பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரி கல்முனை மாநகர சபையில் பிரேரணை நிறைவேற்றம்

இலங்கையில் கடந்த நாற்பது வருடங்களுக்கு மேலாக அமுலிலுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக நீக்குமாறு அரசாங்கத்தைக் கோரும் தீர்மானம் ஒன்று கல்முனை மாநகர சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கல்முனை மாநாகர சபையின் 47 ஆவது பொதுச் சபை அமர்வு மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் சபை சபா மண்டபத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்றது.

இதன்போது பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக நீக்குமாறு அரசைக் கோருவதற்கான பிரேரணையை தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) பிரதி தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான ஹென்ரி மகேந்திரன் சபையில் முன்மொழிந்தார்.

இந்தப் பிரேரணையை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் சட்டத்திரணி ஆரிகா காரியப்பர் வழிமொழிந்தார்.

பிரேரணைக்கு ஆதரவாக சபை அமர்வில் கலந்து கொண்ட பல உறுப்பினர்கள் உரையாற்றியதுடன் பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவுடன் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

ஒரு உறுப்பினர் மட்டும் இதற்கான மாற்றுக்கருத்தை சபையில் தெரிவித்தார்.
கூட்டமைப்பு உறுப்பினர் ஹென்ரி மகேந்திரன் சபையில் பிரேரணையை முன்மொழிந்து உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.

“நாட்டில் நான்கு தசாப்தங்களுக்க மேலாக அமுலிலுள்ள பயங்கரவாத தடைச்சட்டம் மனித உரிமைகளுக்கு சவாலாக மக்களை குறிப்பாக சிறுபான்மை மக்களைக் பெரிதும் பாதித்து வருகின்றது.

இந்த படுபாதக சட்டத்தினால் முதன் முதலில் எமது தமிழீழ விடுதலை இயக்கத்தின் முக்கியஸ்த்தர்களான தங்கத்துரை, குட்டிமணி போன்றோரே தண்டிக்கப்பட்ட துயரத்தையும் நினைவு கூர வேண்டும்.

அன்று தமிழ் மக்கள் மீதும், நேற்று முஸ்லிம் மக்கள் மீதும், இன்று சிங்களவர்களையும் சேர்த்து முழு மக்கள் மீதும் இந்த பயங்கரவாத தடைச்சட்டம் மிக மோசமாகப் பாய்ந்து கொண்டிருக்கின்றது.

இக் கொடூர சட்டத்தை முற்றாக இரத்துச் செய்வதற்கு நாம் உரத்துக் குரல் கொடுப்பதுடன் இதற்கென சர்வதேச அழுத்தங்கள் வலுப்பெறவும் நாம் கோர வேண்டும்.

குறிப்பாக தேர்தல் ஒன்றுக்காகவும், சிறுபான்மை மக்களைப் பழிதீர்ப்பதற்காகவும் அரசு கையிலெடுத்துள்ள இக்கொடூர சட்டத்தை நீக்குமாறு கோரும் தீர்மானங்களை சகல உள்ளுராட்சி சபைகளும் நிறைவேற்றி அழுத்தம் கொடுக்க முன்வர வேண்டுமெனவும் இச்சந்தர்ப்பத்தில் அறை கூவல்விடுக்கின்றேன்” என்றார்.

அரசாங்கத்தின் திறனற்ற நிர்வாகம் : 7 மணி நேர மின்வெட்டு!

அரசாங்கத்தின் சீரற்ற முகாமைத்துவத்தால் தற்போது 7 மணி நேர வெட்டு அமுல்படுத்தப்படுகிறது.

ஒரு மணி நேரமாக ஆரம்பித்த மின்வெட்டு இன்று 7 மணி நேரம் வரை நீடிக்கப்பட்டுள்ளது. இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்படும் அட்டவணையை கீழே காணலாம்.

இந்த மின்வெட்டினால் பொதுமக்கள் பல சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். குறிப்பாக சிறு வியாபாரங்களை முன்னெடுப்போர் பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

குளிர்சாதனப் பெட்டிகளை வைத்திருக்கும் வியாபாரிகளும், குளிர்சாதன களஞ்சியசாலையை நடத்துவோரும் பெரும் நட்டத்தை எதிர்கொண்டுள்ளனர்.

இதற்கு முன்னர் இலங்கையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் போது மின்பிறப்பாக்கிகளை வைத்திருக்கும் வியாபாரிகள், உற்பத்தி நிறுவனங்களை அவற்றை இயக்கி தமது பணிகளை முன்னெடுத்து வந்தன.

எனினும், தற்போது டீசல் நெருக்கடியினால் மின்பிறப்பாக்கிகளைக்கூட இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நீரேந்து பிரதேசங்களில் மழைவீழ்ச்சி இல்லாததால் நீர் மின் உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது. அடுத்த சில மாதங்களுக்கு போதுமான மழை வீழ்ச்சியை எதிர்பார்க்க முடியாததால், நீர் மின் உற்பத்தியும் பொய்த்துப் போயுள்ளது.

எனவே, எரிபொருள் மூலம் மின் உற்பத்தியை நம்பியிருக்க வேண்டிய நிலையில், டொலருக்கான தட்டுப்பாடு எரிபொருளைக் கொள்வனவு செய்வதில் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக டீசல் பற்றாக்குறையினால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்தடுத்த நாட்களில் நிலைமை இன்னும் மோசமாகும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

இதேவேளை, தற்போது டீசல் பற்றாக்குறையால் பேருந்து சேவைகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. 50 வீதமான பேருந்து சேவைகளே சேவையில் ஈடுபடுத்தப்படுவதாக தனியார் பேருந்து சேவை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

டீசல் பற்றாக்குறையால் மரக்கறி விநியோகத்திலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. விளை பொருட்களை சந்தைகளுக்குக் கொண்டுவர முடியாத நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளன.

