ஜூலை மாதம் மின்சார கட்டணம் குறைந்தபட்சம் 23 சதவீதத்தால் குறைக்கப்படும் – கஞ்சன விஜேசேகர

எரிபொருள்,நிலக்கரி ஆகியவற்றின் விலை குறைப்பின் நிவாரணத்தை மின் பாவனையாளர்களுக்கு நிச்சயம் வழங்குவோம்.

எதிர்வரும் ஜூலை மாதம் மின்சார கட்டணம் குறைந்தபட்சம் 23 சதவீதத்தால் குறைக்கப்படும். சுயாதீன ஆணைக்குழுவின் தலைவரை பதவி நீக்கவில்லை. ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மையை அரசியல் நோக்கத்துக்காக பயன்படுத்திய ஜனக ரத்நாயக்க என்ற நபரை பதவி நீக்க தீர்மானித்தோம் என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (24) இடம்பெற்ற பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்கும் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவின் தகைமை தொடர்பில் கோப் குழுவில் கேள்வி எழுப்பிய பேராசிரியர் சரித ஹேரத் தற்போது அவருக்கு சார்பாக கருத்துரைப்பது வேடிக்கையாக உள்ளது. ஐந்து பிரதான குற்றச்சாட்டுக்களை முன்னிலைப்படுத்தி ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்க தீர்மானித்தோம்.

சுயாதீன ஆணைக்குழுவின் தலைவரை பதவி நீக்கும் நோக்கம் எமக்கு கிடையாது. குறுகிய அரசியல் நோக்கத்துக்காக செயற்பட்டு மின்சார கட்டமைப்பை நெருக்கடிக்குள்ளாக்கிய தலைவரையே பதவி நீக்க தீர்மானித்தோம்.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவுக்கு  எதிராக கடந்த பெப்ரவரி மாதம்  10 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடிப்படையாக கொண்டு முதலிரு குற்றச்சாட்டுக்களை உள்ளடக்கினோம்.

‘பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தனிப்பட்ட நிலைப்பாட்டை முன்னிலைப்படுத்தி பொதுமக்களின் நல திட்டங்களுக்கு முரணாக செயற்படுகிறார்’என  மேன்முறையீட்டு நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

ஜனக ரத்நாயக்கவை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கும் போது கடந்த அரசியலமைப்பு சபையில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் கபீர் ஹசீம் இரண்டு முறை எதிர்ப்பு தெரிவித்தார். இருப்பினும் அவரது எதிர்ப்பை தொடர்ந்து இவர் தலைவராக நியமிக்கப்பட்டார்.

மின்சார சபையுடன் கொடுக்கல் வாங்களில் ஈடுபடும் நபர் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் அல்லது உறுப்பினராக தெரிவு செய்யப்பட கூடாது என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனக ரத்நாயக்க மின்சார விநியோக கட்டமைப்புடனான தொழிற்துறையில் தொடர்பு கொண்டுள்ளார்.இது தொடர்பான தகவல்களை அவர் அரசியலமைப்பு சபைக்கு சமர்ப்பிக்கவில்லை.ஆகவே ஜனக ரத்நாயக்க அரசியலமைப்பு சபையை தவறாக  வழி நடத்தியுள்ளார்.

நடைமுறைக்கு சாத்தியமான வகையில் மின்கட்டணத்தை திருத்தம் செய்யும் யோசனையை முன்வைக்கும் அதிகாரம் மின்சார சபைக்கு உண்டு,முறையாக வழிமுறைகளுக்கு அமைய மின்கட்டண அதிகரிப்புக்கு பொதுப் பயன்பாட்டுகள் ஆணைக்குழு அனுமதி வழங்க வேண்டும்.

கடந்த  டிசெம்பர் மாதம் முதல் மின்கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்ததற்கு ஜனக ரத்நாயக்க அனுமதி வழங்கவில்லை.ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்கள்  மின்கட்டண அதிகரிப்புக்கு இணக்கம் தெரிவித்த போது இவர் மாத்திரம் தனிப்பட்ட காரணிகளுக்காக மின்கட்டண  அதிகரிப்புக்கு இணக்கம் தெரிவிக்கவில்லை.

