வீட்டுத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட காணிகளை வனத்துறையினர் விடுவிக்க கோரி மன்னாரில் மக்கள் போராட்டம்

மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட இசைமாலைத்தாழ்வு பிரதேச மக்கள் தமது கிராமத்தில் வசிக்கும் 113 குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்காக கொம்பன்சாய்ந்தகுளம் பிரதேசத்தில் 46 ஏக்கர் காணியை அரசாங்கம் ஒதுக்கீடு செய்த போதிலும் வனத்துறையினர் இதுவரையில் அந்த காணியை விடுவிக்கவில்லை எனத் தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நேற்று முன்தினம் முன்னெடுத்தனர்.

“எங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் கொம்பன்சாய்ந்த குளத்தில் எங்கள் மக்களுக்கு குடியிருப்புக் காணி அவசியம். எங்கள் ஊரில் ஒரு வீட்டில் மூன்று நான்கு குடும்பங்கள் வாழ்கின்றோம்.

இடவசதி போதாது. ஆகவேதான் இன்று போராடுகின்றோம். 2016ஆம் ஆண்டு இந்தக் காணியை எங்களுக்கு வழங்குவதாக வட மாகாண அதிகாரிகள் அறிவித்தனர். ஆனால் வனவளத் திணைக்களத்தினர் இதனை இன்னும் விடுவிக்கவில்லை. முன்னாள் பிரதேச செயலாளர் இதனை செய்வதாக கூறினாலும் செய்யவில்லை. “போராட்டத்தில் கலந்து கொண்ட பெண் ஒருவர் தெரிவித்தார்.

இசைமாலைதாழ்வு பிரதேசத்தில் வசிப்பவர்களுக்கு வீடுகள் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட காணியின் வேறு பிரதேசங்களைச் சேர்ந்த இருவர் சுமார் ஐந்து ஏக்கர் நிலத்தை அபகரித்து விவசாத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்கள் மீது அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

போராட்டம் முன்னெடுக்கப்பட்ட இடத்துக்கு வந்த நானாட்டான் உதவி பிரதேச செயலாளரிடம் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை போராட்டக்காரர்கள் கையளித்தனர்.

இசைமாலைதாழ்வு கிராம மக்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை மாவட்ட உதவிச் செயலாளரிடமும் கையளித்ததாக பிரதேச ஊடகவியலாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

அராலி- பொன்னாலை வரையான கரையோரம் வனவள திணைக்களத்துக்கு வழங்க முன்மொழிவு

யாழ்ப்பாண மாவட்டத்தில் சங்கானை பிரதேச செயலாளர் பிரிவை மையமாக கொண்டு அராலி முதல் பொன்னாலை வரையான கரையோர பகுதியை வனவளப் பாதுகாப்பு திணைக்களத்தின் வளப்பிரதேசமாக ஒதுக்கீடு செய்ய முன்மொழியப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட செயலாளரால் சங்கானை பிரதேச செயலாளருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், அராலி முதல் பொன்னாலை வரையான கரையோர பகுதி பொது அமைப்புகளிடம் பிரதேச செயலாளரால் இது தொடர்பில் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. கலந்துரையாடலில் பங்கேற்றவர்கள் குறித்த விடயத்தை எமது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

குறித்த பகுதி மக்கள் அராலி முதல் பொன்னாலை வரையான கரையோர பகுதியை வனவளப் பாதுகாப்பு திணைக்களத்தின் வளப்பிரதேசமாக ஒதுக்கீடு செய்வதை முற்றிலும் நிராகரித்திருக்கிறார்கள்.

கரையோர பகுதி மக்களின் வாழ்வாதரமே கடற்கரையை நம்பியே காணப்படுகின்றது. மாட்டுவண்டி சவாரித்திடல், சுடுகாடுகள், விவசாய நிலங்கள் காணப்படுகின்றன. ஆகவே வன வள பாதுகாப்பு திணைக்களத்தின் முன்மொழிவை முற்றிலும் நிராகரிக்கிறோம்.

குறித்த பகுதியை வன வள பாதுகாப்பு திணைக்களத்திற்கு வழங்கினால் விகாரைகள், சிங்கள குடியேற்றம் வரவும் வாய்ப்பு உள்ளது என அப்பகுதி மக்கள் சந்தேகிக்கின்றனர்.

யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் குறித்த முன்மொழிவை நிராகரித்து வன வள பாதுகாப்பு திணைக்களத்திற்கு கடிதம் அனுப்ப வேண்டும். இல்லையேல் இதற்கு எதிராக போராட்டம் நடத்துவோம் – என்றார்.

Posted in Uncategorized

புதுக்குடியிருப்பு கைவேலியில் வனவளத் திணைக்களத்தினர் முன்னாள் போராளிகளின் வீடுகளை அழித்து பெண்கள் மீதும் தாக்குதல்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட கைவேலி பகுதியில் வனவள திணைக்கள அதிகாரிகள்  முன்னாள் போராளி உள்ளிட்டவர்களின் வீடுகளை உடைத்தெறிந்து பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தியதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்

இந்த விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட கைவேலி பகுதியில்  2000 ம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் அமைப்பின் 45 குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டு  குறித்த பகுதியில் 45 குடும்பங்கள் குடியேறி இருந்தனர்.