இவ்வாறு டீசல் நெருக்கடியும் டொலர் நெருக்கடியும் இலங்கை மக்களின் கழுத்தை நாளுக்கு நாள் நெருக்கி வருகிறது,

எரிபொருள் கப்பல்கள் வந்துகொண்டிருக்கின்றன. இன்னும் சில நாட்களில் எரிபொருள் கிடைத்துவிடும் என்று கூறினாலும் கூட, கையிருப்பில் டொலர்கள் இல்லாததால் அரசாங்கம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் டீசலை விநியோகிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

இதனால் பொதுமக்கள் குறைந்த நுகர்வை மேற்கொள்வர் என்பதுடன் இந்த நெருக்கடியை சில வாரங்களுக்கு சமாளிக்க முடியும் என்ற எதிர்பார்ப்பில் இவ்வாறு நடந்துகொள்வதாக பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனினும், திறனற்ற முகாமைத்துவமே இந்த நெருக்கடிக்குக் காரணம் என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். கடந்த ஜனவரி மாதம் செலுத்திய 500 மில்லியன் டொலர் கடன் தொகையை செலுத்துவதற்கு, பேச்சுவார்த்தை நடத்தி காலம் எடுத்திருந்தால் இந்த நெருக்கடி இவ்வளவு மோசமாகியிருக்காது என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன.

எவ்வாறாயினும், அரசாங்கத்தில் உள்ள அதிகாரிகள், தலைமைகள் இடையிலான சண்டைகளும், அதிகாரப் போட்டியுமே இந்த நிலை இவ்வளவு மோசமாவதற்குக் காரணம் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.

அதிகாரப் போட்டியும், திறனற்ற நிர்வாகமும் இன்று மக்களை பெரும் துயரத்தில் தள்ளியுள்ளது. இந்த நிலை நீடிக்குமானால் எப்போது பொருளாதாரம் அதளபாதத்தில் உடைந்து விழுவதை தவிர்க்க முடியாது என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

நிலைமை இவ்வாறு நீடித்தால் அடுத்த சில நாட்களில் உணவுப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் மிக அத்தியாவசிய செலவுகளை மட்டும் செய்து, தமது குடும்ப, பிரத்தியேக பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Posted in Uncategorized

இலங்கைக்குள் அரசியல் தீர்வு ஒருபோதும் கிடையாது

தமிழ் மக்களது முழுமையான நிலைப்பாட்டை கட்சிகள் வெளிப்படுத்தாத காரணத்தால் நாங்கள் ஜெனீவாவுக்கு தனியாக கடிதம் எழுதவேண்டிய தேவை ஏற்பட்டதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

கட்சிகள் ஒவ்வொன்றும் தனியாக ஜெனிவாவிற்கு கடிதம் எழுதியமை தொடர்பாக வல்வெட்டித்துறையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இம்முறை ஜெனிவாவிற்கு தமிழ் மக்கள் கூட்டணி,தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி,தமிழ்த் தேசியக் கட்சி ஆகிய 5 கட்சிகள் கூட்டாக தமிழர் பிரச்சினையை தீர்க்க வடக்கு கிழக்கில் பொதுஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என வலியுறுத்தி கடிதத்தை எழுதியுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி இலங்கை தமிழரசுக் கட்சி போன்றவை இதுவரை சர்வதேச சமூகத்திடம் பொதுசன வாக்கெடுப்பு தேவை என்ற விடயத்தை வலியுறுத்தவில்லை. இந்நிலையில் தமிழ் மக்களது முழுமையான நிலைப்பாட்டை கட்சிகள் வெளிப்படுத்தாத காரணத்தால் நாங்கள் தனியாக ஜெனிவாவுக்கு கடிதத்தினை அனுப்பியுள்ளோம். ஒரே நிலைப்பாட்டில் கட்சிகள் இருக்குமானால் ஜெனீவாவுக்கு பல்வேறு கடிதங்கள் போக வேண்டிய தேவையிருக்காது.

இலங்கைக்குள் அரசியல் தீர்வு ஒருபோதும் கிடையாது. ஒற்றையாட்சியை விட்டு ஒரு அங்குலமும் அரசாங்கம் வழங்காது. அரசியல் தீர்வு வழங்கப்படும் ஆனால் கூட ஒற்றையாட்சியை மலினப்படுத்துவதாக அந்த தீர்வு இருக்காது.

சர்வதேச நாடுகள் மற்றும் சர்வதேச சமூகம் இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஒரு பொதுசன வாக்கெடுப்பை நடத்த வேண்டும். அதுவே அரசியல் தீர்வுக்கான வழி என்பதை நாங்கள் இறுக்கமாக வலியுறுத்தி இருக்கின்றோம் என்றார்.

மனித உரிமைகள் பேரவையின் ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறையை முழுமையாக நிராகரிப்பதாக ஜீ.எல்.பீரிஸ் அறிவிப்பு

இலங்கையின் உடன்பாடின்றி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானத்தின் ஊடாக உருவாக்கப்பட்டுள்ள ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறையானது இலங்கை மக்களுக்கு எவ்வகையிலும் பயனளிக்காது என்பதுடன் அது சமூகங்களுக்கு இடையில் பிளவுகள் ஏற்படுவதற்கும் துருவமயப்படுவதற்கும் வழிவகுக்கும்.

இந்நடவடிக்கை நல்லிணக்கத்தை உறுதிசெய்வதற்கான முயற்சிகளில் இடையூறுகளைத் தோற்றுவிப்பதுடன் மாத்திரமன்றி, கடந்தகால வடுக்கள் மீண்டும் கிளறப்படுவதற்கும் காரணமாக அமையும்.

ஆகவே ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறையை நாங்கள் முழுமையாக நிராகரிக்கின்றோம் என்று வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அறிவித்தார்.

மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் உள்ளடங்கலாக ஒட்டுமொத்த கட்டமைப்பும் நிதிப்பற்றாக்குறைக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், இந்த நடவடிக்கை உறுப்புநாடுகளின் நிதி அநாவசியமான முறையில் செலவிடப்படுவதற்கே வழிவகுக்கும் என்றும் அவர் பேரவையில் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் நேற்று திங்கட்கிழமை ஆரம்பமான நிலையில், பேரவையில் நேற்றைய தினம் இலங்கை சார்பில் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் உரையாற்றினார். தனது உரையில் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டிய அவர், மேலும் கூறியதாவது:

மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்குமான செயற்திட்டத்தில் இலங்கை செயற்திறன்வாய்ந்த உறுப்பினராக இருந்துவருகின்றது.

