பொலிசார் சீருடை இல்லாது சிவில் சமூகத்துடன் தொடர்பாடக்கூடாது! மனோ எம்.பி. அறிவுறுத்தல்

வெள்ளவத்தை பொலிஸ் வலயத்தின் பசல்ஸ் ஒழுங்கை பகுதியில், இரகசிய சுற்றுவளைப்பு தேவைக்காக சீருடை அணியாமல் சென்ற பொலிஸ் அதிகாரிகளுக்கும், அப்பகுதியில் வீதியில் சாதாரண கடமையில் ஈடுபட்டிருந்த மகேஷ்வர குருக்களுக்கும் இடையில் இடம்பெற்ற பிரச்சினை, பொலிசார் தமது செய்கை தொடர்பில், வண.குருக்களிடம் வருத்தம் தெரிவித்துக்கொண்டதுடன் சுமூக முடிவுக்கு வந்துள்ளதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

வெள்ளவத்தையில் இந்து குருக்கள் – பொலிசார் மத்தியில் ஏற்பட்ட பிணக்கு தொடர்பில் மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,

வாகன போக்குவரத்து தொடர்பில் ஏற்பட்ட சிறு பிணக்கை இனவாத சொற்பிரயோகம், வாக்குவாதம், உடல்ரீதியான பலவந்தம் வரை பொலிசார் கொண்டு சென்றுள்ளனர்.

குருக்களின் புதல்வர் பலவந்தமாக சீருடை அணியாத பிரிவினரால் இழுத்து செல்லப்பட்டுள்ளார்.

இரு தரப்பும் சமாதான உடன்பாட்டுக்கு வந்து பிரச்சினை, திங்கட்கிழமை (22) மாலையே முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

மத குருமார்களுக்கு உரிய பெருந்தன்மையுடன் பொலிசாரை தான் மன்னித்து விட்டதாக, குருக்கள் என்னிடம் தெரிவித்தார்.

குருக்கள் அவ்விதம், கூறி இருந்தாலும், வெள்ளவத்தை பொலிஸ் நிலைய மட்ட நடவடிக்கைகளை எடுக்கும்படியும், இனி பொலிஸ் சீருடை இல்லாமல் பொலிஸ் அதிகாரிகள், சிவில் சமூகத்துடன் தொடர்பாடலில் ஈடுபடக்கூடாது எனவும், வெள்ளவத்தை பொலிஸ் பொறுப்பதிகாரி சுபாஷ் காந்தவெலவிடம் நான் கண்டிப்பாக கூறியுள்ளேன்.

அதன்படி தனது நிலைய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்குவதாக பொறுப்பதிகாரி காந்தவெல எனக்கு உறுதியளித்துள்ளார் எனத் தெரிவித்தார்.

”யாழில் மலையகத்தை உணர்வோம்” ஆவணக் கண்காட்சி ஆரம்பம்

யாழ்ப்பாணம் சிவில் சமூகமாக அமைப்புக்கள், கண்டி சமூகமாக அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் 1823 ஆம் ஆண்டு தொடக்கம் 2023 வரையான காலப்பகுதி வரை மலையகத்தின் 200 ஆண்டுகளை முன்னிட்டு யாழில் மலையகத்தை உணர்வோம், மலையகம் 200 என்னும் கருப்பொருளில், மலையகமக்களின் வாழ்வியலை ஆவணமாக்கும் கண்காட்சிகள் இன்று யாழ். தந்தை செல்வா கலையரங்கில் நடைபெற்றது.

இதில் இந்திய வாம்சாவளியில் இருந்து இலங்கையின் மலையகத்தில் மீள்குடியேறிய தமது ஜீபனோயத்திற்காக உழைக்கும் மலையக மக்களின் வாழ்வியல் தொடர்பான கண்காட்சிகள் காட்டூன் சித்திரங்களாவும், புள்ளிவிபரத் தரவுகளாகவும், விளக்க புகைப்படச் சித்திரங்களாவும், ஆரம்ப கால முத்திரை வெளியீடுகளாகவும், ஆரம்ப கால தொட்டு இன்று வரையான காலத்தில் அரசியல்வாதிகளின் புகைப்படங்களும், ஒடுக்குமுறையை மக்களின் இயல்புகள் பற்றி இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

யாழில் மலையகத்தை உணர்வோம் மலையகம் 200 என்னும் கருப்பொருளிலான மலையக மக்கள் வாழ்வியலில் ஆவணமாக்கப்படும் கண்காட்சிகள் திறந்துவைக்கும் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக வடமாகாண கல்விப்பணிப்பாளர் ஜோன்குயின்ரஸ் கலந்து கொண்டார்.