இந்நிலையில் 2009 ம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்தபோது குறித்த பகுதியை விட்டு மக்கள் சென்ற பின்னர் குறித்த பகுதியில் இருந்த குடும்பங்கள் மீள்குடியேற்றம் வரவில்லை பலர் உயிரிழந்தும் வேறு சிலர் வேறு இடங்களில் குடியோறிவிட்டனர் .

இவ்வாறான நிலையில் குறித்த கிராம மக்கள் 2012 ம் ஆண்டு கைவேலி பகுதியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட போது குறித்த பகுதியை வனவள திணைக்களம் எல்லைக் கற்கள் இட்டு வனப்பகுதியாக்கிவிட்டனர்

இவ்வாறான பின்னணியில் மக்கள் வாழ்ந்த வீடுகள்  கட்டு கிணறுகள் கட்டடங்கள் பயன்தரு மரங்கள் உள்ள குறித்த கைவேலி பகுதியில் காணிகள் வீடுகள் அற்ற சுமார் 20 குடும்பங்கள் பலகாலமாக குடியேறி வாழ முயற்சித்து வந்த நிலையில் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் தமது குடும்பங்களை கொண்டு நடத்த முடியாத நிலையில் வாடகை வீடுகளில் இருக்க முடியாத நிலையில் குறித்த 45 வீட்டுத்திட்டம் பகுதியில் சென்று கொட்டில்களை அமைத்து குடியேறியுள்ளனர்.

இந்நிலையில் இன்று (12) மதியம் குறித்த பகுதிக்கு சென்ற வனவள திணைக்கள அதிகாரிகள் அங்கு மக்கள் போட்ட கொட்டில்களை அகற்றி கொளுத்துவதற்காக மண்ணெண்ணெயுடன் வருகை தந்ததாகவும் பெண்கள் தனிமையில் இருந்த கொட்டில்களில் சென்று முன்னாள் போராளியான பெண் ஒருவர் மீதும் ஆண் ஒருவர் மீதும் தாக்குதல் நடத்தியதாக மக்கள் தெரிவிக்கின்றனர்

குறித்த இருவரும் தற்போது புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்

இதேவேளை வனவள திணைக்கள  அதிகாரிகள் கொண்டு சென்ற மண்ணெண்ணெய்யை பறித்து அங்கு இருந்த நபரொருவர் தன்மீது ஊற்றி தீக்குளிக்க முற்ப்பட்டு மக்களால் காப்பாற்றப்பட்டுள்ளார்.

இவ்வாறான பின்னணியில் சம்பவ இடத்திற்கு புதுக்குடியிருப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி  மற்றும் பொலிசார் சென்று புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் அவர்களுடன் தொடர்புகொண்டு கலந்துரையாடி குறித்த மக்களுக்கு உரிய தீர்வை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அத்தோடு குறித்த பகுதி கிராம அலுவலர் அவர்களும் குறித்த பகுதிக்கு வந்து மக்களுடன் கலந்துரையாடினார்

இங்கு கருத்து தெரிவித்த மக்கள் புதுக்குடியிருப்பு பகுதியில் வசதி படைத்தவர்கள் பாரிய காடுகளை வெட்டி காணி பிடிக்கிறார்கள் காசை வாங்கி கொண்டு அவர்களை அங்கு விடுகிறார்கள் அதற்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கிறார்கள் இல்லை எனவும் அப்பாவிகளான எங்களை மக்கள் வாழ்ந்த காணிகளில் வாழ அனுமதிக்கிறார்கள் இல்லை எனவும் தம்மால் வாடகை வீடுகளில் வாழ முடியாது எனவும் தமக்கு உரிய தீர்வை பெற்றுத்தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை குறித்த பகுதியில் நேற்று முன்தினம் (10) ஒன்பது  பேர்  வனவள திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்து பிணையில் விடப்பட்டுள்ளனர்.

இதேவேளை இன்று ஒருவர் கைது செய்யப்பட்டு புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் இவரை நீதிமன்றில் நாளை முற்ப்படுத்தவுள்ளதாக வனவள திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்

இதேவேளை தமது கடமைகளுக்கு இடையூறு என தெரிவித்து புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் இரண்டு வனவள திணைக்கள அதிகாரிகள் முறைப்பாடு பதிவுசெய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் 125 ஏக்கர் காடு அழிப்பு : அதிகாரிகள் மெத்தனபோக்கு

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பம்பைமடு, சுந்தரபுரம் பகுதியில் 125 ஏக்கர் வனப்பகுதி தனிநபர்களால் பூரணமாக அழிக்கப்பட்டுள்ளது.