யாரை மின்சாரத்துறை அமைச்சராக நியமிக்க வேண்டும் என்று குறிப்பிடும் அதிகாரம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு கிடையாது.அரசாங்கத்தின் பரிந்துரைகளுக்கு அமையவே பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு செயற்பட வேண்டும்.

2014 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு சாத்தியமான வகையில் மின்கட்டணத்தை திருத்தம் செய்யும் யோசனைகளை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு முன்வைக்கவில்லை.இதனால் மின்சார சபையும் திறைசேரியும் பாதிக்கப்பட்டது.

மின்கட்டமைப்பு துறையில் பாரிய கேள்வி காணப்பட்ட காரணத்தால் ஒரே கட்டமாக மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டதால் ஒட்டுமொத்த மின்பாவனையாளர்களும் பாதிக்கப்பட்டார்கள். இந்த குற்றச்சாட்டுக்களை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எதிராக முன்வைத்துள்ளோம்.

சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைக்கு அமைய மின்சார கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்த பின்னணியில் ஜனக ரத்நாயக்க அதற்கு இடமளிக்கவில்லை.

கடந்த டிசெம்பர் மாதம் மின்கட்டணம் அதிகரிக்கப்படாத காரணத்தால் ஜனவரி,பெப்ரவரி ஆகிய இரு மாதங்களில் மாத்திரம் மின்சார சபை 32 பில்லியன் ரூபா நட்டத்தை எதிர்கொண்டது.ஜனக ரத்நாயக்கவின் தனிப்பட்ட செயற்பாடுகளினால் இந்த இழப்பு ஏற்பட்டது.இந்த தொகையை மீள பெற்றுக்கொள்ள எதிர்வரும் காலங்களில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

எரிபொருள்,நிலக்கரி ஆகியவற்றின் விலை குறைப்பின் பயனை மக்களுக்கு வழங்குவோம் என்று குறிப்பிட்டுள்ளோம்.மின்கட்டணத்தை 3 சதவீதத்தால் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனக ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளமை முற்றிலும் பொய்யானது.

0-30 வரையான மின்னலகுக்கான கட்டணத்தை எதிர்வரும் ஜூலை லை மாதம் குறைந்தபட்சம் 23 சதவீதத்தாலும்,31-60 வரையான மின்னலகுக்கான கட்டணத்தை 09 சதவீதத்தாலும் குறைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. மின்பாவனையாளர்களுக்கு நிச்சயம் நிவாரணம் வழங்குவோம்.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பொறுப்பற்ற வகையில் செயற்பட கூடாது.ஆகவே ஆணைக்குழு ஒரு தரப்புக்கு பொறுப்புக் கூற வேண்டும் என்ற வகையில் புதிய சட்ட திருத்தங்களை கொண்டு வரவுள்ளோம். ஆகவே சுயாதீன ஆணைக்குழுவின் தலைவரை பதவி நீக்கவில்லை.குறுகிய அரசியல் நோக்கத்துடன் செயற்பட்ட ஜனக ரத்நாயக்க என்பதை பதவி நீக்க தீர்மானித்தோம் என்றார்.

இலங்கை – இந்தியா கடல்வழி மின் விநியோக ஒப்பந்தம் தயார்

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே மின்சாரத்தை கொண்டு வருவதற்கான உடன்படிக்கை கொள்கை ரீதியில் எட்டப்பட்டுள்ளது என்று அறிய வருகின்றது.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் மின்சாரத்தை கடத்துவதற்கு பயன்படுத்தப்படும் சிறப்பு மின் கேபிளை அமைக்க இந்திய – இலங்கை அதிகாரிகள் உடன்படிக்கைக்கு வந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தைச் சூழவுள்ள கடற்பரப்பில் இந்திய – இலங்கை எல்லைகளை பிரிக்கும் மணல்பரப்பின் ஊடாக இந்த மின்சார கேபிளை அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தவிர,

திருகோணமலையில் அமைக்கப்பட்டுள்ள எண்ணெய்க் குதங்களுக்கு எரிபொருளை வழங்குவதற்காக இந்தியாவில் இருந்து திருகோணமலைக்கு நிலத்தடி வழியாக எரிபொருள் குழாய் அமைக்கவும் இரு நாட்டு அரசுகளும் திட்டமிட்டுள்ளன.

