NGO வை மேற்பார்வையிட ஒரு புதிய சட்டமூலத்துக்கான திட்டம்!

தன்னார்வ சமூக சேவை நிறுவனங்களின் சட்டப்படியான பதிவு மற்றும் மேற்பார்வையில் திருத்தங்களை ஜனாதிபதி தொடங்கினார்.

தன்னார்வ நிறுவனங்களின் பதிவுக்காக 1980 ஆம் ஆண்டு எண் 31 இன் தற்போதைய தன்னார்வ சமூக சேவை நிறுவனங்களின் (பதிவு மற்றும் மேற்பார்வை) சட்டத்தின் விதிகள் தற்போதைய தேவைகளுக்கு போதுமானதாக இல்லை என்று அரசு கூறுகிறது.

அதன்படி, பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவைக் கருத்தில் கொண்டு, 1980 ஆம் ஆண்டு தன்னார்வ சமூக சேவை நிறுவனங்கள் (பதிவு மற்றும் மேற்பார்வை) சட்டத்தை ஒரு புதிய சட்டத்துடன் மாற்றுவதற்கான சட்டமூலத்தை உருவாக்க அமைச்சரவைக்கு அவர் உத்தரவிட்டார். தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப ஆகஸ்ட் 09 திங்கட்கிழமை கூடிய அமைச்சரவை வழங்க முடிவு செய்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இராணுவத்தின் நடமாடும் தடுப்பூசி திட்டம் நாளை (12) ஆரம்பம்

நாட்டின் தேசிய தடுப்பூசி வழங்கல் திட்டத்தை இராணுவம் வெற்றிகரமாக முன்னோக்கி கொண்டு செல்கின்றது.

அதற்கமைய, முதியவர்கள், நோய் பாதிப்புகளுக்கு ஆளானவர்கள், ஊனமுற்றவர்கள், பலவீனமானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கலின் போது முன்னுரிமை வழங்கப்பட்டு வருகின்றது.

பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியும் COVID – 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் எண்ணக்கருவிற்கு அமைவாக, மேல் மாகாணத்தை அடிப்படையாகக் கொண்டு நடமாடும் தடுப்பூசி வழங்கும் சேவை நாளை (12) முதல் இராணுவத்தினரால் ஆரம்பிக்கப்படுகின்றது.

அதன்படி, ஆரம்பகட்டமாக தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளும் அவசியம் உடையவர்கள் இலங்கை இராணுவ வைத்திய படையினருடன் தொடர்புகொண்டு பதிவுகளை செய்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.

அதற்காக 10 சிறப்பு நடமாடும் வாகனங்கள் தயார் நிலையில் காணப்படுவதுடன், இராணுவ நோய் தடுப்பு மற்றும் மனநல மருத்துவ பணிப்பகத்தை 1906 அல்லது 0112 860 002 ஆகிய இலக்கங்கள் ஊடாக தொடர்புகொண்டு முற்பதிவு செய்துகொண்ட பின்னர் தடுப்பூசிகள் வீட்டிற்கே வந்து வழங்கப்படும் என கொவிட் – 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

Posted in Uncategorized

தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவை நியமிக்கும் போது பக்கச்சார்பற்ற தன்மையை கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தல்

ஆணையாளர்களை நியமிக்கும்போது தகவலறியும் உரிமைக்கான சட்ட நடைமுறைகளை பின்பற்றுதல் அவசியம்.

· ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா மற்றும் ஏனைய சிவில் சமூக அமைப்புகள் ஊடாக பொருத்தமான நபர்களை உள்ளடக்கிய பரிந்துரைகள் சமர்பிக்கப்பட்டன.

இச்சட்டத்தின் நோக்கங்களுக்காக ஸ்தாபிக்கப்பட்ட தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் (தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழு) பதவிக்காலம் எதிர்வரும் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைவதோடு, 2016ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவலறியும் உரிமைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளுக்கேற்ப புதிய ஆணையாளர்கள் மற்றும் அங்கத்தவர்கள் நியமிக்கப்படுவார்கள் என ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) நம்புகின்றது.

தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவானது 2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவலறியும் உரிமைச் சட்ட பிரிவு 11 இன் ஏற்பாட்டின் கீழ் நிறுவப்பட்டதாகும்.

இவ் ஆணைக்குழுவில் ஒரு தலைவர் மற்றும் நான்கு உறுப்பினர்கள் ஐந்து வருடங்கள் பதவி வகிக்கின்றனர்.

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட முன்னர், அரசியலமைப்புப் பேரவையின் பரிந்துரைகளின் பேரில் ஜனாதிபதியால் எவ்வாறாயினும், அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் காரணமாக தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழு நியமன முறையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழு சட்ட ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டிருந்த அரசியலமைப்பு பேரவைக்கு பதிலாக பாராளுமன்ற பேரவை உள்வாங்கப்பட்டுள்ளது.

