முதலில் எந்தந் தேர்தல் என ஜனாதிபதியே தீர்மானிக்கலாம் – பசில் ராஜபக்ச

எந்த தேர்தலை முதலில் நடத்துவது என்பதை ஜனாதிபதியே தீர்மானிக்கலாம் அதற்கு பொதுஜனபெரமுன இடமளிக்கும் என முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலை முதலில் நடத்தவேண்டும் என்ற எங்கள் நிலைப்பாட்டை நாங்கள் அவருக்கு தெளிவுபடுத்தியுள்ளோம் அத்துடன் அது முடிவடைந்துவிட்டது இனி அவரே தீர்மானிக்கலாம் என பசில் ராஜபக்ச சண்டே டைம்ஸிற்கு தெரிவித்துள்ளார்.

எங்கள் கட்சி எந்த வகையிலும் ஜனாதிபதிக்கு அழுத்தங்களை கொடுக்காது என பசில்ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை பசில் ராஜபக்ச ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ள நிலையிலேயே பசில்ராஜபக்ச இதனை தெரிவித்துள்ளார்.

பொதுத்தேர்தலை முதலில் நடத்தவேண்டும் என்ற தனது தனிப்பட்ட கோரிக்கைக்கு அப்பால் எந்த தேர்தலை முதலில்நடத்தவேண்டும் என்பது குறித்து வேறு எந்த பேச்சுவார்த்தைகளையும் மேற்கொள்ளவில்லை முடிவு என்பது முற்றிலும் ஜனாதிபதியின் கரங்களிலேயே உள்ளது எனவும் முன்னாள் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

இரண்டு தேசிய தேர்தல்களையும் எதிர்கொள்வதற்கு ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன தயாராகிவருகின்றது 9ம் திகதி கட்சியின் மத்திய நிறைவேற்றுகுழுவின் கூட்டம் இடம்பெறவுள்ளது எனினும் இந்த கூட்டத்தில் தேர்தல்கள் குறித்து ஆராயப்படாது எனவும் அவர் தெரிவித்;துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க எமது ஜனாதிபதி வேட்பாளரல்ல – ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எமது ஜனாதிபதி வேட்பாளரல்ல, ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அவர் போட்டியிடலாம்.ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானதும் எமது வேட்பாளரைக் களமிறக்குவோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியராட்சி தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் பொதுத்தேர்தல் தொடர்பில் பேசப்படுகிறது.பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத்தேர்தலை நடத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு.கட்சி என்ற ரீதியில் பலமானதாகவே உள்ளோம்.ஆகவே இந்த ஆண்டு எந்த தேர்தல் இடம்பெற்றாலும் அதனை நாங்கள் வெற்றிகரமாக எதிர்கொள்வோம்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க என்று ஆளும் தரப்பின் ஒரு தரப்பினர் தங்களின் தனிப்பட்ட நிலைப்பாட்டை குறிப்பிடுகிறார்கள். கட்சிக்குள் இருந்துக் கொண்டு தனிப்பட்ட நிலைப்பாட்டை குறிப்பிடுவது எந்தளவுக்கு நியாயமானது என்பது பிரச்சினைக்குரியது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரல்ல,அவரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க கட்சியின் உயர்மட்டத்தில் எவ்வித பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்படவில்லை.அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஆகவே அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடலாம்.

ஐக்கிய தேசியக் கட்சியைப் பலப்படுத்தும் செயற்பாடுகளை ஜனாதிபதி முன்னெடுப்பது கடந்த ஞாயிற்றுக்கிழமை குருநாகலில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சி கூட்டத்தில் வெளிப்படையாகவே தெரிந்தது.ஆகவே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பலப்படுத்தும் நடவடிக்கைகளை நாங்கள் இனி வலுவான முறையில் முன்னெடுப்போம் என்றார்.

