மூன்றாம் நூற்றாண்டுக்கான அரசியல் முன்வைப்புக்களைச் செய்யத் தயார் – திலகர்

தனது முதலாவது நூற்றாண்டிலே அடிமைகள் போன்று நடாத்தப்பட்ட மலையக சமூகம் இரண்டாவது நூற்றாண்டிலே தன்னை அமைப்பாக்கம் செய்து அரசியல், தொழிற்சங்க, இலக்கிய பண்பாட்டுத் தளத்துக்கு உயர்ந்தது. ஆனாலும் குடியுரிமைப் பறிப்புக் காரணமாக அந்த இரண்டாம் நூற்றாண்டு அரசியல் பிரவாகம் பல ஏற்ற இறக்கங்கங்களைக் கொண்டது.

அத்தகையதொரு அரசியலே இப்போது நடைமுறையிலுமுள்ளது. அதே நேரம் மலையகம் 2023 ஆம் ஆண்டில் தனது மூன்றாவது நூற்றாண்டைத் தொடங்குகிறது. அடுத்த நூற்றாண்டுக்கான அரசியல் முன்வைப்புக்களைச் செய்யும் அவசியம் உள்ளது. அதனையே இலக்காக்க் கொண்டே மலையக அரசியல் அரங்கம் ஆரம்பிக்கப்பட்டு செயற்பாட்டில் உள்ளது என மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா தெரிவித்துள்ளார் .

மலையக அரசியல் அரங்கத்தின் முதலாம் ஆண்டு நிறைவும் வி. கே. வெள்ளையன் நினைவுப் பேருரையும் ஹட்டன் நகர சபை மண்டபத்தில் எந்த ஞாயிறன்று (27/11) நடைபெற்றது. அரங்கத்தின் 13 வது நினைவுப் பேருரையை மூத்த ஊடகவியலாளர் விக்டர் ஐவன் மெய்நிகர் முறையிலும், இளைஞர்களினதும் பெண்களினதும் அரசியல் பங்கேற்பு எனும் தலைப்பில் சட்டத்தரணி சஞ்சுளா பீட்டர்ஸும், ஓராண்டுச் செயலாற்றுகை எனும் அரங்கச் செயற்பாட்டு அறிக்கையை கிருஷ்ணகுமாரும் ஆற்றியுருந்தனர் . நிகழ்வுக்கு தலைமை வகித்து கொள்கை விளக்க உரையாற்றியபோதே திலகர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

மலையக அரசியல் அரங்கம் தனது ஓராண்டு பூர்த்தியைக் கொண்டாடுகின்றது. அரசியலில் ஒரு ஆண்டு என்பது ஒரு கிழமை போன்றும் ஓடி மறையலாம் அல்லது ஒரு யுகமாற்றமும் நடந்து முடியலாம். இலங்கையப் பொறுத்த வரையில் கடந்த இரண்டரை ஆண்டுகள் என்பது ஒரு யுகமே. அத்தனை மாற்றங்கள் அரசியல் தளத்திலே இடம்பெற்ற இந்த இரண்டரை ஆண்டு காலகட்டத்தில்தான்

மலையக அரசியல் அரங்கமும் பிறந்தது.

மலையக அரசியல் அரங்கம் என்பது மலையகத்தின் புதிய யுகத்துக்கான அரசியலை முன்வைக்கும் சமூக அரசியல் தளம். இது ஒரு கட்சியல்ல. கூட்டணியும் அல்ல. நான்கு பிரதான இலக்குகளைக் கொண்டு அரங்கம் செயற்படுகின்றது. மலையகத்தில் அறிவார்ந்த அரசியல் உரையாடல் வெளியை ஏற்படுத்துவது, ஆண்களுக்கு சமனாக பெண்களுக்கும் அரசியலில் சமவாய்ப்பை வழங்குவது, மாவட்ட எல்லைகளைக் கடந்த மலையக அரசியலை முன்னெடுப்பது, அடுத்த தலைமுறையினருக்கான அரசியல் பாலமாகச் செயற்படுவது என்பனவே அந்த இலக்குகளாகும்.

மலையகத்தின் முதலாவது நூற்றாண்டு காலம் அடிமைத் தனத்துக்குள் தள்ளப்பட்டிருந்தாலும் இரண்டாவது நூற்றாண்டிலே அரசியல் அமைப்பாக்கம் பெற்ற சமூகமாக மலையகத்தை நிமிர்த்திய பெருமை மலையக தேச பிதா கோ. நடேசய்யருக்குரியது. அவரது துணைவியார் மீனாட்சியம்மை யும் அந்த பயணத்தில் இணைந்து பெண்களும் அரசியலில் ஈடுபடும் முன்மாதிரியைக் காட்டியவர் .எனவேதான் அவர்கள் இருவரையும் மலையக அரசியல் அரங்கம் முன்னோடி அரசியல் செயற்பாட்டாளர்களாக அடையாளப்படுத்துகிறது.

