’பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பேன்’

ஜனாதிபதிக்கு எதிராக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தனது டுவிட்டர் பக்கத்தில்  தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு எதிரான அதிருப்தியை வெளிப்படுத்தும் பிரேரணையை விவாதிப்பதற்கான எதிர்க்கட்சிகளின் முயற்சி அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் இன்று முடக்கப்பட்டதை அடுத்து பிரதமர் இந்த விளக்கத்தை வெளியிட்டார்.

பிரேரணையை  விவாதிப்பதை தோற்கடிக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அரசாங்கத்துடன் வாக்களித்தார்.

இது தொடர்பில் பிரதமர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது,

இது ஜனாதிபதிக்கு எதிரான அதிருப்தியை வெளிப்படுத்தும் பிரேரணை மீதான வாக்கெடுப்பு அல்ல. இது அனைத்து பாராளுமன்ற நடவடிக்கைகளையும் இடைநிறுத்துவதற்கும், அதிருப்தி பிரேரணையை உடனடியாக விவாதிப்பதற்குமான வாக்கெடுப்பாகும்.

தமது வீடுகள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் விவாதம் நடத்த விரும்பும் அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்கள், அதிருப்தியை வெளிப்படுத்தும் பிரேரணையை உடனடியாக விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதற்கு ஆதரவாக வாக்களிக்க மாட்டார்கள் என சுமந்திரன் எம்.பியிடம் 16 ஆம் திகதி அறிவுரை கூறினேன்.

தாக்குதல்கள் மீதான விவாதத்தை இன்றே நடத்த அனுமதிருந்தால் நன்றாக இருந்திருக்கும், இன்னும் சில நாட்களில் இந்த அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்கள் அடையாள அதிருப்தி பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

இப்போது ஜனாதிபதியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த வாக்கெடுப்பின் தோல்வியை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி, அதிருப்தி பிரேரணையை பிந்தைய திகதியில் எடுத்துக்கொள்வதை தடுக்கிறார்கள்.

எதிர்கட்சிகள் சிறந்த வியூக அணுகுமுறையை முன்னோக்கிப் பயன்படுத்தினால் நல்லது. இருந்தபோதிலும், கடந்த வாரம் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கான எங்களின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

சுமந்திரனின் பிரேரணை 51 வாக்குகளால் தோற்கடிப்பு

பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தி ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எம்.ஏ.சுமந்திரன் முன்வைத்துள்ளார்.

நிலையியற் கட்டளையின் பிரகாரம் அவ்வாறு செய்யமுடியாது என ஆளும் கட்சியின் பிரதம கொறடாவான அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

அப்படியாயின், வாக்கெடுப்புக்குச் செல்வோமென தெரிவித்துள்ளார். அதன்பிரகாரம் இலத்திரனியல் முறைமையின் கீழ் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

வாக்கெடுப்பில், பிரேரணைக்கு ஆதரவாக 68  வாக்குகளும், எதிராக 119 வாக்குகளும் கிடைத்தன. அதனடிப்படையில், பிரேரணை 51 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.

Posted in Uncategorized

நாளை முதல் மூன்று நாட்களுக்கு தொடர்ந்து போராட்டம்

ஆட்களை தன்னிச்சையாக கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை (18) முதல் மூன்று நாட்கள் போராட்டம் நடத்தப்படும் என தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் தெரிவித்துள்ளது.

அந்த போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையத்தின் இணை அழைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“இலங்கை மனித உரிமை மீறல்களை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் மேஜிக் செய்து மாற்ற முடியாது” – அம்பிகா சற்குணநாதன்

பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக்கொண்டார் என்பதற்காக இலங்கையில் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்களை மாயாஜால வித்தைகளை செய்து மாற்றிவிட முடியாது என, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.

“மனித உரிமை நிலவரங்களில் ஏற்படும் முன்னேற்றங்கள் தனிமனிதரில் தங்கியிருப்பதில்லை. புதிய ஒருவர் பதவிக்கு வருவதால் மாத்திரம் நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்படாது.

பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக்கொண்டார் என்பதற்காக மாயாஜால வித்தைகளை செய்து மனித உரிமைகள் செயற்பாடுகளில் அவரால் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. ” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜோன்ஸ்டன், சனத் நிஷாந்த உள்ளிட்ட 24 பேரை கைது செய்ய உத்தரவு!

காலி முகத்திடல் மற்றும் அலரி மாளிகைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடந்த 9 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் உள்ளிட்ட 22 பேரை கைது செய்யுமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு சட்டமா அதிபர் திணைக்களம் பணிப்புரை விடுத்துள்ளது.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து சட்டமா அதிபர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, சனத் நிஷாந்த, சஞ்சீவ எதிரிமான்ன, மிலான் ஜயதிலக்க மற்றும் மேல் மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட 22 பேரை கைது செய்யுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த 22 சந்தேக நபர்கள் தொடர்பில் நேரடி, சூழ்நிலை மற்றும் தொழில்நுட்ப சாட்சியங்கள் இருப்பின் அவர்களை உடனடியாக கைது செய்யுமாறு சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்படும் சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபர் திணைக்களம் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு பணிப்புரை விடுத்துள்ளது.

மற்றுமொரு ராஜபக்ஷவிற்கு பாராளுமன்றில் முக்கிய பதவி

பிரதி சபாநாயகராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் பரிந்துரைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்ச தெரிவு செய்யப்பட்டார்.

அஜித் ராஜபக்ச 109 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் ரோஹினி கவிரத்ன 78 வாக்குகளை மட்டுமே பெற்றார்.

23 பேர் செல்லுபடியற்ற வாக்குகளை செலுத்தியுள்ளனர்.

Posted in Uncategorized

ஜனாதிபதிக்கு அதிருப்தி தெரிவிக்கும் பிரேரணையை விவாதத்திற்கு எடுக்க தீர்மானம்

ஜனாதிபதிக்கு அதிருப்தி தெரிவிக்கும் பிரேரணையை இன்று(17) விவாதத்திற்கு எடுப்பதற்கு கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து இந்தியா கவனம் எடுக்க வேண்டியது அவசியம்-இரா.சம்பந்தன்

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து இந்தியா அவதானம் செலுத்த வேண்டியது அவசியம் என்றும் இவ்விடயத்தில் இந்தியாவுக்கு இருக்கின்ற பொறுப்பை உரியவாறு நிறைவேற்ற வேண்டியது அவசியம் என்றும் இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லேவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லேவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று முன்தினம் கொழும்பு இல்லத்தில் நடைபெற்றது.

இந்திய தூதுவருடன் சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்ற கலந்துரையாடலில் தமிழர்களுக்கான அரசியல் தீர்வை முன்னிறுத்திய நடவடிக்கைகள் தற்போது ஸ்தம்பித்துள்ளது என்று அவரிடம் சுட்டிக் காட்டியதாகவும் இவ்விடயத்தில் இந்தியாவுக்கு இருக்கின்ற பொறுப்பை உரியவாறு நிறைவேற்ற வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தியதாகவும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

மேலும், “தற்போது நாட்டில் குழப்பகரமான சூழ்நிலை நிலவுவதால், தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்பதால் இதுகுறித்து இந்தியா அவதானம் செலுத்த வேண்டும் என்றும் தூதுவர் கோபால் பாக்லேவுடம் சம்பந்தன் எடுத்துரைத்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள தூதுவர், இப்போது நாட்டில் இடம்பெற்று வரும் விடயங்களை உன்னிப்பாக அவதானித்துவருவதாகத் தெரிவித்துள்ளார். அதேவேளை இச்சந்திப்பின்போது புதிய பிரதமரின் நியமனம் தொடர்பில் தூதுவர் கோபால் பாக்லே ஏதேனும் தெரிவித்தாரா என்று எம்.ஏ.சுமந்திரனிடம் வினவியபோது, ‘இல்லை’ என்று பதிலளித்த அவர், இவ்விடயத்தில் தமது நிலைப்பாடு என்னவென்பதைத் தாம் தூதுவரிடம் தெளிவுபடுத்தியதாகக் கூறியுள்ளார்.