எமது அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள், ஜனநாயக முறையின் ஊடாகத் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கத்தின் கட்டமைப்புக்கள் மூலம் செயற்திறன்மிக்கவகையில் மேம்படுத்தப்பட்டிருப்பதுடன் சுயாதீன நீதிமன்றக்கட்டமைப்பின் ஊடாக வலுப்படுத்தப்பட்டுள்ளன. பயங்கரவாதத்தின் விளைவாகப் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்கவேண்டியேற்பட்ட போதிலும், நாம் நாட்டில் சமாதானத்தையும் பாதுகாப்பையும் சட்டத்தின் ஆட்சியையும் மீளுறுதிப்படுத்தியிருக்கின்றோம்.

நாட்டின் ஜனநாயக ரீதியான பாரம்பரியம் மற்றும் சுயாதீனக்கட்டமைப்புக்கள் ஊடாக சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட குறிப்பிட்ட கால இடைவெளியில் சுதந்திரமானதும் நேர்மையானதுமான தேர்தல்கள் நடாத்தப்படுகின்றன. அதேவேளை போரின் பின்னரான மீட்சியை முன்னிறுத்தி நாம் மேற்கொண்டிருந்த முக்கிய நடவடிக்கைகளை எதிர்வருங்காலங்களில் மேலும் மேம்படுத்துவதற்கு எதிர்பார்த்திருக்கின்றோம். அதன்படி நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் சமூகநீதி ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கென உள்ளகக்கட்டமைப்புக்களை ஸ்தாபித்திருக்கின்றோம்.

இந்தப் பேரவையின் ஊடாக நாம் பரஸ்பர நன்மையளிக்கும் வகையிலான காலவரையறையுடைய மூன்று மதிப்பீடுகளைப் பூர்த்திசெய்திருப்பதுடன் மனித உரிமைகள் பேரவையுடன் தொடர்புடைய கட்டமைப்புக்களுடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுத்திருக்கின்றோம். அதுமாத்திரமன்றி விசேட ஆணை வழங்கப்பட்ட அதிகாரிகளின் செயற்பாடுகளை வரவேற்று ஏற்றுக்கொண்டிருப்பதுடன் உள்ளக மற்றும் சர்வதேசத்தரப்புக்களுடன் நேரடியானதும் வெளிப்படையானதுமான கலந்துரையாடல்களையும் மேற்கொண்டிருக்கின்றோம்.

அதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஊடாக வழங்கப்பட்ட செயற்பாட்டு ரீதியான ஒத்துழைப்புக்கள், இயலுமையை மேம்படுத்துவதற்கான செயற்திட்டங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் நாம் நன்மையடைந்திருக்கின்றோம். மேலும் நல்லிணக்கத்தை உறுதிசெய்வதை முன்னிறுத்திய எமது உள்ளகப்பொறிமுறைக்கான ஒத்துழைப்புக்களை வழங்குவதிலும் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதிலும் இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் குழுவினால் வழங்கப்பட்டுவரும் பங்களிப்பை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுகின்றோம். இத்தகைய ஒத்துழைப்புக் கலந்துரையாடல்கள் மற்றும் சர்வதேசக்கடப்பாடுகளைப் பூர்த்திசெய்யும் வகையிலான எமது உள்ளகப்பொறிமுறை ஆகியவற்றின் ஊடாக மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதுடன் மேம்படுத்தப்படுவதையும் இன, மத, அரசியல் அடையாளங்களுக்கு அப்பால் அனைத்து மக்களுக்குமான சமூகநீதி நிலைநாட்டப்படுவதையும் நாம் தொடர்ந்து உறுதிசெய்வோம்.

கொவிட் – 19 வைரஸ் தொற்றுப்பரவலினால் பொருளாதார ரீதியில் ஏற்பட்ட பின்னடைவிற்கு மத்தியிலும், அபிவிருத்திக்கான மக்களின் உரிமையை நாம் உறுதிசெய்துவருகின்றோம். நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் தொடர்பில் வெளியிடப்பட்ட அண்மைய அறிக்கையின்படி, உலகளாவிய தரப்படுத்தலில் இலங்கை 7 நிலைகளால் முன்னேற்றமடைந்திருக்கின்றது. இவ்விடயத்தில் அடிமட்டம் வரையில் அணுகுவதற்கான தமது இயலுமையின் மூலம் சிவில் சமூக அமைப்புக்களால் வழங்கப்பட்ட பங்களிப்பினைப் நாம் பெரிதும் வரவேற்கின்றோம்.

சர்வதேச சமூகத்தின் மத்தியில் அபிவிருத்தியடைந்துவரும் ஓர் நாடு என்றவகையில், வைரஸ் தொற்றுப்பரவல் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்கான எமது முயற்சிகளைப் பாதிக்கக்கூடியவகையில் ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள மோதல் போன்றவற்றின் விளைவுகளால் ஏற்படக்கூடிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்கு நாம் தயாராகின்றோம்.

பேரவையின் தீர்மானங்களின் பிரகாரம் நாம் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பான மீளாய்வு தற்போது மேற்கொள்ளப்படுகின்றது. முன்னைய ஆணைக்குழுவின் வீழ்ச்சிக்கு வழிவகுத்த நம்பகத்தன்மை தொடர்பான இடைவெளியிலிருந்து பேரவை வெற்றிகரமாக மீட்சியடைந்திருக்கின்றதா என்பதன் பிரதிபலிப்பையே நாம் வெளிக்காட்டுவோம்.

மனித உரிமைகளை நடைமுறைப்படுத்துவதற்கான பல்பரிமாணக் கட்டமைப்பு கடந்த தசாப்தகாலத்தில் செயற்திறனான வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் தீர்மானமான 60ஃ251 மற்றும் மனித உரிமைகள் பேரவையின் தீர்மாங்களான 5ஃ1 மற்றும் 5ஃ2 ஆகியன பேரவையின் செயற்பாடுகள் வெளிப்படைத்தன்மை வாய்ந்ததாகவும் நியாயமானதும் பக்கச்சார்பற்றதாகவும் காணப்படவேண்டும் என்று வலியுறுத்தியிருப்பதுடன் அவை நியாயமான கலந்துரையாடல்களுக்கும் வாய்ப்பளித்துள்ளன.