மலையக மக்களுக்கு 10,000 வீடுகள் – பா.ஜ.க தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை உறுதி

மலையக மக்களுக்கு 10000 வீடுகள் அமைத்து கொடுக்க வேண்டும் என்ற எனது எண்ணம் நிறைவேறும் என இந்திய பாரதீய ஜனதாக்கட்சியின் உறுப்பினர் K.அண்ணாமலை  உறுதியளித்துள்ளார்.

நேற்றைய தினம் கொழும்பில் அமைந்துள்ள சுகததாச உள்ளரங்கில்  நடைபெற்ற  “நாம் -200” நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் உரையாற்றுகையில்,

இந்தியாவிலிருந்து இந்திய பிரதமரின் சார்பாக இங்கே வந்த நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதா ராமன் அவர்கள் முக்கியமான விடயங்களை இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கவுடன் சேர்ந்து அறிவித்திருக்கிறார். குறிப்பாக மலையக தமிழர்களினுடைய நெடுநாள் கோரிக்கை நான்காயிரம் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டிருந்தாலும்  கூட இன்னும் நிறைய வீடுகள் வேண்டும் என்பது உங்களுடைய கோரிக்கை.

இந்திய அரசு 2020 இல் இந்த் அறிவிப்பை வெளியிட்டும் அது மூன்றாண்டு காலமாக கொரோனா காரணமாக அது நடைபெறாமல் அந்த திறப்பு விழா இன்று நடைபெற்றிருக்கிறது. குறிப்பாக 10000 வீடுகள், அதற்கான அந்த வீடுகளுக்கான foundation ஸ்டோனை  நடைபெறக்கூடிய விழாவில் நாங்கள் பார்த்தோம்.

கடந்த ஆண்டு மே மாதம் இங்கிருந்து நுவரேலியாவுக்கு வந்த பொழுது வந்து உங்களுடைய இல்லங்களை பார்க்கும் பொழுது நிச்சயமாக எனக்கும் தோன்றியது ஒரு தமிழனாக இந்த மக்களுக்கு அற்புதமான வீடுகள் தேவை என்று. இன்றைக்கு அது நடந்திருக்கிறது மிக வேகமாக அந்த 10000 வீடுகளும் கட்டி முடித்து உங்களினுடைய கைகளுக்கு வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.  அதைத்தாண்டி மிக முக்கியமான முடிவுகளையும் இலங்கையினுடைய அதிபர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.

உங்களுடைய நீண்டநாள் கோரிக்கையாக இருக்க கூடிய  நிலத்தினுடைய உரிமை அந்த முடிவையும் கூட அறிவித்திருக்கின்றார். நிச்சயமாக மலையக தொழிலாளர் அனைவரினுடைய கையிலே அவர்களுக்கு சொந்தமாக ஒரு பட்டா  நிலம் இருக்கும் என்பதும் கூட ஊர்யிதமாக இருக்கிறது. அதுவும் ஆண்டவன் அருளால் நிச்சயமாக முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

மலையக மக்களுடன் இந்திய அரசாங்கம் எந்நேரமும் இருக்கும்- இந்திய நிதி அமைச்சர்

மலையக மக்களின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்ற இந்திய அரசாங்கம் தயாராகவுள்ளதென நாம் 200 நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியானதை முன்னிட்டு “நாம்-200” நிகழ்ச்சி  கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் நடைபெற்றது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார்.

இதன்போது உரையாற்றுகையிலேயே இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் இங்கு உரையாற்றிய அவர்,

மலையக மக்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் நோக்கில் ஆசிரியர் பயிற்சி வழங்கல் செயற்திட்டம் ஆரம்பிக்கப்படும்.

இந்திய நிதியுதவியின் கீழ் 4ஆம் கட்டமாக 10,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது.

