முன்னாள் பிரதமர் மஹிந்த உள்ளிட்டவர்களை கைது செய்யுமாறு பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் சனத் நிஷாந்த மற்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆகியோரை கைது செய்யுமாறு பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் மேல்மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தமது அதிகாரத்தை பயன்படுத்த தவறிய குற்றவியல் சட்டத்தின் 37 மற்றும் 38 ஆவது பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டுமெனவும் அவர்கள் கோரியுள்ளனர்.

மேலும், தாக்குதலில் ஈடுபட்ட மற்றும் சிறைச்சாலை கட்டளைச் சட்டத்தை மீறிய அனைத்து சிறைச்சாலை அதிகாரிகளையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் சனத் ஆகியோரை குற்றவியல் அச்சுறுத்தல், குண்டர்களுக்கு உதவி செய்தல் மற்றும் குற்றவியல் சட்டத்தின் 486 மற்றும் 102 ஆகிய பிரிவுகளின் கீழ் கைது செய்யுமாறு கமல் விஜேசிறி, துசித குணசேகர, ராஜித லக்மால் உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவினால் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

எரிபொருள் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

எரிபொருள் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை மற்றும் ஊரடங்குச் சட்டத்தை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.

கோட்டாபயவின் அதிகாரங்களுக்கு அமைவாக மூன்று அமைச்சுக்களின் செயலாளர்கள் நியமனம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக மக்களின் இயல்பு வாழ்க்கையை பேணுவதற்காக மூன்று அமைச்சுக்களின் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (10) முதல் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

அரசாங்கம் விடுதலைப்புலிகளை காரணம் காட்டி எதையும் திசை திருப்பலாம்: தமிழ்மக்களுக்கு செல்வம் அடைக்கலநாதன் எச்சரிக்கை

“வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் மிக அவதானமாக இருக்க வேண்டும் எனவும் எங்களுடைய பங்களிப்பு தற்போதைய போராட்டங்களில் இருக்கின்ற போது விடுதலைப்புலிகளை காரணம் காட்டி திசை திருப்புகிற கெட்டித்தனம் இந்த அரசாங்கத்திடம் இருக்கின்றது” என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாடு மிகவும் கொந்தளிப்பான நிலையில் இருந்து கொண்டு இருக்கின்றது. சிங்கள தேசத்தில் போராட்ட வடிவில் பல விடயங்கள் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றது. மகிந்த ராஜபக்சவின் ஆரம்ப பிரச்சினையே இன்று பாரிய அளவில் வெடித்துள்ளது.

பொருளாதார பிரச்சினை பின்தங்கிய நிலையிலே இவ்வாறான ஒரு சூழலை உருவாக்கி மகிந்த ராஜபக்ச, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவருடைய அரசாங்கம் மிக மோசமான ஒரு சூழலை உருவாக்கி உள்ளது என்பதை பார்க்கும் போது இது ஒரு கண்டனத்திற்குரிய விடயமாக உள்ளது. வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ்மக்கள் மிக அவதானமாக இருக்க வேண்டும்.

எங்களுடைய பங்களிப்பு குறித்த விடயங்களில் இருக்கின்ற போது விடுதலைப்புலிகளை காரணம் காட்டி திசை திருப்புகிற கெட்டித்தனம் இந்த அரசாங்கத்திடம் இருக்கின்றது.

விடுதலைப்புலிகளை காரணம் காட்டி சிங்கள மக்களை திசை திருப்புகின்ற ஒரு நிலையை அவர்கள் ஏற்படுத்துவதற்கு நாங்கள் அனுமதிக்ககூடாது. காலச்சக்கரம் சுழன்று கொண்டு இருப்பதை பார்க்கின்ற போது இந்த மே மாதத்தில் தமிழ் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தார்கள். உயிர் அவலம் ஏற்பட்டது.