மின்சார கேபிள் அமைக்க சுமார் 80 கோடி அமெரிக்க டொலர்கள் செலவாகும் என தற்போதைய முதற்கட்ட கணிப்பில் தெரியவந்துள்ளது.

மின்சாரதுறை மறுசீரமைப்புக்கு அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக அமைச்சர் காஞ்சன தெரிவிப்பு

வலு சக்தி துறை மற்றும் மின்சாரத்துறை மறுசீரமைப்புக்கு சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க உதவித்திட்டம் அதன் ஒத்துழைப்பினை வழங்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் திங்கட்கிழமை (08) அமைச்சில் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க உதவித்திட்டத்தின் ஆலோசகர் அரிந்தம் கோஷ் உள்ளிட்ட குழுவினருடன் விசேட கலந்துரையாடலொன்று முன்னெடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அதற்கமைய எதிர்வரும் 8 வாரங்களுக்குள் மறுசீரமைப்புக்களுக்கான வரிபடத்தை தயாரித்து , அடுத்த கட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க உதவித்திட்டத்தின் இந்த ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காற்றாலை திட்டத்தினை 160MW ஆல் அதிகரிக்க அதானி குழுமம் கோரிக்கை

இலங்கையில் 340 மெகாவட் காற்றாலை மின் திட்டங்களை தொடங்க அனுமதி பெற்றுள்ள அதானி குழுமம், அதன் திறனை 500 மெகாவட்டாக உயர்த்துமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த முன்மொழிவு குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக இலங்கையின் மின்சாரம் மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க தெரிவித்தார்.

அத்தோடு அனுராதபுரத்தில் இருந்து மதுரை வரை செல்லக்கூடிய மின்சாரம் கடத்தும் பாதை திட்டம் ஒன்றை நிர்மாணிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் டி.வி.சானக்க தெரிவித்தார்.

இலங்கையில் குறித்த திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் இந்தியாவும் தீவிர ஆர்வம் காட்டி வருகிறது என்றும் அமைச்சர் டி.வி.சானக்க தெரிவித்தார்.

மின்சாரசபை ஊழியர் எண்ணிக்கையை 40% குறைக்க யோசனை

மின்சார சபை ஊழியர்கள் எண்ணிக்கையை 40 சதவீதத்தால் குறைக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. மின்சார சபை மறுசீரமைப்பு தொடர்பான நிபுணத்துவ அறிக்கையை எதிர்வரும் ஏப்ரல் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி துறை அமைச்சு தீர்மானித்துள்ளது என மின்சாரத்துறை இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக தெரிவித்தார்.

மின்சாரத்துறை மறுசீரமைப்பு தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

24 மணித்தியாலமும் மின்சாரத்தை விநியோகிக்க மின்சாரத்துறை அமைச்சு விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மின்னுற்பத்திக்கான செலவை முகாமைத்துவம் செய்வதற்காவே மின்கட்டணம் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.

மின்சாரசபையின் நட்டத்தை ஈடு செய்வதற்காக மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடுவது அடிப்படையற்றது.

நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மின்சார சபையை மறுசீரமைக்க நியமிக்கப்பட்ட நிபுணத்துவ குழு அறிக்கை அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மறுசீரமைப்பு அறிக்கையை எதிர்வரும் மாதம் முதல் வாரம் அமைச்சரவையில் சமர்ப்பித்து அதனை தொடர்ந்து பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு 14 ஆயிரமாக காணப்பட்ட மின்சார சபை சேவையாளர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 22400 ஆக அதிகரித்துள்ளது.

மறுசீரமைப்பு அறிக்கையில் ஊழியர் குறைப்பு தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய மின்சார சபையின் ஊழியர்களின் எண்ணிக்கையை 40 சதவீதத்தால் குறைக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

மின்சார உற்பத்தி,விநியோகம்,மற்றும் இதர சேவை நடவடிக்கைகளில் ஈடுபடும் நிறுவனங்களை ஒருமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. மின்சார சபையின் செலவுகளை மட்டுப்படுத்தும் போது ஒரு முன்னேற்றகரமான தீர்மானத்தை எடுக்க முடியும் என்றார்.