குறித்த காட்டுப்பகுதி முற்றாக அழிக்கப்பட்டு துப்பரவு பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில் வனவள அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

குறித்த கிராமத்தில் காணி அற்ற நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்ற நிலையில் உழுந்து விதைத்தாலே வனவள அதிகாரிகள் தம்மை கைது செய்வதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

இவ்வாறான நிலையில் காடுகள் அழிக்கப்படுவதை தடுப்பதற்கு வனவள அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமை தமக்கு சந்தேகத்தினை ஏற்படுத்தவதாக மக்கள் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மாவட்ட அபிவிருத்திக் குழுத்தலைவரிடம் மக்கள் தெரியப்படுத்தியதை அடுத்து, இந்த சம்பவத்தை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதியளித்துள்ளார்.

இலங்கையின் தொல்பொருள் மற்றும் வனத் திணைக்களங்களை பயங்கரவாத அமைப்புகளாகப் பட்டியலிட கோரிக்கை

இலங்கையின் தொல்பொருள் மற்றும் வனத் திணைக்களங்களை பயங்கரவாத அமைப்புகளாகப் பட்டியலிடுமாறு பைடனுக்கான தமிழர்கள் எனும் அமெரிக்காவினை சேர்ந்த தமிழ் அமைப்பினால் அமெரிக்கச் செயலர் பிளிகனுக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையின் தொல்பொருள் மற்றும் வனத் துறைகளை பயங்கரவாத அமைப்புகளாகவும், அவற்றின் தலைவர்களை பயங்கரவாதிகளாகவும் வகைப்படுத்த வேண்டும் என்று கோரி இந்தக் கடிதத்தை எழுதுகிறோம்.

தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் அனுர மானதுங்க மற்றும் வனத்துறையின் தலைவரும் பாதுகாப்பு அதிகாரியுமான கலாநிதி கே.எம்.ஏ.பண்டார ஆகியோரை பயங்கரவாதிகளாக அறிவிக்குமாறு அமெரிக்கத் தமிழர்கள் அவசரமாக இராஜாங்கத் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இரண்டு அமைச்சரவை அதிகாரிகளும் தமிழர்களின் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையை மேற்பார்வையிட்டதுடன் இலங்கை அரசின் நில அபகரிப்புக் கொள்கையையும் நடைமுறைப்படுத்தியுள்ளனர்.

இவையும் மற்றைய இலங்கை அரசாங்கத் திணைக்களங்களும் 100% சிங்கள அதிகாரிகள் மற்றும் ஊழியர்களைக் கொண்டிருக்கின்றன, தொல்பொருள் அபிவிருத்தி மற்றும் வனப் பாதுகாப்பு என்ற பொய்யான போலிப் பாவனையின் கீழ் தமிழர் நிலத்தை அபகரிக்கும் கூட்டு இலக்குடன். தமிழர்களிடமிருந்தும் தமிழ் விவசாயிகளிடமிருந்தும் காணிகள் பறிக்கப்பட்டவுடன், சிங்களக் குடியேற்றங்கள் அவர்களின் இடத்தில் வைக்கப்பட்டு, பல நூற்றாண்டுகள் பழமையான, புனிதமான இந்துக் கோயில்கள் பௌத்தர்களால் மாற்றப்படுகின்றன.

சட்டவிரோதமான நில அபகரிப்பு என்பதுடன், இது இனச் சுத்திகரிப்புக்கான தொடர்ச்சியான முயற்சி மற்றும் சர்வதேச மனித உரிமைகளை தெளிவாக மீறுவதாகும்.

இந்நடவடிக்கையானது அப்பகுதியின் தமிழர் அடையாளத்தையும் பாரம்பரியத்தையும் அழித்து தமிழர் தாயகத்தின் ‘சிங்கள பௌத்தத்தை’ மேலும் முன்னெடுப்பதற்கான முயற்சியாகும்.

பயன்படுத்தப்படும் முறை மீண்டும் மீண்டும் வருகிறது: ஆராய்ச்சி என்ற பெயரில், தொல்லியல் துறை சில தோண்டுகிறது, குறிப்பாக இந்து கோவில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியைச் சுற்றி. பழங்கால தொல்பொருட்கள் வசதியாகக் காணப்படுகின்றன, அவை தெற்கிலிருந்து கொண்டு வரப்பட்டு அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட இடத்தில் நடப்பட்டிருக்கலாம், மேலும் அவை முக்கியமான பௌத்தப் பொருள்களாகக் கூறப்படுகின்றன. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் இந்து கோவில்களை இடித்து, அவற்றின் எச்சங்களில் புத்த கோவில்களை எழுப்புகின்றனர். இதனைத் தொடர்ந்து தமிழர்களின் விளைநிலங்கள் தென்பகுதியில் இருந்து புதிதாக வந்துள்ள சிங்களக் கிராம மக்களிடம் கையளிக்கப்படுகிறது.

வனத் துறைக்கும் இதே மாதிரிதான்: தமிழ் விவசாயிகள் தங்கள் பூர்வீக நிலங்களில் விவசாயம் செய்வதைத் தடுக்கும் உத்தரவுகளுடன், தவறான பாதுகாப்புக் கோரிக்கைகளின் கீழ், துறைக்கு நிலம் ஒதுக்கப்படும். சில மாதங்களுக்குப் பிறகு, சிங்களக் குடியேற்றங்கள், பொலிஸ் மற்றும் இராணுவத்துடன் கொண்டு வரப்படுகின்றனர், அதே நேரத்தில் தமிழர்கள் அவர்களது வீடுகளிலிருந்தும் வாழ்வாதாரங்களிலிருந்தும் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுகிறார்கள்.