மே-18 இல் எமது மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அவர்களின் சடலங்கள் புதைக்கப்பட முடியாத நிலையில், அனாதையாக கைவிடப்பட்டது. தனது தந்தை உறவுகள் உயிரிழந்து சடலமாக கிடக்கும் போது அதனை தாண்டி வருகின்ற அவலமான சூழ்நிலை ஏற்பட்டது. மே மாதம் என்பது எமது மக்களின் மனங்களில் நிலைத்து நிற்கின்றது.

எங்களுடைய மக்களுக்கு எதிராக செயல்பட்டவர்களுக்கு எதிராக இந்த மே மாதத்தில் நிலமைகள் மாறி இருப்பது கவலை தருகின்ற விடையமாக இருந்தாலும், இறைவன் ஒரு நியாயமான செயல்பாட்டை மேற்கொண்டுள்ளார் என்று நாங்கள் கருத முடியும்.

சிங்கள மக்கள் மத்தியில் நாங்கள் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களுக்கும் பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. சிங்கள மக்களால் ஆதரிக்கப்பட்ட சம்மந்தப்பட்டவர்கள் இன்று இந்த மக்களாலேயே துரத்தப்பட்டு பழிவாங்கப்படுகின்றனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டங்கள் உள்ளிட்ட எமது மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் இறைவனின் நாட்டம் எம் மக்களுடன் உள்ளது என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.

எனவே தமிழர்களாகிய நாங்கள் முழுமையாக குறித்த போராட்டங்களில் இணைந்து கொண்டிருந்தோம் என்றால் இந்த அரசாங்கம், ஜனாதிபதி ஆகியோர் குறித்த போராட்டத்தை எமது பக்கம் திசை திருப்பி விடுதலைப்புலிகளின் மீளாக்கம் அல்லது விடுதலைப்புலிகள் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்கள் என்று கூறுகின்ற ஒரு நிலைப்பாட்டை இலங்கை அரசாங்கம் ஏற்படுத்தி எங்களுக்கு எதிராக ஒரு வன்முறையை தூண்டி விடுகின்ற வாய்ப்புகள் இருக்கின்றது.

எனவே தமிழ் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். இக்காலகட்டத்தில் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். ஊரடங்குச்சட்டம் நடைமுறையிலுள்ள நிலையில் நாடு முழுமையாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. அன்றாடம் உழைத்து உண்ணுகின்ற மக்கள் தற்போதைய சூழலில் கஷ்டத்தை எதிர்நோக்குகின்றனர். மேலும் எரிவாயு, எரிபொருட்கள் இல்லை.

இதனால் விவசாயிகள், கடற்தொழிலாளர்கள் ஏனைய கூலி தொழிலாளர்கள் பல்வேறு துயரங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

எனவே தலைவர்கள் நிதானமாக ஆரம்பத்தில் ஜனநாயக ரீதியில் போராட்டங்கள் இடம் பெற்ற போது அவர்கள் இராஜினாமா செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அந்த சூழ்நிலையில் அந்த விடயத்தை அவர்கள் கையாண்டு இருந்தார்கள் என்றால் இன்று இந்த தலைவர்கள் மக்களினால் மதிக்கப்பட்டிருப்பார்கள்.

ஆனால் அவர்களின் இறுமாப்பு மற்றும் ஆயுதப்போராட்டத்தை எவ்வாறு அடக்கி விட்டோம் என்றது போல் சிங்கள மக்களின் இந்த போராட்டத்தையும் அடக்கலாம் என்று கற்பனையுடன் அவர்கள் செயற்பட்டுள்ளனர். அது இன்று வினையாக மாறியுள்ளது.

மகிந்த ராஜபக்ச மற்றும் ஜனாதிபதி ஆகியோர் காலம் கடந்து முடிவுகள் எடுப்பது தவறு. மக்கள் விரும்பவில்லை என்றால் அவர்கள் விட்டுச் செல்ல வேண்டும் என்பதே காலத்தின் நீதி. பிரச்சினைகளை ஏற்படுத்தி இன முருகலை தூண்டி விட்டு இழப்புக்களை சந்தித்த பின்பு தமது பதவிகளை ராஜினாமா செய்வது என்பது முட்டாள்தனம். மக்கள் இன்றும் பல பிரச்சினைகளை சந்திக்கின்றனர்.

