷ் பத்திரன – தொழிற்சாலை அமைச்சராகவும் இதேவேளை ரமேஷ் பத்திரன – தொழிற்சாலை அமைச்சராகவும் நசீர் அஹமட் – சுற்றாடல் அமைச்சர்.

இதேவேளை சுதந்திரக் கட்சியின் நாடளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர விவசாயம், வனவிலங்கு மற்றும் வனத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

கெஹலிய ரம்புக்வெல்ல நீர் வழங்கல், ரொஷான் ரணசிங்க – நீர்ப்பாசனம், விதுர விக்ரமநாயக்க – கலாசாரம், டக்ளஸ் தேவானந்தா – கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

ஏற்கனவே 13 அமைச்சரவை அமைச்சர்கள் இருவேறு தினங்களில் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.இந்நிலையில் இன்று புதிதாக 10 அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

Posted in Uncategorized

இலங்கை : “உணவுக்காக மக்கள் மத்தியில் கலவரம் ஏற்பட வாய்ப்பு” – சம்பிக்க ரணவக்க

இலங்கையில் “எரிபொருள்,எரிவாயு மற்றும் உணவு ,மருந்துப் பொருட்களை பெறுவதற்கு மக்கள் மத்தியில் கலவரம ஏற்பட வாய்ப்புள்ளது என, ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

“ஜூன் மாதம் நடுப்பகுதியில் நிச்சயமாக மீண்டும் ஒரு தாங்கிக்கொள்ள முடியாத பொருளாதார நெருக்கடி நிலைமை உருவாகும். அது நிச்சயமாக பெரிய அளவில் ஒரு கலவரமாக மாறும். பொருட்களுக்கு ஒரு கட்டத்திற்கு மேல் பொருளாதார நெருக்கடியை தாங்கிக்கொள்ள முடியாத மக்களால் எரிபொருள், எரிவாயு, மருந்து பொருட்கள் மற்றும் அத்தியாவசிய உணவுகளை பெற்றுக்கொள்வதற்காக இந்த கலவரம் உருவாகும் என்பது உறுதியாகும்.
இதனால் கடந்த 9 ம் திகதி இடம்பெற்ற கலவரம் போல் இல்லாமல் அரசியல்வாதிகள் சொத்துக்கள் மட்டுமின்றி நாட்டில் உள்ள அனைவருடைய சொத்துக்களும் கொள்ளையிடப்படும். நாடு தற்போது பாதாளத்துக்குள் தள்ளப்பட்டுவிட்டது.

நாட்டுக்கு கிடைக்கப்பெறும் டாலர்களை கொண்டு மக்களுக்கு எரிபொருள், எரிவாயு பெற்றுத் தருவதாகக் கூறி மக்களை ஏமாற்றுவதை விடுத்து நாட்டை கட்டியெழுப்ப முறையான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். அதற்கு அரசியல் ஸ்திரத்தன்மை பெற வேண்டும். சர்வ கட்சிகளையும் இணைத்து அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண வேண்டும்” என்றார்.

Posted in Uncategorized

இரண்டு நாள் குழந்தை உயிரிழப்பு – ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும் – மஹேல ஜயவர்தன

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாக பதவி விலக வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.பெற்றோல் மற்றும் மருந்து பற்றாக்குறையினால் இரண்டு குழந்தைகள் உயிரிழந்தமை தொடர்பாக வைத்தியர் ஒருவரின் பதிவிற்கு மஹேல கருத்துத் தெரிவித்துள்ளார்.

ஒரு தகப்பனாக அவர்கள் என்ன அனுபவிக்கிறார்கள் என்பதை என்னால் உணர முடியும். கோட்டாபாய ராஜபக்ச இதைப் படித்து, ஏதேனும் குற்ற உணர்வு இருந்தால், இந்த நிர்வாகத்தில் அங்கம் வகித்த அனைவருக்கும் நேரடியாகப் பொறுப்பேற்று, உடனடியாக பதவி விலக வேண்டும் என அவர் பதிவிட்டுள்ளார்.