ஒரு முழு மக்களையும் அழிக்க இலங்கை அரசு திட்டமிட்டு முயற்சிப்பதால், நாளுக்கு நாள் தமிழர்கள் தங்கள் சொத்துக்களையும் கலாச்சார பாரம்பரியத்தையும் மேலும் மேலும் இழக்கின்றனர்.

1980 களில் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தியதற்கு நில அபகரிப்பு ஒரு முக்கிய காரணம்.

இது மீண்டும் நடைபெறுவதை நாங்கள் விரும்பவில்லை, ஆனால்
இந்த குண்டர், குற்றச் செயல்களுக்கு எதிராக சர்வதேச சமூகம் எங்கள் உதவிக்கு வராத வரையில் இதில் கொஞ்சம் நம்பிக்கை இருப்பதாகத் தெரிகிறது.

தொல்பொருள் மற்றும் வனத் துறைகளை அங்கீகரிப்பது முதல் படி: பயங்கரவாதத் தலைவர்களால் ஆளப்படும் பயங்கரவாத அமைப்புகள். முகமூடி கிழிக்கப்படும் போது, ​​அவர்கள் ஒரு மிருகத்தனமான, இனப்படுகொலை ஆட்சியின் முன்கூட்டியே காவலர்களே தவிர வேறில்லை என்பது தெளிவாகிறது.

நாம் வாழ்வதற்கும், அமைதியைக் காப்பதற்கும், தமிழர்களுக்கு பாதுகாப்பான மற்றும் பாதுகாக்கப்பட்ட இறையாண்மையுள்ள நாடு தேவை.

வாக்கெடுப்பு மூலம் இதை நிறைவேற்ற முடியும். 1999 இல் கிழக்கு திமோரில் செய்தது போல், வாக்கெடுப்பை ஒழுங்கமைக்கவும் மேற்பார்வை செய்யவும் அமெரிக்கா உதவ வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். உங்கள் தலையீடு இந்த பயங்கரமான துயரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.

இக்கட்டான நேரத்தில் எங்களின் அவலநிலையை கருத்தில் கொண்டதற்கு நன்றி என குறிப்பிடப்பட்டுள்ளது

வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் சிவில் உடையில் இளைஞர்கள் மீது தாக்குதல் : ஒருவர் மருத்துவமனையில் : ஒருவர் கைது

மாங்குளம் துணுக்காய் வீதியில் நேற்று சனிக்கிழமை (டிச. 3) சிவில் உடையில் வந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் நடத்திய தாக்குதலில் காயமடைந்த இளைஞர் கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்தோடு மேலும் இரு உத்தியோகத்தர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: சமீப காலமாக பல்வேறு பிரதேசங்களில் வனவிலங்குகளை வேட்டையாடுபவர்கள் மற்றும் அதற்கு பயன்படுத்தும் ஆயுதங்கள் வைத்திருப்பவர்களை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கைதுசெய்து வருகின்றனர்.

அதன் தொடர்ச்சி நடவடிக்கையாக நேற்று மாலை மாங்குளம் துணுக்காய் வீதியில், மாங்குளம் நகருக்கு அருகில் உள்ள வீதியினூடாக சென்ற இளைஞரை சிவில் உடையில் இருந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் இடைமறித்துள்ளனர்.

குறித்த உத்தியோகத்தர்கள் இளைஞரை சோதனை செய்ய முற்பட்டபோது “நீங்கள் யார்” என்று இளைஞர் கேட்டுள்ளார். அத்தோடு, அதிகாரிகளிடம் பணிக்கான அடையாள அட்டையை காண்பிக்குமாறும் கூறியுள்ளார். எனினும், அதிகாரிகள் தங்கள் அடையாள அட்டையை காண்பிக்க மறுத்துள்ளதாக குறித்த இளைஞர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த வாக்குவாதத்துக்கு மத்தியில் இளைஞரின் சகோதரரும் அவ்விடத்துக்கு வந்துள்ளார். அவரும் அதிகாரிகளிடம் அடையாள அட்டையை கேட்க, இரு தரப்பினரும் முரண்பட்டுள்ளனர்.

அதன்போது சிவில் உடையில் இருந்த ஒருவர் சிவில் பாதுகாப்பு திணைக்கள அடையாள அட்டையை காண்பித்துள்ளார். அதன் பிறகும் “வீதியால் செல்பவர்களை சிவில் உடையில் இடைமறித்து சோதனையிட உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது” என இளைஞர் கேள்வியெழுப்ப, கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அவ்வேளை சிவில் உடையில் இருந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இளைஞர் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவித்த பாதிக்கப்பட்ட இளைஞர், பின்னர் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அதனை தொடர்ந்து மாங்குளம் பொலிஸாரும் சம்பவ இடத்துக்கு வந்து, விசாரணைகளை மேற்கொண்டபோது அதிகாரிகள் தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இளைஞரின் சகோதரர் தெரிவிக்க, அவரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற பொலிஸார், அதிகாரிகளின் வாக்குமூலத்தை பதிவு செய்து, இளைஞரின் சகோதரரை கைதுசெய்துள்ளனர்.