வடக்கில் இருந்து இந்தியாவுக்கு மின்சார விநியோகத் திட்டம்

வடக்கில் இருந்து இந்தியாவுக்கு மின்சார விநியோகத் திட்டம்

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் மின்சார கட்டமைப்புகளை இணைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இரண்டு மாதங்களுக்குள் கையெழுத்திடப்படும் என இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட Reuters செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் மின்சார கட்டமைப்புகளை ஒன்றிணைக்கும் உடன்படிக்கையை எற்படுத்திக்கொண்டதன் பின்னர் செயலாக்க ஆய்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

ஒரு தசாப்தத்திற்கு முன்னதாக முன்மொழியப்பட்ட இந்த திட்டம் இதுவரை சிறிய அளவிலான முன்னேற்றத்தையே எட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ள மிலிந்த மொரகொட, இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்குள் மின் கட்டமைப்பை உருவாக்கி, தீவில் உற்பத்தி செய்யப்படும் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை இந்தியாவிற்கு விற்க முடியும் என இலங்கை நம்புவதாகவும் கூறியுள்ளார்.

இலங்கையின் பொருளாதார மீட்சித் திட்டத்தின் முக்கியப் பகுதியானது, தீவின் வடக்கில் அதன் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களை அபிவிருத்தி செய்வதில் தங்கியுள்ளது. இங்கிருந்து, எல்லை தாண்டிய மின்சார பரிமாற்ற கேபிள் மூலம் மின்சாரத்தை தென்னிந்தியாவிற்கு கொண்டு செல்ல முடியும் என நம்பப்படுகிறது.

மின் வெட்டு இல்லை ; மின் கட்டணம் அதிகரிப்பு

இன்று(16) முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ள காரணத்தினால் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

மின் கட்டணத்தை செலுத்துவதில் நிதி நெருக்கடியை எதிர்கொள்பவர்கள் தொடர்பில் நிதி அமைச்சு எதிர்காலத்தில் தீர்மானிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று(15) முதல் அமுலாகும் வகையில் 66 வீதத்தால் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

புதிய மின் கட்டண திருத்தங்களுக்கு அமைவாக 60 அலகுகளை பயன்படுத்தும் வீடொன்றுக்கான மின் கட்டணம் 276 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது.

அதற்கமைய, 60 அலகுகளை பயன்படுத்தும் வீடொன்றுக்கு இதுவரை அறவிடப்பட்ட 680 ரூபா மின் கட்டணம், 2560 ரூபா வரை அதிகரிக்கப்படவுள்ளது.

30 அலகுகள் பயன்பாட்டை கொண்ட வீடொன்றிற்கு இதுவரை காணப்பட்ட 360 ரூபா மின் கட்டணம், 1300 ரூபா வரை அதிகரிக்கப்படும்.

இது 261 வீத அதிகரிப்பாகும்.

90 அலகு பயன்பாட்டிற்காக இதுவரை அறவிடப்பட்ட 1800 ரூபா மின் கட்டணம், புதிய திருத்தத்திற்கு அமைவாக 4430 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

200 அலகுகளுக்கும் மேற்பட்ட மின்சார பாவனையை கொண்ட வீடுகளுக்காக மின் கட்டணம் 32 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நிலக்கரி இறக்குமதிக்கு நிதியில்லை – மின்சார சபை தலைவர்

24 மணித்தியாலமும் தடையின்றி மின்சாரத்தை வழங்க வேண்டுமாயின் அதற்கான வளத்தை உரிய தரப்பினர் மின்சார சபைக்கு வழங்க வேண்டும்.

நிதி திரட்டலில் பாரிய நெருக்கடி காணப்படுகிறது. நிலக்கரி இறக்குமதிக்கு நிதியில்லை என இலங்கை மின்சார சபையின் தலைவர் நளிந்த இலங்ககோன் தெரிவித்தார்.