Posted in Uncategorized

ரணில் ஜனாதிபதி வேட்பாளர் என்பது பொதுஜன பெரமுன கட்சியின் கருத்து அல்ல – நாமல் ராஜபக்ச

எதிர்வரும் அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவே வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர்கள் பதவிகளைப் பெற்ற தற்போதைய அமைச்சர்கள் குழுவொன்று கருத்து தெரிவித்த போதிலும் அது கட்சியின் கருத்து அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கன்ஹுவரனெல்லிகல சர்வதேச பௌத்த நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர், கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

யார் என்ன சொன்னாலும் அடுத்த அதிபர் பொதுஜன பெரமுன தலைமையிலான பரந்த கூட்டணியில் இருந்து பிறப்பார்.

அதிபருடன் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் எமது எம்.பிக்களும், இராஜாங்க அமைச்சர் பதவிகளை வகிப்பவர்களும் ரணில் விக்ரமசிங்கவை அதிபர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளனர். மற்றவர்கள் வேறு பெயர்களை வழங்குகிறார்கள்.

ஆனால் அதைப்பற்றியெல்லாம் நாம் கவலைப்பட வேண்டியதில்லை. தமது தனிப்பட்ட கருத்துக்களை முன்வைப்பதற்கு தமது கட்சிக்கு சுதந்திரம் உள்ளதாகவும்,

ஏனைய கட்சிகள் இவ்வாறு எதிர் கருத்துக்களை முன்வைத்தால் கட்சி உறுப்புரிமை கூட தடைசெய்யப்படும் எனவும் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டமூலத்தில் சபாநாயகர் கையொப்பமிட்டதாக எதிர்க்கட்சிகள் கவலைப்பட்டாலும், அது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னரே சபாநாயகர் கையொப்பமிட்டுள்ளதாகவும், பிரச்சினை ஏற்பட்டால் சபாநாயகருடன் கலந்துரையாடி முடிவெடுக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன கட்சியின் அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராஜினாமா

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான நடிகர் உத்திக பிரேமரத்ன அந்தப் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.

அவர் தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பியுள்ளார்.

பொதுத் தேர்தலை முதலில் நடத்துவதே பொதுஜன பெரமுனவின் நிலைப்பாடு – உதயங்க வீரதுங்க

பொதுத்தேர்தலை முதலில் நடத்துவதையே பொதுஜனபெரமுனவின் பெரும்பாலான அங்கத்தவர்களின் நிலைப்பாடாகவுள்ளதாகத் தெரிவித்துள்ள ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவரும், ராஜபக்ஷக்களின் சகோதரருமான உதயங்க வீரதுங்க, அதற்கான வியூகத்துடன் பஷில் ராஜபக்ஷ மார்ச் மாதத்தில் நாடு திரும்பவுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பொதுஜனபெரமுன மற்றும் பஷில் ராஜபக்ஷவின் அடுத்தகட்டச் செயற்பாடுகள் சம்பந்தமாக கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொதுஜனபெரமுனவினை ஸ்தாபித்து கடந்த காலத்தில் நாட்டில் நடத்தப்பட்ட அனைத்து தேர்தல்களிலும் பெருவெற்றிபெறச் செய்ததில் பஷில் ராஜபக்ஷவின் புத்திசாதுரியம் மிகவும் முக்கியமானது.

அந்த வகையில், அவர் நாட்டிலிருந்து வெளியேறியபோது, நாமல் ராஜபக்ஷவிடத்தில் கட்சிப்பணிகளை ஒப்படைத்துவிட்டுச் சென்றிருந்தார்.

கட்சிக்கும், கிராமங்களில் உள்ள சாதாரண பொதுமக்களுக்கும் இடையிலான பிணைப்பினை வலுவாக வைத்துக்கொள்வதற்குரிய நடவடிக்களை தொடர்ச்சியாக முன்னெடுப்பதோடு அவர்களின் கோரிக்கைகள், பிரச்சினைகள் சம்பந்தமாக கவனம் செலுத்துவது தான் நாமல் ராஜபக்ஷவின் பிரதான பணியாக இருந்தது.