ஒரு குடும்பம் அல்லது ஒரு கூட்டத்தை பாதுகாக்க நான் வரவில்லை பிரதமரின் முழுமையான உரை

புதிதாக பிரதமராக நியமிக்கப்பட்ட நிலையில் ரணில் விக்கிரமசிங்க தற்போது நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றுகின்றார்.

நாடு பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ள நிலையில் பிரதமர் பெறுப்பை ஏற்று நாட்டின் பொருளாதாரத்தை மீட்டிபெற வைப்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பல்வேறு துரித நடடிக்கைகளை எடுத்து வருகின்றார்.

இந்நிலையில் நாட்டின் பொருளாதார நெருக்கடி தொடர்பில் பிரதமர் விசேட உரையை தற்போது ஆற்றுகின்றார்

எரிவாயு கப்பலுக்கு செலுத்த வேண்டிய 5 மில்லியன் டொலர்களைக் கூட நிதியமைச்சினால் திரட்டிக்கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது என்கிறார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

ஒரு நாளைக்குத் தேவையான பெற்றோல் மாத்திரமே கையிருப்பில் உள்ளது எனக் குறிப்பிடுகின்றார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் மே 19 மற்றும் ஜூன் முதலாம் திகதிகளில் இரண்டு டீசல் கப்பல்களும், அத்துடன் மே 18 மற்றும் மே 29 ஆம் திகதிகளில் இரண்டு பெற்றோல் கப்பல்களும் நாட்டை வந்தடையவுள்ளன.

எரிவாயு சிலிண்டர் கொள்வனவிற்காக 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை விரைவாக திரட்டிக்கொள்ள வேண்டும் என்கிறார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

எரிவாயு பற்றாக்குறைக்கு நாளை முதல் ஒப்பீட்டளவில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்கிறார் பிரதமர்.

இதேவேளை, 14 அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவது கவலைக்குரியது என பிரதமர் தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டு அபிவிருத்தி வரவு – செலவு திட்டத்திற்கு பதிலாக மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வரவு – செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க தீர்மானித்துள்ளேன் .

பாரிய நட்டத்தை எதிர்கொண்டுள்ள ஸ்ரீலங்கன் விமான சேவையை தனியார் மயப்படுத்த யோசனை முன்வைத்துள்ளேன்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் முழு விபரம்

கடந்த வியாழக்கிழமை நான் பிரதமர் பதவியை பொறுப்பேற்றேன்.அந்தப் பதவியை நான் கேட்கவில்லை. நாட்டில் ஏற்பட்டிருந்த நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டு இந்தப் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு கௌரவ ஜனாதிபதி எனக்கு அழைப்பு விடுத்தார். நான் அரசியல் தலைவராக மட்டுமின்றி இலவசக் கல்வியை அனுபவித்து கொழும்பு சட்டக் கல்லூரியில் சட்டத்துறையில் பட்டம் பெற்று உயர்ந்த தேசியத் தலைவர் என்ற வகையிலே இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன்.

இந்தச் சந்தர்ப்பத்தில் இலங்கையின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையிலேயே உள்ளது.2022 ற் ஆரம்பத்தில் கடந்த அரசாங்கத்தின் வரவுசெலவு திட்டத்தில் 2.3 ட்ரில்லியன் ரூபாய்கள் வருமானமாக உள்ளன என காட்டப்பட்டாலும் இந்த வருடத்திற்கான உண்மையான வருமான எதிர்வு கூறல் 1.6 ட்ரில்லியன் ரூபாய்களாகவே உள்ளன..

2022 ஆம் ஆண்டிற்கான அரசின் செலவு 3.3 ட்ரில்லியன் ரூபாய்கள். எவ்வாறாயினும் கடந்த அரசில் வட்டி விகிதம் அதிகரித்தமை மற்றும் மேலதிக செலவுகள் காரணமாக 2022 ஆம் ஆண்டிற்கான அரசின் மொத்த செலவு 4 ட்ரில்லியன் ரூபாய்களாகும். வருடத்திற்கான வரவுசெலவு பற்றாக்குறை 2.4 ட்ரில்லியன் ரூபாய்களாக உள்ள அதேவேளை அது சராசரி தேசிய உற்பத்தியில் நூற்றுக்கு 13 வீதமாகும் .