எனவே,தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் பதவி/ நியமனங்களை மேற்கொள்வதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களிடமிருந்து பரிந்துரைகளை பெறுவது பாராளுமன்ற பேரவையின் பொறுப்பாகும்.

இருப்பினும், அரசியலமைப்பு பேரவை போலல்லாமல், யாரை நியமிக்கவேண்டும் என்பது குறித்து ஜனாதிபதிக்கு வெளிப்படையான பரிந்துரைகளை வழங்குவதற்கு பதிலாக குறித்த நியமனங்கள் தொடர்பான அவதானிப்பை செலுத்துவது மாத்திரமே பாராளுமன்ற பேரவைக்கு செய்ய முடியுமான ஒன்றாகும்.

தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழு நியமனங்களை மேற்கொள்ளும்போது சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை ஜனாதிபதி கருத்திற் கொள்வார் என ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா எதிர்பார்க்கின்றது.

அவ்வாறு கருத்திற் கொண்டு செயற்படுவதானது இலங்கையில் தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழு சட்டத்தின் ஜனநாயக தன்மையினை தொடர்ந்தும் நிலைநாட்டப்படுவதை உறுதிப்படுத்தும் அதேவேளை, குறித்த பிரிவினரிடமிருந்து பெறப்படும் பரிந்துரைகள் தொடர்பாக ஜனாதிபதி கவனம் செலுத்துவார் எனவும் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நம்புகின்றது.

“கடந்த ஐந்து ஆண்டுகளில் இலங்கையின் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவானது பொதுமக்களின் தகவல் அறியும் உரிமையினை உறுதி செய்யும் பல செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது.

தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவானது சுதந்திரமாக செயற்பட்டதன் காரணமாகவே அவர்களால் இவ் அடைவினை எட்ட முடிந்தது.

ஆணைக்குழுவுக்கான புதிய உறுப்பினர்கள் நியமனத்திலும் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளைப் பின்பற்றி பெறப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் நியமனங்களை வழங்குவதன் மூலம் ஆணைக்குழுவின் சுயாதீன செயற்பாட்டினை ஜனாதிபதி தொடர்ந்தும் பாதுகாப்பார்” என ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர் நதிஷானி பெரேரா குறிப்பிடுகின்றார்.

ஆணைக்குழுவுக்கான உறுப்பினர்களை நியமிப்பதில் சிவில் சமூக பங்களிப்பினை நிறைவேற்றுவதற்காக நாட்டிலுள்ள அனைத்து சிவில் சமூக அமைப்புக்களையும் அணிதிரள ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நடவடிக்கைகளை மேற்கொண்டது.

jகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் பதவி நியமனங்களுக்கு ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா மற்றும் ஏனைய சிவில் சமூக அமைப்புக்கள் பரிந்துரைத்த பெயர்கள் நேற்று பாராளுமன்ற பேரவையிடம் ஒப்படைக்கப்பட்டது.

தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவானது ஆளும் நிர்வாகம் மற்றும் அரச துறைகளை பொது மக்களுடன் இணைக்கும் பாலமாக நாம் கருதலாம்.

சிறிய அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பான தகவல்கள் தொடக்கம் பிரதமரின் சொத்து அறிவிப்புக்களை வெளியிடுவது போன்ற சர்ச்சைக்குரிய விடயங்கள் வரையிலான தகவல் அறியும் உரிமை கோரிக்கைகளுக்கு தற்போதைய தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் காலப்பகுதியில் பதில்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவை ஆணைக்குழு சுதந்திரமாக செயற்படுகின்றமைக்கான சிறந்த சான்றுகளாகும் மற்றும் ஆணைக்குழு நியமனங்களை மேற்கொள்ளும்போது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளை ஏன் பின்பற்ற வேண்டும் என்பதற்கான காரணத்தினையும் தெளிவுபடுத்துகின்றது.

ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிர்வாக பணிப்பாளர் நதிஷானி பெரேரா மேலும் குறிப்பிடுகையில் “ தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர்களின் பின்னணி மற்றும் அவர்கள் வகிக்கும் பங்கு என்பன பொதுமக்கள் மீது ஏற்படுத்துகின்றது.

நியமிக்கப்பட்ட ஆணையாளர்கள் அரசியல் சார்பற்ற அல்லது அரசியலுடன் நேரடி தொடர்புகள் இல்லாதவர்களாக இருந்தால், அவர்களால் மக்கள் சார்பாக பாரபட்சமின்றி தமது செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும்.