அறிவார்ந்த அரசியல் உரையாடலை ஏற்படுத்தும் நோக்கில் மலையகத்தின் மூன்றாவது நூற்றாண்டிலே முன்வைப்புச் செய்யவேண்டிய இருபத்து நான்கு (24) தலைப்புகளை நாங்கள் அடையாளம் கண்டு அவற்றை மாதாந்த உரையரங்க நிகழ்வாக நடாத்தி வருகிறோம். இந்த உரையரங்கத் தொடரில் இதுவரை 12 உரைகளை சமகால ஆளுமைகளைக் கொண்டு கடந்த கால ஆளுமைகளின் நினைவாக எதிர்காலத் தலைமுறையினருக்காக வழங்கி உள்ளோம். அவற்றை இணையத்தில் கேட்கலாம். ஆளுமைகளை நினைவு கூர்வதில் நாங்கள் கட்சி பேதம் பார்ப்பதில்லை.

அவர்களது செயற்பாடுகள் மீதான விமர்சனத்தை சீர்தூக்கிப் பார்த்து அவற்றிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது. 200 ஆண்டுகால மலையகத்தின் 100 ஆண்டுகால அரசியலில் 60 ஆண்டுக்காலம் தலைவராகவும் 30 ஆண்டுகாலம் அமைச்சராகவும் இருந்த ஒருவரை இலகுவாக தவிர்த்துச் செல்ல முடியாது. அந்தச் சாதனையை நினைவுபடுத்தும் அதேநேரம் அறுபது ஆண்டு காலம் ஒருவர் தலைவராக,அமைச்சராக இருந்தும் மக்களுக்கு ஆனது என்ன எனும் கேள்வியை நாம் எழுப்ப வேண்டி உள்ளது.

அந்தவகையில், எமது 12 உரைகளும் பல்வேறு அரசியல் முன்வைப்புக்களைச் செய்துள்ளது. அதே நேரம் இருநூறு ஆண்டு காலம் நாட்கூலித் தொழிலாளர்களாக வாழும் எமது உழைப்பாளர் மக்களை சிறு தோட்ட உடைமாயளர்களாக்கி சுயாதீன உழைப்பாளர்களாக்குவதன் மூலமே அடுத்த தலைமுறை மலையகத்தையாவது நாம் அடிமைத்தளைகளில் இருந்து நீக்க முடியும் என்ற வலியுறுத்தலைச் செய்யவே அந்த விடயத்தை தலைப்பாகக் கொண்டு 13 வது நினைவுப்பேருரையை தொழிற்சங்கத் துறவி வீ.கே. வெள்ளையன் நினைவாக ஆற்றுகின்றோம்.

அதனை அர்த்தமுள்ளதான ஓர் உரையாக அரசியல் ஆய்வாளர் விக்டர் ஐவன் அவர்கள் வழங்கி உள்ளார். அடுத்து வரும் 11 மாதமும் நாங்கள் மலையக மாவட்டங்கள் தோறும் மாதாந்த நினைவுப் பேருரைகளை நடாத்தத்திட்டமிட்டுள்ளோம். மலையகத்தின் இரண்டாம் நூற்றாண்டில் அரசியல் அமைப்பாக்கம் செய்த எங்கள் முன்னோடி நடேசய்யர் எதிர்கொண்ட சவால்களை நாம் கற்றறிந்துள்ளோம். அதேபோல மூன்றாவது நூற்றாண்டுக்கான அரசியல் முன்வைப்புக்களைச் செய்யும் மலையக அரசியல் அரங்கத்தின் பணியை இன்றுபோல் எல்லாவிதமான சவால்களையும் எதிர்கொண்டு முன்னெடுப்போம் என்றும் தெரிவித்தார்.

பிரதேச செயலக பிரச்சினைக்கு திலகரிடம் பிரதமர் தினேஷ் உறுதி

நுவரெலியா மாவட்டத்தில் புதிய ஐந்து பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட்டபோதும் அவை முறையற்ற வகையில் முழுமையான பிரதேச செயலகமாக அல்லாமல் உப செயலகமாக அமைகலகப்பட்டமையை மறுத்து மலையக அரசியல் அரங்கம் கடந்த ஒராண்டு காலமாக பல்வேறு போராட்டங்களையும் பேச்சுவார்த்தைகளையும் நடாத்தி வந்துள்ளது.

அதன் பயனாக அண்மையில் பாராளுமன்ற கலந்தாய்வு கூட்டத்திலும் இந்த விடயம் விவாதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்து இது குறித்து பேசி இருந்தத்துடன் கலந்தாய்வு கூட்டத்தின் பின்னர் நேற்று (09) மேலதிக விளக்கங்களுக்காக பாராளுமன்றத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் சந்தித்து உரையாடப்பட்டது.

பிரதேச செயலக பிரச்சினைக்கு பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சராக உரிய தீர்வினைப் பெற்றுத்தருவதாக

பிரதமர் தினேஷ் குணவர்தன உறுதி அளித்ததாக மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்துள்ளார்.

நேற்று (9/11) புதன்கிழமை பாராளுமன்றத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பை அடுத்து ஊடகங்களுக்கு வழங்கி இருக்கும் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்து உள்ளார். அவ்வறிக்கையில் மேலும் தெரவிக்கப்பட்டுள்ளதாவது.

