தேர்தலை நடத்துவதற்குத் தயாரா? என பவ்ரல் ஜனாதிபதியிடம் கேள்வி

உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதற்குப் பிரதான தடையாக அரசாங்கம் கூறுகின்ற நிதி நெருக்கடிக்குத் தீர்வு வழங்குவதற்கு ஏதேனும் ஒரு தரப்பினர் தயாராக இருந்தால், தேர்தலை நடத்துவதற்குத் தயாரா என அரசாங்கத்திடம் பெப்ரல் அமைப்பு கேள்வியெழுப்பியுள்ளது.

சட்டரீதியான காரணங்களை முன்வைக்காமல், உள்ளூராட்சித் தேர்தலைக் காலவரையறையின்றி ஒத்திவைக்க அரசாங்கம் முயற்சிப்பது தெளிவாகத் தெரிகிறது என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி, பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தத் தருணத்தில் உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க முற்போக்கான தேர்தல் சீர்திருத்தங்களை ஒரு கருவியாகப் பயன்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தற்போதைய எல்லை நிர்ணய நடவடிக்கையின் மூலம் தொகுதிகள் மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைத்த பின்னர் புதிய தேர்தல் முறை எப்படி இருக்கும் என்றும் ரோகண ஹெட்டியாராச்சி பிரதமரிடம் வினவியுள்ளார்.

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 50 வீதமாகக் குறைக்கும்போது இளைஞர், பெண் ஒதுக்கீட்டுக்குத் தலா 25 வீதம் ஒதுக்கப்படுமா என்றும் ரோஹன ஹெட்டியாராச்சி, பிரதமரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆணைக்குழு தேர்தல் திகதியை உறுதிப்படுத்தாவிடின் நீதிமன்றத்தை நாடுவோம் – பவ்ரல்

ஜனவரி முதல் வாரத்துக்குள் உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெறும் திகதி தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு தெளிவானதொரு அறிவிப்பை விடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெறும் திகதி தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் இருப்பது தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தவேண்டிய தேவை சட்ட ரீதியில் வெளிப்பட்டு இருக்கின்றது. என்றாலும் இந்த தேர்தலை பிற்போடுவதற்காக பல்வேறு திட்டங்கள், நடவடிக்கைகள் தற்போதுவரைக்கும் கையாளப்பட்டு வருகின்றன. எந்த நிலைமையிலும் சரி தேர்தலை நடத்தியாகவேண்டி இருக்கின்றது. இது நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு நேரடி தீர்வாக இல்லாவிட்டாலும் ஜனநாயக வரைப்புக்குள் உரிய காலத்துக்கு சட்ட ரீதியில் தேர்தலை நடத்தவேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு இருக்கின்றது.

அத்துடன் சட்டத்தின் பிரகாரம் 2023 மார்ச் 19ஆம் திகதி ஆகும்போது உள்ளூராட்சி மன்றங்களுக்கு மக்கள் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்டு, நியமிக்கப்படவேண்டும். அதனால் அடுத்த வருடம் ஜனவரி முதல் வாரத்துக்குள் உள்ளூராட்சிமன்ற தேர்தல் இடம்பெறும் திகதி தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு தெளிவானதொரு அறிவிப்பை விடுக்காவிட்டால் அறிவிக்கப்படாவிட்டால் நீதிமன்றம் செல்லவேண்டிய நிலை ஏற்படும் என்றார்.

இதேவேளை, தெரிவத்தாட்சி அதிகாரி மற்றும் உதவி தெரிவத்தாட்சி அதிகாரிகளை நியமிப்பது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டிருக்கின்றது. அத்துடன் உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பாக கலந்துரையாட அனைத்து மாவட்ட செயலாளர்களையும் நேற்று கொழும்புக்கு அழைத்திருப்பதாக தெரியவருகின்றது.

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு அறிவிப்பு செய்ய வேண்டும் – பவ்ரல்

அரசியலமைப்பின் 21ஆம் திருத்தம் பாராளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றதபோதும் புதிய ஆணைக்குழு நியமிக்கப்படும்வரை, உள்ளூராட்சி மன்ற தேர்தலை அறிவிப்பு செய்வதற்கு தேர்தல் ஆணைக்குழுவுக்கு எந்த தடையும் இல்லை அதனால் உள்ளூராட்சி மன்ற தேர்தலை விரைவாக அறிவிப்பு செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி ரோஹண ஹெட்டடி ஆரச்சி தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்களிப்புக்கு அறிவிப்பு செய்யுமாறு தெரிவித்து தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களின் உத்தியோகபூர்வ காலம் 2022 மார்ச் மாதத்துடன் முடிவடைந்ததுடன் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருக்கு இருக்கும் அதிகாரத்துக்கு அமைய, அதன் ஆட்சிக்காலம் நீடிக்கப்பட்ட ஒரு வருடகாலம் 2023 மார்ச் 19ஆம் திகதியுடன் நிறைவடைய இருக்கின்றது என்பது அறிந்த விடயம்.

அதேபோன்று உள்ளூராட்சி மன்ற தேர்தலை பிற்போடுவதற்கு காரணம் தெரிவிக்கும் வகையில் பல்வேறு திருத்த யோசனைகளை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுவது இரகசியமான விடயமல்ல. அந்த யோசனைகளில் சில யோசனைகள் நியாயமானதாக இருந்தாலும் அதற்றை செயற்படுத்துவதற்கு எடுக்கப்படும் காலத்துக்கமைய மற்றும் இவ்வாறான திருத்தங்களால் கடந்த காலங்களின் அனுபவங்களைக்கொண்டு பார்க்கும்போது, இந்த நடவடிக்கையின் இறுதி பெறுபேறாக இருப்பது நாள் குறிப்பிடாமல் தேர்தல்லை ஒத்திவைப்பதாகவே அமைந்துள்ளது.

அதனால் இந்த நிலைமையை தவிப்பதற்காக, உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பில் தற்போது அதிகாரம் இருக்கும் ஒரே நிறுவனமான உங்கள் ஆணைக்குழு, விரைவாக உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்களிப்புக்கு அறிவிப்பு செய்தால் அதனை பிற்போடுவதற்கு எந்த நிறுவனத்துக்கும் சந்தர்ப்பம் கிடைக்கப்போவதில்லை. இதற்கு முன்னர் தேர்தல் ஆணைக்குழுவுக்கு தேர்தலை அறிவிப்பு செய்வதற்கு தடையாக இருந்த 2022 தேர்தல் வாக்காளர் இடாப்பு, 2022 ஒக்டோபர் 31ஆம் திகதியாகும் போது உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் என நம்புகின்றோம்.

அதனால் விரைவாக தேர்தலை அறிவிப்பு செய்து, மக்களின் வாக்குரிமையை பாதுகாத்துத் தருமாறு உங்களையும் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களிடமும் கேட்டுக்கொள்கின்றோம். அவ்வாறு இல்லாவிட்டால், ஏதோ ஒரு முறையில் தேர்தலை ஒத்திவைக்க முயற்சிக்கும் நோக்கில் திருத்தம் ஒன்றை கொண்டு வருவதன் ஊடாக, மீண்டும் தேர்தலை பிற்போடவேண்டிய நிலை ஏற்பட்டால், தேர்தல் ஆணைக்குழு மீதும் குற்றம் சுமத்தப்படுவதை தவிர்க்க முடியாமல் போகும்.

அத்துடன் அரசியலமைப்பின் 21ஆம் திருத்தம் பாராளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றபோதும் ஆணைக்குழுவுக்கு, புதிய ஆணைக்குழு நியமிக்கப்படும்வரை, தங்களின் அடிப்படை கடமை மற்றும் சாதாரண செயற்பாடுகளின் ஒரு பகுதியான உள்ளூராட்சி மன்ற தேர்தலை அறிவிப்பு செய்வதற்கு எந்த தடையும் இல்லை என நம்புகின்றோம். அதனால் இது தொடர்பாக நீங்கள் விரைந்து கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.