ஆகவே, தகவல் அறியும் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் பதவிகளில் நியமிக்கப்படும் தனிநபர்களின் இயல்பை கூர்ந்து கவனிப்பது பொதுமக்களின் பொறுப்பாகும்” என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

தகவலறியும் உரிமை ஆணைக்குழுவின் பதவி வெற்றிடங்களை பூர்த்தி செய்ய ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா மற்றும் ஏனைய சிவில் சமூக அமைப்புக்களூடாக பாராளுமன்ற பேரவைக்கு பின்வரும் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

1. Dr. A.K.C.H பிரியங்கனி ஜயசுந்தர

பரிந்துரை: SAFE நிறுவனம்

2. திருமதி. J.H நில்மினி சுனேத்ரா குமாரி

பரிந்துரை: Child Vision Sri Lanka

3. திரு. P. சாய் பாலசுப்ரமணியம்

பரிந்துரை: Peoples’ Development Foundation

4. Rev. Dr நோயல் டயஸ்

பரிந்துரை: Centre for Social Justice and Equity

5. திரு. D.M சமந்த தசநாயக்க

பரிந்துரை: Centre for Human Rights and Community Development

6. Dr. பிரதிபா மஹாநாமஹேவா

பரிந்துரை: Caritas SED

7. திரு. சம்பத் புஷ்பகுமார

பரிந்துரை: Families of the Disappeared

8. திரு. நடராஜா சிவரஞ்சித்

பரிந்துரை: NGO கூட்டமைப்பு (Consortium), அம்பாறை

9. திரு. ஐங்கரன் குகதாசன்

பரிந்துரை: ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா

மன்னார் மடு அன்னையின் ஆவணித் திருவிழா தொடர்பில் வெளியான அறிவிப்பு

மன்னார் மடு அன்னையின் வருடாந்த ஆவணித் திருவிழா மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான பக்தர்களுடன் இம்முறை இடம்பெறும் என மன்னார் மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.

இதன்பிரகாரம், மடு அன்னையின் ஆவணித் திருவிழாவில் இம்முறை 150 பக்தர்கள் மாத்திரம் கலந்து கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

மன்னார் மடுத் திருத்தலத்தில் இன்று புதன்கிழமை(11) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே மன்னார் ஆயர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மன்னார் மாவட்டச் செயலாளர் அ.ஸ்ரான்லி டிமெல் தலமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் மன்னார் மறை மாவட்டக் குரு முதல்வர், மடுத் திருத்தலத்தின் பரிபாலகர், சுகாதாரத் துறையினர், பொலிஸார், இராணுவத்தினர், கடற்படை அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதுதொடர்பில் மன்னார் மறை மாவட்ட ஆயர் மேலும் தெரிவிக்கையில்,

கொவிட் தொற்று நிலையைக் கருத்தில் கொண்டு அரசாங்கத்தின் சுகாதார வழிமுறைகள், கட்டுப்பாடுகளுக்கு அமைவாகத் திருவிழா ஒழுங்கு செய்யப்பட்டிருக்கிறது.

மடு அன்னையின் வடாந்த ஆவனித் திருவிழா¸ எதிர்வரும் 15ம் திகதி இடம்பெறும். எதிர்வரும் ஆவணி-14 ஆம் திகதி மாலை-06 மணிக்கு விசேட நற்கருணை, ஆராதனை இடம்பெற்றுத் தொடர்ந்து நற் கருணை ஆசீர்வாதமும் நடைபெறும்.

மறுநாள்¸ காலை-6.15 மணிக்கு மடு அன்னையின் வருடாந்த ஆவணித் திருவிழா கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்படும். திருவிழாத் திருப்பலி சிலாபம் மறை மாவட்ட ஆயர் அருட்கலாநிதி வலன்ஸ் மென்டிஸ் ஆண்டகை தலைமையில் கூட்டுத் திருப்பலியாக ஒப்புக் கொடுக்கப்படும். தமிழ்¸ சிங்கள மொழிகளில் மறையுறைகள் இடம்பெறும். திருவிழா தினத்தன்று மேலும் மூன்று திருப்பலிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

மடு அன்னையின் ஆவணித் திருவிழாவில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் மாத்திரம் கலந்து கொள்ள முடியும். கொவிட் தொற்றுப் பரவலைக் கருத்தில் கொண்டு வெளிமாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் இம்முறை திருவிழாவிற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் மன்னார் மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

வல்வை நகரசபைத் தவிசாளர் கொரோனாவுக்கு உயிரிழப்பு!

யாழ்.வல்வெட்டித்துறை நகர சபைத் தவிசாளர் கோணலிங்கம் கருணானந்தராசா(வயது-76) கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று புதன்கிழமை(11-08-2021) உயிரிழந்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் உடல்நிலை பாதிக்கப்பட்ட அவருக்குப் பொதுச் சுகாதாரப் பரிசோதகரினால் நேற்று முன்தினம் திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா நோய்த் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்துப் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

Posted in Uncategorized

ஆணைக்குழுக்கள் – பரிந்துரைகள்: தீர்வுக்காக எங்கும் தமிழ் மக்கள் -லக்ஸ்மன்

புத்தரை இன்னமும் தங்களது வீடுகளில் வைத்திருப்பவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்கள் ஏதோ ஒருவகையில் வயது கடந்தவர்கள். அவ்வாறு புத்தரை மதித்தவர்களுக்குப்பிறகு இப்போது புத்தரை ஓர் அவமானப் பொருளாகப்பார்க்கின்ற நிலைமையே தமிழர்களிடம் உருவாகியிருக்கிறது. அதற்குக் காரணம் சிங்களப் பெரும்பான்மையினரால் நாட்டில் முன்னெடுக்கப்பட்டுவந்த செயற்பாடுகளேயாகும். யுத்தம், யுத்தகாலம், யுத்த இழப்புகள், யுத்தக் கொடுமைகள், இன்னல்கள் என்ற வரிசையுடன் கடந்த 40 வருடகாலம் அதற்கு இறுக்கமான காரணமாக அமைந்தன. சுதந்திரத்துக்குப்பின்னரான மொத்த வருடத்தை இதில் கணக்கில் கொள்ளாமலிருப்போம்.

இலங்கையில் ஒவ்வொன்றுக்கும் ஆணைக்குழுவையே நியமிக்கும் வழக்கம் ஒரு வரலாறாகவே இருந்து வருகிறது. அது போன்று ஓர் அரசாங்கம் புதிதாக ஆட்சிக்கு வந்தால், ஏற்கெனவே ஆட்சியில் இருந்த அரசாங்கத்தின் அனைத்துச் செயற்பாடுகளையும் தவறென்று கைவிட்டு புதிதாக தாம் ஒரு செயற்பாட்டைத் தொடங்குவதும் வரலாறுதான்.

அந்த ஒழுங்கில்தான் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக புதிதாக ஓர் ஆணைக்குழுவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நியமித்தார். கடந்த ஜனவரி 21, பெப்ரவரி 12 ஆம் திகதிகளில் ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியூடாக புதிய ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

ஏற்கெனவே மனித உரிமை, சர்வதேச மனிதாபிமான சட்டம் மீறப்பட்டமை தொடர்பில் ஆணைக்குழுக்களும் ஏனைய குழுக்களும் விசாரணைகளை மேற்கொண்டு பல பரிந்துரைகளையும் அறிக்கைகளையும் சமர்ப்பித்துள்ளன. அவ்வாறு சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கைகள், பரிந்துரைகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை பரிந்துரை செய்யவேண்டும் என்பதே இப் புதிய ஆணைக்குழுவின் செயற்பாட்டு எல்லையாகும். உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ் தலைமையில் ஓய்வுபெற்ற பொலிஸ்மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ, ஓய்வுபெற்ற மாவட்ட செயலாளர் நிமல் அபேசிறி, யாழ். மாநகர சபையின் முன்னாள் மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்டு இக்குழு அமைக்கப்பட்டது.

இவ் ஆணைக்குழு தனது இடைக்கால அறிக்கை ஒன்றை பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்பில் ஜனாதிபதியிடம் கையளித்தும்விட்டது. அதில், பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு ஆணைக்குழு இணங்கவில்லை.

பயங்கரவாதத் தடைச்சட்டம் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களை அவர்களுடைய விடுதலை சார்ந்த போராட்டங்களை அடக்குவதற்காக உருவாக்கப்பட்டது. பல்வேறு நிலைமைகளுக்கப்பால் அது இப்போது எல்லாவற்றுக்குமானதாக உள்ளதாக விதந்துரைக்கப்படுகிறதே தவிர வேறொன்றுமில்லை. முன்னாள் சட்டமா அதிபர் டி.ஆர்.டி சில்வா தலைமையிலான நல்லிணக்க ஆணைக்குழு சமர்ப்பித்த அறிக்கை, ஓரளவுக்கேனும் சிங்களவர்களாலும் ஏற்றுக் கொள்ளப்படுவதாக இருந்தது. ஆனாலும் அது கூட நடைமுறைப்படுத்தப்படவில்லை.

நிலைமாறுகால நீதிச் செயற்பாட்டினை முன்னெடுக்கும் கடந்த அரசாங்கத்தின் செயற்பாட்டில் பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டாலும், காணாமல் போன அலுவலகம், இழப்பீட்டு காரியாலயம், உண்மையை கண்டறிதல் போன்ற செயற்பாடுகள் இன்னமும் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை.