இலங்கை – இந்தியாவுக்கு இடையிலான இணைப்புப் பாலமாக மலையகத் தமிழர்கள் திகழ்வர்கள் என இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மேலும் கூறினார்.

மிகவும் கஷ்டமான சூழலில் பெரிய பங்களிப்பை மலையக மக்கள் வழங்கியிருக்கிறீர்கள். நாடு நலமாக இருக்க பெரும் தொண்டாற்றியிருக்கிறீர்கள்.

தேயிலை என்றாலே இலங்கை என்ற நிலைக்குக் கொண்டு வந்துள்ளார்கள்  தமிழ் மக்களின் வளர்ச்சியும் நல்வளர்ச்சியாக அமைய வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்.

மலையக மக்களின் கஷ்டத்தையம் கடின உழைப்பையும் புரிந்து கொண்ட  பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம் 10000 வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் திட்டத்தை இன்று ஆரம்பிக்கிறது.

உங்களுக்குக் கல்வி,சுகாதார,மருத்ததுவ உதவி முக்கியம் என்பதால் இலங்கை அரசுடன் இணைந்து சகல உதவிகளையும் வழங்க  இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் தெரிவித்தார்.

நாம் 200 நிகழ்வில், மகா சங்கத்தினர் உள்ளிட்ட சர்வமத தலைவர்கள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேமஜயந்த, அலி சப்ரி, மஹிந்த அமரவீர, பந்துல குணவர்தன, மனுஷ நாணயக்கார, லசந்த அழகியவன்ன ஆகியோருடன் பாராளுமன்ற உறுப்பினர்களான வடிவேல் சுரேஷ், துமிந்த திசாநாயக்க, நிமல் லன்சா, எம்.ஏ.சுமந்திரன், சாணக்கியன் ராசமாணிக்கம், மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ கமகே, மேல் மாகாண ஆளுனர் மார்ஷல் ஒப் த எயார் ரொஷான் குணதிலக்க, கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான், தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, வெளிநாட்டு இராஜதந்திரிகள், அரசாங்க அதிகாரிகள், உள்நாட்டு வெளிநாட்டு பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

எங்கள் எல்லை கிராமங்களை காப்பவர்கள் மலையக மக்களே! – ரெலோ தலைவர் செல்வம் எம். பி

மலையகத்திலிருந்து வாழவேண்டும் என வந்த உறவுகள் எல்லைக் கிராமங்களை பாதுகாக்கும் உணர்வோடு செயற்படுகின்றார்கள், இடங்கள் தான் வேறு உணர்வுகளும் மொழியும் ஒன்று என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

மலையகம் என்பதை நாம் பிரித்து பார்க்க முடியாது காரணம் என்னவென்றால் எங்களுடைய இனத்தின் போராட்டத்திலே பல இயக்கங்கள் உருவாகினாலும் அந்த விடுதலை வேட்கையோடு எங்களுடைய மலையக இளைஞர்கள் அதிலே இணைந்து கொண்டார்கள்.

தங்களுடைய இருப்பிடம் வேறாக இருந்தாலும் உணர்வென்ற அடிப்படையிலே எமது இனம் விடுதலை பெறவேண்டும் என்ற நோக்கத்தோடு அந்த இளைஞர்கள் ஆயுத போராட்டத்திலே இணைந்து கொண்டதை நாம் இங்கே நினைவுகூர வேண்டும்.

அது மட்டுமல்ல வன்னியிலே சிங்கள எல்லை கிராமங்களை தமிழர்கள் தக்கவைத்துக் கொண்டு இருக்கின்றார்கள், என்றால் இந்த மலையக தேசத்திலிருந்து இடம்பெயர்ந்து எங்களுடைய வன்னி மாவட்டத்திலே வடக்கிலே குடியிருக்கும் மலையக உறவுகளின் தியாகம் தான் அந்தந்த குடியேற்றங்களை பாதுகாத்திருக்கின்றது என்பதை குறிப்பிட்டாக வேண்டும்.

விடுதலை வேட்கை என்பது எப்படி உருவானது என பாருங்கள், இளைஞர்கள் ஆயுத போராட்டத்திற்கு சென்றார்கள். ஆனால் மலையகத்திலிருந்து வாழ வேண்டும் என வந்த உறவுகள் எல்லைக்கிராமங்களை பாதுகாக்கும் உணர்வோடு செயற்படுகின்றார்கள். இடங்கள் தான் வேறு உணர்வுகளும் மொழியும் ஒன்று என்பதை பல சந்தர்ப்பத்திலே உணர்த்தியிருக்கின்றார்கள்.