அதேப் போன்று அங்கீகரிக்கப்பட்ட கடன் எல்லை 3200 பில்லியன் ரூபாயாகும் . நாம் மே மாதத்தின் இரண்டாம் வாரம் ஆகும்போது 1950 மில்லியன் ரூபாய்களை செலவு செய்திருந்தோம். அதன்படி அண்ணளவான மிகுதி 1250 மில்லியன் ரூபாய்கள். நாம் நேற்று அமைச்சரவையில் திறைசேரி முறிகளை வழங்கும் அனுமதிக்கப்பட்ட எல்லையை 3000 பில்லியனில் இருந்து 4000 பில்லியன் வரை அதிகரிக்கும் யோசனை ஒன்றை பாராளுமன்றத்தில் முன்வைக்க ஒரு தீர்மானத்தை எடுத்தோம்.

2019 நவம்பர் மாதத்தில் எமது அந்நியச் செலாவணி கையிருப்பு 7.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இருந்தன. ஆனால் இன்று திறைசேரியால் ஒரு மில்லியன் டொலர்களைக்கூட தேடிக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எரிவாயுவை கப்பலில் ஏற்றும் பொருட்டு செலுத்தத் தேவையான 5 மில்லியன் அமெரிக்க டொலர்களைக்கூட இந்த நேரத்தில் நிதியமைச்சினால் தேடிக்கொடுக்க முடியாதுள்ளது.

இவ்வனைத்து நெருக்கடிகளுக்கு மத்தியில் நாம் முகம் கொடுக்கும் மிகமோசமான சில சிக்கல்கள் உள்ளன. எதிர்வரும் சிலநாட்களில் வரிசைகளை கட்டுப்படுத்தும் பொருட்டு மிகவிரைவில் சுமார் 75 மில்லியன் அமெரிக்க டொலர்களை தேடவேண்டிய உள்ளது. இப்போது நமது கையிருப்பில் ஒரு நாளைக்குத் தேவையான பெற்றோல் மட்டுமே உள்ளது. நேற்று வந்த டீசல் கப்பலால் இன்றில் இருந்து உங்களின் டீசல் பிரச்சினைக்கு ஓரளவு தீர்வு கிடைக்கும். இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் மே 19 மற்றும் ஜூன் 01 ஆகிய திகதிகளில் மேலும் இரண்டு டீசல் கப்பல்களும் மே 18 மற்றும் மே 29 இரண்டு பெற்றோல் கப்பல்கள் வரவுள்ளன. இன்றுவரை 40 நாட்களுக்கு மேலாக இலங்கையின் கடற்பரப்பில் பெற்றோல், மசகெண்ணெய் , எண்ணெய் ஏற்றிவந்த கப்பல்கள் 3 நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு செலுத்தும் பொருட்டு திறந்த சந்தையில் டொலர்களை பெற்றுக் கொள்ள நடவடிகை எடுக்கப்படும்.