நம்பிக்கையைக் கட்டியெழுப்புதல் சரியாக நடைபெற்றிருந்தால் வருடங்கள் தாண்டியும் வடக்கில் காணாமலாக்கப்பட்டவர்களது உறவினர்களது போராட்டம் தொடர்ந்த வண்ணமிருக்காது. இலங்கையில் யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்கள், மக்களின் பிரதிநிதிகளின் இணக்கப்பாட்டுடன், அவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய பொறிமுறைகள் உருவாக்கப்படவேண்டும். அதுவே சிறந்த தீர்வாகவும் இருக்கக்கூடும்.

இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளுக்குத் தீர்வு காண்பது குறித்த சிந்தனைகள் தோற்றம்பெற்றாலும் இன்னமும் நம்மால் எதனையும் அடைந்துவிட முடியாமைக்கு என்ன காரணம் என்றே இந்த ஆணைக்குழுக்கள் சிந்தித்திருக்க வேண்டும்.

இதுவரை அமைக்கப்பட்ட பல பொறிமுறைகள் பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்புவதாக அமையாமல் நம்பிக்கை இழப்புக்கானதாகவே அமைந்திருக்கின்றன.

யுத்தத்தின்போது மனித உரிமை சட்டம், சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மீறப்படுவது வழமையே! இருந்தாலும் அதனை ஏற்றுக் கொள்வதற்கான மனப் பக்குவம் இருக்கும்போதுதான் அங்கு நல்லிணக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு கள் ஏற்படும். இல்லையானால் அதற்கான சுந்திரமான விசாரணை மேற்கொள்ள சுதந்திரமான பொறிமுறை ஒன்று அமைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்குள் அதன்மூலம் நம்பிக்கையை ஏற்படுத்தலாம். அதன் ஊடாக போராட்ட காலங்களிலும், போரின் போதும் மனித உரிமைகளை மீறி செயற்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் இதுவே இப் பொறிமுறையின் செயற்பாடாக இருக்க வேண்டும்.

நாட்டில் கடந்த காலங்களில் ஆட்சியிலிருந்த ஒவ்வோர் ஆட்சியாளரும் முயற்சித்த விடயமே இனப்பிரச்சினைக்கான தீர்வு. இருந்தாலும் அது கைகூடவே இல்லை. அதற்கு முக்கியமான காரணமாக தென்னிலங்கை சிங்கள மக்களது எதிர்ப்பையே சொல்லமுடியும். மஹிந்த ஆட்சியில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த அமைக்கப்பட்ட எல்.எல்.ஆர்.சி. ஆணைக்குழுவின் பல பரிந்துரைகளும் தூக்கி வீசப்பட்டு, புதிதான பரிந்துரைகளுக்கு வழி தேடப்படுகிறது. ஆனால் பெரும்பான்மை பலம்மிக்க ஆட்சியானது அதனைச் செய்துமுடிக்கக்கூடியதே. ஆனால், சர்வதேசத்திடம் இருக்கும் பிடிகொடுப்புகளை விட்டுவிட்டு தனியே நகர முனையும் போக்குதான் இன்னமும் நம்பிக்கையீனத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்துகிறது.

முன்னைய ஆணைக்ககுழுக்களின் தீர்மானங்களை மதிப்பீடு செய்தல் தொடர்பாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டிருக்கும் உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ் தலைமையிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் வியாழக்கிழமை (05.08.2021) சாட்சியமளித்த கொழும்பு பல்கலைக்கழக சட்டபீட பேராசிரியர் ஏ. சர்வேஸ்வரன் “இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறையே இறுதித் தீர்வாக இருக்கவேண்டும். என்றாலும் இன்றைய நிலையில் தென்னிலங்கை மக்கள் அதற்கு தயாரான நிலையில் இல்லை. அதனால் 13ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும். அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ளாமலேயே இதனை மேற்கொள்ளலாம்” என்று தெரிவித்திருக்கிறார்.

அதே போன்று கடந்த 27.07.2021 அன்று இவ் ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்துள்ள தேசிய சமாதான பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா, “இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண 1956இல் இருந்து ஆட்சியில் இருந்த அரச தலைவர்கள் முயற்சித்தார்கள். என்றாலும் அந்த முயற்சிகள் எதுவும் பயனளிக்கவில்லை. இருப்பினும் பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை பெற்றுக்கொண்டுள்ள இந்த அரசாங்கத்தால் அதனை செய்யமுடியும். இனப்பிரச்சினைக்கு தீர்வு காணாமல் நாடு ஒருபோதும் முன் செல்ல முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.

இவர்கள் இருவருடைய கருத்துகளும் இரண்டு விதமானதாக இருந்தாலும் இரண்டும் ஒன்றே. நாட்டு முன்னேற்றம், நாட்டின் அமைதியிலும் ஒருமித்த செயற்பாட்டிலுமே இருக்கிறது. வடக்கு கிழக்கு மக்களை வேறாகவும் ஏனைய பிரதேச மக்களை வேறாகவும் காணும் தன்மையில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே தமிழ் மக்களின் வேண்டுகோள்.

