இலங்கையின் சுதந்திர தின நிகழ்வின் சிறப்பு விருந்தினராக தாய்லாந்து பிரதமர்

இலங்கையின் 76ஆவது சுதந்திர தின நிகழ்வின் சிறப்பு விருந்தினராக தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் கலந்துகொள்ளவுள்ளார். எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ள நிலையில், அம்மாதம் 3ஆம் திகதி தாய்லாந்து பிரதமர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுவிஸ் மற்றும் உகண்டா செல்வதற்கு முன்னர் சில முக்கிய சந்திப்புகளை நாட்டில் முன்னெடுத்திருந்தார். இதில் முக்கியமான ஒன்றாக எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி நடைபெறவுள்ள சுதந்திர தின நிகழ்வு ஏற்பாடுகள் தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

இதன்போதே சுதந்திர தினத்தின் விசேட விருந்தினராக தாய்லாந்து பிரதமரை அழைத்துள்ளமை குறித்து தகவல் வெளியிட்டார்.

மேலும் இலங்கையின் வரலாற்றை எடுத்துரைக்கும் வகையில் நினைவு பதிப்பொன்றை அச்சிட்டு வழங்கவும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார். இதேவேளை சுதந்திர தினத்தினை ‘புதிய நாட்டை கட்டியெழுப்புவோம்’ என்ற தொனிப்பொருளில் அனுஷ்டிப்பதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

எவ்வாறாயினும் தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் தலைமையிலான உயர் மட்ட குழுவினரின் இலங்கை விஜயத்தின்போது இரு நாடுகளுக்கு இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது. இதனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்குறிப்பிட்ட கலந்துரையாடலின்போது உறுதிப்படுத்தினார்.

இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுடனான ஒப்பந்தங்களைத் தொடர்ந்து இது இலங்கையின் நான்காவது சுதந்திர வர்த்தக ஒப்பந்தமாகும். இதனூடக தேயிலை, தேங்காய் பால் மற்றும் ஆடை உற்பத்தி போன்ற முக்கிய ஏற்றுமதிகளில், தாய்லாந்து சந்தையில் வரி இல்லாத அணுகலை இலங்கை பெறும்.

தாய்லாந்து உடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக இதுவரையில் இருதரப்பினருக்கும் இடையில் எட்டு சுற்று பேச்சு வார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு இறுதி இலக்கை அடைந்துள்ளன. மறுப்புறம் இந்தியாவுடன் காலதாமதமான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நிறைவு செய்வதற்கும், சீனாவுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் தாய்லாந்துடனான ஒப்பந்தம் சிறப்பாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு தாய்லாந்து மிகவும் நெகிழ்வான மற்றும் புரிதலுடன் செயல்பட்டமை உள்ளிட்ட இரு நாடுகளுக்கு இடையிலான கலாச்சார இணைப்புகள் முக்கியத்துவம் பெற்றிருந்ததாக பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டினர்.

எவ்வாறாயினும் ஒப்பந்தத்தின் பின்னர் பல ஏற்றுமதி பொருட்களுக்கான தாய்லாந்து சந்தையில் உடனடி வரியில்லா அணுகலை இலங்கை பெறுகிறது. உதாரணமாக, தாய்லாந்து, இலங்கை தேயிலைக்கான ஒதுக்கீட்டை பராமரிக்கும் போது (வரம்புக்கு அப்பால் எந்த இறக்குமதியும் அனுமதிக்கப்படாது), மேலும் அதன் மீது விதிக்கப்பட்டுள்ள 30 சதவீத வரியை நீக்குவதுடன், உலர் தேங்காய் மீதான 54 சதவீத வரியை தாய்லாந்து நீக்கும்.

வெவ்வேறு வகைகளில் வரும் தேங்காய்ப் பாலை இரு நாடுகளும் சுங்க வரியின்றி இறக்குமதி – ஏற்றுமதி செய்யும். இலங்கை வரியில்லா அனுமதி கோரிய 15 வகையான ஆடைகளுக்கான வரிகளை தாய்லாந்து தள்ளுபடி செய்யும். இதில் உள்ளாடைகள் மற்றும் பிற சிறப்புப் பொருட்களும் அடங்குகின்றன.

ஒப்பந்தம் ஊடாக தாய்லாந்து மற்றும் இலங்கை ஆகியவை 15 ஆண்டுகளில் அதிக கட்டண தாராளமயமாக்கல் திட்டத்துக்கு உறுதியளித்துள்ளன. தாய்லாந்தில் சுமார் 11,000 கட்டண வரிகள் உள்ளன. அதே வேளை இலங்கையில் சராசரியாக 8,500 கட்டண வரிகள் உள்ளன. இரு நாடுகளும் இவற்றில் 80 சதவீதத்தை தாராளமயமாக்குவதுடன் 5 சதவீதத்தை ஓரளவு தாராளமயமாக்கும். மீதமுள்ள வீதம் எதிர்மறையான பட்டியலில் இருக்கும்.