இவ்வாறான நிலையில், பஷில் ராஜபக்ஷ மீண்டும் எதிர்வரும் மார்ச் மாதம் நடுப்பகுதியில் நாடு திரும்பவுள்ளார். அவர் நாடு திரும்புவது, ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதி ஆசனத்தில் அழகுபார்ப்பதற்காக அல்ல.

பொதுஜனபெரமுனவை பாதுகாக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும், கட்சியின் பெரும்பாலானவர்களின் நிலைப்பாடுகளுக்கு அமைவாக பொதுத்தேர்தலை நடத்துவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகும்.

பொதுத்தேர்தலை நடத்துவதாக இருந்தால் அதற்கான அறிவிப்பினை ஜனாதிபதியே செய்ய வேண்டும். இருப்பினும், பஷில் ராஜபக்ஷ நாடு திரும்பியதும் இந்த விடயம் சம்பந்தமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

இதனடிப்படையில், பொதுத்தேர்தல் நடத்தப்படும் போது, அதற்கான வெற்றி வியூகங்களை வழங்கும் பிரதான பணியை பஷில் ராஜபக்ஷவே முன்னெடுப்பார்.

மேலும், பெரமுனவின் உறுப்பினர்களில் சிலர் ஜனாதிபதிக்கு ஆதரவாக நிற்கின்றபோதும், முதலில் ஜனாதிபதி தேர்தலை நடத்தினால் அதில் ரணில் வெற்றியைப் பெற்றுக்கொள்ள முடியாது. ஆகவே பொதுத்தேர்தலை நடத்துவதே பொருத்தமான நகர்வாக இருக்கும்.

ஏவ்வாறாயினும், பஷில் ராஜபக்ஷ மீண்டும் பொதுஜனபெரமுனவினைப் பதவியில் அமர்த்துவதற்கு நடவடிக்கைகளை எடுக்கவுள்ளார் என்றார்.

ஜனாதிபதித் தேர்தல் வாக்குச் சீட்டில் மொட்டுச் சின்னம் நிச்சயம் இடம்பெறும் – சாகர காரியவசம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை நிச்சயமாக முன்வைக்கும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

கெஸ்பேவ பிரதேசத்தில் நேற்று ) இடம்பெற்ற கட்சி உறுப்பினர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கட்சியின் செயலாளர் நாயகம் இதனை தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை முன்வைத்துள்ள நிலையில், யார் வேட்பாளர் என்பதை நாங்கள் இன்னும் தீர்மானிக்கவில்லை.

யாரை வேட்பாளராக தெரிவு செய்வது என்று இன்னும் முடிவு செய்யவில்லை.

ஆனால், கட்சியின் செயலாளர் என்ற வகையில், எமது கட்சியின் கீழ், அடுத்த ஜனாதிபதித் தேர்தல் வாக்குச்சீட்டில் பொஹட்டுவ சின்னம் இடம்பெறும் என்பதை என்னால் மிகுந்த நம்பிக்கையுடன் கூற முடியும் என்றார்.

சஜித், அநுர கனவு காண பெரமுன கால அவகாசம்; ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அவசரப்படப் போவதில்லை – பொதுஜன பெரமுன

பொருளாதாரத்தை இல்லாதொழித்தது யார் ? நாட்டை அபிவிருத்தி செய்தது யார்? என்ற உண்மையை நாட்டு மக்களுக்கு வெகுவிரைவில் பகிரங்கப்படுத்துவோம்.

ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தில் நாங்கள் அவசரபட போவதில்லை. சஜித், அனுரவிற்கு காலவகாசம் வழங்கியுள்ளோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

தலவத்துகொட பகுதியில் திங்கட்கிழமை (15) இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

புதிய செயற்திட்டத்துடன் கட்சியின் செயற்பாடுகளை முன்னெடுத்தோம்.பொய்யான குற்றச்சாட்டுகள் தற்போது வலுப்பெற்றுள்ளன.

நாட்டுக்கு சேவையாற்றிய நபரை திருடர் என்று விமர்சிப்பது இயல்பாகியுள்ளது.நாட்டு மக்களின் அரசியல் சிந்தனைகளை திரிபுப்படுத்தும் வகையில் ஒரு தரப்பினர் செயற்படுகிறார்கள்.

சூரியன், சந்திரன் மற்றும் உண்மையை மறைக்க முடியாது என்ற தொனிப்பொருளின் கீழ் நாடளாவிய ரீதியில் அரசியல் கூட்டங்களை நடத்தவுள்ளோம்.

பொருளாதாரத்தை யார் இல்லாதொழித்தது,யார் நாட்டை அபிவிருத்தி செய்தது என்பதை வெகுவிரைவில் நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்துவோம்.

நாட்டு மக்கள் மத்தியில் செல்வதற்கு எமக்கு பிரச்சினை ஏதுமில்லை.மக்கள் மத்தியில் ராஜபக்ஷர்களுக்கு இன்றும் நன்மதிப்பு உள்ளது.பெரும்பாலான மக்கள் ராஜபக்ஷர்கள் தலைமையிலான அரசாங்கத்தை இன்றும் எதிர்பார்க்கிறார்கள்.

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து கட்சி மட்டத்தில் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை.

கட்சியின் ஒருசில உறுப்பினர்களின் தனிப்பட்ட நிலைப்பாட்டை கட்சியின் நிலைப்பாடு என்று கருத முடியாது.ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தில் நாங்கள் அவசரபட போவதில்லை.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் ஜனாதிபதி பதவி தொடர்பில் கனவு காண்பதற்கு அவர்களுக்கு நாங்கள் காலவகாசம் வழங்கியுள்ளோம் என்றார்.

Posted in Uncategorized

தம்மிக்க பெரேராவை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராக நியமிக்குமாறு கோரிக்கை

பிரபல வர்த்தகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான  தம்மிக்க பெரேராவை   ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராக நியமிக்குமாறு அந்தக் கட்சியின் உறுப்பினர்கள் குழுவொன்று வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள்  வெளிவந்துள்ளன.

பசில் ராஜபக்ஷவுக்குப் பின்னர் தற்போது வெற்றிடமாகியுள்ள பதவிக்கு தம்மிக்க பெரேரா பொருத்தமானவர் எனவும்  அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புதிய அரசியலமைப்பின்படி, அதன் அனைத்து   நிர்வாக  உறுப்பினர்களும் புதிதாக நியமிக்கப்பட வேண்டியுள்ளனர். இந்நிலையிலேயே தம்மிக் பெரேராவை தேசிய  அமைப்பாளராக நியமிக்குமாறு இந்தக் குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதேவேளை, வெற்றிடமாகவுள்ள தேசிய அமைப்பாளர் பதவிக்கு கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளரை நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

பிரபாகரனை நேருக்கு நேர் எதிர்கொண்ட தலைவர் நானே – போர் வெற்றிக் கோஷம் எழுப்பிய மஹிந்த

“தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை நேருக்கு நேர் எதிர்கொள்ள எந்தவொரு முன்னாள் ஜனாதிபதியும் முன்வரவில்லை. ஆனால், நான்தான் அவரை நேருக்கு நேர் எதிர்கொண்டேன்.”– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

“எனது ஆட்சிக் காலத்தின் பின்னரான காலப்பகுதியில், இலங்கையை ஆட்சி செய்த வேறு எந்தவொரு ஜனாதிபதியும் போரை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படவில்லை” – என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசிய மாநாட்டில் உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கையைக் கடந்த 2005 ஆம் ஆண்டு நான் ஏற்றுக்கொள்ளும் போதும் எமது கட்சி மீது பலர் சேறு பூசினார்கள். எனினும், நாடு இரண்டாகப் பிளவுபடுவதைத் தடுக்குமாறு மாத்திரமே அன்று மக்கள் எம்மிடம் கோரினார்கள்.

முப்பது வருட ஆயுதப் போரில், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை எந்தவொரு ஜனாதிபதியாலும் எதிர்கொள்ள முடியவில்லை.சில ஜனாதிபதிகள் போரை நிறுத்துமாறு கோரி பிரபாகரனுக்கு ஆயுதங்களையும் வழங்கினார்கள்.

அந்த ஜனாதிபதி யார் என்று நான் கூற மாட்டேன். இவ்வாறான போரை எனக்குப் பின்னர் வந்த இலங்கையின் மற்ற ஜனாதிபதிகள் எதிர்நோக்கும் நிலையை நாம் உருவாக்கவில்லை. சிங்கள, தமிழ், முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து மக்களும் சமாதானமாக வாழக்கூடிய நிலையை நாம் ஏற்படுத்தினோம்.

கடந்த 2009 ஆம் ஆண்டு போர் நிறைவடைந்த போது, குழந்தைகளாக இருந்தவர்கள், தற்போது போர் என்றால் என்ன என்று தெரியாத வாழ்க்கையை வாழ்கின்றார்கள்.

எனினும், மக்களை ஏமாற்றி தங்கள் அரசியல் நோக்கங்களுக்காகச் செயற்படும் தரப்பினர் இன்றும் இருக்கின்றார்கள்.இவ்வாறானவர்கள் சர்வதேசத்தின் வலைகளில் சிக்கி எமது சொந்த நாட்டைப் பாதிப்படைய செய்கின்றார்கள்.

எமது கட்சியின் ஆட்சிக் காலத்தில் காணப்பட்ட பொருளாதார நிலை குறித்து தற்போதும் பலர் கருத்துக்களை முன்வைக்கின்றார்கள்.எம்மைக் குற்றவாளிகளாக வெளிக்காட்டும் முயற்சிகளில் பலர் ஈடுபடுகின்றார்கள்.

2005 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் நாம் நாட்டின் பொருளாதாரத்தை 6 வீதத்தால் வளர்ச்சியடையச் செய்திருந்தோம்.இந்தநிலையில், இலங்கையைச் சரியான பாதையில் கொண்டு செல்ல சரியானதொரு அரசியல் வழிநடத்தல் தேவை.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மிகக் குறுகிய காலத்தில் நாட்டில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. இலங்கை நாட்டை யாருடைய சொந்தத் தேவைக்காகவும் பிளவுபட நாம் இடமளிக்க மாட்டோம்.அனைத்து சவால்களையும் எதிர்நோக்கக்கூடிய ஒரே நாடு இலங்கை என்பதை சொல்வதில் நான் பெருமிதம் கொள்கின்றேன்.

எமக்குள்ள மக்கள் ஆணையுடன் எதிர்வரும் நாள்களில் நடைபெறவுள்ள தேர்தல்களில் நாம் போட்டியிடுவோம். பாரிய வெற்றியையும் அடைவோம். எமது வெற்றிப் பயணத்தில் பங்கேற்க பல அரசியல் கட்சிகள் ஆர்வமாகக் காத்திருக்கின்றன.” – என்றார்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மஹிந்த ராஜபக்‌ஷ நியமனம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ மற்றும் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்க்ஷ ஆகியோரின் தலைமையில் வெள்ளிக்கிழமை (15) பிற்பகல் சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இதன்போது பொதுஜன பெரமுன உறுப்பினர்களின் இணக்கப்பாட்டுடன் கட்சியின் தலைவராக மஹிந்த ராஜபக்‌ஷ நியமிக்கப்பட்டார்.

மஹிந்த ராஜபக்‌ஷவின் பெயரை காமினி லொகுகே முன்மொழிந்தார். அதனை ஜோன்ஸ்டன்  பெர்ணான்டோ  வழிமொழிந்தார்.