எந்த ஓர் அரசாங்கத்திலும் இல்லாத அடக்குமுறை தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில் இருந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக மாவீரர் தினம், முள்ளிவாய்க்கால் நினைவு, திலீபன் நினைவு, அன்னைபூபதி நிகழ்வு, கருப்பு ஜுலை நினைவு, டெலோ அமைப்பின் வெலிக்கடைப் படுகொலை நினைவு- தேசிய வீரர்கள் தினம், புளொட் அமைப்பின் வீரமக்கள் தினம், ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் தியாகிகள் தினம், காணாமல்போனோர் நினைவுகள் என தடுப்புகளும், தடையுத்தரவுகளும், கைதுகளும், விசாரணைகளும் தொடர்ந்தவண்ணமே இருக்கின்றன. பாதுகாப்புத் தரப்பினரின் அதிகார எல்லைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவால் அமைக்கப்பட்டிருக்கும் முன்னைய ஆணைக்குழுகள், குழுக்களின் தீர்மானங்களை மதிப்பீடு செய்தல், அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுத்தல் தொடர்பாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டிருக்கும் விசாரணை ஆணைக்குழு எதனைச் சாதிக்கும் என்பதுதான் புதிய கேள்வி.

இனப்பிரச்சினைக்கு தீர்வும் இன நல்லிணக்கமும் ஒன்றுடன் ஒன்று இணைந்ததாகவே காணப்படுகிறது. யுத்தத்தின்போதும் யுத்தத்துக்கு பின்னரும் தமிழ் மக்கள் எதிர்கொண்டுவரும் இன்னல்களுக்கு முடிவுகட்டுவதாக அதற்கான பதில் அமையுமாக இருந்தால் நல்லதே.

Posted in Uncategorized

நல்லூர் கந்தனின் உற்சவத்திற்கு செல்ல கொரோனா தடுப்பூசி அட்டை அவசியம்

நல்லூர் கந்தனின் உற்சவத்திற்கு வருபவர்கள் தடுப்பூசி போடப்பட்ட அட்டைகளை வைத்திருப்பது அவசியமாகுமென யாழ். மாநகர சபை அறிவித்துள்ளது.

நல்லூர் கந்தனின் உற்சவ நடைமுறைகள் தொடர்பாக யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தற்போது பரவி வரும் கொரோனா தொற்றைக் கருத்திற்கொண்டு நல்லூர் முருகப் பெருமானின் இவ்வருட உற்சவம் முழுமையான சுகாதார நடைமுறைகளை மிக இறுக்கமாகப் பேணி அடியார்களின் பங்குபற்றுதலின்றி அல்லது அந்தந்த சந்தர்ப்பங்களுக்கேற்ப மட்டுப்படுத்தப்பட்ட அடியார்களுடனேயே
நடைபெறவுள்ளது.

எனவே இந்த நெருக்கடிமிக்க அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு மிக மிக பொறுப்புடனும் அவதானத்துடனும் நடந்துகொள்ளுமாறு நல்லைக்கந்தன் அடியார்களை மிகப் பணிவாகக் கேட்டுக்கொள்கிறோம்.

சுகாதார அமைச்சினால் வெளியிடப்படும் சுற்றறிக்கைகள் மற்றும் அறிவுறுத்தல்கள், யாழ். மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் யாழ்ப்பாணம் மாநகர சபை சுகாதார வைத்திய அதிகாரியால் விடுக்கப்படும் சுகாதார நடைமுறைகளை கருத்திற்கொண்டும் சுகாதார அமைச்சினால் விடுக்கப்படும் அறிவுறுத்தல்களுக்கு ஏற்பவும் நடைமுறைகளில் மாற்றங்கள் பற்றி அடியார்களுக்கு அவ்வப்போது அறிவிக்கப்படும்.

குழந்தைகளும் சிறுவர்களும் முதியவர்களும் ஆலயத்திற்கு வருவதை முற்றாகத்
தவிர்க்கவும்.

கொவிட் 19 நோய் அறிகுறிகள் உள்ளவர்கள் வீதித்தடையில் அனுமதிக்கப்படமாட்டார்கள். ஆலயத்தினுள் அனுமதிக்கப்படும் வேளையில் அடியார்கள் முழுமையாக நடைமுறைகளை பின்பற்றுவதோடு தடுப்பூசி போடப்பட்ட அட்டைகளை வைத்திருப்பதும் அவசியமாகும்.

ஆலயத்திற்கு அனுமதிக்கப்படும் வேளையில் ஆண் அடியார்கள் வேஷ்டியுடனும் பெண்கள் கலாசார உடைகளுடனும் வருதல் வேண்டும்.

