கட்டுநாயக்கவில் பயணிகளுக்கு பயணப்பொதிகளை அடையாளம் காண “டாக்” குறிச்சொற்கள்

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு முன்னிட்டு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேறும் பயணிகளுக்கு தங்களது பயணப்பொதிகளை இலகுவாக அடையாளம் காண பயன்படுத்தப்படும் “டாக்” குறிச்சொற்கள் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் அதிகாரிகள் சோதனையிட ஆரம்பித்துள்ளனர்.

சில விமானப்பயணிகள் தங்களது பயணப்பொதிகளுக்கு மாறாக வேறொரு பயணப்பொதிகளை எடுத்துச் செல்வதும் சில பயணிகள் தெரிந்தே மற்றவர்களது பயணப்பொதிகளை திருடிச்செல்வதும் தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றது.

இவ்வாறு மாற்றப்பட்டு எடுத்து செல்லப்பட்ட பயணப்பொதிகள் மீண்டும் அடிக்கடி விமான நிலையத்திற்குத் திரும்புகின்ற நிலையில் அவைகளின் உரிமையாளர்களுக்கு வழங்குவது மிகவும் கடினமாக உள்ளது.

இதனை தடுக்கும் முகமாக இப் புதிய “டாக்” குறிச்சொற்கள் முறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேரும் பயணிகளின் பயணப் பொதிகளின் “டாக்” குறிச்சொல் சீட்டுகளை சோதனையிடும் நடவடிக்கையில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பதில் பொலிஸ்மா அதிபர் நியமனம் தொடர்பில் பேராயர் கடும் விசனம்

பதில் பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளமையை கடுமையாக எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ள பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை, இது உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை அவமதிக்கும் செயலாளர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தேசபந்து தென்னகோன் மீது காணப்படும் குற்றச்சாட்டுக்கள் எவற்றையும் கருத்திற் கொள்ளாது அவரை பதில் பொலிஸ் மா அதிபராக நியமித்துள்ளதன் மூலம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாட்டு மக்களின் பாதுகாப்பு தொடர்பில் எவ்வித அக்கறையும் இல்லை என்பதும் தெளிவாகிறது என்றும் பேராயர் விசனம் வெளியிட்டுள்ளார்.

கத்தோலிக்க ஆயர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளமையை பேராயர் மெல்கம் கர்தினார் ரஞ்சித் ஆண்டகை நிராகரிப்பதோடு, அதனை முற்றாக எதிர்க்கின்றார். இந்த நியமனமானது உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மக்களை அவமதிக்கும் செயலாகும்.

273 அப்பாவி மக்களை கொலை செய்த, மேலும் 500 பேரை படுகாயமடயச் செய்து அவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிய உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களை தடுப்பதற்கான வாய்ப்புக்கள் காணப்பட்ட போதிலும், அதனை உதாசீனப்படுத்தியமை தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் குற்றஞ்சாட்டப்பட்டு அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் இதுவரையிலும் அதற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தேசபந்து தென்னகோன் போன்றோர் தமது கடமைகளை முறையாக நிறைவேற்றியிருந்தால் 273 அப்பாவி மக்கள் இன்று உயிருடன் இருந்திருப்பார்கள். அவர்கள் தமது கடமைகளையும், பொறுப்புக்களையும் உதாசீனப்படுத்தியதனாலேயே அவர்கள் கொல்லப்பட்டனர். அவ்வாறிருக்கையில் தேசபந்து தென்னகோன் போன்றோர் நாட்டின் பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளமை மிலேச்சத்தனமான செயற்பாடாகும்.

2022 மே மாதம் 9ஆம் திகதி காலிமுகத்திடலில் இடம்பெற்ற அமைதியான போராட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்துகல்கள் மற்றும் ஜனாதிபதி மாளிகையில் காணப்பட்ட 17 கோடியே 85 இலட்சத்தை வழக்கிற்காக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காமல், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் வழங்குமாறு கோட்டை பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களும் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

இவ்வாறான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான நபரொருவரை பதில் பொலிஸ் மா அதிபராக நியமித்துள்ளதன் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மக்களின் பாதுகாப்பு தொடர்பில் எவ்வித அக்கறையும் இல்லை என்பது புலப்படுகிறது.