இலங்கை மின்சார சபையின் காரியாலயத்தில் வியாழக்கிழமை (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

மின்கட்டமைப்பு சேவையை வினைத்திநனாக பேணுவதற்கும், 24 மணித்தியாலங்களும் தடையின்றி மின்சாரத்தை வழங்கும் வகையில் 20 கொள்கை திட்டங்களை மின்சாரத்துறை அமைச்சிடம் முன்வைத்தோம்.

அதிக மழைவீழ்ச்சி கிடைக்கப்பெறும் காலத்திலும்,வறட்சியான காலத்திலும் மின்னுற்பத்தியை தடையின்றி முன்னெடுத்தல், குறைந்த செலவில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திட்டங்கள் என 20 திட்டங்களை உருவாக்கியுள்ளோம்.

இந்த 20 திட்டங்களை செயற்படுத்த வேண்டுமாயின் அதற்கான வளத்தை உரிய தரப்பினர் பெற்றுக்கொள்ள வேண்டும்.

நிலக்கரி கொள்வனவிற்கான நிதியை திரட்டிக் கொள்வது பாரிய நெருக்கடியாக உள்ளது.பணம் செலுத்தி 21 கப்பல்களில் இருந்து நிலக்கரியையும், கடன் பற்று பத்திரரம் ஊடாக 12 கப்பல்களில் இருந்து நிலக்கரியையும் பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நுரைச்சோலை அனல் மின்நிலையத்திற்காக கொள்வனவு செய்யப்பட்ட நிலக்கரி கப்பல் நேற்று முன்தினம் நாட்டை வந்தடைந்துள்ள நிலையில் அந்த கப்பலுக்கு பணம் செலுத்த முடியாத காரணத்தினால் நிலக்கரியை தரையிறக்க முடியாத நிலை காணப்படுகிறது.

மின்னுற்பத்திக்கான எரிபொருள் மற்றும் நிலக்கரி ஆகியவற்றை கொள்வனவு செய்ய ஒரு சதம் கூட இனி வழங்க முடியாது என அரசாங்கம் கடந்த முதலாம் திகதி தெரிவித்துள்ளது. மின்னுற்பத்திக்கு தேவையான மூல பொருட்களை இறக்குமதி செய்ய நிதியை திரட்டிக் கொள்வது சிரமமாக உள்ளது.

24 மணித்தியாலமும் தடையின்றி மின்சாரத்தை வழங்க வேண்டுமாயின் உரிய தரப்பினர் அதற்கான வளத்தை வழங்க வேண்டும்.இல்லாவிடின் எதிர்வரும் நாட்களில் பாரிய நெருக்கடி ஏற்படும் என்றார்.

மின்சார சபை, அமைச்சரவைக்கு மின் கட்டணத்தை உயர்த்த அதிகாரமில்லை – சம்பிக்க

இலங்கை மின்சார சபை, மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு அல்லது அமைச்சரவை அமைச்சர்களுக்கு மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு அதிகாரம் இல்லை என முன்னாள் எரிசக்தித்துறை அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

மின்சார சபை சட்டம் மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டத்தின் அடிப்படையில் இது ஏற்புடையது இல்லை என்றும் நேற்று (10) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் தெரிவித்தார்.

கடந்த காலத்தை பாதிக்கும் வகையில் கட்டணத்தை மாற்றுவதற்கு இந்த தரப்புக்களுக்கு அதிகாரம் இல்லை என்றும் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

எனினும் மின்சாரக் கட்டணத்தை அறிவிப்பதற்கான முழு அதிகாரமும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனவரி முதல் புதிய மின்கட்டணங்கள் அமுலுக்கு வரும் – பந்துல குணவர்தன

திருத்தப்பட்ட மின்சாரக் கட்டணங்கள் ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையின் பிரகாரம் ஜனவரி முதலாம் திகதி முதல் புதிய கட்டணங்கள் அமுல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும், இந்த விடயம் தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுடன் மேலதிக கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மாற்று முன்மொழிவுகளை வழங்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் பிற அமைப்புகளுக்கு எதிர்வரும் 15 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized