பொதுஜன பெரமுனவுக்கு எதிராக செயற்படும் உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை – பஸில் ராஜபக்‌ஷ

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிகழ்ச்சி நிரலுக்கு எதிராகச் செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அக்கட்சி தீர்மானித்துள்ளது.

அவர்கள் தொடர்பில் கடுமையான தீர்மானம் எடுக்கப்படும் என்றும், தற்போது சுயேச்சையாகச் செயற்படும் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குவது ஏற்புடையதல்ல என்றும் அக்கட்சியின் நிறுவுநரும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இருபுறமும் கால்களை வைத்திருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொதுஜன பெரமுனவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளவர்களை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பொதுஜன பெரமுனவின் முக்கிய உறுப்பினர்கள் பஸில் ராஜபக்ஷவிடம் விடுத்த கோரிக்கைக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமைச்சரவை மாற்றத்தில் மகிழ்ச்சியில்லை‌ : பொதுஜன பெரமுன!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (23) அமைச்சரவையில் மாற்றம் செய்தார்.

03 அமைச்சரவை அமைச்சுப் பதவிகளுக்காக நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் நேற்று (23) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

எவ்வாறாயினும், இன்று மேற்கொள்ளப்பட்டுள்ள அமைச்சரவை மாற்றத்தினால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கவலையடைந்துள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே செயலாளர் நாயகம் இதனை தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதியின் தீர்மானம் ஜனாதிபதி எடுத்த தவறான முடிவாகும்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தை வழிநடத்தும் பலத்தை பாராளுமன்றத்தின் தலைவருக்கு வழங்குகிறது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் இந்த ஆற்றலை வழங்குகின்றனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் ஐந்து பேர் மாத்திரமே உள்ளனர். ஆனால் இங்கிருந்து ஒரு அமைச்சுப் பதவி பறிக்கப்பட்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிய அரச அமைச்சுப் பதவி வழங்கப்பட்டமை எமக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. அது தவறு. தவறை தவறு என்று சொல்ல நாங்கள் பயப்படுவதில்லை. ஜனாதிபதி கூட தவறு செய்தால் தவறுதான்.

இன்றைய அமைச்சரவை மாற்றத்தில் சுற்றாடல் அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்லவும், பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக மஹிந்த அமரவீரவும், சுகாதார அமைச்சராக டொக்டர் ரமேஷ் பத்திரனவும் நியமிக்கப்பட்டனர்.

மேலும், தற்போது நிதி இராஜாங்க அமைச்சராக கடமையாற்றும் ரஞ்சித் சியம்பலாபிட்டியவை, அரச பெருந்தோட்ட முயற்சியாண்மை மறுசீரமைப்பு அமைச்சரவை அல்லாத அமைச்சராகவும் ஜனாதிபதி நியமித்தார்.

பொதுஜன பெரமுனவுக்கு 13ஐ எதிர்க்கும் தார்மீக உரிமை இல்லை – நிமல் லன்சா

அதிகாரப்பகிர்வு தொடர்பில் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு, அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி நாட்டிலுள்ள அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுக்கும் போது அதற்கு எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கு தார்மீக உரிமை இல்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார்.

விசேட ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ள அவர் , அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது :

13க்கு அப்பால் அதிகாரப் பகிர்வு பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ கடந்த காலங்களில் தெரிவித்திருந்தார்.

13ஆவது திருத்தம் தற்போதும் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் அனைத்து அரசியல் கட்சிகளினதும் கருத்துகளைப் பெற்று நாட்டின் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிகாரப் பகிர்வை தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கும் போது , பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் அதற்கு எதிராக கருத்து வெளியிட்டதன் மூலம் நாட்டின் முன் அவர்களின் இரட்டை நிலைப்பாட்டை தெளிவாகக் காண்பித்துள்ளது.

ஸ்திரமான பொருளாதாரத்தையும் ஒற்றுமையையும் கட்டியெழுப்புவதற்கு நாட்டின் அனைத்து மக்களுக்கும் இடையில் சமாதானமும் நல்லிணக்கமும் கட்டியெழுப்பப்பட வேண்டும்.

நாட்டு மக்கள் அனைவர் மத்தியிலும் நம்பிக்கையை வளர்க்கும் வகையில், அனைவரும் ஏற்கும் வகையில் அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும். இதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அனைத்து தரப்பு மக்களும் பங்களிக்க முடியும்.

அப்போது சகல மக்கள் மத்தியிலும் இலங்கையர் என்ற உணர்வு கட்டியெழுப்பப்படும். அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடியவாறு அதிகாரப் பகிர்வை வழங்குவதன் மூலம் சர்வதேச நம்பிக்கையையும் கட்டியெழுப்ப முடியும்.

இது தொடர்பான புரிதல் சிறிதளவும் இன்றி ,பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் நிலைப்பாட்டுக்கும், மனசாட்சிக்கமைய செயற்படும் பொதுஜன பெரமுனவின் ஏனைய உறுப்பினர்களது நிலைப்பாட்டுக்கும் முரணான கருத்தை பொதுச் செயலாளர் சாகர காரியவசம் எந்த அடிப்படையில் தெரிவிக்கின்றார் என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும்.

எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்காக பொதுஜன பெரமுனவின் சார்பில் வேட்பாளரொருவர் களமிறக்கப்படுவார் என்று அக்கட்சியின் சிறு தரப்பினர் வெவ்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர். முடிந்தால் பொதுஜன பெரமுனவில் களமிறக்கப்படவுள்ள ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை நாட்டுக்கு வெளிப்படுத்துமாறு வலியுறுத்துகின்றோம்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அக்கட்சியிலிருந்து வேட்பாளரொருவரை களமிறக்கும் என்றும் , அதற்காக மூன்றெழுத்து பெயர் கொண்ட தலைவரொருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்றும் குறிப்புக்களை வழங்கி மக்களை ஏமாற்றி வருகின்றது.

முடிந்தால் சகல தரப்பினரதும் இணக்கப்பாட்டுக்கமைய பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்குமாறு சவால் விடுக்கின்றோம்.

நாட்டில் ஏற்பட்ட ஸ்திரமற்ற நிலைமையால் தோன்றிய நெருக்கடிகளிலிருந்தும் ,நாட்டை மீளக் கட்டியெழுப்பி பொருளாதார ,சமூக மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்திக் கொடுத்த தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வேலைத்திட்டங்கள் ,மக்கள் ஆணையற்ற பொதுஜன பெரமுனவின் சில உறுப்பினர்களுக்கு மறந்து போயுள்ளது.

மீண்டும் அவர்கள் தமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு வழியேற்படுத்திக் கொடுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தை மறந்து அந்த கட்சியின் சில உறுப்பினர்கள் செயற்படுகின்றமை கவலைக்குரியதாகும்.

நாட்டில் ஏற்பட்டுள்ள ஸ்திரமின்மை மற்றும் நெருக்கடிகளை தீர்த்து நாட்டில் ஸ்திரத்தன்மையை கட்டியெழுப்பக்கூடிய ஒரே தலைமைத்துவமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு காணப்பட்ட ஒரேயொரு தெரிவு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாத்திரமே.

இவ்வாறான நிலையில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளைத் தீர்த்து சர்வதேசத்தின் ஆதரவுடன் நாட்டைக் கட்டியெழுப்பி பொருளாதார, சமூக, அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்திய தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீது நாட்டு மக்கள் மத்தியில் நம்பிக்கைக் கட்டியெழுப்பப்பட்டுள்ளது.

முற்போக்கான பார்வையுடனும் , சர்வதேசத்தின் ஒத்துழைப்புடனும் இலங்கையை மீண்டும் முன்னோக்கிக் கொண்டு செல்லக் கூடிய இயலுமை கொண்ட ஒரேயொரு தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாத்திரமே.

இது தொடர்பில் பரந்துபட்ட புரிந்துணர்வு கொண்ட பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையானவர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை வெற்றிபெறச் செய்வதற்கு பாடுபடுவார்கள். மக்கள் ஆணையற்ற சிலரின் கருத்துக்களை மக்கள் நிச்சயம் நிராகரிப்பார் என்றார்.

13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த இது பொருத்தமான தருணம் அல்ல – பொதுஜன பெரமுன

13வது திருத்தத்தை மேலும் விஸ்தரிப்பதற்கு இது உரிய தருணமல்ல என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் பொதுச்செயலாளர் சாகரகாரியவசம் தெரிவித்துள்ளார்.

13வது திருத்தத்தை மேலும் விஸ்தரிப்பதற்கு இது பொருத்தமான தருணமிலலை என்ற நிலைப்பாட்டை எடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக சாகரகாரியவசம் தெரிவித்துள்ளார்.

கட்சியின் நிலைப்பாட்டை ஜனாதிபதியிடம் தெரியப்படுத்துவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக உள்ள பொதுஜனபெரமுனவின் பிரிவும் இந்த நிலைப்பாட்டை ஆதரித்துள்ளது.

பலவீனமான பொருளாதார நிலை காரணமாக அரசாங்கமே நெருக்கடியான நிலையில் உள்ள இந்த தருணத்தில் அரசாங்கம் 13 வதுதிருத்தத்தை விஸ்தரிப்பதற்கு இணங்கினால் அரசாங்கம் தேவையற்ற அழுத்தத்திற்குள்ளாகலாம் என சாகரகாரியவசம் தெரிவித்துள்ளார்

நாடு வலுவான பொருளாதாரநிலையில் உள்ளவேளை 13வதுதிருத்தத்தை விஸ்தரிப்பது குறித்து சிந்திக்கலாம் என்ற யோசனையை முன்வைக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த ஜனாதிபதியாக பசில் ராஜபக்ச கிடைக்கவுள்ளமை நாட்டுக்கு கிடைத்த பேரதிஷ்டம் – காமினி லொக்குகே

2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக பசில் ராஜபக்ச களமிறக்கப்படலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காகவே ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம் என தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தீர்மானங்களுக்கு கட்சி என்ற ரீதியில் நாடாளுமன்றத்தின் ஊடாகவும் ஒத்துழைப்பு வழங்குகிறோம். சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் கொண்டு வரவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை சிறந்த முறையில் வெற்றிக்கொள்வோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரையே வேட்பாளராக களமிறக்கவுள்ளதாகவும், முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்படலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ராஜபக்சர்களை நம்பி பொதுஜன பெரமுன உருவாக்கப்படவில்லை

ராஜபக்சர்களை மட்டுமே இலக்காக கொண்டு பொதுஜன பெரமுன தோற்றம் பெறவில்லை என வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

உடுகம்பொல பிரதேசத்தில் இடம்பெற்ற கட்சித் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொhபாக அவர் மேலும் தெரிவிக்கையில், “உண்மையான சில வரலாறு தெரியாத இளம் தலைமுறையினரே ராஜபக்ஷர்கள் தொடர்பில் தவறான நிலைப்பாட்டை மக்கள் மத்தியில் உருவாக்குகின்றனர்.

பொருளாதார அரசியல் ரீதியில் நாடு பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்ட போது ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாகத் தெரிவு செய்ய பொதுஜன பெரமுன எடுத்த தீர்மானம் சிறந்தது என்பதை மக்கள் தற்போது ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.

எனவே இந்த நிலையில் ஜனாதிபதியின் காலை வாரி விடுவது முறையற்றது. பொதுஜன பெரமுனவுக்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் முரண்பாடு இருப்பதாக கூறப்படுவது அடிப்படையற்றதாகும்.

அவரது அரசியல் அனுபவம், சர்வதேச உறவுகள் ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு அவரை ஜனாதிபதியாக தெரிவு செய்தோம்.

தேர்தல் ஒன்று இடம்பெற்றால் பாரிய மாற்றம் ஏற்படும்.

ஒருசில சிரேஷ்ட அரசியல்வாதிகள் அதிருப்தியடைந்துள்ளனர். கடந்த ஆண்டின் நிலையையும் தற்போதைய நிலையையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். பொருளாதார மீட்சிக்காக சிறந்த திட்டங்களை ஜனாதிபதி முன்னெடுத்துள்ளார்.

எனவே நாட்டினது நலனை முன்னிறுத்திச் செயற்படுவதற்கு அனைவரும் முன்வர வேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

ஜனாதிபதி ரணில் பொதுஜன பெரமுனவின் உள்விவகாரங்களில் தலையிடக்கூடாது

நாட்டின் அபிவிருத்திக்காக ஜனாதிபதி முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்களுக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணக்கம் வெளியிட்டுள்ளது.

ஆளும் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது நாட்டினது நெருக்கடி நிலைமைகளின்போது கட்சிகளின் பங்களிப்புக்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.

மேலும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுஜன பெரமுனவின் உள்விவகாரங்களுடன் தொடர்புபட்ட விடயங்களில் தலையிடக்;கூடாது என பொதுஜனபெரமுன வேண்டுகோள் விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நிலவும் அரசியல் பொருளாதார நெருக்கடி குறித்த பிரச்சினைகள் தொடர்பாகக் கலந்துரையாடுவதற்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் மாதமொருமுறை ஜனாதிபதியைச் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த சந்திப்பில் பிரதமர் தினேஷ் குணவர்தன, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ, பொதுச் செயலாளர் சாகர காரியவசம், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சர் ஜீவன் தொண்டமான், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர்.

பொதுஜன பெரமுன பிரமுகர்களுக்கு முக்கியத்துவம் வழங்காத அரசாங்கத்தில் நீடிக்கோம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனது கட்சித் தலைவர்களுக்கு வழங்கப்படும் முக்கியத்துவத்தின் அடிப்படையில் மட்டுமே அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் என இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தற்போதைய அரசாங்கத்தை உருவாக்க கடுமையாக உழைத்த உறுப்பினர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படாவிடின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் நீடிக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இதுவரை வழங்கப்படாத அமைச்சரவை அமைச்சர் பதவிகளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கேட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான பின்னணியில் அண்மையில் ஜனாதிபதியினால் அழைப்பு விடுக்கப்பட்ட அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்திருந்தனர்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டாரவின் நடத்தையை கடுமையாக விமர்சித்ததுடன், தமது கட்சித் தலைவர் அரச தலைவர் என்பதாலேயே அவரது செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

ஜனாதிபதியை ஓரங்கட்டும் எண்ணம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு இல்லை என தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை கைவிட முயற்சித்தால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கப் போவதில்லை என எச்சரித்துள்ளார்.

லொகான் ரத்வத்தைக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் வரை நடவடிக்கை எடுக்கப்படாது – ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன தெரிவிப்பு

இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தைக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் நிரூபிக்கப்படும்வரை அவருக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கப்போவதில்லைஎன ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன தெரிவித்துள்ளது.

அனுராதபுரம் வெலிக்கடை சிறைச்சாலைகளுக்குள் இராஜாங்க அமைச்சர் 2021ம் ஆண்டு பலவந்தமாக நுழைந்த விதம் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட தனிநபர் ஆணைக்குழு கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் உட்பட குற்றச்சாட்டுகளை சுமத்தவேண்டு;;ம் என பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே நீதிமன்ற நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் குற்றச்சாட்டுகள் நிருபி;க்கப்படும்வரை இராஜாங்க அமைச்சருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என பொதுஜனபெரமுன தெரிவித்துள்ளது.

குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் பொதுஜனபெரமுன இராஜாங்கஅமைச்சருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமா என மோர்னிங் கட்சியின் பொதுச்செயலாளர் சாகரகாரியவசத்திடம் வினவியவேளை பல நடைமுறை பிரச்சினைகள் உள்ளதால் கட்சி அவ்வாறான நடவடிக்கையை எடுக்கும் நிலையில்இல்லை என சாகரகாரியவசம்தெரிவித்துள்ளார்.

முதலாவது இந்த சம்பவம் குறித்து பொலிஸார் ஏதாவது குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனரா என்பது பொலிஸார் குற்றச்சாட்டுகளை சுமத்தாவிட்டால் அல்லது உத்தியோகபூர்வமாக குற்றச்சாட்டுகள் பதியப்படாவிட்டால் கட்சியால் எதனையும் செய்ய முடியாது என சாகரகாரியவசம் தெரிவித்துள்ளார்.

விசாரணை அறிக்கையொன்றை அடிப்படையாக வைத்துமாத்திரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு எதிராக எவராலும் நடவடிக்கை எடுக்க முடியாது கட்சி அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டால் அந்த உறுப்பினர் கட்சிக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கலாம் எனவும் பொதுஜனபெரமுனவின் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே சட்டரீதியில் ஏற்றுக்கொள்ளக்கூடிய அடிப்படையிருக்கவேண்டும்,இராஜாங்கஅமைச்சருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் நிரூபிக்கப்பட்டால் நாங்கள்நடவடிக்கை எடுக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

பசில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்படலாம் – ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரையே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம்.முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்படலாம்.

ராஜபக்ஷர்களே மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவார்கள் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் வியாழக்கிழமை (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு மக்களாணை இல்லை என்ற தவறான கருத்தை மே தின கூட்டத்துடன் முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம். பெரும்பாலான மக்கள் பொதுஜன பெரமுனவுக்கும்,ராஜபக்ஷர்களுக்கும் சார்பாகவே செயற்படுகிறார்கள்.

மே தின கூட்டம் தொடர்பில் கடந்த வாரம் அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும்,பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்றது.

பிரதான வீதியை மரித்து மேடை அமைத்து கூட்டத்தை நடத்த எந்த அரசியல் கட்சிக்கும் அனுமதி வழங்க முடியாது என பாதுகாப்பு தரப்பினர் உறுதியாக குறிப்பிட்ட பின்னணியில் ஒரு அரசியல் கட்சிக்கு மாத்திரம் எவ்வாறு நடுவீதியில் மேடையமைக்க அனுமதி வழங்கப்பட்டது என்பது பிரச்சினைக்குரியதாக உள்ளது.

பாராளுமன்றத்தை சுற்றி வளைக்கும் வகையில் மக்களை தவறாக வழி நடத்திய அரசியல் கட்சிக்கு எதிரான விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடளித்தோம்.

இதுவரை இந்த முறைப்பாடு தொடர்பில் உரிய அரசியல் கட்சி பிரநிதிகளிடமிருந்து வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்படவில்லை.

ஆட்சி அதிகாரம் இல்லாத நிலையில் இந்த அரசியல் கட்சி முறையற்ற வகையில் செயற்படும் போது அதிகாரம் கிடைத்து விட்டால் இவர்கள் நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கை எவ்வாறு பாதுகாப்பார்கள் என்பதை மக்கள் ஆராய வேண்டும்.

பொதுஜன பெரமுனவின் மே தின கூட்டத்தில் எமது தலைமைத்துவத்தை வெளிப்படுத்தினோம்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைகளுக்கு அமைய அரசியல் தீர்மானங்களை எடுத்து முன்னோக்கிச் செல்வோம்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குகிறோம். எமது கட்சி கொள்கைகளை விட்டுக் கொடுக்க முடியாது.

பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம். அவர் முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவாக இருக்கலாம்.ராஜபக்ஷர்கள் மீண்டும் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவார்கள் என்றார்.