அதனையடுத்து இரண்டு அதிகாரிகள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தாக்குதலுக்குட்பட்ட இளைஞர் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக தற்போது கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்பது தெரியவருகிறது.

இந்நிலையில் இந்த சம்பவம் அப்பகுதி மக்களுக்கு கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீருடையின்றி சிவில் உடையில் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் செயற்பட்டமைக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

வனஜீவராசிகள் உத்தியோகத்தர்கள் சிவில் உடையில் வந்தால், அவர்கள் தங்களை அடையாளப்படுத்தி சோதனை நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்றும், பொறுப்பின்றி கடமையாற்றும் அதிகாரிகள் மீது உரிய திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் மாங்குளம் கற்குவாரி பகுதியில் திணைக்கள சீருடை அணியாத நிலையில், சிவில் உடையில், குறிப்பாக, ஒருவர் (ஜம்பர்) கட்டை காற்சட்டை அணிந்து, கணவர் வீட்டில் இல்லாதபோது மனைவி, பிள்ளைகள் மட்டுமே இருந்த நிலையில், வீட்டுக்குள் நுழைந்து, சோதனையிட்டுச் சென்றுள்ளமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக பல இடங்களில் திருடர்களும் அதிகாரிகள் என பொய் கூறி வீடுகளுக்குள் புகுந்து, பொருட்களை திருடிச் சென்ற சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

இவ்வாறான நிலையில் வனஜீவராசிகள் திணைக்கள உயர் அதிகாரிகள், தங்களது பணியாளர்களை உரிய அடையாளப்படுத்தலுடன் கடமைகளில் ஈடுபட பணிக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Posted in Uncategorized

யானைகளிடமிருந்து மக்களை பாதுகாக்க புதிய வனப்பாதுகாப்பு அலுவலகங்கள் மட்டக்களப்பில் அமைக்கப்படல் வேண்டும் – ஜனா எம்.பி

மட்டக்களப்பு மாவட்டத்தில் யானைகளில் தாக்குதல்கள் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் யானைகள் உயிர் இழக்கும் சம்பவங்களும் பதிவாகியுள்ளன இவற்றை தடுப்பதற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் வன பாதுகாப்பு அலுவலகங்கள் மிக மிக குறைவான அளவிலேயே உள்ளன. எனவே புதிய அலுவலகங்கள் அமைக்கப்படவேண்டுமெனவும், சட்டவிரோத மண் அகழ்வினை தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (2) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுற்றாடல் அமைச்சு,வனஜீவராசிகள் மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சு,சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

சுற்றாடல் வன ஜீவராசிகள் வன வளங்கள் சுற்றுலாத்துறை காணி போன்ற முக்கியமான மூன்று அமைச்சுகளின் கீழ் உள்ள ஐந்து அமைச்சுக்கள் விடயதானம் சம்பந்தமான விவாதம் இன்று நடைபெறுகின்றது. இந்த நாட்டிற்கு வளத்தை ஏற்படுத்துவதும் இந்த நாட்டிலே கூடுதலான பிரச்சனைகளை கொண்டதுமான இந்த அமைச்சுகள் இன்று விவாதத்தில் இருக்கின்றது. உண்மையிலேயே இலங்கையில் 25 மாவட்டங்களில் 18 மாவட்டங்கள் யானைக்கும் மனிதனுக்கும் இடைப்பட்ட மோதல் உள்ள மாவட்டங்களாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றது. அதிலும் ஆறு மாவட்டங்கள் கூடுதலான பிரச்சினை உள்ள மாவட்டங்களாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றது. அதிலே கிழக்கு மாகாணத்தை சேர்ந்த மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை போன்ற மாவட்டங்களும் பொலநறுவை அனுராதபுரம் குருநாகல் போன்ற மாவட்டங்களுடன் சேர்த்து மேலதிகமாக புத்தளம் மஹியங்கணை பிரதேசங்களும் இன்று யானைக்கும் மனிதர்களுக்கும் இடையிலே மோதல்கள் உருவாகும் ஒரு பிரதேசங்களாக அடையாளப்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்றது.