Posted in Uncategorized

இலங்கை- இன்று வருகிறது 21 ஆவது திருத்தம்-விஜயதாச ராஜபக்ஷ தகவல்

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்த சட்ட மூலம், அமைச்சரவையில் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளதாக, நீதித்துறை, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும் இரட்டை குடியுரிமையை கொண்டவர்கள், பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்க முடியாத வகையில் திருத்தம் மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத்தவிர, தற்போதுள்ள சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு மேலதிகமாக தேசிய கணக்காய்வு ஆணைக்குழு மற்றும் தேசிய கொள்வனவு ஆணைக்குழு என்பன சுயாதீன ஆணைக்குழுக்களாக திருத்தப்படும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதுள்ள ஆணைக்குழுக்களின் அதிகாரங்களை சுதந்திரமாக்கும் வகையிலும், பலப்படுத்தும் வகையிலும் 21ஆவது அரசமைப்புத் திருத்தம் அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு சபையினூடாகவே மத்திய வங்கியின் ஆளுநரை நியமிப்பதற்கும் அரசியலமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் நிலைமை ஏனைய உலக நாடுகளிலும் ஏற்படலாம் – சர்வதேச நாணயநிதியம்

அரசாங்கங்கள் வறிய மக்களிற்கு உதவ முன்வரா விட்டால் இலங்கையின் நிலை உலகின் ஏனைய நாடுகளில் உருவாகலாம் என சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் எச்சரித்துள்ளார்.

உணவு எரிபொருட்களின் விலைகளை மானிய அளவில் சமூகத்தின் வறிய மக்களிற்கு அரசாங்கங்கள் வழங்கவேண்டும்,அரசாங்கங்களின் உரிய ஆதரவு இல்லாவிட்டால் இலங்கையின் நிலை ஏனையநாடுகளில் உருவாகலாம் என கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

அவுஸ்திரேலிய பிரதமராக தொழில் கட்சி தலைவர் அந்தோனி ஆல்பனீஸ் தெரிவு

அவுஸ்திரேலிய பிரதமர் தேர்தலில் தொழில் கட்சி தலைவர் அந்தோனி ஆல்பனீஸ் வெற்றிபெற்றுள்ளார்.

அவுஸ்திரேலிய பிரதமரை தேர்வு செய்வதற்கான பொதுத் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் லிபரல் கட்சி தலைவர் ஸ்காட் மாரிசன் மற்றும் தொழில் கட்சி தலைவர் அந்தோனி ஆல்பனீஸ் இடையே கடும் போட்டி நிலவியது.

அவுஸ்திரேலியாவில் ஆட்சியைக் கைப்பற்ற மொத்தமுள்ள 151 உறுப்பினர் இடங்களில் 76 உறுப்பினர் இடங்கள் அவசியம் என்ற நிலையில், இதுவரை நடைபெற்று முடிந்துள்ள வாக்கு எண்ணிக்கையில் ஸ்காட் மாரிசன் தலைமையிலான லிபரல் கட்சி கூட்டணி 52 உறுப்பினர் இடங்களையும், அந்தோனி அல்பானீஸ் தலைமையிலான தொழில் கட்சி 72 உறுப்பினர் இடங்களையும் கைப்பற்றியுள்ளது.

வெற்றி பெற 76 இடங்களே தேவை என்ற நிலையில் வாக்கு எண்ணிக்கையின் மத்தியிலேயே 72 உறுப்பினர் இடங்களை தொழில் கட்சி கைப்பற்றியதன் மூலம் அந்தோனி அல்பானீஸ் ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக பொறுப்பேற்க உள்ளது உறுதியாகியுள்ளது.

மக்களின் பொழுதுபோக்கு மையமாக அமைக்கப்பட்ட ஆரியகுளத்தை வைத்து அரசியல் செய்வதை நிறுத்துங்கள் – யாழ் மாநகர முதல்வர்

மக்களின் பொழுதுபோக்கு மையமாக அமைக்கப்பட்ட ஆரியகுளத்தை வைத்து அரசியல் செய்வதை நிறுத்துங்கள் என யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இவ்வாறானதொரு நிலைமை ஏற்படுமாக இருந்தால் அதற்கு எதிரான மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டத்திற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராக வேண்டும் என கேட்டுக்கொண்டார்.அத்தோடு பொதுமக்கள் ஜனநாயக ரீதியாக எதிர்ப்பினை காட்டி போராட வேண்டும் என்றும் முதல்வர் மணிவண்ணன் கேட்டுக்கொண்டார்.

ஆரியகுளத்தை புனரமைக்கும் போது அருகிலிருந்த விகாராதிபதியுடன் சேர்ந்து கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் போராடிக்கொண்டிருந்ததை மக்கள் அறிவார்கள் எனவும் ஆரியகுளத்தை மாநகர சபையிடமிருந்து பறிக்க எடுக்கும் முயற்சி என்பது யாழ்ப்பாணத்தில் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு விடயம் என மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

”கொழும்பு தொடர்மாடி மக்களுக்கு சமைத்த உணவு வழங்குங்கள்” – பிரதமரிடம் மனோ கோரிக்கை

உணவு இல்லை.  எரிவாயு இல்லை. மின்சாரம் இல்லை. இவற்றால் நாட்டிலேயே மிகவும் துன்புறுவது கொழும்பு தொடர்மாடி குடியிருப்புகளில் வாழும் மக்கள்தான்.
மாநகரத்தில் நாளாந்த வருமானம் பெற்று வந்த குடும்பங்கள், ஒருவேளை உணவுமின்றியும், உணவு சமைக்க வழியுன்றியும் தவிக்கிறார்கள்.
குறிப்பாக, வடகொழும்பின் பின்தங்கிய நகர தோட்ட குடியிருப்புகளில் வாழ்ந்த மக்கள், எமது ஆட்சிகாலத்தில் சுமார் 13,000 தொடர்மாடி இல்லங்களில் குடியமர்த்தப்பட்டார்கள்.
இந்த குடும்பங்களை அடையாளம் கண்டு, இவர்களுக்கும், கொழுப்பு நகரின் பின்தங்கிய குடியிருப்புகளில் வாழும் மக்களுக்கும், பங்கீட்டு அட்டைகள் வழங்கி, அவர்களுக்கு சமைத்த உணவு வழங்குங்கள்.
இதற்காக, கொழும்பு துறைமுகத்தில் அமைந்துள்ள பாரிய சமையலறை மற்றும் கொழும்பு மாநகரசபைக்கு சொந்தமான பயன்படுத்தபடாத சமையலறைகள் ஆகியவை பயன்படுத்தலாம்.
இராணுவ சமையல் பணியாளர்களை பணியில் அமர்த்தி இயல்பு நிலைமை திரும்பும்வரை இந்த திட்டத்தை முன்னெடுங்கள் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் கொழும்பு எம்பி மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் பிரதமருக்கு நேரடியாக கடிதம் அனுப்பியுள்ள மனோ எம்பி, ஊடகங்களிடம் மேலும் கூறியுள்ளதாவது,
நாடு முழுக்க வாழ்வாதார பிரச்சினைகள், மக்களின் கழுத்துகளை நெரிக்கின்றன. இவற்றில் மிகவும் துன்பங்களை நகரங்களில் வாழும் குடும்பங்கள் சந்திக்கிறார்கள்.
கிராமிய பகுதிகளில் இருக்கும் இயற்கை வளங்கள், மரம், செடி, கொடி, தண்ணீர் என்பன நகரங்களில் இல்லை.
ஒரு கிண்ணம் நீரும் பணம் கொடுத்தே வாங்க வேண்டியுள்ளது. அதிலும் கொழும்பு தொடர்மாடி குடியிருப்புகளில் வாழும் மக்கள் படும்பாடு சொல்லும்தரமன்று.
இந்த கொழும்பு மாநகர பின்தங்கிய மக்களை, விசேட தேவை உள்ள பிரிவினராக அறிவித்து, பங்கீட்டு குடும்ப அட்டைகளை வழங்கி அவர்களுக்கு முதற்கட்டமாக சமைத்த உணவு வழங்குங்கள்.
இதன்மூலம் இங்கு வாழும் பள்ளி பிள்ளைகள், குழந்தைகள், பெண்கள், வயோதிபர்களின் பசியை ஓரளவாவது போக்கலாம். மீண்டும் நாட்டில் இயல்பு நிலைமை திரும்பும்வரை இந்த திட்டத்தை நடைமுறை செய்யுங்கள்.
கொழும்பு மாவட்ட எம்பி என்ற முறையில், எதிரணியில் இருந்தபடி கட்சி பேதமின்றி, இது தொடர்பில் நாம் உங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க தயார்.

தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த பிரதமர்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் இந்திய மக்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு சார்பில் அத்தியாவசிய பொருட்கள், மருந்து பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

நிவாரணப் பொருட்கள் இன்று இலங்கை வந்தடைந்துள்ளன . அரசிடம் நிவாரணப் பொருட்கள் ஒப்படைக்கப்பட்ட நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியால் இந்நாட்டு மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதையடுத்து இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழக அரசு சார்பில் அரிசி, பால் மா உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்து பொருட்கள் உள்ளிட்டவை தமிழகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்படும் என தமிழக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதற்காக சட்டசபையில் ஒருமனதாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இலங்கைக்கு அனுப்புவதற்காக அரிசி, பால் மா , மருந்து பொருட்கள் உள்ளிட்டவற்றை தயார் செய்யும் பணிகள் வேகமாக நடைபெற்று வந்தன.

தமிழ்நாடு சார்பில் அரிசி, மருந்து உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் ´தமிழ்நாட்டு மக்களிடம் இருந்து அன்புடன்´ எனும் வாசகங்கள் அச்சிடப்பட்ட மூட்டைகளில் பொட்டலமிடப்பட்டன. பின்னர் சென்னை துறைமுகத்தில் இருந்து நிவாரணப் பொருட்கள் அனைத்தும் கப்பல் மூலம் கடந்த 18ஆம் திகதியன்று இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நிவாரணப் பொருட்களை கொண்டு சென்ற கப்பல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.

இலங்கையின் கடன்மீள்செலுத்துகை ஆற்றல் ‘டி’ நிலைக்குத் தரமிறக்கம்

வெளிநாட்டுக்கடன் மீள்செலுத்துகைகளை இடைநிறுத்துவதாகக் கடந்த ஏப்ரல் 12 ஆம் திகதி இலங்கை அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டதையடுத்து இம்மாதம் 18 ஆம் திகதியுடன் சலுகைக்காலம் முடிவடையும் சர்வதேச பிணையங்களுக்கான கொடுப்பனவைச் செய்யத்தவறியமையால் ஃபிட்ச் ரேட்டிங் சர்வதேச தரப்படுத்தல் நிறுவனம் இலங்கையைக் கடன்களை மீளச்செலுத்தமுடியாத ‘டி’ நிலைக்குத் தரமிறக்கியுள்ளது.

வெளிநாட்டுக்கடன் மீள்செலுத்துகையை இடைநிறுத்துவதற்கான அறிவிப்பு கடந்த மாதம் 12 ஆம் திகதி வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம் இலங்கையை ‘சி’ நிலைக்குத் தரமிறக்கியிருந்துது.

இந்நிலையில் தற்போது நாட்டை ‘சி’ நிலையிலிருந்து ‘டி’ நிலைக்குத் தரமிறக்கியுள்ள ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம், குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் மீளச்செலுத்தப்படவேண்டிய வெளிநாட்டுப்பிணையங்களுக்கான கொடுப்பனவு மீளச்செலுத்தப்படாமையே அதற்குக் காரணம் என்றும் விளக்கமளித்துளளது.

அதேவேளை நியூயோர்க் நகரைத் தளமாகக் கொண்டியங்கும் மற்றுமொரு பிரபல கடன் தரப்படுத்தல் நிறுவனமான மூடீஸ் தரப்படுத்தல் நிறுவனம் கடந்த 19 ஆம் திகதி இலங்கையின் கடன் மீள்செலுத்துகை ஆற்றல் தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

கடந்த ஏப்ரல் 18 ஆம் திகதி மீளச்செலுத்துவேண்டிய சர்வதேச பிணையங்களுக்கான சலுகைக்காலம் இம்மாதம் 18 ஆம் திகதியுடன் முடிவிற்கு வந்திருக்கும் நிலையில், அதற்குரிய கொடுப்பனவைச்செய்யத் தவறியிருப்பதன் காரணமாக இலங்கை முதன்முறையாக அதன் சர்வதேச பிணையங்களைச் மீளச்செலுத்தமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது.

வெளிநாட்டுக்கடன் மீள்செலுத்துகையை இடைநிறுத்துவதாகவும், சர்வதேச நாணய நிதியத்தின் பொருத்தமான செயற்திட்டத்துடன் இணைந்ததாக வெளிநாட்டுக்கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையை முன்னெடுக்கவிருப்பதாகவும் கடந்த ஏப்ரல் 12 ஆம் திகதி இலங்கை அரசாங்கம் அறிவித்தைத்தொடர்ந்து, இலங்கை கடன்களை மீளச்செலுத்தமுடியாத நிலைக்குத் தள்ளப்படும் என்று நாம் எதிர்பார்த்தோம் என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.