எட்கா உடன்படிக்கை தொடர்பில் பொதுஜன பெரமுன உறுப்பினர்களுடன் அரசாங்கம் கலந்தாலோசிக்கவில்லை – சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இந்தியாவுடனான எட்கா உடன்படிக்கை குறித்து அரசாங்கம் ஸ்ரீலங்காபொதுஜனபெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்தாலோசிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர குற்றம்சாட்டியுள்ளார்.

மார்ச்மாத இறுதிக்குள் இந்தியாவுடனான உத்தேச பொருளாதாரதொழில்நுட்ப உடன்படிக்கை குறித்த தொழில்நுட்ப பேச்சுக்களை இறுதிசெய்வது என்ற அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு சரத்வீரசேகர எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்

இந்த விடயம் குறித்து அரசாங்கத்தின் நாடாளுமன்ற குழுவினருடன் அரசாங்கம் ஆராயவில்லை இது குறித்த கலந்துரையாடலும் இடம்பெறவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் உரிய கலந்தாலோசனைகளை மேற்கொள்ளாமல் இறுதி உடன்படிக்கை குறித்த தீர்மானத்தை எடுக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எக்டா உடன்பாடு குறித்து ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன தனது நிலைப்பாட்டை தாமதமின்றி வெளிப்படுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள சரத்வீரசேகர நாட்டில் காணப்படும் அரசியல் சமூக சூழ்நிலைகளை தனது நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி பயன்படுத்தக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து 2018 இல் இரண்டு நாடுகளும் எக்டா உடன்படிக்கை குறித்த பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டன எனவும் தெரிவித்துள்ள அவர் 2016 இல் மோடி அரசாங்கத்திற்கும் நல்லாட்சி அரசாங்கத்திற்கும் இடையில் இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகின எனவும் தெரிவித்துள்ளார்.

2022 பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா வழங்கிய முன்னொருபோதும் இல்லாத உதவியை இலங்கை பாராட்டுகின்றது எனினும் நெருக்கடியில் ஒரு நாடு சிக்குண்டுள்ள வேளை அதன் மூலம் பலன்பெற முயலக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சுதந்திர தின நிகழ்வின் சிறப்பு விருந்தினராக தாய்லாந்து பிரதமர்

இலங்கையின் 76ஆவது சுதந்திர தின நிகழ்வின் சிறப்பு விருந்தினராக தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் கலந்துகொள்ளவுள்ளார். எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ள நிலையில், அம்மாதம் 3ஆம் திகதி தாய்லாந்து பிரதமர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுவிஸ் மற்றும் உகண்டா செல்வதற்கு முன்னர் சில முக்கிய சந்திப்புகளை நாட்டில் முன்னெடுத்திருந்தார். இதில் முக்கியமான ஒன்றாக எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி நடைபெறவுள்ள சுதந்திர தின நிகழ்வு ஏற்பாடுகள் தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

இதன்போதே சுதந்திர தினத்தின் விசேட விருந்தினராக தாய்லாந்து பிரதமரை அழைத்துள்ளமை குறித்து தகவல் வெளியிட்டார்.

மேலும் இலங்கையின் வரலாற்றை எடுத்துரைக்கும் வகையில் நினைவு பதிப்பொன்றை அச்சிட்டு வழங்கவும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார். இதேவேளை சுதந்திர தினத்தினை ‘புதிய நாட்டை கட்டியெழுப்புவோம்’ என்ற தொனிப்பொருளில் அனுஷ்டிப்பதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

எவ்வாறாயினும் தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் தலைமையிலான உயர் மட்ட குழுவினரின் இலங்கை விஜயத்தின்போது இரு நாடுகளுக்கு இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது. இதனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்குறிப்பிட்ட கலந்துரையாடலின்போது உறுதிப்படுத்தினார்.

இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுடனான ஒப்பந்தங்களைத் தொடர்ந்து இது இலங்கையின் நான்காவது சுதந்திர வர்த்தக ஒப்பந்தமாகும். இதனூடக தேயிலை, தேங்காய் பால் மற்றும் ஆடை உற்பத்தி போன்ற முக்கிய ஏற்றுமதிகளில், தாய்லாந்து சந்தையில் வரி இல்லாத அணுகலை இலங்கை பெறும்.