பொலிஸ் மா அதிபர் நியமனத்துக்கு தேசபந்து தென்னகோனுடைய பெயரை பரிந்துரைக்க வேண்டாம் என்று பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை கடிதம் மூலம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றார். சட்டத்தரணிகள் உட்பட சமூகத்தில் பொது மக்கள் மத்தியிலும் இந்த நியமனம் தொடர்பில் கடும் எதிர்ப்பு காணப்படுகிறது. இவை எவற்றையுமே கவனத்தில் கொள்ளாது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பொலிஸ் அமைச்சர் உட்பட ஜனாதிபதியை சூழவுள்ள சுயநலவாதிகள் சிலரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலேயே இந்த நியமனம் அமைந்துள்ளது என்பது தெளிவாகிறது. இந்த நியமனமானது நீண்ட வரலாற்றைக் கொண்ட இலங்கை பொலிசுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள அவமதிப்பாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே எனது முதல் இலக்கு – பதில் பொலிஸ்மா அதிபர் தென்னக்கோன்

நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே எனது முதல் இலக்கு. அத்துடன் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள், கப்பம் கோருதல் ஆகியவற்றினால் ஏற்படும் அச்சுறுத்தல் தொடர்பில் செயற்பட எதிர்பார்த்துள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பதில் பொலிஸ் மா அதிபராக நியமனம் பெற்ற அவர் இன்றைய தினம் கொழும்பு, கங்காராம விகாரையில் இடம்பெற்ற மத வழிபாடுகளில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

நான் சமார் 25 வருடங்களாக வெவ்வேறு பொலிஸ் பதவிகளில் கடமையாற்றியுள்ளேன். எனக்கு அனுபவம் உள்ளது. நாட்டு மக்களின் நலனுக்காக இலங்கை பொலிஸ் சேவையை முன்னோக்கி கொண்டு செல்வேன்.

நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவது எனது முதன்மை இலக்காகும். மேலும் நாட்டில் போதைப்பொருள் பாவனையை இல்லாதொழிப்பது எனது இரண்டாவது பொறுப்பாகும். இன்று கிராமப்புற பாடசாலைகளில் கூட மாணவர்களிடத்தில் போதைப்பொருள் பாவனை பாரிய பிரச்சினையாக மாறிவிட்டது.

நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த நான் முன்னுரிமை அளிப்பேன். அத்தோடு அதனை மேற்கொள்ள சிறந்த திட்டமும் என்னிடம் உள்ளது. அதை செயல்படுத்துவேன் என்று நம்புகிறேன்.

அத்துடன் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள், கப்பம் கோரல் ஆகியவற்றினால் ஏற்படும் அச்சுறுத்தல் தொடர்பில் செயற்பட எதிர்பார்க்கின்றோம்.

நான் பொறுப்பில் இருந்த சந்தர்ப்பங்களில் எவ்வாறு செயற்பட்டேன் என்பதை அனைவரும் நன்கு அறிவர் என்றார்.

Posted in Uncategorized

நீரில் மூழ்கி உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் இறுதிக்கிரியையில் தேசபந்து தென்னக்கோன் கலந்து கொண்டு இறுதி மரியாதை

சந்தேக நபரை துரத்திச் சென்ற போது ஆற்றில் குதித்து காணமல் போய் சடலமாக மீட்கப்பட்ட ஜா – எல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 26 வயதுடைய கிருஷ்ணமூர்த்தி பிரதாபனின் இறுதிக்கிரியைகள் யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் இன்று இடம்பெற்றது.

உயிரிழந்தவரின் இறுதிக்கிரியை பூரண அரச மரியாதையுடன் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டதுடன் பொலிஸ் திணைக்களத்தினர் இறுதி மரியாதையை செலுத்தினர்.

இறுதிக் கிரியையின் போது மேல்மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் கலந்து கொண்டு உயிரிழந்தவருக்கு இறுதி மரியாதையை செலுத்தி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி ஒரு தொகை பணத்தையும் கையளித்தார்.