குறிப்பாக நான் பிரதிநிதித்துவப்படுத்தும் மட்டக்களப்பு மாவட்டத்தை பற்றி பேசலாம் என்று நினைக்கின்றேன் மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு முன்பு யானையினால் தாக்கப்பட்டு 20 மனிதர்கள் உயிரிழந்திருக்கின்றார்கள்,24 பேர் காயப்பட்டு இருக்கின்றார்கள். அதேபோன்று முதலையினால் பாதிக்கப்பட்ட ஒருவர் மரணம் அடைந்திருக்கின்றார், இன்னொருவர் காயமடைந்திருக்கின்றார். அதே நேரத்திலே 14 யானைகள் இந்த வருடத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இறந்திருப்பதுடன் 205 வீடுகள் யானைகளினால் சேதமாக்கப்பட்டிருக்கின்றது. 2021 ஆம் ஆண்டு 18 மனிதர்கள் இறந்திருக்கின்றார்கள் யானையினால் தாக்கப்பட்டு, முதலையினால் தாக்கப்பட்டு மூன்று பேர் இறந்திருக்கின்றார்கள். 2017 இல் இருந்து 2022 காலப்பகுதியில் ஐந்து ஆண்டு காலப்பகுதியில் யானையினால் தாக்கப்பட்டு 78 பேர் மரணம் அடைந்திருக்கின்றார்கள். அதேவேளையில் 95 மனிதர்கள் காயப்பட்டு இருக்கின்றார்கள். முதலையினால் 15 மனிதர்கள் இறந்திருக்கின்றார்கள். வீடுகள் கூட 550 வீடுகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் யானையினால் சேதம் ஆக்கப்பட்டிருக்கின்றது. அதே வேளையிலே இந்த ஐந்தாண்டு காலத்திலும் 90 யானைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் இறந்திருக்கின்றன. இதற்கு எல்லாம் காரணம் மட்டக்களப்பு மாவட்டத்தில் வன பாதுகாப்பு அலுவலகங்களும் அலுவலர்களும் மிகக் குறைவாக இருக்கின்றமையே. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரே ஒரு ரேஞ்ச் ஆபீஸ் (Range office) மாத்திரமே இருக்கின்றது அத்துடன் பீட் ஆபீஸ் (Beat office) என்று சொல்லப்படும் உப அலுவலகங்கள் இரண்டு மாத்திரமே இருக்கின்றது. ஏனைய மாவட்டங்களை ஒப்பிடும்போது இது மிகவும் குறைவான அலுவலகங்களாகவும் குறைவான அலுவலர்களைக் கொண்ட ஒரு மாவட்டமாகவும் இருக்கின்றது. உதாரணத்திற்கு திருகோணமலை மாவட்டத்தில் ஆறுக்கு மேற்பட்ட ரேஞ்ச் ஆபீஸ்கள் இருக்கின்றது. கிட்டத்தட்ட பீட் அலுவலகங்களுடன் சேர்த்து 10 அலுவலகங்கள் இருக்கின்றது. ஒரு அலுவலகத்திற்கு நிரந்தரமாக நான்கு பேர் தான் அங்கு கடமையில் ஈடுபட்டாலும் இந்தப் பெரிய மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மூன்று அலுவலகத்திலும் பன்னிரண்டு பேர் தான் யானையிலிருந்து மனிதர்களை காப்பாற்றுவதற்கோ மனிதர்களிடமிருந்து யானைகளை காப்பாற்றுவதற்கோ 12 அலுவலர்கள் தான் அங்கு இருக்கின்றார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு லட்சம் வேலை வாய்ப்பு வேலை வாய்ப்புக்கு உட்படுத்தப்பட்டு 180 பேர் யானை பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டு இருந்தாலும் 25 பேர் அந்த வேலைகளில் இருந்து விட்டு விலகி இருக்கின்றார்கள். காரணம் என்னவென்றால் அவர்களுக்கு ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் மாத்திரமே சம்பளமாக வழங்கப்படுகின்றது. தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் இந்த ஆயிரம் ரூபாய் அவர்களது குடும்பத்தை கொண்டு நடத்துவதற்கு போதாத காரணத்தினால் அவர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைகளுக்கு சென்றிருக்கின்றார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தை பொருத்தமட்டிலே 210 கிலோமீட்டர் தூரத்திற்கு யானை வேலி போடப்பட்டிருக்கின்றது. கிரான், வாகரை பிரதேசத்திலே 104 கிலோ மீட்டர்களுக்குரிய யானை வேலிக்குரிய பொருட்கள் அங்கு வந்திருக்கின்றது. ஆனால் அங்கு யானை வேலிகள் அமைக்கப்படவில்லை. மட்டக்களப்பு மாவட்டத்தை பொருத்தமட்டிலே தற்போது மட்டக்களப்பு நகரத்திலே ஒரு ரேஞ்ச் ஆபிஸும் வெல்லாவெளியிலும் கிரானிலும் அந்த பீட் ஒப்பீஸ்கள் இருக்கின்றது. எதிர்காலத்திலே மட்டக்களப்பிலே இரண்டு ரேஞ்ச் ஆபிஸ்களை நீங்கள் உருவாக்க வேண்டும். வெல்லாவெளி பிரதேசத்தில் ஒரு ரேஞ்ச் ஆபிஸும் கிரான் பிரதேசத்தில் ஒரு ரேஞ்ச் ஆபிஸும் மூன்று பீட் ஒப்பீஸ்களும் அத்தியாவசியமாக அவசரமாக தேவைப்படுகின்றது. புல்லுமலை, கரடியியனாறை மையப்படுத்தி ஒரு அலுவலகமும், வவுணதீவு, பஞ்சேனை, பட்டிப்பளை போன்றவற்றை மையப்படுத்தி அலுவலகமும் வாகரை பிரதேசத்தை உள்ளடக்கி ஒரு அலுவலகமும் அமைக்க வேண்டிய ஒரு தேவை அங்கு இருக்கின்றது.