தாய்லாந்து உடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக இதுவரையில் இருதரப்பினருக்கும் இடையில் எட்டு சுற்று பேச்சு வார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு இறுதி இலக்கை அடைந்துள்ளன. மறுப்புறம் இந்தியாவுடன் காலதாமதமான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நிறைவு செய்வதற்கும், சீனாவுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் தாய்லாந்துடனான ஒப்பந்தம் சிறப்பாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு தாய்லாந்து மிகவும் நெகிழ்வான மற்றும் புரிதலுடன் செயல்பட்டமை உள்ளிட்ட இரு நாடுகளுக்கு இடையிலான கலாச்சார இணைப்புகள் முக்கியத்துவம் பெற்றிருந்ததாக பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டினர்.

எவ்வாறாயினும் ஒப்பந்தத்தின் பின்னர் பல ஏற்றுமதி பொருட்களுக்கான தாய்லாந்து சந்தையில் உடனடி வரியில்லா அணுகலை இலங்கை பெறுகிறது. உதாரணமாக, தாய்லாந்து, இலங்கை தேயிலைக்கான ஒதுக்கீட்டை பராமரிக்கும் போது (வரம்புக்கு அப்பால் எந்த இறக்குமதியும் அனுமதிக்கப்படாது), மேலும் அதன் மீது விதிக்கப்பட்டுள்ள 30 சதவீத வரியை நீக்குவதுடன், உலர் தேங்காய் மீதான 54 சதவீத வரியை தாய்லாந்து நீக்கும்.

வெவ்வேறு வகைகளில் வரும் தேங்காய்ப் பாலை இரு நாடுகளும் சுங்க வரியின்றி இறக்குமதி – ஏற்றுமதி செய்யும். இலங்கை வரியில்லா அனுமதி கோரிய 15 வகையான ஆடைகளுக்கான வரிகளை தாய்லாந்து தள்ளுபடி செய்யும். இதில் உள்ளாடைகள் மற்றும் பிற சிறப்புப் பொருட்களும் அடங்குகின்றன.

ஒப்பந்தம் ஊடாக தாய்லாந்து மற்றும் இலங்கை ஆகியவை 15 ஆண்டுகளில் அதிக கட்டண தாராளமயமாக்கல் திட்டத்துக்கு உறுதியளித்துள்ளன. தாய்லாந்தில் சுமார் 11,000 கட்டண வரிகள் உள்ளன. அதே வேளை இலங்கையில் சராசரியாக 8,500 கட்டண வரிகள் உள்ளன. இரு நாடுகளும் இவற்றில் 80 சதவீதத்தை தாராளமயமாக்குவதுடன் 5 சதவீதத்தை ஓரளவு தாராளமயமாக்கும். மீதமுள்ள வீதம் எதிர்மறையான பட்டியலில் இருக்கும்.

எதிர்மறை பட்டியல்களில் எந்த சலுகைகளும் (இறக்குமதி கட்டணங்களில் குறைப்பு) அனுமதிக்கப்படாத உருப்படிகள் உள்ளன. தற்போது, இலங்கையின் எதிர்மறையான பட்டியல்களில் விவசாயம் மற்றும் மீன்பிடி பொருட்கள் உள்ளிட்டவை அடங்குகின்றன.

தாய்லாந்துடனான பேச்சுவார்த்தைகள் முதலில் 2015 – 2017 ஆண்டுகளில் தொடங்கப்பட்டன. அப்போது மூன்று சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. ஆனால் சீனா மற்றும் இந்தியா உட்பட அனைத்து நாடுகளுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளையும் 2018க்குப் பிறகு இலங்கை நிறுத்தி வைத்தது. இவ்வாறானதொரு நிலையிலேயே தாய்லாந்துடனான பேச்சுவார்த்தைகள் 2023ஆம் ஆண்டு ஜனவரியில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.

இதற்கிடையில், பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பாக இந்தியாவுடன் 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8-10 திகதிகளில் கலந்துரையாடல்களை இலங்கை முன்னெடுத்திருந்தது. இது இருதரப்புக்கும் இடையிலான 13ஆவது சுற்று பேச்சுவார்த்தைகளாகும். மறுபுறம் சீனாவுடனான உத்தேச சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தில் முதலிட இந்திய கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி ஆர்வம்!

இந்திய கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பங்குகளை கொள்வனவு செய்வதற்கு ஆர்வத்தினைவெளியிட்டுள்ளார் என இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தனது ஜியோபிளாட்போர்ம் நிறுவனத்தின் ஊடாக தொலைத்தொடர்பு வர்த்தகத்திற்குள் ஆழமாக கால்பதிக்க எண்ணியுள்ள முகேஸ் அம்பானி ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பங்குகளை கொள்வனவு செய்வதற்கு ஆர்வத்தினைவெளியிட்டுள்ளார் என இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக இந்திய ஊடகம் மேலும் தெரிவித்துள்ளதாவது.