மலையகம் என்பது மலை சார்ந்த இடம் அந்த மக்கள் ஒரு தேசிய இனம் அந்த தேசிய இனத்திற்கு இழைக்கப்படுகின்ற அநீதிகளை தட்டிக்கேட்கின்ற பொறுப்பும் கடமையும் எங்களுக்கு இருக்கின்றது.

ஏனென்றால் அவர்களுடைய செயற்பாடு, அனைத்து விடயங்கள் அனைத்தும் எம்மோடு ஒன்றிணைத்து போகின்ற சூழல் மலையகத்தில் குளிர் பிரதேசத்தில் வாழ்ந்தாலும் எமது இனம் ஒன்று என காட்டுகின்ற அந்த நிலையிலையே அந்த மக்களுக்கு விடுதலையினை பெற்றுக்கொடுக்கின்ற கடமையும் பொறுப்பும் எங்களிடம் இருக்கின்றது.

இம்மலையக மக்கள் எங்கள் நாட்டிலே வாழ அவர்களுக்கு எல்லா உரித்தும் இருக்கின்றது. அவர்களிடம் இன்று நிலம் இல்லை ஆனால் வேறு யாரிடையோ நிலத்தை காப்பாற்ற போராடுகின்றார்கள். அவர்களுக்கு நல்ல சம்பளம் இல்லை அதனை பெற்றுக்கொடுக்க அரசியற் தலைமைகள் முனைந்தாலும் கூட இந்த அரசாங்கம் இடம்கொடுப்பதில்லை.

கொழுந்துகளை எடுத்து இந்த நாட்டின் வருமானத்தினை உயர்த்துகின்ற பொறுப்பு இம்மக்களுக்கு இல்லை என்பதை நாம் நிரூபித்து காட்டவேண்டும்.

மலையக புத்தக ஆசிரியர் கூறினார், எங்கள் மலையக மக்களின் பிரச்சினைகள் தேசிய பிரச்சினையாக இருப்பதனால் அது தீர்க்கப்பட வேண்டும். அவர்களின் அடிப்படை பிரச்சினைகள், உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், வரலாற்று புத்தகத்தில் வரலாறாக வரவேண்டும் என்பதை அழகாக சொன்னார் அதனை நான் வரவேற்கின்றேன்.

எங்கள் மலையக மக்களின் தியாகம் அவர்களின் வாழ்க்கை எதிர்காலம் எல்லாம் கேள்விக்குறியான நிலை இருந்தாலும் கூட இன்றைக்கும் அந்த மண்ணினுடைய விடுதலை என்பது நாங்கள் எல்லோரும் இணைந்து அவர்களுக்காக குரல் கொடுப்பதும், அவர்களுக்காக உழைப்பதும், அவர்களுக்கான பிரச்சினையினை தீர்ப்பதற்கும் அனைத்து வழிகளிலும் நாம் ஒன்றிணைந்து செயற்படுவது தான் இந்த வரலாற்றை பார்க்கும் செய்யும் கடமையாக இருக்கும் என்பது வடக்கு கிழக்கில் வாழுகின்ற அத்தனை தமிழ்பேசும் மக்களுக்கு கடமை உரித்து இருக்கின்றது.

மலையகத்தில் வாழும் எம் உறவுகளை தூக்கிவிடுவதும் அவர்களுடைய பிரச்சினையை தீர்ப்பதற்கு ஒன்றாக இணைந்து வெல்ல வைப்பதும் எமது கடமை என தெரிவித்தார்.

தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் – ஜீவன் தொண்டமான் இடையே சந்திப்பு

மலையக தமிழர்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் கடந்துள்ள நிலையில் அவர்களை கௌரவிக்கும் முகமாக மலையகம் – 200 விழா, மீனவர் பிரச்சினை, மலையக கல்வி அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ஜீவன் தொண்டமான் பேச்சு நடத்தியுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இல்லத்தில் மரியாதை நிமித்தம் இன்று (29) காலை நடைபெற்ற இச்சந்திப்பில், இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக தமிழ் மக்களின் மேம்பாட்டுக்காக தமிழக அரசின் பங்களிப்பும் அவசியம் என்ற கோரிக்கையை அமைச்சர் ஜீவன் தொண்டமான் முன்வைத்தார்.

இச்சந்தர்ப்பத்தில், கடந்த வருடம் இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியின் போது தமிழக  அரசாங்கம் இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் பாரிய அரிசி தொகையினை நன்கொடையாக வழங்கியிருந்தது. இதற்கு இலங்கை மக்கள் சார்பாக தனது நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார்.

இந்த சந்திப்பின் போது, சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தின் துணைத் தூதுவர் வெங்கடேஸ்வரன் மற்றும் அரச உயர் அதிகாரிகளும் கலந்துக் கொண்டனர்.

மலையக மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் கலந்துரையாடல்

மலையக பெருந்தோட்ட மக்களின் எதிர்கால பாதையை மாற்றுவதற்கான தருணமே இது. மலையக மேம்பாட்டுக்காக அமெரிக்கா தொடர்ந்து உதவிகளை வழங்கும் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் அழைப்பின் பேரில் நுவரெலியா மாவட்டத்துக்கு களப்பயணம் மேற்கொண்ட அமெரிக்க தூதுவர், பல தரப்பு சந்திப்புகளில் ஈடுபட்டதுடன், மக்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்களையும் சந்தித்து பேச்சு நடத்தினார்.

இவ்விஜயத்தின் ஓரங்கமாக அட்டனில் உள்ள தொண்டமான் தொழில் பயிற்சி நிலையத்துக்கு சென்ற அமெரிக்க தூதுவருக்கு, உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

அதன்பின்னர் அதிகாரிகள் மற்றும் அங்கு பயிற்சிபெறும் மாணவர்களுடன் தூதுவர் கலந்துரையாடினார். இதன்போது, இருதரப்பு உறவுகளுக்கான நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி காந்தி சௌந்தர்ராஜன், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி, அமைச்சர் ஜீவன் தொண்டமானின் இணைப்புச்செயலாளர் அர்ஜுன் ஜெயராஜ் ஆகியோருடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்ட அமெரிக்க தூதுவர் ஆங்கிலம் மற்றும் தொழில்நுட்ப கல்விக்கு உதவிகள் வழங்கப்படும் என உறுதியளித்தார்.

அத்துடன், கல்வி, சுகாதாரம் என மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் பல வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கும் இணக்கம் தெரிவித்தார்.

மேலும், ” நுவரெலியா மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் மலையக பெருந்தோட்ட மக்கள் கடந்த காலங்களில் பல சவால்களை எதிர்கொண்டனர். பல தடைகள் இருந்தன. இதனை நான் அறிவேன். எனவே, மலையக பெருந்தோட்ட மக்களின் எதிர்காலத்துக்கான பாதையை மாற்றுவதற்கான சிறந்த தருணமே இது.

இலங்கை தற்போது மீண்டெழுகின்றது. வர்த்தகம் மற்றும் முதலீடுகளை கொண்டு வருவதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம். உங்களுக்கு உதவுவதற்கான பங்காளியாக நாம் இருப்போம்.” – என்றார்.

தேசிய அரசாங்கம் அமைப்பதற்கான பிரேரணை முன்வைக்க உள்ளதான செய்தி பொய்யான செய்தி – மனோ கணேசன்

ஏப்ரல் 25ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான பிரேரணையை நான் கூட்டாக முன்வைக்க உள்ளதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை எனத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (19.04.2023) மனோ கணேசன் அலுவலம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இது திரித்துக் கூறப்படும் பொய்யான செய்தி. இச்செய்தி, ஆளுந்தரப்பில் இருந்து எதிரணிக்கு வந்ததாகும். அத்துடன், இச்செய்தி ஒரு முன்னாள் அமைச்சர் ஒருவருக்குச் சொந்தமான இணைய தளத்திலேயே முதலில் வந்தது.

மற்றும், ஐக்கிய மக்கள் கூட்டணி சக்தியின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சியாகவே தற்போது தமிழ் முற்போக்குக் கூட்டணி இருக்கின்றது.