இன்னமும் குறைந்தபட்சம் வாகரை பிரதேசத்தில் இருந்து 300 கிலோமீட்டருக்கும் மேலாக வெல்லாவெளிப் பிரதேசம் வரை யானை வேலி இருக்க வேண்டிய இடங்களிலே பகலில் மாத்திரமே அந்த ஒரு லட்சம் வேலை வாய்ப்புக்கு உட்படுத்தப்பட்டவர்கள் அங்கு வேலையில் ஈடுபடுகின்றார்கள். இரவு வேலைகளில் தான் யானைகள் யானை வேலியை உடைத்துக்கொண்டு விவசாயிகளின் வயல்வெளிகளிலும், கிராமப்புறங்களில் இருக்கும் பயன் தரும் மரங்களையும் அவர்கள் சேமித்து வைத்திருக்கும் நெல்களை சேதப்படுத்துகின்றது இந்த யானைகள். எனவே மாவட்டத்திற்கு நீங்கள் மேலதிகமாக மூன்று அலுவலகங்களை கொடுக்க வேண்டும்.

வெல்லாவெளிப் பிரதேசத்தை பொருத்தமட்டில் தளவாய் காடு ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட அந்த காட்டிலே பெரிய மரங்கள் எதுவுமே இல்லை. அந்த தளவாய் காட்டிற்குள் வெறும் சின்ன சின்ன பற்றைக் காடுகள் தான் இருக்கின்றது. யானைகள் கிட்டத்தட்ட 70,75 யானைகள் அந்த பிரதேசத்திலே பகலிலே ஒளித்து நின்று இரவிலே கிராமப்புறங்களில் உள்நுழைந்து கிராம வீடுகளை சேதப்படுத்துவது மாத்திரமல்லாமல் அந்த பிரதேச மக்கள் தங்களது உயிரை கையில் பிடித்தபடியே இரவிலே தூங்கிக் கொண்டிருக்கின்றார்கள். எனவே அந்தப் பிரதேசம் தற்போது வனவளத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. வன வளத்திற்குரிய பெரிய காடுகள் எதுவுமே அந்த பிரதேசத்தில் இல்லாத காரணத்தினால் அந்த பிரதேசம் துப்புரவு செய்யப்பட்டு எதிர்காலத்திலே மேய்சல் தரைக்கு பயன்படுத்தப்படுமாக இருந்தால் அந்தப் பிரதேசத்தில் மாடுகள் ஆடுகள் கூட அங்கு மேய்ச்சலுக்காக கொண்டு செல்லும் போது யானைகள் தங்க வேண்டிய ஒரு நிலை அங்கு ஏற்படாதது மாத்திரமில்லாமல் அந்த பிரதேச மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை கூட கூட்டி கொள்வார்கள் என்பதற்காக வனவளத் திணைக்களம் எதிர்காலத்தில் நீங்கள் அந்த பிரதேசத்தை விடுவிக்க வேண்டும் என்று இத்தால் நான் கேட்டுக் கொள்கின்றேன்.

வனவளத் திணைக்களம் கொழும்பிலிருந்து ஜிபிஎஸ் ஊடாக காட்டை கணிப்பிட்டு கல்போடுகின்றீர்கள் நீண்ட காலமாக வயல் செய்த காணிகள்,நீண்ட காலமாக மேட்டு பயிர் செய்த காணிகள், அது மாத்திரமல்லாமல் மட்டக்களப்பு வாவியின் ஓரமாக உள்ள காணிகளுக்கு கூட வனவளத் திணைக்களம் கல் போடுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிப்பளை பிரதேசத்தில் ஆற்றங்கரை ஒட்டிய பிரதேசங்களில் கடந்த காலங்களிலே இறால் வளர்ப்பு அங்கு நடைபெற்றது. தற்போது அந்த பிரதேச செயலகத்தினால் அந்த வாவியை ஒட்டிய கிட்டத்தட்ட 400 ஏக்கருக்கு மேற்பட்ட பிரதேசம் இறால் வளர்ப்புக்காக அடையாளப்படுத்தப்பட்டு அந்தப் பிரதேச மக்களுக்கு பிரித்து கொடுப்பதற்கு தயாராக இருக்கும் போது அந்த பிரதேசத்தைக் கூட நீங்கல் கல் போட்டு தடுக்கின்றீர்கள்.

எனவே மக்கள் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் இந்த பொருளாதாரச் சூழ்நிலையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் போது அந்த மக்கள் பொருளாதார ரீதியாக பலப்படுத்த கொஞ்சமாவது நெகிழ்வு தன்மையுடன் வனவளத் திணைக்களத்தினர் தங்களது நடவடிக்கைகளை செய்து கொள்ள வேண்டும். அத்துடன் சுற்றாடல் அமைச்சர் இங்கு இருக்கின்றார். எங்களுக்கு உறுதியளித்திருக்கின்றார் அங்கு மண் மாபியாக்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதாக சட்டத்துக்கு முரணாக மண்ணேற்றுபவர்களை கட்டுப்படுத்துவதாக உறுதியளித்திருக்கின்றார்.