சுகாதார நடைமுறைகளுக்கேற்ப அடியார்கள் ஆலயத்தினுள் வரையறுக்கப்பட்ட அளவில் அனுமதிக்கப்படும் பட்சத்தில் தேவஸ்தானத்தின் அறிவுறுத்தல்களின்படி அவர்கள் ஆலய வளாகத்தினுள் தரித்து நிற்கவோ அமர்ந்திருக்கவோ அனுமதிக்கப்படமாட்டார்கள்.

உரிய சமூக இடைவெளியுடன் வழிபாட்டை நடாத்திச் செல்வதற்கு மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

பக்தர்களின் நன்மை கருதியும் ஆலய உற்சவம் அமைதியான முறையில் நடைபெறுவதை உறுதிப்படுத்தும் முகமாகவும் இம்முறையும் வீதித்தடைகள் நாளை நள்ளிரவு முதல் 08.09.2021 இரவு வரை முழுமையாகப் போடப்படும். வழமைபோல் மாற்றுப்பாதை அமுலில் இருக்கும்.

அடியவர்களின் சுகாதார நன்மையைக் கருத்திற்கொண்டு ஆலயத்தினுள் அனுமதிக்கப்படும் சந்தர்ப்பத்தில் சகல அடியவர்களும் முத்திரைச் சந்தியிலிருந்து பருத்தித்துறை வீதியால் மாத்திரமே ஆலயத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவர்.

ஆலயத்திற்கு வந்து சேரும் ஏனைய மூன்று வீதிகளும் அடியவர்கள் செல்வதற்கு முழுமையாகத் தடை செய்யப்படும். வீதித்தடைக்கு உள்ளே நிரந்தர வதிவிடத்தைக் கொண்ட மக்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள், நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் மாத்திரம் மாநகர சபையின் அனுமதி அட்டையுடன் ஏனைய வீதித்தடைகளினூடாகச் சென்று வர அனுமதிக்கப்படுவர்.

ஆலயத்தினுள் அடியவர்களை அனுமதிப்பது, எத்தனை பேரை அனுமதிப்பது போன்றவை தொடர்பாக அவ்வப்போது உள்ள நிலைமைகளைக் கருத்திற்கொண்டு சுகாதாரத் தரப்பின் வழிகாட்டலோடு தீர்மானிக்கப்படும்.

தற்போதைய அசாதாரண சூழ்நிலையில் அங்கப்பிரதட்சணம் செய்தல், அடி அழித்தல், கற்பூரச்சட்டி எடுத்தல், காவடி, தூக்குக்காவடி எடுத்தல் போன்ற நேர்த்திக்கடன்கள் மேற்கொள்ளுதல், தாகசாந்தி, அன்னதானம் வழங்கல் போன்றவை முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

ஆலயச் சூழலிலும் ஆலயத்தை அண்டியுள்ள பகுதிகளிலும் அடியார்கள் மற்றும் பொதுமக்கள் கூடுவதற்கான தெய்வீக சொற்பொழிவுகள், தெய்வீக இசை அரங்குகள், நிகழ்வுகள், களியாட்ட நிகழ்வுகள் மற்றும் வியாபார நடவடிக்கைகள் அனைத்தும் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளன.

ஆலய உற்சவ காலத்தில் ஆலய சுற்றாடலில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றத்தவறுவோர் அல்லது மீறுபவர்களின் மீது சுகாதார நடைமுறைகளின் கீழ் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தற்போதைய சூழ்நிலையில் வழங்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்காமை, மீறுகின்றமை போன்றவற்றால் ஏற்படக்கூடிய அசௌகரியங்களைக் கருத்திற்கொண்டு முழுமையான ஒத்துழைப்பினை வழங்கவேண்டும்.

இக் கொரோனா தொற்று சூழலினால் எம்மால் எடுக்கப்படும் விசேட நடவடிக்கைகளால் பக்தர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு மனம் வருந்துவதோடு தற்போது எழுந்துள்ள மிகக்கடுமையான நெருக்கடி நிலையைக் கருத்திற்கொண்டு வழிகாட்டல்களுக்கும் நடவடிக்கைகளுக்கும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வேண்டுகிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

மட்டக்களப்பு மாநகரசபை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது

மட்டக்களப்பு மாநகரசபையில் கடமையாற்றும் ஊழியர்கள் ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப் பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் நேற்று முன்னெடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனைகளில் மட்டக்களப்பு மாநகர சபையில் கடமையாற்றும் மூன்று உத்தியோகத்தர்கள் கொரோனா தொற்றாளர்களாக இனங் காணப்பட்டனர்.

இந்த நிலையில் மட்டக்களப்பு மாநகர சபையின் ஏனைய ஊழியர்களும் இன்று புளியந்தீவு பொதுச் சுகாதார பரிசோதகர் ராஜ்குமார் தலைமையில் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மாநகர சபையில் கடமையாற்றும் மேலும் மூன்று ஊழியர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளானமை தொடர்பாக கண்டறியப் பட்டுள்ளது.

இந்த நிலையில் மட்டக்களப்பு மாநகர சபையானது தற்காலிமாக மூடப்பட்டுள்ளதுடன், நோயாளர்களுடன் தொடர்புடையவர்களும் தனிமைப் படுத்தப்பட்டு வருகின்றனர்.

இதேநேரம் இன்றைய தினம் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் முன்னெடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனைகளில் 60க்கும் மேற்பட்டவர்கள் நோயாளர்களாக இனங்காணப் பட்டுள்ளதாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி மருத்துவர் கே.கிரிசுதன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் 189 பேர் கொரோனாத் தொற்றாளர்களாக இனங் காணப்பட்டுள்ளனர் என்று மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் முத்துலிங்கம் அச்சுதன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் 2 இலட்சத்தி 75 ஆயிரம் தடுப்பூசிகள் முதலாம் கட்டமாக வழங்கப் பட்டிருக்கின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்றாவது அலை காரணமாக 9626கொரோனா தொற்றாளர்களாக இனங் காணப்பட்டுள்ளதாகவும் 137 பேர் இது வரையில் மரணமடைந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

வெடிகுண்டைப் போன்று வெடித்துச் சிதறும் டெல்டா – மாகாணங்களுக்கிடையேயான போக்குவரத்துகளுக்கு கட்டுப்பாடு

நாட்டில் டெல்டா தொற்று பரவல் தீவிரமடைந்து வருகின்ற நிலையில், நாளொன்றில் நூற்றுக்கும் அதிகளமான மரணங்களும் பதிவாகியுள்ளன.

இதன் காரணமாக சுகாதார தரப்பினரின் ஆலோசனைகளை கவனத்தில் கொண்டு மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்குவதற்கும் அது தொடர்பில் தீவிரமாக கண்காணிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுகாதார தரப்பினர் உள்ளிட்ட அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோர் தவிர்ந்த வேறு எவரும் மாகாண எல்லைகளை கடக்க முடியாது என்றவாறு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டாலும் எதிர்வரும் 14 நாட்களுக்கு அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்படுவதையும் , மரணங்கள் பதிவாகின்றமையையும் கட்டுப்படுத்த முடியாது.

எனவே சுகாதார கொள்ளளவை மீறி தொற்று மீண்டும் தீவிரமடைய முன்னர் போக்குவரத்து கட்டுப்பாடுகளை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

எதிர்வரும் இரு வாரங்கள் மிகவும் தீர்க்கமானவையாகும் என்றும் அபாயம் மிக்க டெல்டா வைரஸ் வெடிகுண்டைப் போன்று வெடித்து சிதறக்கூடும் என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண எச்சரித்துள்ளார்.

‘ டெல்டா வரைஸ் என்பது வெடிகுண்டைப் போன்றதாகும். நியூயோர்க், லண்டன், இந்தியா மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் டெல்டா பாரியளவில் பரவி பாரதூரமான பாதிப்புக்களை ஏற்படுத்தியது.

டெல்டா என்ற குண்டு வெடித்துள்ளது. எவ்வாறிருப்பினும் இதனை நாம் சிறப்பாக எதிர்கொள்ள வேண்டும்.

மக்களிடம் உண்மை நிலைவரத்தை தெரிவித்து , நாமனைவரும் ஒன்றிணைந்து இந்த நிலைமையை எதிர்கொண்டு எதிர்வரும் சில தினங்களுக்கு பாதுகாப்பாக இருந்தால் இந்த சலவாலை வெற்றி கொள்ள முடியும்.

இந்தியாவில் ஏற்பட்ட நிலைமையைப் போன்றே இங்கும் ஆரம்பமானது. எனினும் சுகாதார தரப்பினர் உள்ளிட்ட சகலரும் இணைந்து அவ்வாறான நிலைமை ஏற்படாமல் கட்டுப்படுத்தியுள்ளோம் என்றும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்தார்.

சீனத்தடுப்பூசி பெற்ற இலங்கையர்களுக்கு பிரான்ஸ் வைக்கிறது ஆப்பு!

சீனாவின் சைனோபார்ம் தடுப்பூசி பெற்ற இலங்கையர்களுக்கு பிரான்ஸ் கதவடைத்துள்ளது.

உலகில் சீனத்தடுப்பூசி பெற்ற பயணிகளுக்கு பயணத்தடை விதிக்கின்ற முதல்நாடாக பிரான்ஸ் காணப்படுகின்றது.

சீனத்தடுப்பூசி தவிர ஏனைய தடுப்பூசி பெற்ற இலங்கையர்கள் தமது நாட்டிற்குப் பயணிக்கத் தடையில்லை என்றும் பிரான்ஸ் அறிவித்துள்ளது.

Posted in Uncategorized