இலங்கையின் உடன்பாடின்றி (அனுமதியின்றி) பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட 46ஃ1 தீர்மானத்திற்கு ஆதரவாகக் கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வாக்களிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை மனித உரிமைகள் பேரவையை அரசியல்மயப்படுத்தியிருப்பதுடன் துருவமயப்படுத்தியிருக்கின்றது. இந்தத் தீர்மானத்தின் 6 ஆவது பந்தியில் பெருமளவான நாடுகள் எதிர்ப்பை வெளிப்படுத்திய ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறை தொடர்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இத்தகைய நடவடிக்கைகள் உள்ளக மற்றும் சர்வதேச ரீதியில் அமைதியின்மையைத் தோற்றுவிப்பதுடன் நல்லிணக்கத்தை உறுதிசெய்வதற்கான முயற்சிகளிலும் இடையூறுகளை ஏற்படுத்தும். அதுமாத்திரமன்றி அவை கடந்தகால வடுக்கள் மீண்டும் கிளறப்படுவதற்கும் சமூகங்கள் துருமயப்படுத்தப்படுவதற்கும் வழிவகுக்கும்.

மனித உரிமைகளைப் பாதுகாப்பதிலும் மேம்படுத்துவதிலும் அரசாங்கங்களுக்கு ஒத்துழைப்புக்களை வழங்கக்கூடிய சாத்திய வழிமுறைகள் தொடர்பான ஆணையை உறுப்புநாடுகள் தயாரித்துள்ளன. அதற்கமைய பேரவையினால் முன்னெடுக்கப்பட்ட நன்மையளிக்கக்கூடியவாறான செயற்திட்டங்களிலும் பாதுகாப்பானதும் கௌரவமானதுமான மக்கள் வாழ்க்கையை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளிலும் இலங்கை மிகுந்த செயற்திறனுடனும் துடிப்புடனும் பங்கேற்றிருந்தது. இருப்பினும் சமூகங்களில் பிளவுகளை ஏற்படுத்துவதுடன் துருவமயப்படுத்தக்கூடியவாறானதும் எவ்வித பயனையும் தராததுமான நடவடிக்கைளை நாங்கள் முழுமையாக நிராகரிக்கின்றோம்.

பயங்கரவாதத்தைக் கையாண்டபோது உலகின் ஏனைய நாடுகளைப்போன்று நாமும் மனித உரிமைகளுக்கும் தேசிய பாதுகாப்பிற்கும் இடையில் சமநிலையைப்பேண முயன்றோம். பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான சட்டங்கள் நபர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அதேவேளை, கருத்துச்சுதந்திரம் உள்ளிட்ட ஜனநாயக சுதந்திரத்திற்குத் தடையேற்படுத்தாத வகையில் அமையவேண்டும் என்பதை இலங்கை ஏற்றுக்கொள்கின்றது. அதற்கமைவாக அண்மையில் பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான முன்மொழிவை நான் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தேன்.

இவ்வாறானதொரு பின்னணியில் 46ஃ1 தீர்மானத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்டுள்ள ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறையானது இலங்கை மக்களுக்கு எவ்வகையிலும் பயனளிக்காது என்ற எமது நிலைப்பாட்டை மீளவலியுறுத்துவதுடன் அந்நடவடிக்கை சமூகங்களைத் துருவமயப்படுத்துவதுடன் பொருளாதார அபிவிருத்தி மற்றும் சமாதானம் ஆகியவற்றிலும் தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றோம். மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் உள்ளடங்கலாக ஒட்டுமொத்த கட்டமைப்பும் நிதிப்பற்றாக்குறைக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், இந்த நடவடிக்கை உறுப்புநாடுகளின் நிதி அநாவசியமான முறையில் செலவிடப்படுவதற்கே வழிவகுக்கும் என்று குறிப்பட்டார்.

ஜெனீவா மனித உரிமை ஆணைய உயர் அதிகாரிகளுடனான இணையவழி சந்திப்பு தமிழ் தேசிய கட்சி தலைவர்களுடன் நடைபெற்றது

ஜெனீவா ஐநா மனித உரிமை ஆணையத்தின் உயர் அதிகாரிகளுடனான முக்கிய இணையவழி சந்திப்பு ஒன்று ஐந்து தமிழ் தேசிய கட்சி தலைவர்களுடன் 1- 03- 2022 அன்று இலங்கை நேரம் இரவு 7 மணிக்கு நடைபெற்றது.

ஐந்து தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து ஐநா மனித உரிமை ஆணையாளருக்கு 25 பெப்ரவரி 2022 திகதியிடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தின் பின்னர் ஐநா மனித உரிமை ஆணையாளரின் அலுவலக உயரதிகாரிகள் தமிழ்தேசிய கட்சித் தலைவர்களுடனான சந்திப்பை மேற்கொண்டிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இலங்கை மீதான 46/1 பிரேரணை கொண்டுவரப்பட்டு அதன் மீதான ஐநா மனித உரிமை உயர்ஸ்தானிகரின் எழுத்துமூல அறிக்கை எதிர்வரும் மார்ச் 3ஆம் தேதி சமர்ப்பிக்கப்பட இருக்கும் வேளையிலே நடந்த இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

இலங்கை சார்பில் வெளிநாட்டமைச்சர் ஜி எல் பீரிஸ் தலைமையில் ஒரு குழுவினர் ஐநாவுக்கு நேரடியாக பயணம் செய்திருந்த வேளையில் இலங்கை தமிழ் மக்கள் சார்பில் ஐநா உயர் அதிகாரிகளுடன் நடைபெற்ற முக்கிய சந்திப்பு இதுவே ஆகும்.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தினால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான நீதியரசர் திரு விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் மற்றும் ஈபிஆர்எல்எஃப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஊடகப்பேச்சாளர் சுரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். உடல்நிலை காரணமாக திரு ஸ்ரீகாந்தா அவர்கள் இறுதி நேரத்தில் கலந்துகொள்ள முடியவில்லை.

ஆக்கபூர்வமான இந்த சந்திப்பு கலந்துரையாடல் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் வரை நீடித்தது.

இதில் யுத்தக் குற்றங்கள், மனித உரிமை மீறலுக்கான நீதிப் பொறிமுறை, தண்டனையின்மை நீடிப்பு, காணி அபகரிப்பு, குடிப்பரம்பல் சிதைப்பு, திட்டமிட்ட குடியேற்றங்கள், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம், பயங்கரவாதத் தடைச் சட்டம், அரசியல் கைதிகள், மற்றும் அரசுக்கு தேவையானவர்களுடைய விடுவிப்பு காணாமல் ஆக்கப்பட்டோர், அக்குடும்பங்களுக்கான நீதி, காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக செயற்பாடுகள், மற்றும் புதிய ஏற்பாட்டில் சாட்சியங்கள், ஆதாரங்களைத் திரட்டுதல் என்பன பற்றி தமிழ் கட்சி பிரதிநிதிகளால் ஐநா உயர் அதிகாரிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

அரசாங்கம் தனது தரப்பில் பலரை ஐநா அமர்வுக்கு அனுப்பி வைத்திருக்கும் இவ்வேளையில் தமிழர் தரப்பு பிரதிகளை ஐநா அலுவலர்கள் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் வெற்றிகரமான நடைபெற்றது தமிழர் தரப்பின் மிகவும் முக்கியமான நகர்வாக கருதப்படுகிறது.

மேலும் கடந்த செப்டெம்பர் மாதம் 2020 ஆம் ஆண்டு ஐந்து கட்சிகளினால் கையொப்பம் இடப்பட்டு அனுப்பப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்ட பல விடயங்கள் இம்முறை ஐநா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் உள்வாங்கப்பட்டு இருப்பதும் சுட்டிக் காட்டப் பட்டது.

Posted in Uncategorized

பொது மக்கள் வாக்கெடுப்பு ஒன்றே ஒரே வழி- 5 தமிழ்க் கட்சிகள் ஐ.நாவுக்கு கடிதம்

பொது மக்கள் வாக்கெடுப்பு ஒன்றே ஒரே வழி- 5 தமிழ்க் கட்சிகள் ஐ.நாவுக்கு கடிதம்: ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு தமிழ் தேசிய கட்சிகளின் சார்பில் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழ் ஈழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ஆகியனவும், தமிழ் மக்கள் கூட்டணி, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கட்சி ஆகியனவற்றின் தலைவர்கள் கையெழுத்திட்ட ஆவணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

2022 பெப்ரவரி 25ஆம் திகதியிடப்பட்டு எழுதப்பட்டுள்ள மேற்படிக் கடிதத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் த.சித்தார்த்தன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் க. சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் ந.சிறிகாந்தா ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.

இந்நிலையில், “இலங்கையில் நீடித்து வரும் நெறிமுறை முரண்பாட்டிற்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்காமையின் காரணமாகவே தமிழர்கள் மீண்டும் மீண்டும் படுகொலை செய்யப்பட்டு வருவது இனப்படுகொலைக்கு சமமாகும்” என தமிழ் கட்சிகள் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் “இனப்பிரச்சனைக்கு நிரந்தர அரசியல் தீர்வைக் கொண்டு வருவதற்கும் அதன் மூலம் தமிழ் மக்களுக்கு எதிரான பாரிய அட்டூழியங்களை நிறுத்துவதற்கும் சர்வதேச அளவில் நடத்தப்பட்டு கண்காணிக்கப்படும் பொது மக்கள் வாக்கெடுப்பு ஒன்றே ஒரே வழி என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம்” எனவும் குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் கட்சிகளின் கடித தமிழ் மொழிபெயர்ப்பு இணைக்கப்பட்டுள்ளது

பிப்ரவரி 25, 2022
மதிப்பிற்குரிய மிசேல் பச்லெட்
ஐ. நா. மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர்
ஜெனிவா

அன்புள்ள உயர்ஸ்தானிகர் அம்மையார்,

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக எழுத்துமூலம் அறிவிப்பை வெளியிட நீங்கள் தயாராகி வரும் நிலையில், ஐ.நா தீர்மானம் 46/1, மார்ச் 2021 இல் இயற்றப்பட்டதில் இருந்து தமிழர்களின் நிலை குறித்த மதிப்பீட்டை இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகள் உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறோம்.

ஜனவரி 12, 2021 அன்று பொறுப்புக்கூறலைக் குறிப்பிடும் உங்கள் கீழ்க்காணும் அறிக்கைக்கு நாங்கள் எங்கள் பாராட்டுகளைத் தெரிவிக்க விரும்புகிறோம்:
“குற்றவியல் பொறுப்புக்கூறலை முன்னெடுத்துச் செல்வதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை செயற்படுத்துவதற்கும் உறுப்பு நாடுகளுக்கு பல தெரிவுகள் உள்ளன. இலங்கையின் நிலைமையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மேலதிகமாக, இலங்கையில் அனைத்து தரப்பினரும் செய்த குற்றங்களுக்கு எதிராக உறுப்பு நாடுகள் சர்வதேச விசாரணை தீவிரமாக, வேற்று நாடுகள் அல்லது உலகளாவிய அதிகார வரம்பிற்கு உட்பட்ட கொள்கைகளுக்கு ஏற்ப தங்கள் சொந்த தேசிய நீதிமன்றங்களுக்கு முன்பாக பாரப்படுத்த முடியும். உயர் ஸ்தானிகர் உறுப்பு நாடுகளை மனித உரிமை ஆணையரின் அலுவலகத்தோடு பணியாற்ற, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்கள் பிரதிநிதிகள் உட்பட பொறுப்புக்கூறலுக்கான இவ்வாறான முறைமைகளை ஊக்குவிக்க, சாத்தியமான சர்வதேச குற்றங்கள் பற்றிய விசாரணைகள் ஆரம்பித்தல் மற்றும் இதில் முன்னேறுவதற்கான அர்ப்பணிப்பு திறனுக்கு ஆதரவு வழங்க ஊக்குவிக்கிறார். இந்த முயற்சிகள் உறுப்பு நாடுகள், நம்பத்தகுந்த பாரதூரமான மனித உரிமை மீறல்கள் அல்லது துஷ்பிரயோகங்களுக்குப் பொறுப்பான நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் அரசு அதிகாரிகள் மற்றும் பங்கேற்றவர்களுக்கும் எதிரான சொத்து முடக்கம் மற்றும் பயணத் தடைகள் போன்ற இலக்குத் தடைகளையும் விண்ணப்பிக்கவும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் நடைமுறை சாத்தியமான நன்மைகளை வழங்கவும் அத்துடன் அதற்கான முயற்சிகளுக்கும் ஆதரவு வழங்குங்கள்”.