ஆனால் அங்கு இராணுவம், போலீஸார் அவர்களது அனுசரணையுடன் தற்போதும் இரவிலே மண் ஏற்றுவது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. தாண்டியடி விசேட அதிரடிப் படையினர் மிகவும் நிதானமாக அவர்கள் செயல்படுகின்றார்கள். சட்ட விரோதமாக மண் ஏற்றுவதை தடுக்கின்றார்கள் இருந்தாலும் சில இடங்களிலே குறிப்பாக சொல்ல போனால் வாழைச்சேனை பொலீஸ் பிரிவுக்கு உட்பட்ட பட்டியடி வழி வாகனேரி சந்தியாறு போன்ற இடங்களிலே 8500 ஏக்கர் நெற் பயிர்க்காணிகளுக்கு அதனுடாக ஊடறுத்துச் செல்லும் ஆற்றிலிருந்து தண்ணீர் பாய்ச்ச முடியாத ஒரு நிலையில் இருக்கின்றது. ஏனென்றால் அந்த ஆற்றிலே மண்ணெடுப்பதனால் வயல்வெளியில் இருந்து ஆறு மிகவும் பள்லத்தில் இருக்கின்றது. எனவே எருக்கலம் காட்டு பாலத்துக்கு பக்கத்திலே ஒரு விசேட அதிரடிப்படையின் கண்காணிப்பு சோதனைச் சாவடி ஒன்று அமைக்கப்படின் அந்த பிரதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக மண் அகற்றுவதை தடுக்கலாம். ஏறாவூர்ப்பற்று பிரதேசத்திலே வயல் வெளியில் ஒரு அகழ் எந்திரம் (Excavator)அது வயல் திருத்துவதற்கும் இல்லை. பகலிலே சும்மாக தரித்து நிற்கின்றது. இரவிலே சட்டவிரோதமாக அந்த பிரதேசத்திலே அவ்வியந்திரத்தைப் பயன்படுத்தி மண் அகழவதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன. இதை அமைச்சர் அவர்கள் கவனத்தில் எடுத்து அந்த பிரதேசத்தை காப்பாற்ற வேண்டும் என்றார்.

வவுனியா வடக்கில் வாழ்வாதாரத்திற்காக விவசாயம் செய்தவர்களுக்கு எதிராக வனவளத்திணைக்களம் முறைப்பாடு : இருவர் கைது

வவுனியா வடக்கு, காஞ்சிரமோட்டைப் பகுதியில் குடும்ப வாழ்வாதாரத்திற்காக விவசாயம் செய்த குடும்பஸ்தர்களுக்கு எதிராக வனவளத் திணைக்களத்தால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக இருவர் நெடுங்கேணி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யுத்தம் காரணமாக தென்னிலங்கையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை 1977 – 1980 வரையான காலப்பகுதியில் வவுனியா வடக்கு, காஞ்சிரமோட்டைப் பகுதியில் குடியேற்றம் செய்யப்பட்டு அவர்களின் வாழ்வாதாரத்திற்கான விவசாய காணிகளும் வழங்கப்பட்டன.

நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக இந்தியா உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களுக்கும் இடம்பெயர்ந்து சென்று யுத்தம் முடிவடைந்த பின் 84 வரையிலான குடும்பங்கள் அப் பகுதியில் மீள்குடியேறினர்.

அம் மக்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமையால் மீளவும் பல குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறிய நிலையில் 15 குடும்பங்கள் வரையில் தற்போது அங்கு வசித்து வருகின்றனர். அம் மக்கள் தமது வாழ்வாதாரத்திற்காக தமது வீடுகளுடன் இணைந்த காணித் துண்டங்களில் தோட்ட செய்கை மற்றும் நெற் செய்கை என்பவற்றை மேற்கொள்வதற்காக காணிகளை உழுது பயிரிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அங்கு சென்ற வனவளத் திணைக்களத்தினர் அது வனவளத்திணைக்களத்திற்குரிய காணி எனத் தெரிவித்து அவர்கள் பயிர்ச் செய்கை நடவடிக்கையில் ஈடுபட தடை விதித்துள்ளதுடன், உழுது பயிற்செய்கையில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நெடுங்கேணி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

முறைப்பாட்டையடுத்து வவுனியா வடக்கு, காஞ்சிரமோட்டைப் பகுதியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டு வவுனியா நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் நேற்று (04) பிணையில் விடுவிடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தமது குடியிருப்பு காணிகளில் ஒரு வயிற்றுக் கஞ்சிக்கு கூட பயிர் செய்ய வனவளத் திணைக்களம் அனுமதிக்கவில்லை எனவும் இது குறித்து அரச அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் மௌனம் காத்து வருவதாகவும் மீள்குடியேறிய மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்