கீரிமலை ஜனாதிபதி மாளிகை அளவீட்டுப்பணி மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது

யாழ்ப்பாணம் – கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்கும் நோக்கில் இன்று வெள்ளிக்கிழமை (15) அளவீடுகள் செய்வதற்கு நில அளவை திணைக்களம் வருகை தந்தது.

இந்நிலையில், குறித்த காணி அளவீட்டுக்கு அப்பகுதி மக்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டனர். அத்துடன் காணியினை வழங்க முடியாது என கடிதம் எழுதி கையொப்பமிட்டு வழங்கினர். இந்நிலையில் நில அளவை திணைக்களம் அங்கிருந்து திரும்பிச் சென்றது.

தெல்லிப்பளை பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள நகுலேஸ்வரம் (ஜே/226), காங்கேசன்துறை (ஜே/233) கிராம சேவகர் பிரிவுகளில் 12.0399 ஹெக்டயர் ( 29 ஏக்கர்) நிலம் அளவீடு செய்வதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.

ஆழ்வான்மலையடி, வேலர்காடு, புண்ணன்புதுக்காடு, பத்திராயான் மற்றும் புதுக்காடு, சோலைசேனாதிராயன் என அழைக்கப்படும் பகுதிகளிலேயே இந்த நில அளவீடு இடம்பெறவுள்ளது என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த அளவீட்டு பணிக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நில அளவை திணைக்களம் திரும்பிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

மயிலத்தமடு மாதவனைப் பகுதியில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுமாறு நீதிமன்றம் உத்தரவு

மயிலத்தமடு மாதவனைப் பகுதியில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுமாறு நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. இன்று  (13) ஆம் திகதி திங்கட்கிழமை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கின்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு – மயிலத்தமடு மாதவனை பகுதியில் மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான அரச காணியில் அத்துமீறி குடியேறியதாக தெரிவித்து 13 பேருக்கு எதிராக ஏறாவூர் நீதிமன்றில் மகாவலி அதிகார சபையினால் கடந்த மாதம் 22 ஆம் திகதி வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று  தீர்ப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பகுதியில் அத்துமீறி குடியேறியதாக தெரிவிக்கப்பட்ட 13 பேரும்  இன்று நீதிமன்றில் ஆஜராகினர். மகாவலி அதிகார சபை சார்பாக  அரச சட்டத்தரணி டில்கானி டி சில்வா ஆஜராகியிருந்தார்.

இந்நிலையில் அதிகாரம் பெற்ற அதிகாரிகளினால் வழங்கப்பட்ட  எந்த  ஆவணமும்  அத்துமீறி குடியேறியவர்கள் எனக் குற்றம் சாட்டப்பட்டவர்களினால் நீதிமன்றுக்கு  சமர்ப்பிக்கப்படாததால் மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பகுதியில் அத்துமீறி குடியேறிய குறித்த 13 பேரையும் வெளியேற்றுமாறு நீதிவான் கட்டளை பிறப்பித்தார்.

மயிலத்தமடு, மாதவனை பகுதியில் அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்களை அகற்றுமாறு கோரி அப்பகுதி கால்நடை பண்ணையாளர்கள் 60வது நாளாகவும் இன்றும் போராட்டம் முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மயிலத்தமடு ஆக்கிரமிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்! பொலிஸார் – பண்ணையாளர்கள் முறுகல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மேய்ச்சல் தரைப் பிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்ட காணிகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்தவர்களை வெளியேற்றுமாறு கோரி பண்ணையாளர்கள் இன்று மட்டக்களப்பு – கொம்மாதுறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செங்கலடி மத்திய கல்லூரி நிகழ்வுக்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் மயிலத்தமடு – மாதவனைப் பகுதியில் தாங்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக நேரில் முறைப்பாடு செய்வதற்காகப் பண்ணையாளர்கள் எடுத்த முயற்சிக்குப் பொலிஸார் தடை ஏற்படுத்தியதால் பண்ணையாளர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது.

ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதியில் அதிகளவிலான பொலிஸார் மற்றும் ராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

அத்துடன் வானில் ஹெலிகொப்டரும் வட்டமிட்டது. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பண்ணையாளர்களுடன் அரசியல்வாதிகளும், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளும், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

வவுனியாவில் பௌத்த பிக்குவால் குழப்பம்; அளவீட்டுப் பணிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்த தமிழ் மக்கள்

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தமிழ் கிராமமான கருப்பனிச்சாங்குளம் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தை அருகில் உள்ள கொக்குவெளி பகுதி சிங்கள மக்களுக்கு மயானம் அமைக்க அளவீடு செய்ய வந்த நில அளவைத் திணைக்களத்தினர் மக்களது எதிர்ப்பையடுத்து அங்கிருந்து வெளியேறிச் சென்றிருந்தனர்.