மின்சாரத் தேவையில் நான்கில் ஒன்றை உற்பத்தி செய்ய எரிபொருளே பயன்படுத்தப்படுகிறது. இதனால் நாளாந்த மின்வெட்டு இன்னும் சில நாட்களில் 15 மணித்தியாலங்களாக மாறவும் இடமுண்டு. ஆனால் நாம் இதற்கு தேவையான நிதியை தேடிக்கொண்டுள்ளோம் . அதேப் போன்று முடிந்தளவு நுகர்வோருக்கு எரிவாயுவை பெற்றுக் கொடுக்கும் பொருட்டு 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை கூடிய விரைவில் தேடவேண்டும். மண்ணெண்ணெய் மற்றும் சம்பந்தமான நிலைமை இதனை விடப் பயங்கரமானது. இந்த நேரம் வரை இலங்கை மத்திய வங்கி, அரச வங்கிகள், தனியார் வங்கிகள் , இலங்கையில் உள்ள வெளிநாட்டு வங்கிகள் அனைத்தும் டொலர் இல்லாத சிக்கலுக்கு முகம் கொடுத்துள்ளன. நம்மிடம் கையிருப்பில் உள்ள டொலர்களின் அளவு மிகவும் சிறியது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் இவ்வனைத்து சிரமங்களுக்கு மத்தியில் நேற்று ஒரு டீசல் ஏற்றிய கப்பலை நேற்று கொண்டு வந்தோம். அதனால் இன்று முதல் அந்த டீசலை உங்களால் பெற்றுக்கொள்ள முடியும். அதன்பொருட்டு இந்தியாவின் ஒத்துழைப்பு நமக்கு கிடைத்தது. அதேப் போன்று வந்துள்ள எரிவாயு கப்பலுக்கான கட்டணத்தை செவ்வாய்க்கிழமைக்கு முன்னர் செலுத்த நாம் நடவடிக்கை எடுப்போம். அதன் மூலம் உங்களின் எரிவாயு பிரச்சனைகளுக்கு ஏதோவொரு தீர்வு கிடைக்கும்.

இதற்கு இடையில் , மற்றுமொரு உதாரணம் மருத்துவ மருந்துகளுக்கானத் தட்டுப்பாடு. இருதய நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகள், சத்திர சிகிச்சைக்குத் தேவையான சிகிச்சை உபகரணங்கள் உட்பட பல மருத்துவ மருந்து வகைகளுக்கான தட்டுப்பாடு நிலவுகிறது. மருத்துவ மருந்துகள், சத்திர சிகிச்சை உபகரணங்கள் மற்றும் தேவையான உணவுகளை வழங்கும் வழங்குநர்களுக்கு 04 மாதங்களாக கட்டணம் செலுத்தப்படவில்லை. அவர்களுக்கு வழங்கவேண்டிய நிலுவை தொகை 34 பில்லியன் ரூபாய்களாகும். அதேப் போன்று அரச ஔடதக் கூட்டுத்தாபனம் இறக்குமதி செய்த மருத்துவ மருந்துகளுக்கு 04 மாதங்களாக கட்டணம் செலுத்தப்படவில்லை. அதனால் அவர்களை கருப்புப் பட்டியலில் சேர்க்க வெளிநாட்டு மருத்துவ நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. 14 அத்தியாவசிய மருத்துவ மருந்துகள் தட்டுப்பாடாக உள்ளமையும், அதில் இரண்டையாவது வழங்க இந்த நேரத்தில் எமது மருத்துவ வழங்கள் பிரிவிற்கு இயலாது உள்ளமை மிகவும் வருந்தத்தக்க விடயமாக உள்ளது. இருதய நோய்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்து, மற்றும் விசர் நாய்க்கடி எதிர்ப்பு மருந்து ஆகியவையே அந்த இரண்டு மருந்துகளாகும். ஆனால் விசர் நாய்க்கடி எதிர்ப்பு மருந்திற்க்கு மாற்று மருந்து எதுவும் இல்லை.

இதற்கிடையில் 2022 ஆண்டிற்காக முன்வைக்கப்பட்ட அபிவிருத்தி வரவுசெலவு திட்டத்திற்கு பதிலாக புதிய வரவுசெலவு திட்டமொன்றை முன்வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதனை சலுகை வரவுசெலவு திட்டமாக முன்வைக்கவே நான் திட்டமிடுகிறேன்.

அதேபோல், இதுவரை நட்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் ஸ்ரீலங்கன் விமான சேவையை தனியார் மயப்படுத்துமாறு நான் முன்மொழிகின்றேன் . 2020 – 2021 ல் மட்டும் ஸ்ரீலங்கன் விமான சேவை 45 பில்லியன் ரூபாய்கள் நட்டமடைந்துள்ளது .2021 மார்ச் 31 ஆகும் போது இதன் மொத்த நட்டம் 372 பில்லியன்களாக இருந்தது. நாம் இதனை தனியார் மயப்படுத்தினாலும் இந்த நட்டத்தை நாமே ஏற்க நேரிடும். இந்த நட்டத்தை வாழ்கையில் ஒருமுறையாவது விமானத்தில் பயணிக்காத இந்த நாட்டின் ஏழை எளிய மக்களும் அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

குறுகிய காலத்திற்கு நாம் இதனை விட மோசமான காலத்திற்கு முகம் கொடுக்க ப் போகின்றோம். பணவீக்கம் மேலும் அதிகரிக்க இடமுள்ளது.

அரசாங்கம் தற்போது 92 பெற்றோல் லீட்டர் ஒன்றில் ரூ. 84.38 , 95 பெற்றோல் லீட்டர் ஒன்றில் ரூ. 71.19 , டீசல் லீட்டர் ஒன்றில்ரூ. 131.55 சுப்பன் டீசல் லீட்டர் ஒன்றில் ரூ. 136.31 மற்றும் மண்ணெண்ணெய் லீட்டர் ஒன்றில் ரூ. 294.50 என நட்டமடைகின்றது . பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் இந்த நட்டத்தை மேலும் தாங்கிக் கொள்ள முடியாது. அதேப்போல இலங்கை மின்சாரசபை மின் அலகு ஒன்றிற்காக உங்களிடம் ரூ. 17 ஐ அறவிட்டாலும் அதன் பொருட்டு 48 ரூபாய்கள் வரை செலவு செய்கிறது . அதன்படி ஒரு அலகிற்கு 30 ரூபாய்கள் நட்டம் ஏற்படுகிறது. அதுவும் மோசமான சிக்கலாகும்.

நான் இந்த நேரத்தில் விருப்பப்படா விட்டாலும் பணத்தை அச்சடிப்பதற்கு அனுமதி வழங்க நேரிடும். அரச ஊழியர்களின் இந்த மாத சம்பளத்தை வழங்கவும் , உங்களுக்கு தேவையான பொருட்கள் சேவைகளின் பொருட்டே அதனை செய்யவுள்ளது. எவ்வாறாயினும் பணத்தை அச்சடிப்பதால் ரூபாவின் பெறுமதி குறையும் என்பதை நாம் நினைவில் வைக்க வேண்டும். தற்போதைய நிலையில் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் மின்சாரசபைக்குத் தேவையான நிதியைக்கூட தேடமுடியாதுள்ளது. எவ்வாறாயினும் எதிர்வரும் சில மாதங்களுக்கு நீங்களும் நானும் வாழ்க்கையில் மோசமான காலக்கட்டத்தை கடக்க நேரிடும். அதற்கு நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் முகம் கொடுக்க வேண்டும்.

நான் மக்களுக்கு விடயங்களை மறைத்து பொய் சொல்வதற்கு எந்தவகையிலும் விரும்பவில்லை. பயங்கரமாக இருந்தாலும் அசிங்கமாக இருந்தாலும் இதுதான் உண்மையான நிலைமை.குறுகிய காலத்திற்கு நாம் கடந்த காலத்தைவிட மிகவும் கஸ்டமான காலத்திற்கு முகம் கொடுக்க போகின்றோம். இந்த நேரத்தில் நமக்கு கவலைப்பட மட்டுமே முடியும். ஆனால் இது குறுகிய காலத்திற்கு மட்டுமே. எதிர்வரும் சில மாதங்களில் எமது நட்பு நாடுகளின் உதவிகள் மற்றும் ஒத்துழைப்பு எமக்கு கிடைக்கும். அவர்கள் எமக்கு உதவி செய்வதாக உறுதியளித்துள்ளனர். அதன் பொருட்டு எதிர்வரும் சில மாதங்கள் நாம் பொறுமையுடன் இருக்க வேண்டும். ஆனால் இதில் இருந்து நாம் மீள முடியும். அதன்பொருட்டு நாம் புதிய வழிக்கு செல்ல நேரிடும்.

இந்த சந்தர்ப்பத்தில் தற்போதைய நிலைமை சம்பந்தமாக எதிர்கட்சி தலைவர் உட்பட கட்சித் தலைவர்களுக்கு அனுப்பிய கடிதங்களுக்கு பதிலளித்தமை குறித்து அவர்களுக்கு நன்றி கூறுகிறேன்.

தற்போது நிலவும் இந்த சிக்கல்களுக்கு தீர்வு காணும் பொருட்டு தேசிய சபை அல்லது அரசியல் சபை ஒன்றை அனைத்து கட்சிகளினதும் பங்கேற்புடன் உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டி உள்ளது.

அதன் மூலம் அனைத்து தரப்பினருடனும் கலந்தாலோசித்து எட்டப்படும் தீர்மானத்திற்கு அமைய நிச்சயிக்கப்பட்ட காலப்பகுதிக்குள் பொதுவான குறுகிய கால- மத்தியக் கால – மற்றும் நீண்ட கால செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தி நாட்டை மீண்டும் உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்ல எம்மால் முடியும். மண்ணெண்ணெய், எரிவாயு, எரிபொருள் வரிசை இல்லாத நாடு, மின்சாரம் துண்டிக்கப்படாத நாடு , விவசாயத்தை சுதந்திரமாக மேற்கொள்ளக் கூடிய வசதிகள் உள்ள நாடு , இளைஞர் யுவதிகளின் நாளையதினம் பாதுகாக்கப்பட்ட நாடு, மனித வளம் போராட்டக் களத்தில் மற்றும் வரிசையில் வீணடிக்கத் தேவை இல்லாத நாடு, எல்லோரும் சுதந்திரமாக வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்லக் கூடிய நாடு , மற்றும் மூன்று வேளையும் உணவு உண்ணக் கூடிய நாட்டை நாம் கட்டியெழுப்புவோம்.

நான் பொறுப்பேற்றது மிகவும் அபாயகரமான சவால். கத்தியின் மேல் நடப்பதைவிட இது பயங்கரமான சவால் மிகுந்தது. மிகவும் ஆழமானது. அடியே தெரியவில்லை. பாலங்கள் மெல்லிய கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ளன. கைப்பிடி இல்லை. என்னுடைய கால்களில் கலற்ற முடியாத பாதணிகள் போடப்பட்டுள்ளன. அதன் அடியில் கூர்மையான இரும்பு ஆணிகள் பொருத்தப்பட்டுள்ளன. குழந்தையை பாதுகாப்பாக அடுத்த பக்கம் கொண்டு செல்ல வேண்டி உள்ளது. இந்த சவாலை நான் நாட்டிற்காகவே பொறுப்பேற்றேன்.எனது நோக்கமும் அர்ப்பணிப்பும் ஒரு தனிமனிதன் , ஒரு குடும்பம், அல்லது ஒரு கூட்டத்தை பாதுகாப்பது அல்ல முழு நாட்டினதும் மக்களை காப்பாற்றுதே, இளைஞர்களின் எதிர்காலத்தை காப்பாற்றுவதே .உயிரை பணயம் வைத்து இந்த சவாலுக்கு நான் முகம் கொடுப்பேன். அந்த சவாலை வெற்றி கொள்வேன். அதற்கு உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பையும் எனக்கு பெற்றுத் தாருங்கள்.

நான் எனது கடமையை நாட்டிற்காக செய்து முடிப்பேன். அது நான் உங்களுக்கு அளிக்கும் உறுதியாகும்.

Posted in Uncategorized

`ரெலோ` குகனின் நினைவேந்தல்

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட முன்னாள் பொறுப்பாளரும் மத்திய குழு உறுப்பினருமான கிறிஸ்டி குகராஜாவின் (குகன்) 23வது நினைவு தினம், வைரவப்புளிங்குளம் `யங் ஸ்ரார்` விளையாட்டு மைதானத்துக்கு முன்பாகவுள்ள அன்னாரின் நினைவுத் தூபியில் நேற்று (15) நடைபெற்றது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அன்னாரது தூபிக்கு மலர்மாலை அணிவித்து, ஒளிதீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் உறுப்பினர், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் இதில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Posted in Uncategorized