பிப்ரவரி 18, 2021 அன்று 20 முன்னாள் உயர்மட்ட ஐ.நா அதிகாரிகளின் பகிரங்க கடிதத்தையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறோம். கையொப்பமிட்டவர்களில் நான்கு முன்னாள் ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர்களும் அடங்குவர் – ஐ.நா.வின் நான்கு முன்னாள் உயர் அதிகாரிகள், இலங்கைக்கு விஜயம் செய்து அறிக்கைகளை எழுதியிருந்த ஒன்பது முன்னாள் சிறப்பு அறிக்கையாளர்கள், மேலும், செயலாளர் நாயகத்தின் இலங்கை தொடர்பான நிபுணர்கள் குழுவின் மூன்று உறுப்பினர்களும் அடங்குவர்.
கையொப்பமிட்டவர்கள் குறிப்பிட்டது போல், ” இலங்கை தொடர்பாக சமீபத்தில் மனித உரிமைகள் ஐ.நா. உயர் ஸ்தானிகரால் வெளியிடப்பட்ட அறிக்கையில் மீண்டும், நீதித்துறை மற்றும் பொறுப்பு கூறலில் நாட்டின் முன்னேற்றம் இன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறார்
பகுப்பாய்வின் அடிப்படையில் காணப்படும் போக்குகளின் நீடித்த தேடலின் மையக் கூறுகளின் படி இலங்கையில் அத்துமீறல்கள் மற்றும் அட்டூழியங்கள் மற்றும் உரிமை மீறல்கள் மற்றும் மோதல்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பது வெகுஜன மனித உரிமைகளுக்கான நீதி, நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான தீர்க்கமான சர்வதேச நடவடிக்கைக்கான கட்டாய தேவையை உருவாக்குகிறது.” முடிவில், ” அனைவரின் மனித உரிமைகளையும் அர்த்தமுள்ள முறையில் நிலைநிறுத்த இலங்கை அரசாங்கத்தின் தொடர்ச்சியான தயக்கமானது தீர்க்கமான, பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை உறுதி செய்வதற்கான சர்வதேச நடவடிக்கை மட்டுமே இலங்கையின் வன்முறை சுழற்சிகளுக்கு இடையூறு விளைவிக்கும்”.

கடந்த ஆறு மாதங்களில், 2009 இல் முடிவடைந்த போரின் போது மேற்கொள்ளப்பட்ட அத்துமீறல்களுக்கு தண்டனை விதிக்கப்படாமல் தொடர்ந்து இருந்தது மற்றும் நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கு அழைப்பு விடுக்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானங்களை அரசாங்கம் மீண்டும் மீண்டும் புறக்கணித்தது. இதனால், நீதி ஸ்தம்பித்து, தண்டனையின்மை நீடித்தது. பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள், மனித உரிமைப் பாதுகாவலர்கள், சிவில் சமூகத் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பலர் இலங்கை அதிகாரிகளால் அதிகளவில் அச்சுறுத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டனர். இலங்கையின் சட்ட அமலாக்க அதிகாரிகளால் கொவிட்-19 கட்டுப்பாடுகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்களின் அதிகரித்த பயன்பாடு அமைதியான போராட்டங்களுக்கான சந்தர்பங்களை கட்டுப்படுத்துகிறது, அதே நேரத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான பாகுபாடு மற்றும் ஓரங்கட்டப்படுவது தொடர்கிறது.

“அபிவிருத்தித் திட்டங்கள்” என்ற போர்வையில், மக்கள் தொகையை மாற்றவும், வடகிழக்கு தமிழ் பேசும் பகுதிகளின் தொடர்பை சீர்குலைக்கவும், தமிழ் மக்களுக்கு அவர்களின் நிலங்கள் அணுகலை மறுக்கவும், அரசாங்கத்தால் இயக்கப்படும் சிங்கள – பௌத்த குடியிருப்புக்கள் (குடியேற்றங்கள்) பாரம்பரிய தமிழர் பகுதிகளில் வளர்ந்து வருகின்றன.. மகாவலி அதிகாரசபை, தொல்பொருள் திணைக்களம், வன திணைக்களம் மற்றும் வனவிலங்கு திணைக்களம் உட்பட பல அரச திணைக்களங்கள் இந்த முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ஏறக்குறைய சிங்கள – பௌத்த நபர்களை உள்ளடக்கிய இலங்கை இராணுவத்தின் பெருமளவிலான பிரசன்னத்தினால் இந்த அத்துமீறல் எளிதாக்கப்படுகிறது. தற்போதைய இனவாத அரசாங்கம் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களின் சனத்தொகை நிலையை சீர்குலைத்து, தமிழ் பேசும் மக்கள் அதிகம் வாழும் பிரதேசங்களுக்குள் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்துவதில் குறியாக உள்ளது. சிங்கள – பௌத்தர்களை கொண்ட பிரதேசங்களை தமிழ் மாவட்டங்களில் இணைத்து, அதன் மூலம் தமிழ் பிரதேசங்களில் சிங்கள – பௌத்த சனத்தொகையை அதிகரிக்கும் வகையில் பிரதேச எல்லைகளை வரையறுக்கும் வேலைத்திட்டத்தில் இலங்கை அரசாங்கமும் ஈடுபட்டு வருகின்றது என்பதையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறோம்.

யுத்தம் முடிவடைந்த பின்னர் பாதிக்கப்பட்ட தமிழ்ப் பெண்கள் தமது வாழ்வில் பல சவால்களை எதிர்கொண்டுள்ளனர். சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் (ITJP) பிப்ரவரி 2017 இல், தமிழ்ப் பெண்கள் “பாலியல் அடிமைகளாக” அடைக்கப்பட்டுள்ள இலங்கை இராணுவ “கற்பழிப்பு முகாம்கள்” பற்றிய விவரங்களை ஐ.நாவிடம் ஒப்படைத்தது. மேலும், ஏப்ரல் 2013 இல் இங்கிலாந்து வெளியுறவு மற்றும் காமன்வெல்த் அலுவலக அறிக்கையின்படி இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் போர் விதவைகள் உள்ளனர். குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான தமிழர்கள் காணாமல் போயுள்ளனர். வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் செயற்குழு 2020 ஆம் ஆண்டில் உலகில் இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் இலங்கையில் இருந்து வருவதாகக் கூறியது. தங்கள் அன்புக்குரியவர்களைத் தேடி வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் பயங்கரவாதப் புலனாய்வுத் திணைக்களம் (TID), குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) மற்றும் பிற அரசாங்க புலனாய்வு அமைப்புகளால் துன்புறுத்தப்படுகின்றனர் மற்றும் அச்சுறுத்தப்படுகின்றனர். இந்த குடும்பங்களின் அமைதியான போராட்டங்கள் பல சவால்களை எதிர்கொள்கின்றன.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பல முறையீடுகள் மற்றும் தீர்மானங்கள் இருந்தபோதிலும், இலங்கை தொடர்ந்து கொடூரமான பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை (PTA) பயன்படுத்துகிறது. பல தமிழ் அரசியல் கைதிகள் குற்றஞ்சாட்டப்படாமலோ அல்லது விசாரணையின்றி வருடக்கணக்காக சிறையில் அடைக்கப்பட்டும் அல்லது நியாயமற்ற விசாரணைகளின் பின்னர் தண்டனை பெற்ற போதும், இலங்கைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவர் கூட தமிழர்களுக்கு எதிரான அட்டூழியக் குற்றங்களுக்காகக் கைது செய்யப்படவில்லை அல்லது குற்றம் சாட்டப்படவில்லை. தற்போதைய அரசாங்கத்தினால் பாதுகாப்புப் படைகளின் உறுப்பினர்கள் தங்களின் தண்டனை அல்லது குற்றச் சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் நீடித்து வரும் நெறிமுறை முரண்பாட்டிற்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்காமையின் காரணமாகவே தமிழர்கள் மீண்டும் மீண்டும் படுகொலை செய்யப்பட்டு வருவது இனப்படுகொலைக்கு சமம் என்பதை நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வைக் கொண்டு வருவதற்கும், அதன் மூலம் தமிழ் மக்களுக்கு எதிரான பாரிய அட்டூழியங்களை நிறுத்துவதற்கும் சர்வதேச அளவில் நடத்தப்பட்டு கண்காணிக்கப்படும் பொதுமக்கள் வாக்கெடுப்பு ஒன்றே ஒரே வழி என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

தமிழ் பிரதேசங்களில் அரச அனுசரணையுடன் சிங்கள பௌத்த குடியேற்றங்களை நிறுத்துவதற்கும், சிங்கள – பௌத்த பிரதேசங்களை தமிழ் மாவட்டங்களுக்குள் இணைத்து பிரதேச எல்லைகளை நிர்ணயிப்பதை நிறுத்துவதற்கும், போர் முடிந்து பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேலாகிய நிலையில் தமிழர் பிரதேசங்களில் இலங்கை இராணுவத்தின் அபரிமிதமான பிரசன்னத்தை குறைப்பதற்கும் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். மேலும் தமிழ் மக்களுக்கு எதிரான வன்கொடுமை குற்றங்களை தடுப்பதற்கு பொதுஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலுவாக பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

உங்களின் அன்பான கவனத்திற்கும், பரிசீலனைக்கும் மற்றும் தேவையான நடவடிக்கைகளுக்காகவும், இலங்கையின் தமிழ் மக்களுக்கு நீதியை உறுதி செய்வதற்கான உங்கள் அர்ப்பணிப்பு மற்றும் அயராத முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்காக இந்த உண்மைகளை நாங்கள் சமர்ப்பிக்கிறோம்.

நன்றி, அன்புடன்

நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன் பா.உ, தலைவர் . தமிழ் மக்கள் கூட்டணி
அ. அடைக்கலனதன் பா.உ, தலைவர், தமிழ் ஈழ விடுதலை இயக்கம்
த. சித்தர்த்தன் பா.உ, தலைவர், தமிழ் ஈழ மக்கள் விடுதலை கழகம்
க. பிரேமசந்திரன் தலைவர், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி
ந. சிறிகாந்தா, தலைவர், தமிழ் தேசியக் கட்சி

“ஒரு நாடு, ஒரே சட்டம்” செயலணியின் பதவிக் காலம் நீடிப்பு

ஒரே நாடு – ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைய ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை நேற்று (28) வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி நிறுவப்பட்ட ஒரே நாடு – ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணிக்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைய இருந்தது.

நாட்டின் சகல மாகாணங்களையும் உள்ளடக்கிய பொது மக்கள் மற்றும் நிபுணர்கள் குழுவின் கருத்துக்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதாலேயே ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Posted in Uncategorized

மியன்மார் அரிசி இறக்குமதி ஒப்பந்தத்தில் இலங்கைக்கு 15 மில்லியன் டொலர்கள் இழப்பு!

மியன்மார் மற்ற நாடுகளுக்கு அரிசி விற்கும் விலையை விட இலங்கைக்கு 305 மில்லியனுக்கும் அதிக விலைக்கு அரசியியை விற்பனைசெய்துள்ளதாக ‘அருணா’ நாளிதழ் தெரிவித்துள்ளது.

மியன்மாரிடமிருந்து ஒரு மெட்ரிக் தொன் அரிசியை இலங்கை 440 டொலர் மற்றும் 450 டொலர்களுக்கு இடைப்பட்ட விலையில் கொள்வனவு செய்யும் என இரு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கையின் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.ஆனால் சமீபத்தில் மியான்மர் மற்ற நாடுகளுக்கு ஒரு மெட்ரிக் டன் அரிசியை 340 டொலர் முதல் 350 டொலர்களுக்கு விற்பனை செய்துள்ளதாக மியான்மரின் முன்னணி நாளிதழான Global New Light Of Myanmar செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி, மியன்மாரிலிருந்து இலங்கை கொள்வனவு செய்த ஒரு மெட்ரிக் தொன் அரிசிக்கான மேலதிக கொடுப்பனவு 100 டொலர்கள் ஆகும். இது இலங்கை மதிப்பில் 20,300 ரூபாய்க்கு அதிகம் ஆகும்.இரு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கையின் பிரகாரம் இலங்கை இறக்குமதி செய்யவுள்ள அரிசியின் அளவு 150,000 மெற்றிக் தொன் என அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் ஒரு டன் ஒன்றுக்கு 450 அமெரிக்க டொலர்களை கொள்வனவு செய்யும் அதேவேளை ஏனைய நாடுகள் அதனை ஒரு டன் 350 டொலர்களுக்கு கொள்வனவு செய்வதாகவும், அரிசியின் தரத்தை அவர்கள் பொருட்படுத்துவதில்லை எனவும் மியான்மர் அரிசி வர்த்தக சங்கத்தின் செயலாளர் அண்மையில் உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

மேலும் இலங்கையுடனான அரிசி ஒப்பந்தம் மிகவும் இலாபகரமானதாக உள்ளது என்றும் செய்தித்தாள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, அரசாங்கத்துடன் தொடர்புடைய ஒரு அதிகார பலம்மிக்க நபர் அரிசி தொன் ஒன்றுக்கு 100 டொலர் தரகு பணமாக வசூலிப்பதாகவும் இந்த இற்குமதிக்கு மட்டும் இரண்டு வருடங்களில் 30 மில்லியன் டாலர் தரகு பணம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக முன்னாள் இலங்கை அபிவிருத்தி நிர்வாகத்தின் (SLIDA) மூத்த ஆலோசகர் ஐ.எஸ். ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நேற்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, நாட்டுக்கு 15 மில்லியன் டொலர்களை பெற்றுக்கொடுக்கும் மியன்மார் அரிசி ஒப்பந்தம் சந்தேகத்திற்குரியது எனவும் குறிப்பிட்டார்.

Posted in Uncategorized

இராஜாங்கத் திணைக்களத்தின் மூத்த இராஜதந்திரியை கொழும்பிற்கு அனுப்புகிறது அமெரிக்கா

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை செயலர் விக்டோரியா நுலாண்ட் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார். இவரது விஜயமானது மார்ச் மாதம் 22 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி ஜோ பைடனின் ஆட்சி ஏற்பின் பின்னர் இலங்கை குறித்த அமெரிக்காவின் பார்வை மற்றும் அணுகுமுறை என்பவற்றில் மாற்றம் ஏற்பட்டுள்ளன.

இதனடிப்படையிலேயே அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் மூத்த இராஜதந்திரியான விக்டோரியா நுலாண்ட் கொழும்பு வருகிறார்.

இவரது விஜயத்தின் போது ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அரச தரப்பினரையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட எதிர்க்கட்சியினரையும் சந்தித்து கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வொஷிங்டன் தளமாகக் கொண்ட உலகளாவிய மூலோபாய ஆலோசனை மற்றும் வணிக இராஜதந்திர நிறுவனத்தின் மூத்த ஆலோசகரா பணியாற்றியுள்ளார்.

32 ஆண்டுகளாக அமெரிக்க இராஜதந்திர தூதவராக பணியாற்றியுள்ள விக்டோரியா நுலாண்ட் , ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் செயலாளர் ஜோன் கெரியின் கீழ் 2013 – 2017 வரை ஐரோப்பிய மற்றும் யூரேசிய விவகாரங்களுக்கான உதவி செயலாளராக பணியாற்றினார்.

செயலாளர் ஹிலாரி கிளிண்டனின் பதவிக்காலத்தில் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளராகவும், 2005 – 2008 ஆம் ஆண்டு ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷின் இரண்டாவது பதவிக் காலத்தில் நேட்டோவுக்கான அமெரிக்க தூதராகவும் செயற்பட்டுள்ளார்.

மேலும் 2010 – 2011 வரை ஐரோப்பாவில் மரபு ஆயுதக் கட்டுப்பாடு தொடர்பான ஒப்பந்தத்தில் சிறப்புத் தூதுவராகவும் தலைமைப் பேச்சுவார்த்தையாளராகவும் இருந்துள்ளார்.

2003 – 2005 வரை துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் நுலாண்ட் பணியாற்றியுள்ளார். அத்துடன் அமெரிக்க இராஜாங்க தினைக்களத்தின் பல்வேறு திட்டங்களில் ரஷ்யா, சீனா மற்றும் மங்கோலியாவில் உள்ளிட்ட நாடுகளில் பணியாற்றியுள்ளார்.

நீண்ட நாட்களுக்கு பின்னர் இவ்வாறானதொரு மூத்த இராஜதந்திர அதிகாரியை அமெரிக்கா இலங்கைக்கு அனுப்புகின்றது.

ஜனாதிபதி ஜோ பைடனின் முக்கிய செய்தியுடனேயே விக்டோரியா நுலாண்ட் இலங்கை வருவதாக கொழும்பு இராஜதந்திர தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இராஜாங்க தினைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை செயலர் விக்டோரியா நுலாண்ட் வருகை இரு நாட்டு ஒத்துழைப்புகளை மேலும் விரிவுப்படுத்தும் என இவரது விஜயம் குறித்து அரசாங்கம் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மகா சிவராத்திரி விரதம் இன்று(01)

இந்துக்கள் சிவபெருமானுக்காக அனுஷ்டிக்கும் மகா சிவராத்திரி விரதம் இன்றாகும்(01).

வருடாந்தம் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதியில் மகா சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

இந்த நாளின் சிறப்பு குறித்து கந்தபுராணம் மற்றும் அக்னி புராணம் உள்ளிட்ட பல நூல்களில் குறிப்பிப்பட்டுள்ளது.

சிவராத்திரி அன்று சிவனை வழிபட்டால் வாழ்வில் துன்பங்கள் நீங்கி இன்பம் பெறலாம் என்பது ஐதீகம்.

சிவராத்திரி விரதத்தை அனுஷ்டிப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன் தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப்போகும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும்.

24 வருடங்கள் சிவராத்திரி விரதத்தை அனுஷ்டித்தால் அவர்கள் சிவகதி அடைவார்கள் என்பதுடன், அவர்களின் மூவேழு தலைமுறைகளும் நற்கதி பெற்று முத்தியை அடையலாம் எனவும் புராணங்கள் கூறுகின்றன.

Posted in Uncategorized