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கருப்பனிச்சான்குளம் கிராமத்தில் வசித்து வந்த தமிழ் மக்கள் யுத்தம் காரணமாக இடப்பெயர்ந்து சென்றதுடன், யுத்தம் முடிவடைந்த பின் மீண்டும் வருகை தந்து தமது காணிகளில் குடியேறி, விவசாய நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த கிராமத்தில் தமது மயானம் இருந்ததாக தெரிவித்து அருகில் உள்ள கொக்குவெளி சிங்கள கிராம மக்கள் இரு பிக்குகளின் தலைமையில் குறித்த பகுதியில் அமைந்துள்ள விவசாய காணி ஒன்றினை உரிமை கோரி வந்ததுடன், தற்போது அதனை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளதாகவும் தெரிவித்து குழப்பம் விளைவித்து வந்தனர்.

இது தொடர்பில் குறித்த காணியினை விவசாய நடவடிக்கைக்கு பயன்படுத்தி வரும் கருப்பனிச்சாங்குளம் கிராமத்தை சேர்ந்த நபர் கருத்து தெரிவிக்கையில்,

இது எனது பரம்பரை வழியான காணி. இங்கு எனது மூதாதையர்கள் முதல் நாங்கள் வரை நீண்ட காலமாக குடியிருந்து வருகின்றோம். பின்னர் இடம்பெயர்ந்து சென்ற நிலையில் மீண்டும் வருகை தந்து காணியில் விவசாய செய்கையினை முன்னெடுத்து வருகின்றோம். தற்போது எமது காணியில் காய்க்கும் நிலையில் பெரிய தென்னை மரங்களும் நிற்கின்றன.

இந்நிலையில் எனது காணியில் சிங்கள மக்களுக்கான மயானம் இருந்ததாக கூறி, அதனை மீள அமைப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு, எனது காணிக்கான அனுமதி பத்திரத்தை கூட பிரதேச செயலகத்தால் வழங்காமல் முடக்கி வைத்துள்ளனர்.

எனது காணியில் முன்பு மயானம் இருந்தமைக்கான எந்த சான்றுகளும் இல்லை. அல்லது சடலங்கள் புதைக்கப்பட்டமைக்கான சான்றுகள் கூட இல்லை. குறித்த சிங்கள கிராமத்திற்கு அண்மையில் மூன்று மயானங்கள் உள்ளது. அவர்கள் அங்கு சடலங்களை புதைக்க முடியும். தற்போது எனது காணியை சுற்றி தமிழ் மக்கள் குடியமர்ந்துள்ளனர். எனவே இங்கு மயானம் அமைக்கும் செயற்பாட்டை முன்னெடுப்பது நீதியான செயற்ப்பாடாக தெரியவில்லை எனத் தெரிவித்தார்.

இதேவேளை, குறித்த பகுதிக்கு பிக்கு இருவரின் தலைமையில் வருகை தந்த சிங்கள மக்கள் குறித்த காணியில் தங்களது மூதாதையர்கள் புதைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த காணியில் மயானம் அமைப்பதற்காக அதனை மீட்டுத்தருமாறும் பிரதேச செயலாளரிடம் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன் மற்றும் பொலிசார் இரு தரப்புடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். குறித்த காணி 1967 ஆம் ஆண்டில் மயானமாக இருந்ததாக நில அளவைத்திணைக்களத்தின் கள ஆய்வு குறிப்பில் இருப்பதாக பிரதேச செயலாளர் இதன்போது தெரிவித்தார்.

எனினும், நில அளவைத் திணைக்களத்தின் 2019 அறிக்கையின் படி அது வன இலாகாவிற்குரிய காணியாக குறிப்பிடப்பட்டுள்ளதுடன், மயானம் இருந்ததாக எந்த பதிவுகளும் இல்லை என தமிழ் மக்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து பிரதேச செயலாளர் மற்றும் பொலிசாருடன் முரண்பட்ட தமிழ் மக்கள், இப்படி ஒரு மயானம் இருப்பதாக பிரதேச சபையின் அறிக்கையில் கூட இல்லை. நாம் இந்த காணியை அளவீடு செய்வதற்கு இடமளிக்கமாட்டோம். மயானம் அமைப்பதற்கு சிங்கள கிராமத்திலேயே பல அரச காணிகள் இருக்கின்றது. அங்கு அதனை அமைக்க முடியும் என தெரிவித்ததுடன், நீண்டகாலமாக குடியிருக்கும் நிலையில் நீதிமன்றம் ஊடாக இதற்கு தீர்வைக் காணுமாறும் தெரிவித்தனர்.

எனினும், குறித்த காணியை நில அளவீடுசெய்து சிங்கள மக்களின் மயானத்திற்காக ஒதுக்குமாறு பௌத்த மதகுரு வருகை தந்த அதிகாரிகளிடம் பலமுறை கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பாக நீதிமன்றம் சென்று அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்குமாறு பிரதேச செயலாளர் இருதரப்புக்கும் தெரிவித்ததுடன், அதுவரை தற்காலிகமாக அயலில் உள்ள மயானத்தில் இறந்தவர்களின் சடலங்களை புதைக்குமாறும் சிங்கள மக்களுக்கு தெரிவித்திருந்தார். இதனையடுத்து நிலமை சீராகியது.