சமீபத்தைய நிதி நெருக்கடிகாரணமாக பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்திற்கு புத்துயிர் கொடுப்பதற்காக அதிகாரிகள் பல நிறுவனங்களை தனியார் மயமாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ள நிலையில் நஸ்டத்தில் இயங்கும் ஸ்ரீலங்கா டெலிகொம் தொடர்பில் இலங்கை பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

ஸ்ரீலங்கா டெலிகொமின் பங்குகளை கொள்வனவு செய்வதற்காக நவம்பர் பத்தாம் திகதிக்குள் இலங்கை விண்ணப்பங்களை கோரிய நிலையில் முகேஸ் அம்பானியின் ஜியோபிளட்போர்ம் இது குறித்து ஆர்வம் வெளியிட்டுள்ளது.

ஜனவரி 12ம் திகதி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள இலங்கைஅரசாங்கம் ஸ்ரீலங்கா டெலிகொமின் பங்குகளை கொள்வனவு செய்வதற்கு ஆர்வம் வெளியிட்டுள்ளவர்களில் ஜியோபிளாட்போர்மும் உள்ளதாக தெரிவித்துள்ளது.

இலங்கையில் முதலீடு செய்வதன்மூலம் ரிலையன்சின் ஜியோ உலகளாவிய தொலைத்தொடர்பு சந்தையில் நுழைந்து ஆதிக்கம் செலுத்தலாம் என நம்புகின்றது .

தற்போது ஜியோ இந்திய சந்தையில் முன்னணியில் காணப்படுகின்றது.

இலங்கையில் டென்மார்க் முதலீட்டை அதிகரிக்க நடவடிக்கை

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் டென்மார்க் தூதுவர் ஃப்ரெடி ஸ்வெயினுக்கும் இடையிலான சந்திப்பொன்று வியாழக்கிழமை (14) அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இலங்கைக்கும் டென்மார்க்கிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பு தொடர்பான கருத்துக்களை  பரிமாறிக் கொள்வதற்காக இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

புதுடில்லியில் வசிக்கும் டென்மார்க் தூதுவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை வழங்கக்கூடிய கோபன்ஹேகனில் உள்ள ஒரு பெரிய டென்மார்க் நிறுவனமான ஜி.பி.வி இன் இலத்திரனியல் உற்பத்தி தொழிற்சாலையை இலங்கையில் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டதாக தெரிவித்தார்.

டென்மார்க்கில் பல முதலீட்டாளர்கள் எரிசக்தி துறை, ஆழ்கடல் மீன்பிடி, இயந்திர படகு, உற்பத்தி மற்றும் ஏனைய திட்டங்களில் முதலீடு செய்ய தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி, சர்வதேச நாணய நிதியத்தின் நிதிப் பொதியின் முன்னேற்றம் உள்ளிட்டவை குறித்து டென்மார்க் தூதரிடம் பிரதமர் தெரிவித்தார்.

முதலீட்டை ஊக்குவிப்பதன் மூலம் டென்மார்க் இலங்கையின் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் நன்றி தெரிவித்த பிரதமர் பொருளாதாரத்தை புத்துயிர் பெறச்செய்வதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க பரிஸ் கழகத்தின் உறுப்பினர் என்ற முறையில் வழங்கிய ஆதரவை நினைவு கூர்ந்தார்.

கொள்கலன் ஊக்குவிப்பு மையமாக இலங்கையின் கப்பல் போக்குவரத்தை  விரிவுபடுத்துவதற்கான முயற்சி குறித்தும் அவர்கள் கலந்துரையாடினர்.

இலங்கையில் கறுவா மற்றும் ஏனைய வாசனைப் பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான வசதிகளை டென்மார்க் வழங்குமாறும் பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிகழ்வில் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க மற்றும் டென்மார்க் தூதரக அதிகாரி ருச்சி டி சில்வா ஆகியோர் கலந்துகொண்டனர்.

வங்கிகளில் கடனாகப் பெற்ற 8000 கோடிகளை செலுத்தாத உயர்மட்ட வர்த்தகர்கள்

இலங்கையில் உள்ள 10 உயர்மட்ட வர்த்தகர்கள் இரண்டு பிரதான அரச வங்கிகளுக்கு சுமார் 8,000 கோடி ரூபா கடனைச் செலுத்தத் தவறியுள்ளதாகவும் அவர்களின் பெயர்களை வெளியிடுவது நாடாளுமன்றத்தின் பொறுப்பாகும் எனவும் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் சேனாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற விசேட மாநாட்டில் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் சேனாநாயக்க இதனை வெளிப்படுத்தினார்.