உயிரை துச்சமென கருதி உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிள் கிருஷ்ணமூர்த்தி பிரதாபன் பொலிஸ் சார்ஜன்டாக பதவி உயர்வு பெற்றுள்ளதுடன் அவருக்குரிய கொடுப்பனவுகள் கிடைக்கபெறும் என அவர் குடும்பத்தினருக்கு வாக்குறுதியளித்தார்.

இதன்போது பொலிஸ் திணைக்கள உயரதிகாரிகள், வடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிளின் பூதவுடல் அரச மரியாதையுடன் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் இன்று மாலை தகனம் செய்யப்படவுள்ளது.

கடந்த வியாழக்கிழமை (23) குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட மேலும் சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஜா-எல பகுதியில் ஆற்றில் பாய்ந்து தப்பிச் செல்ல முயன்ற சந்தேக நபரை துரத்திச் சென்ற போது குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் நீரில் மூழ்கி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோத நினைவேந்தல்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் : பொலிஸ் பேச்சாளர்

வடக்கு,கிழக்கில் முன்னெடுக்கப்படும் நினைவேந்தல்கள் சட்டத்துக்கு எதிரானதாக அமையும் பட்சத்தில் அவை தொடர்பில் பாராபட்சமின்றி குற்றவியல் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற அறிவுறுத்தல் வடக்கு,கிழக்கு மாகாண பொலிஸ் பிரதானிகளுக்கு பொலிஸ் மா அதிபரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

வடக்கு,கிழகில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் நாளை ஞாயிற்றுக்கிழமை (26)  எழுச்சியுடன் முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் நிறைவுக்கு வந்துள்ள நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை இராணுவத்தின் ஓய்வுபெற்ற புலனாய்வு அதிகாரியினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் தினத்தை நினைவுகூர முயற்சிப்பவர்கள் மீது குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ் மா அதிபர் மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவின் பணிப்பாளர் மேன்முறையீட்டு நீதிமன்றில் உறுதியளித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த விடயம் உள்ளிட்ட உரிய பணிப்புரைகள் மாகாண பொலிஸ் பிரதானிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் சட்டத்துக்கு எதிரான முறையில் நினைவேந்தல் செயற்பாடுகுளை முன்னெடுப்பவர்களுக்கு எதிராக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் பாரபட்சமின்றி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

ஆகவே இவ்விதமான நிகழ்வுகளில் பங்கேற்பவர்கள் சட்டத்தினை மீறும் போது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதில் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் மாவீரர் தினத்தை முன்னிட்டு மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் இன்றைய தினம்(25) வெல்லாவெளியில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் பொலிசாரால் நீதிமன்றத் தடையுத்தரவு மூலம் தடுத்து நிறுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நிகழ்வின் ஏற்பாட்டாளரான ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் விசாரணை என்ற பெயரில் பொலிசாரினால் அழைத்துச் செல்லப்பட்டார்.

சுமார் மூன்றரை மணிநேரம் வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் விசாரணை இடம்பெற்று மாலை 04.30 மணியளவில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்த நிலையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் பொலிசாரினால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு 14 நாட்கள் விளக்க மறியலில் வைப்பதற்கான உத்தரவை களுவாஞ்சிக்குடி நீதவான் பிறப்பித்ததையடுத்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

புலிகளின் மாவீரர் தினத்தை நினைவுகூருபவர்கள் மீது கடும் நடவடிக்கை – பொலிஸ்மா அதிபர் உறுதி

விடுதலைப் புலிகளின் மாவீரர் தினத்தை நினைவுகூர முயற்சிப்பவர்கள் மீது குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவின் பணிப்பாளர் மேன்முறையீட்டு நீதிமன்றில் உறுதியளித்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை நினைவுகூரும் வகையில் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க முயற்சிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதன்படி, பொலிஸ் மா அதிபர் (IGP) மற்றும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் (TID) பணிப்பாளர் வெள்ளிக்கிழமை (நவம்பர் 24) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில், அத்தகைய நபர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளனர்.