நுவரெலியா மாவட்டத்தில் புதிய ஐந்து பிரதேச செயலகங்கள் அமைப்பின் அநீதி குறித்து மலையக அரசியல் அரங்கம் கடந்த ஒராண்டு காலமாக பல்வேறு போராட்டங்களையும் பேச்சுவார்த்தைகளையும் நடாத்தி வந்துள்ளது.

முன்னைய அமைச்சரினால் முழுமையான பிரதேச செயலகங்களுக்கான வர்த்தமானி பிரகடனம் வெளியிட்டுள்ள போதும் காலி மாவட்டத்தில் அவை முழுமையாகவும் நுவரெலியா மாவட்டத்தில் அவை உப செயலகாமாகவும் திறக்கப்பட்டுள்ளமை பற்றி தெளிவாகப் புரிந்து கொண்டார்.

பிரதேச சபைச் சட்டத்திருத்த விடயத்திலும் எதிர்கட்சி உறுப்பினராக இருந்த காலத்திலும் கூட தமது பூரண ஒத்துழைப்பு வழங்கியதை அவருக்கு நன்றியுடன் நினைவு கூர்ந்து இந்த விடயத்திலும் நுவரெலியா மாவட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்குமாறு வேண்டினோம். விடயங்களை நன்கு உள்வாங்கிக்கொண்ட பிரதமர், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சராக தமது பதவிக்காலத்தில் இந்தப்பிரச்சினைக்கு உரிய தீர்வினை விரைவாகப் பெற்றுக் கொடுப்பதாக உறுதி அளித்தார் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

வரவு – செலவுத் திட்டம் மக்களுக்கு நன்மை பயக்ககூடியதெனில் அதற்கு வாக்களிப்போம் – ஜீவன்

2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்ட பின்னர் அதன் உள்ளடக்கங்கள் தொடர்பில் ஆராயப்பட்டு மக்களுக்கு நன்மை பயக்ககூடியதெனில் அதற்கு ஆதரவாக வாக்களிப்போம் என இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆறுமுகம் தொண்டமான் கலாச்சார மண்டபத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

2023 ஆம் ஆண்டின் வரவு – செலவுத் திட்டத்தை யார் முன்வைக்கின்றார் என்பது முக்கியம் அல்ல அதில் உள்ள விடயங்கள்தான் பிரதானம். அந்தவகையில் வரவு – செலவுத் திட்டதில் உள்ளடக்கங்கள் தொடர்பில் முதலில் ஆராயப்பட்டு மக்களுக்கு நன்மை பயக்ககூடிய விடயம் இருந்தால் நிச்சயம் ஆதரிப்பதோடு ஏனைய கட்சிகளும் ஆதரிக்க வேண்டும் என கோரிக்கை விடுப்போம். எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் தொழிலாளர்கள் மத்தியில் ஒற்றுமை இல்லாததால்தான் தோட்ட நிர்வாகத்துக்கு துணிவு பிறக்கின்றது எனவே தொழிலாளர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பெருந்தோட்ட வீடுகளுக்கு உறுதிப்பத்திரம் வழங்குமாறு நுவரெலியாவில் ஆர்ப்பாட்டம்

பெருந்தோட்ட வீடுகளுக்கு சட்ட ரீதியான உறுதிப்பத்திரத்தை வழங்கக் கோரி நுவரெலியாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை (நவ 6) காலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 1987ஆம் ஆண்டு முதல் கட்டப்பட்ட 37,000 பெருந்தோட்ட வீடுகளுக்கு சட்ட ரீதியான உறுதிப்பத்திரத்தை வழங்குமாறு வலியுறுத்தி, கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனத்தினரும், சில சிவில் அமைப்புகளும் இணைந்து நுவரெலியா பிரதான அஞ்சல் அலுவலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

இதன்போது ‘எமக்கு வேண்டும் தனி வீடுகள்’, ‘37000 வீடுகளுக்கு உறுதிப்பத்திரம் வழங்கு’, ‘தோட்டத் தொழிலாளர் இந்த நாட்டின் பிரஜைகள்; அவர்கள் சமமாக மதிக்கப்பட வேண்டும்’, ‘எமது நில உரிமையை உடனடியாக பெற்றுத் தாருங்கள்’, ‘பழமையான வீட்டு வாழ்க்கை போதும்’ போன்ற பதாதைகளை ஏந்திய வண்ணம் போராட்டக்காரர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், 1987ஆம் ஆண்டின் பின்னர் பெருந்தோட்டங்களில் கட்டப்பட்ட வீடுகளுக்கு வீட்டுரிமைப் பத்திரங்களை வழங்குமாறு கோரி, ஜனாதிபதிக்கு கையளிப்பதற்கான மகஜரொன்றில் கையொப்பங்களை திரட்டுவதற்கான நடவடிக்கைகளும், நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பிடம், அஞ்சல் அலுவலகத்துக்கும் முன்பாக மேற்கொள்ளப்பட்டது.

Posted in Uncategorized