சம்பந்தப்பட்ட தொழிலதிபர்கள் வெளிநாடுகளில் அதிக தொழில் செய்து அரசியல் பாதுகாப்பை பெற்று சம்பாதித்த பணத்தை அந்தந்த இரண்டு வங்கிகளில் வைப்புச் செய்துள்ளதாகவும், இலங்கை வங்கிக்கு 5,000 கோடி ரூபாவையும் மக்கள் வங்கிக்கு 3,000 கோடி ரூபாவையும் இவர்கள் வழங்க வேண்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சீனா-இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை மிக விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்

சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியும் அரச உறுப்பினருமான சேன் யிங்க் (Shen Yiqin) இன்று (20) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்தார்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் உட்பட இலங்கைக்கு சீனா வழங்கும் ஆதரவைப் பாராட்டிய ஜனாதிபதி, அதற்காக சீன ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவித்தார்.

அத்துடன், சுற்றுலா, விளையாட்டு, விவசாயம் ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரிப்பதே இலங்கையின் எதிர்பார்ப்பு எனத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் துறைமுக நகரம் என்பன இன்று முதலீட்டுக்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

பொருளாதார ரீதியில் அதிக பங்களிப்பை வழங்கக் கூடிய பெல்ட் என்ட் ரோட் (Belt & Road) திட்டத்தின் இரண்டாவது கட்டத்திற்குப் பிரவேசிப்பதற்கு அதன் பங்காளரான இலங்கை போன்ற நாடுகள் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார் .

பிராந்திய விரிவான பொருளாதார பங்காளித்துவத்திற்குள் (RCEP) பிரவேசிக்க இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி விளக்கினார்.

இந்துசமுத்திரம், கடற்பயணத்திற்கான சுதந்திர வலயமாக இருக்க வேண்டும் எனவும் புவிசார் அதிகாரப் போட்டியின்றி அமைதியான வலயமாக பேண இலங்கை அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.

சீனா-இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை மிக விரைவில் நடைமுறைப்படுத்தவும் இரு தரப்பும் உடன்பாடு தெரிவித்தன.

இலங்கைக்கு சீனாவின் தொடர்ச்சியான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்திய ஷென் யிங்க், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் வலியுறுத்தினார்.

இலங்கையில் 200 Shell எரிபொருள் நிரப்பு நிலையங்கள்

அமெரிக்காவின் RM Parks Inc நிறுவனத்திற்கும் இலங்கை முதலீட்டு சபைக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் முன்னணி பெட்ரோலிய பொருட்கள் விநியோகஸ்தரான RM Parks Inc., Shell PLC தயாரிப்புகளை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக இலங்கை முதலீட்டு சபையுடன் (BOI) 110 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது

“RM Parks Inc. மற்றும் Shell இணைந்து 200 எரிபொருள் நிரப்பு நிலையங்களை செயல்படுத்தவுள்ள நிலையில் EV சார்ஜிங் வசதிகளுடன் கூடிய மினி-சூப்பர் மார்கெட்டுகளின் சேவைகளை வழங்கவுள்ளதாக இலங்கை முதலீட்டுச் சபை ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிப்பதில் நிபுணத்துவ அறிவை வழங்க வியட்நாம் இணக்கம்

முன்மொழியப்பட்டுள்ள புதிய முதலீட்டு சட்டமூலத்தை வரைவதில் வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிப்பதில் நிபுணத்துவ அறிவை வழங்க வியட்நாம் இணக்கம் தெரிவித்துள்ளது.

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் கலாநிதி புய் வான் கிம் உள்ளிட்ட தூதுக்குழுவினருக்கும் இடையிலான சந்திப்பின்போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

வியட்நாமின் சுதந்திரப் போராட்டத்தின் பின்னர் அந்த நாடு அடைந்த விரைவான பொருளாதார வளர்ச்சியை பிரதமர் இதன்போது பாராட்டினார்.

வெளிநாட்டு முதலீடுகளை வெற்றிகரமாக ஈர்ப்பதற்காக வியட்நாம் பின்பற்றிய புதிய வழிமுறைகளைப் பாராட்டிய பிரதமர், இலங்கை விரைவில் புதிய வெளிநாட்டு முதலீட்டுச் சட்டமூலத்தை வரைய திட்டமிட்டுள்ளதால், அதற்காக வியட்நாமின் நிபுணத்துவ அறிவை எதிர்பார்ப்பதாகக் கூறினார்.

பிரதமரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கலாநிதி புய் வான் கிம், இலங்கையை வியட்நாம் ஒரு சிறப்பான நட்பு நாடாகக் கருதுவதாகவும், இருதரப்பு வர்த்தகம், முதலீடு, சுற்றுலா மற்றும் கலாசார உறவுகளை மேலும் விரிவுபடுத்துவதற்கு பெரும் வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.