தேசிய அல்லது எந்தவொரு அரசாங்கத்திலும் அங்கம் வகிப்பது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழு கூடிப்பேசவும் இல்லை. எந்தவித முடிவும் எடுக்கவும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பெருந்தோட்ட மக்களுக்கும் அரசின் நிவாரணங்கள் கட்டாயம் வழங்கப்பட வேண்டும்

சர்வதேச நிதி உதவிகள் மூலம் கிடைக்கும் வறுமை நிவாரணங்கள் பெருந்தோட்டப் பிரிவினருக்கு கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள், மாகாண சபைத் தேர்தல்கள் இரண்டும் கட்டாயம் நடத்தப்பட இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசுக்கு கிடைக்கப்பெறும் சர்வதேச நிதி உதவிகள் மூலமான வறுமை நிவாரணங்கள் பெருந்தோட்டப் பிரிவினருக்கு கட்டாயம் வழங்கப்படும் எனும் உறுதிப்பாட்டினை சர்வதேச சமூகம் வழங்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தற்போது நலிவடைந்த பிரிவினரை அடையாளம் காணும் வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிலையில், அதில் அரசியல் கலந்துள்ளதனால், தமக்கு அதில் நம்பிக்கையில்லாத பட்சத்திலேயே இதனைக் கூறுவதாகவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மலையக மக்களுக்கும் இந்திய மத்திய அரசுக்கும் இடையில் நான் உறவுப்பாலமாக செயற்படுவேன் – பா.ஜ.க தமிழக தலைவர் அண்ணாமலை

மலையகத்தில் இந்திய அரசின் நிதி உதவியின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள 10 ஆயிரம் தனி வீடுகள் திட்டத்தை விரைவுபடுத்தல் மற்றும் மலையகத்துக்கு சகல வழிகளிலும் உதவிகளை பெற்றுக்கொடுப்பதற்கு மலையக மக்களுக்கும் இந்திய மத்திய அரசுக்கும் இடையில் ஒரு உறவுபாலமாக செயற்படுவேன் என பாரதீய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் கு. அண்ணாமலை கூறினார் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள பா.ஜ.கவின் தமிழக தலைவர் கு.அண்ணாமலைக்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்ட குழுவினருக்கும் இடையில் இ.தொ.கா. தலைமையகமான சௌமிய பவானில் நேற்று (11) சந்திப்பொன்று இடம்பெற்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான், தலைவர் செந்தில் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி ராமேஷ்வரன் எம்.பி., பிரதித் தலைவர்களான கணபதி கனகராஜ், அனுஷியா சிவராஜா, தேசிய அமைப்பாளர் ஏ.பி.சக்திவேல், உப தலைவர்கள், இ.தொ.காவின் பிரதேச சபை தவிசாளர்கள் உட்பட கட்சி பிரமுகர்கள் இச்சந்திப்பில் பங்கேற்றனர்.

அத்துடன், இலங்கை இந்திய சமுதாய பேரவையின் உறுப்பினர்களுக்கும், அண்ணாமலைக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்றும் அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டில் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சில் நடைபெற்றது.

இச்சந்திப்புகளின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே ராமேஷ்வரன் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே சிறந்த உறவு காணப்படுகின்றது. அதேபோல இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கும் இந்திய அரசியல் தலைவர்களுக்கும் இடையிலும் சிறந்த தொடர்பு இருக்கிறது.

அந்த வகையில் இலங்கைக்கு வந்திருந்த பா.ஜ.கவின் தமிழக தலைவர் அண்ணாமலையை சந்தித்து பேசினோம்.

இலங்கை கடும் நெருக்கடியை எதிர்கொண்டிருந்த நிலையில், முதல் நாடாக உதவிய இந்தியாவுக்கு காங்கிரஸ் சார்பிலும், மலையக மக்கள் சார்பிலும் நன்றி தெரிவித்தோம்.

அத்துடன், இந்திய அரசின் உதவியின் கீழ் மலையகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிற மற்றும் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் பற்றியும் கலந்துரையாடினோம்.

இதன்போது மலையக மக்களுக்கும், இந்திய அரசுக்கும் இடையில் தான் உறவுப்பாலமாக செயற்படப்போவதாக அண்ணாமலை தெரிவித்தார் என கூறினார்.