எனவே ஜனாதிபதி இராஜினாமா செய்ய வேண்டும்.அப்போது தான் நாட்டில் ஏற்பட்டுள்ள மக்கள் புரட்சி யை முடிவுக்கு கொண்டு வர முடியும்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

ஜனாதிபதி பதவி விலகினால் பிரதமர் பதவியை சஜித் ஏற்க தயார் – லக்‌ஷ்மன் கிரியெல்ல

ஜனாதிபதி இராஜினாமா செய்தால் மாத்திரமே, பிரதமர் பதவியை சஜித் பிரேமதாச பொறுப்பேற்பார் என பாராளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

இலங்கை அரசியல்வாதிகள் இந்தியா சென்றனரா ? – மறுக்கிறது இந்திய உயர்ஸ்தானிகராலயம் !

எந்தவொரு அரசியல்வாதியோ அல்லது குடும்ப உறுப்பினர்களோ இந்தியாவிற்கு தப்பிச் செல்லவில்லை என இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

டுவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டு இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதனை தெரிவித்துள்ளனர்.

சில அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருவதாகவும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

ஜனாதிபதி பதவி விலகும் வரை மக்கள் போராட்டம் தொடரும் நிலை – புத்திஜீவிகள் நம்பிக்கை

நாட்டின் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் அனைத்து வன்முறை சம்பவங்களுக்கும் மஹிந்த ராஜபக்ஷவே பொறுப்புக்கூறவேண்டும்.

அத்துடன் ஜனாதிபதி தனது பதவியில் இருந்து விலகும் செய்தியை விரைவாக அறிவிக்கும்வரை மக்களின் போராட்டம் தொடரும் நிலையே இருந்து வருகின்றது என புத்திஜீவிகள் தெரிவித்தனர்.

நாட்டின் தற்போதைய நிலைதொடர்பாக நேற்று புத்திஜீவிகள் மற்றும் கலைஞர்கள் சூம் தொழிநுட்ப வசதியுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்தனர்.

இங்கு கருத்து தெரிவித்த ஓமல்பே சோபித்த தேரர் குறிப்பிடுகையில்,

நாட்டில் வன்முறை இடம்பெற்று பாரிய சேதங்கள் இடம்பெற்றமைக்கான பிரதானமாக பொறுப்புக்கூறவேண்டியவர் மஹிந்த ராஜபகஷவாகும். அதேபோன்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ்வும் தனது தம்பியின் பொறுப்பில் இருந்து விடுபட முடியாது. அவரும் இதற்கு பொறுப்புக்கூறவேண்டும்.

மஹிந்த ராஜபக்ஷ எந்தளவு முட்டாள் தனமான, மோசமானவர் என்பது நேற்றைய (நேற்று முன்தினம்) சம்பவத்துடனே விளங்கிக்கொள்ள முடியுமாகி இருக்கின்றது. அதிகார பேராசையே இதற்கு காரணமாகும்.

காலி முகத்திடலில் மக்கள் அமைதியான போராட்டத்தையே மேற்கொண்டுவந்தனர். அதனையே மஹிந்த ராஜபக்ஷ்வின் ஆதரவாளர்கள் வன்முறைக்கு எடுத்துச்சென்றுள்ளனர்.

எனவே நாட்டில் இடம்பெற்ற மிகமோசமான இந்த சம்பவங்களுக்கு பிரதானமாக மஹிந்த ராஜபக்ஷ் பொறுப்புக்கூறவேண்டும் என்றார்.

பேராசிரியர் அனுர உதுவன்கே தெரிவிக்கையில், நாட்டில் இந்தளவு பாரிய வன்முறை இடம்பெற்றுள்ள நிலையிலும், ஜனாதிபதி உண்மையான மக்கள் தலைவர் என்றால், அவர் மக்களிடம் மன்னி்ப்பு கோரி, ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதை அறிவிக்கவேண்டும்.

அதேபோன்று நாட்டின் தற்போதைய நிலைமையை கட்டுப்படுத்தி, பொறுத்தமான ஆட்சியொன்றை அமைப்பதற்கு அவர் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போகிறார் என்பதை உடனடியாக அறிவிக்கவேண்டும். அதுவரை இந்த போராட்டத்தை மக்கள் முன்னுக்கு கொண்டுசெல்வார்கள் என்றே நான் நம்புகின்றேன் என்றார்.

சிறிஜயவர்த்தனபுர பல்கலைக்கழக அரசியல் பிரிவு பீடாதிபதி விசாக்கா சூரியபண்டார தெரிவிக்கையில், தற்போதைய நிலைமையில் இடைக்கால ஆட்சி முறைக்கு செல்லவேண்டும். அந்த அடைக்கால ஆட்சியின் பிரதமரால்தான் ஜனாதிபதி பதவி விலகவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கவேண்டும்.

அத்துடன் சட்டத்தரணிகள் சங்கத்தின் நிபந்தனைகளுக்கு ஜனாதிபதி ஓரளவு இணக்கம் தெரிவித்திருப்பதன் மூலம் அவர் பச்சை விளக்கை ஒளிக்கவிட்டிருக்கின்றார். அந்த பச்சை விளக்கு முழுமையாக ஒளிரவேண்டும் என்றால், போராட்டக்காரர்களின் அமைதியான போராட்டம் தொடரவேண்டும். ஆனால் அமைதிப்போராட்டம் வேறுவிதமாக மாறினால் நிலைமையும் வேறு விதமாக மாறும் வாய்ப்பு இருக்கின்றது என்றார்.

Posted in Uncategorized

நசீர் அஹமதின் அலுவலகம் எரியூட்டல்

ஏறாவூரிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட்டின் காரியாலயம் இன்று(செவ்வாய்கிழமை) தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது.

கொழும்பில் நேற்று மகிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களால் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இதனையடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் முன்னாள் பிரதமர் மற்றும் அவரது ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஆதரவாளர்கள் மீது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் பொதுமக்கள் அவர்களது வாகனங்கள், வீடுகள் உள்ளிட்ட சொத்துக்களை அழித்து பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Posted in Uncategorized

சண்டிலிப்பாயில் அங்கஜனின் அலுவலகத்தின் மீது தாக்குதல்!

யாழ்ப்பாண மாவட்ட சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான என் கனவு யாழ் அங்கஜன் ராமநாதனின் சண்டிலிப்பாய் அலுவலகம் சற்று முன்னர் தாக்கப்பட்டு அலுவலக பெயர்ப் பலகையும் எரியூட்டப்பட்டுள்ளது.

அங்கஜனின் சண்டிலிப்பாய் அலுவலக பதாகைக்கு தீ வைப்பு; அருண் சித்தார்த்தை தேடும் இளைஞர்கள்

அரசுக்கு எதிரான மக்களின் நடவடிக்கைகளில் வடக்கு மாகாணத்தில் முதலாவது சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (மே 10) இரவு பதிவாகியுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதனின் சண்டிலிப்பாய் தொகுதி அலுவலகத்தின் முன்பாக காட்சிப்படுத்தப்பட்டிருந்த பிளக்ஸ் காட்சிப் பதாகை தீவைக்கப்பட்டுள்ளது. எனினும் முழுமையாகச் சேதமடையவில்லை.

மக்கள் கூட்டத்தினால் இந்த நடவடிக்கை இன்றிரவு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அரசுக்கு சார்பாகவும் தமிழ் மக்களுக்கு எதிராகவும் செயற்பட்டு வரும் அருண் சித்தார்த்தை தேடி வருவதாக இளைஞர்கள் பலர் சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டுள்ளன.

ஊரடங்கு சட்டம் வியாழக்கிழமை (12) காலை 07 மணி வரை நீடிப்பு

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அந்த வகையில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டமானது எதிர்வரும் வியாழக்கிழமை 12 ஆம் திகதி காலை 7.00 மணி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச சட்டமானது நாளை காலை 07 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே தற்போது 12 ஆம் திகதி காலை வரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.