வியட்நாமின் அரிசி மையமாக அறியப்படும் அரிசி மற்றும் பிற விவசாயப் பொருட்களுக்கு பெயர் பெற்ற வின் லாங் மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தனக்கு மாகாண மட்டத்தில் ஒத்துழைப்பை ஏற்படுத்த முடியும் என்றும், இதனால் இலங்கையின் மாகாணங்கள் பரஸ்பர நன்மைகளைப் பெற முடியும் என்றும் அவர் கூறினார்.

வர்த்தகம், சுற்றுலா, கைத்தொழில், விவசாயம், கலாசாரம், கல்வி, முதலீடு மற்றும் சுற்றுலா வர்த்தகம் உள்ளிட்ட வணிக மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் போன்ற துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் வியட்நாம் பிரதிநிதிகள் கலந்துரையாடினர்.

தூதுக்குழுவின் தலைவரான கலாநிதி புய் வான் கிம், வியட்நாம் அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சருக்கு நிகரான அதிகாரங்களைக் கொண்ட வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி  உயர்பீடத்தின் சிரேஷ்ட உறுப்பினர் ஆவார்.

இந்த உயர்மட்ட தூதுக்குழுவில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு மற்றும் மத்திய வெளியுறவு ஆணைக்குழு அதிகாரிகள் உள்ளிட்ட சிரேஷ்ட வியட்நாமிய அரச அதிகாரிகள் இடம்பெற்றிருந்தனர்.

இலங்கையின் தீவுகளில் சுற்றுலா முதலீட்டு வாய்ப்புக்களை வழங்க அரசாங்கம் தீர்மானம்

இலங்கையிலுள்ள முக்கிய தீவுகளில் சுற்றலாத்துறை மேம்பாட்டுக்கான தேசிய மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களுக்கு வழங்குவது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் வியாழக்கிழமை (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கையில் பல அழகிய தீவுகள் மீன் பிடி நடடிக்கைகளுக்காக மாத்திரம் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சில தீவுகளில் பருவ காலங்களில் மாத்திரமே மீன்பிடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. எனவே அவ்வாறான தீவுகள் ஊடாக வருமானத்தை பெறுவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய அவற்றை விற்காமல் குத்தகைக்கு வழங்கல் போன்றவற்றுக்கு பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இவற்றில் தேசிய மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு முதலீட்டு வாய்ப்புக்களை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையைப் போன்று தீவுகள் அபிவிருத்தி அதிகாரசபையொன்றை நிறுவி இந்த வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பில் யோசனை முன்வைக்கப்பட்டது.

எவ்வாறிருப்பினும் பாரியளவு செலவின்றி அந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார். அதற்கமைய கடற்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையிடம் இந்த பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவற்றின் ஊடாக முதலீட்டு வாய்ப்புக்கள் வழங்கப்படக் கூடிய தீவுகள் தெரிவு செய்யப்படும் என்றார்.

Posted in Uncategorized

“சனல் – ஐ” குத்தகை அடிப்படையில் லைக்காவிற்கு வழங்கப்பட்டுள்ளது – பந்துல

”சனல் – ஐ” யினை லைக்கா நிறுவனத்திற்கு குறுகிய கால அடிப்படையில் குத்தகைக்கு விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கடும் நிதி நெருக்கடிக்கு மத்தியில் நஸ்டத்தில் இயங்கிவரும் “சனல்-ஐ” யினை குத்தகைக்கு விடுவதற்கான கேள்விபத்திர அறிவிப்பை வெளியிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை ரூபாவாஹினிகூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான சனல்ஐயை விளையாட்டு மற்றும் பொழுதுபோக்குநிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்வதற்கு நீண்டகால அடிப்படையில் குத்ததைகக்கு விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள அவர் இயக்குநர் சபை எடுத்ததீர்மானத்தின் அடிப்படையில் சனல்- ஐ யினை குறுகிய கால அடிப்படையில் லைக்கா நிறுவனத்திற்கு வழங்கதீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும்தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சரவையின் அனுமதியை பெறுவதற்கு அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்த போதிலும் சனல்ஐ நஸ்டத்தில் இயங்குவதை தடுப்பதற்கான நடவடிக்கை என்பதால்அமைச்சரவையின் அனுமதி தேவையில்லை என தெரிவிக்கப்பட்டதாக பந்துலகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.

விளையாட்டு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்வதற்கு லைக்கா நிறுவனத்திற்கு 25மில்லியனிற்கு அதன் ஒளிபரப்பு நேரத்தை வழங்கியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized