தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டால் மொட்டுக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு வழங்கும்

எதிர்காலத்தில் திட்டமிட்ட கலந்துரையைாடல்கள் மூலம் ஒரு தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் பட்சத்தில் மொட்டுக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு வழங்கும் என அந்தக் கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தேசிய அரசாங்கம் அமைப்பதாக இருந்தால் அதில் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதித்துவம் இடம்பெற வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர்.

தற்போதுள்ள அரசாங்கத்தில் மொட்டுக் கட்சியைச் சேர்ந்த 4 அமைச்சர்கள் உள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி அமைச்சர்கள் இருவர் உள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் இருவர் உள்ளனர். ஏனைய கட்சிகளைச் சேர்ந்தவர்களும் அமைச்சர்களாக உள்ளனர். அதனால் இதுவும் ஒரு தேசிய அரசாங்கம்தான் என அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் திட்டமிட்ட கலந்துரையைாடல்கள் மூலம் ஒரு தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் பட்சத்தில் மொட்டுக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு வழங்கும் எனவும் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

கோட்டாவை ஜனாதிபதியாக்கியமை தவறென பொதுஜன பெரமுன ஒப்புக்கொண்டுள்ளது

2019 இல் கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்ததன் மூலம் தாம் “தவறு” செய்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒப்புக்கொண்டுள்ளது.

எவ்வாறாயினும், ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக நியமித்ததன் மூலம் அப்பிழை திருத்தப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினருமான பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

அடுத்த தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன போட்டியிட்டு வெற்றிபெறும் என்றும் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் சுகாதார அமைச்சராகவும் போக்குவரத்து அமைச்சராகவும் பவித்ரா வன்னியாராச்சி செயற்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான அவசியம் தற்போது இல்லை – பொதுஜன பெரமுன

ஜனாதிபதி தேர்தலை விரைவாக நடத்த வேண்டிய தேவை ஏதும் தற்போது கிடையாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், ‘அரசியலமைப்பின் பிரகாரம் மாகாண சபைகள் தேர்தல் மற்றும் உள்ளுராட்சிமன்ற தேர்தல் விரைவாக நடத்தப்பட வேண்டும்.

தேர்தலை பிற்போட வேண்டிய தேவை எமக்கு கிடையாது. கட்சி என்ற ரீதியில் தேர்தலுக்கு தயாராகவே உள்ளோம்.

எந்த தேர்தல் இடம்பெற்றாலும் வெற்றிகரமாக அதனை எதிர்கொள்வோம். பெரும்பாலான மக்கள் பொதுஜன பெரமுனவிற்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவார்கள்.

ஊழல் ஒழிப்பு சட்டமூலம் இம்மாத காலத்திற்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

குறுகிய அரசியல் நோக்கத்திற்காக பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் தரப்பினருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பது தொடர்பில் இந்த சட்டமூலத்தின் ஊடாக விசேட கவனம் செலுத்தப்படும்.

ராஜபக்ஷர்களை திருடர்கள் என விமர்சித்து ஒருதரப்பினர் அரசியல் இலாபம் தேடிக் கொண்டார்கள். நல்லாட்சி அரசாங்கத்தில் எந்த குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படவில்லை.

ஊழல் ஒழிப்பு தொடர்பில் எவ்வித சட்டங்களும் இயற்றப்படவில்லை. தற்போது பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் ஊழல் ஒழிப்பு சட்டம் உருவாக்கப்படவுள்ளதையிட்டு பெருமையடைகிறோம். ஆகவே ஊழல் ஒழிப்பு சட்டமூலத்திற்கு ஆதரவு வழங்குவோம்.

வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு தடைச்சட்டமூலம் தொடர்பில் தற்போது பல்வேறு மாறுப்பட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது.“ எனத் தெரிவித்துள்ளார்.