எதிர்மறை பட்டியல்களில் எந்த சலுகைகளும் (இறக்குமதி கட்டணங்களில் குறைப்பு) அனுமதிக்கப்படாத உருப்படிகள் உள்ளன. தற்போது, இலங்கையின் எதிர்மறையான பட்டியல்களில் விவசாயம் மற்றும் மீன்பிடி பொருட்கள் உள்ளிட்டவை அடங்குகின்றன.

தாய்லாந்துடனான பேச்சுவார்த்தைகள் முதலில் 2015 – 2017 ஆண்டுகளில் தொடங்கப்பட்டன. அப்போது மூன்று சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. ஆனால் சீனா மற்றும் இந்தியா உட்பட அனைத்து நாடுகளுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளையும் 2018க்குப் பிறகு இலங்கை நிறுத்தி வைத்தது. இவ்வாறானதொரு நிலையிலேயே தாய்லாந்துடனான பேச்சுவார்த்தைகள் 2023ஆம் ஆண்டு ஜனவரியில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.

இதற்கிடையில், பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பாக இந்தியாவுடன் 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8-10 திகதிகளில் கலந்துரையாடல்களை இலங்கை முன்னெடுத்திருந்தது. இது இருதரப்புக்கும் இடையிலான 13ஆவது சுற்று பேச்சுவார்த்தைகளாகும். மறுபுறம் சீனாவுடனான உத்தேச சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் சகல வசதிகளுடன் கூடிய அதி நவீன யானை வைத்தியசாலை அமைப்பது தொடர்பில் தாய்லாந்து கவனம்

இலங்கைக்கு சகல வசதிகளுடன் கூடிய அதி நவீன யானை வைத்தியசாலை ஒன்றை நிர்மாணித்து வழங்குவது தொடர்பில் தாய்லாந்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.

யானைகளுக்கு எக்ஸ்ரே, ஸ்கேன் இயந்திரங்கள் மற்றும் பல்வேறு மருத்துவ வசதிகளுடன் கூடிய யானை மருத்துவமனையை வழங்க முயற்சித்து வருவதாக இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் போஜ் ஹர்ன்போல் தெரிவித்திருந்தார்.

யானைகளுக்கு என்னென்ன வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும், யானைகளுக்கு மருத்துவமனை நிர்மாணத்துக்கு தேவையான ஏற்பாடுகள் போன்றவை குறித்து ஆராய்வதற்காக தாய்லாந்தின் சிறப்புக் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.

மேலும், முத்துராஜா யானைக்கு உரிய சிகிச்சை அளிக்காததால் மீண்டும் தாய்லாந்துக்கு அழைத்துச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், இலங்கையில் உரிய சிகிச்சை அளித்திருந்தால் முத்துராஜாவை இலங்கையிலேயே வைத்திருந்திருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

Posted in Uncategorized

யானையை இலங்கைக்கு திரும்ப அனுப்பப் போவதில்லை என தாய்லாந்து தெரிவிப்பு

முத்துராஜா யானைக்கு சிறப்பு சிகிச்சைகளும் விசேட பயிற்சிகளும் தொடர்ச்சியாக அளிக்கப்படுவதாக தாய்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், குறித்த யானையை இனிமேல் இலங்கைக்கு வழங்கப்போவதில்லை என்றும் தாய்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தாய்லாந்து அரசாங்கத்தினால் நாட்டுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டு இருபத்தி இரண்டு வருடங்களாக நாட்டில் தங்கியிருந்த முத்துராஜா யானை, கடந்த 2 ஆம் திகதி தாய்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

குறித்த யானைக்கு கால் எலும்பில் ஏற்பட்ட காயம் உள்ளிட்ட உபாதைகளுக்கு சிகிச்சையளிக்கவே, தாய்லாந்து அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது.

இலங்கையில் முத்துராஜா யானை மிகவும் மோசமாக நடத்தப்பட்டதாக தாய்லாந்து அரசாங்கம் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், மீண்டும் இந்த யானையை இலங்கைக்கு வழங்கப்போவதில்லை என்று அந்நாட்டு சுற்றாடல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முத்துராஜா யானையின் ஒரு கண்ணில் வெள்ளை பூ படர்ந்துள்ளமையும், பின்பக்க வலது காலில் காயம் ஏற்பட்டுள்ளமையும், முதுகில், நகங்கள் மற்றும் தோல்களின் பாதிப்பு ஏற்பட்டுள்ளமையும் தாய்லாந்து அரசாங்கம் மேற்கொண்ட பரிசோதனைகளில் கண்டறியப்பட்டது.

தற்போது தாய்லாந்தின் லம்பன் பிராந்தியத்தில் அமைந்துள்ள, யானைகள் சரணாலயத்தில், இதற்கான சிகிச்கைகளும் அளிக்கப்படுகின்றன.