பொலிஸ் மா அதிபர் மற்றும் சட்டமா அதிபர் சார்பில் அரச சிரேஷ்ட சட்டத்தரணி ஷமிந்த விக்கிரம இந்த உறுதிமொழியை வழங்கினார்.

நவம்பர் 27 ஆம் திகதி வடக்கு மற்றும் கிழக்கில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள மாவீரர் தின நிகழ்வுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி இலங்கை இராணுவத்தின் ஓய்வுபெற்ற புலனாய்வு அதிகாரியினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பொலிஸ் காவலில் அடித்துக் கொலை செய்யப்பட்ட இளைஞன் வழக்கில் மூவரை கைது செய்ய உத்தரவு

சித்தங்கேணி இளைஞன் வழக்கில் மூவரை கைது செய்யுமாறு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த வழக்கில் 31 சட்டத்தரணிகள் ஆஜராகி இருந்தனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டு தாக்குதலுக்கு உள்ளான மற்றைய இளைஞன் அடையாளம் காட்டும் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களையும் கைது செய்யுமாறு நீதிவான் ஆனந்தராஜா உத்தரவிட்டார்

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்தங்கேணி பகுதியை சேர்ந்த நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் கைது செய்யப்பட்டு,

சித்திரவதைக்கு உள்ளான நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தமை தொடர்பிலான வழக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று எடுத்து கொள்ளப்பட்டது.

குறித்த வழக்கை முன்னிட்டு யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்தில் வழமைக்கு மாறாக அதிகளவு பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பொலிஸாரால் படுகொலை செய்யப்பட்ட இளைஞனுக்கு நீதிகோரி போராட்டம்

வட்டுக்கோட்டை பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த இளைஞனுக்கு நீதி கோரி சித்தங்கேணி சந்தியில் சடலத்துடன் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வட்டுக்கோட்டை பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த இளைஞன் நாகராசா அலெக்ஸின் இறுதிச் சடங்குகள் அவரின் இல்லத்தில் நடைபெற்றது

குறித்த இளைஞனின் இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வந்தனர்.

அலெக்ஸின் மரணமானது வட்டுக்கோட்டை பொலிஸாரின் கோர முகத்தை எடுத்துக் காட்டுவதுடன், சம்பந்தப்பட்ட பொலிஸார் இதுவரை கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட பொலிஸாரை கைது செய்யுமாறு கோரி பல்வேறு தரப்பினரும் கோரிக்கை முன்வைத்து கண்டனங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

உடல் முழுவதும் அடிகாயங்கள்! நுரையீரல் பாதிக்கப்பட்டே இளைஞர் உயிரிழப்பு – மருத்துவ அறிக்கையில் நிரூபணம்

சித்தங்கேணியில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரின் சட்ட மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ளது.

இந்நிலையில் உடல் முழுவதும் அடிகாயங்கள், இயற்கையான மரணம் இல்லை, உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் இன்று நண்பகல் உடற்கூறு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் இந்த அறிக்கையிடப்பட்டுள்ளது.

மல்லாகம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரே நேற்றைய தினம் உயிரிழந்தார்.

சித்தங்கேணி கலைவாணி வீதியைச் சேர்ந்த நாகராசா அலெக்ஸ் (வயது -25) என்பவரே உயிரிழந்தார்.

சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் சந்தேக நபர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் உள்ளிட்ட இருவர் அண்மையில் திருட்டுச் சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்கள் இருவரும் நான்கு நாள்களாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்படவுமில்லை விடுவிக்கப்படவும் இல்லை என்பதனால் உறவினர்கள் அச்சமடைந்தனர்.

உயிரிழந்தவரின் தாயார் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடொன்றையும் பதிவு செய்துள்ளார்.

அதனால் சந்தேக நபர்கள் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

பொலிஸாரின் ஆட்சேபனையடுத்து சந்தேக நபர்கள் இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இருவரும் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பயனின்றி அவர் நேற்று உயிரிழந்தார்.

உயிரிழந்தவரின் சடலம் உடற்கூறு பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை சவ அறையில் வைக்கப்பட்டிருந்தது.

உடற்கூறு பரிசோதனையின் பின்னரே உயிழப்புக்கான காரணம் வெளியிடப்பட்டுள்ளது.