அத்தோடு, முத்துராஜாவின் நடவடிக்கைகளின் சிறப்பான மாற்றம் தற்போது தெரிவதாகவும், அந்நாட்டு மொழிக்கு இணங்க செயற்படுவதாகவும் தாய்லாந்து ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், இலங்கைக்கு நன்கொடையாக வழங்கிய மேலும் இரண்டு யானைகள் தொடர்பாகவும் தாய்லாந்து அரசாங்கம் தற்போது கவனம் செலுத்த்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த யானைகளின் உடல்நிலை குறித்து ஆராய்வதற்காக கால்நடை மருத்துவர்கள் உள்ளிட்ட விசேட குழுவொன்று எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இலங்கைக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் தாய்லாந்து ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

முத்துராஜாவின் பராமரிப்பு செலவை தாய்லாந்திடம் கேட்கப் போகும் முன்னாள் தியவடன நிலமே

தாய்லாந்து மன்னர் தலதா மாளிகைக்கு வழங்கிய யானையை மீண்டும் தாய்லாந்திற்கு கொண்டு செல்ல முயற்சித்தால், யானையின் பராமரிப்பு செலவுக்காக வழக்கு தொடரப்போவதாக முன்னாள் தியவடன நிலமே நெரஞ்சன் விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

பரிசாக வழங்கியதை திருப்பிக் கேட்பது நெறிமுறைக்கு புறம்பானது என்றும் கூறியுள்ளார்.

தாய்லாந்திலிருந்து முத்துராஜா யானை இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு 37 வருடங்கள் கடந்துள்ள நிலையில், தற்போது வரை யானை ஆரோக்கியமாக உள்ள போதிலும், யானை குறித்த தவறான தகவல் தாய்லாந்திற்கு நாடா என்ற அரச சார்பற்ற நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மல்வத்து, அஸ்கிரிய மகாநாயக்கர்களின் ஆலோசனையின் பேரில், ஸ்ரீ தலதா மாளிகைக்கு யானைக் குட்டி ஒன்றை அன்பளிப்பாக வழங்குமாறு கோரப்பட்டதாகவும், அதன்படி 1986ஆம் ஆண்டு அரசர் மற்றும் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் முத்துராஜா யானையை தலதா மாளிகைக்கு பரிசளித்ததாகவும் முன்னாள் தியவடன நிலமே கூறுகிறார்.

யானை துன்புறுத்தப்பவில்லையென்றும், அரச சார்பற்ற நிறுவனம் தவறான தகவல் வழங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை- தாய்லாந்து இடையே சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் பேச்சுவார்த்தை

இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான உத்தேச சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பான மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தை நாளை (09) மற்றும் நாளை மறுதினம் (10) கொழும்பில் நடைபெறவுள்ளது.

அந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக தாய்லாந்து அரசாங்கத்தின் பிரதிநிதிகள் குழு நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) முற்பகல் நாட்டை வந்தடைந்தது.

தாய்லாந்தின் வர்த்தக பேச்சுவார்த்தைகள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் அவுரமோன் சுப்தாவிதும் தலைமையிலான இந்தக் குழுவில் 26 பிரதிநிதிகள் உள்ளடங்குகின்றனர்.

பண்ட வர்த்தகம், சேவை வர்த்தகம், முதலீடு, மூல விதிகள், சுங்க ஒத்துழைப்பு, வர்த்தக வசதி மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு ஆகிய துறைகள் தொடர்பில் இங்கு விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.

2021 ஆம் ஆண்டில், இலங்கையிலிருந்து தாய்லாந்துக்கான ஏற்றுமதி 59 மில்லியன் டொலர்களாகவும், தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கான இறக்குமதிகள் 355 மில்லியன் டொலர்களாகவும் இருந்தன.

தாய்லாந்துக்கு சாதகமான வர்த்தக சூழ்நிலை நிலவும் பின்னணியில் இந்தப் பேச்சுவார்த்தைகள் தொடங்கப்படுவதோடு, தாய்லாந்துக்கான பிரவேசம் மூலம் நமது ஏற்றுமதிகளை தாய்லாந்து சந்தைக்கு மட்டுமின்றி மற்ற ஆசியான் சந்தைகளுக்கும் எமது ஏற்றுமதிகளுக்கான பிரவேசத்தை மேம்படுத்துவது மற்றும் தற்போதுள்ள வர்த்தகத்திற்கான வரி அல்லாத வர்த்தகத் தடைகளை குறைப்பது என்பன இப் பேச்சுவார்த்தைகளின் நோக்கமாகும்.

தாய்லாந்து சந்தையில் இலங்கையின் இரத்தினக்கற்கள், தேயிலை (கறுப்பு) போன்றவற்றை ஏற்றுமதி செய்வதற்கான பெரும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதோடு, இந்தப் பேச்சுவார்த்தைகளின் வெற்றியின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையில் தற்போதுள்ள வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்கும் புதிய துறைகளில் இருக்கும் வாய்ப்புகளை செயல்படுத்துவதற்கும் வழிகள் திறக்கப்படும்.

ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் இயங்கும் தேசிய வர்த்தகப் பேச்சுவார்த்தைக் குழு, இலங்கை சார்பாக பங்கேற்பதோடு, வெளிவிவகார அமைச்சு, வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு, நிதி அமைச்சின் வர்த்தகம் மற்றும் முதலீட்டு விவகாரங்கள் திணைக்களம் மற்றும் வர்த்தகத் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளனர்.