குழப்ப நிலையால் அளவீட்டுப் பணிகளுக்காக வருகை தந்த நில அளவைத்திணைக்களத்தின் அலுவலர்கள் காணியை அளவீடு செய்யாமல் திரும்பிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சுழிபுரம் பறாளாய் ஆலய வர்த்தமானி வெளியீட்டுக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்திற்கு அழைப்பு

சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள அரச மரத்தை சங்கமித்தை  நாட்டிய மரம் என  வெளியிடபட்டட அரச வர்த்தமானி மீளப்பெறப்படவேண்டும் என தெரிவித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நாளை காலை பத்து மணியளவில் சுழிபுரம் சந்தி. பகுதியில் காலை கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் அழகராசா விஜயகுமார் விடுத்துள்ள ஊடக அறிக்கையில், வரலாற்றினை திரிபுபடுத்தும் சிங்கள அரசு இன்னும் ஒரு படி மேல் சென்று சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலய மேலும் வரலாற்றினை திரிபடைய செய்துள்ளது.

சங்கமித்தா இலங்கைக்கு வருகை தந்ததாக கி.மு 3ஆம் நூற்றாண்டு என வரலாற்று மூலாதாரங்களில் திரிபடைய கூறப்பட்டுள்ளது.  இந்நிலையில் ஆலய தர்மகர்த்தாவினர் குறித்த ஆலயம் 1768 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்படும் பொழுது எதுவித அரச மர எச்சங்கள் குறித்தும் தமது முன்னையவர்களோ அல்லது ஆதாரங்களோ குறிப்பிடவில்லை எனவும் தற்பொழுது ஆலயத்தில் உள்ள மரம் மிக குறைந்தளவான காலப்பகுதிக்கு உரியது எனவும் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த ஆலயத்தினரிடம் ஆகக்குறைந்த  கலந்துரையாடலை கூட செய்யாது  எதேச்சதிகாரமான முறையில் இந்த  சிங்கள அரசு திட்டமிட்ட  பெளத்தமயமாக்கல் செயற்றிட்டத்தை முன்னெடுத்துள்ளது.

தொடர்ச்சியாக சிங்கள  அரசின் திட்டமிட்ட பௌத்த மயமாக்கலை மேற்கொள்ளும் அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் இதனை வலியுறுத்தி நாளைய தினம் சனிக்கிழமை காலை 10 மணியளவில் சுழிபுரம் சந்தி பகுதியில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கபடவுள்ளது.

ஆகவே இதனை வலுச்சேர்க்கும் முகமாக பொதுமக்கள், சமூக மட்ட அமைப்புக்கள், தமிழ் தேசியத்தின்பால் செயற்படும் இளைஞர் யுவதிகள்,சிவில் சமூக பிரதிநிதிகள் தமிழ் தேசிய கட்சிகள் என அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மாதவனை மயிலத்தமடுவில் மீளவும் முளைத்த ஆக்கிரமிப்பு புத்தர்

இலங்கையின் கிழக்கே பண்ணையாளர்களுக்கு என ஒதுக்கப்பட்ட மாதவனை மயிலத்தமடு விடயம் பலராலும் அறியப்பட்டது.

மாதவனை மயிலத்தமடு பகுதியில் அதிகமான பண்ணையாளர்கள் கால்நடைகளை மேய்ப்பதற்காகவும் தங்களது வாழ்வாதாரத்தை மேற்கொள்வதற்காகவும் அப்பகுதி ஒதுக்கப்பட்டிருந்தமை வரலாறாகும்.

ஆனால் கடந்த சில வருடங்களாக மாதவனை மயிலத்தமடு பகுதியில் மகாவலியின் தலையீடு காரணமாக பண்ணையாளர்களும் கால்நடைகளும் பாதிப்புக்கு உள்ளானதுடன் பல கால்நடைகளும் சுடப்பட்டும் கத்திகளால் வெட்டப்பட்டும் உயிரிழந்த சம்பவங்கள் அரங்கேறி இருந்தது.

அதே வேளையில், அங்கு சென்று வருகின்ற பண்ணையாளர்களின் உயிர்களும் உத்தரவாதம் இல்லாதா நிலையும் என்ன நடக்கும் என்று தெரியாத ஒரு நிலைமையும் உருவாகி இருந்தது.

முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா ஜகம்பத் விவசாயம் செய்வதற்காகவும் பயிர் செய்வதற்காவும் கால்நடைகளின் இடமாக கருதப்படும் மாதவனை மயிலத்தமடு பகுதியில் அத்துமீறிய சிங்கள குடியேற்றங்களை உருவாக்கி அவர்களை பயிர்செய்கை மற்றும் விவசாயம் போன்ற தொழில்களில் ஈடுபடுத்தி பண்ணையாளர்களுக்கும் மகாவலிக்கும் பெரும்பான்மை இன மக்களுடனும் முரண்பாடு ஏற்படுத்தும் விதத்தில் பல முன்னெடுப்புகளை முன்னெடுத்திருந்தார்.

மயிலத்தமடு மாதவணையில் மகாவலியால் 2019 இல் அகற்றப்பட்ட விகாரை இருந்த இடத்தில் 2023.07.30 ஆம் திகதி மீண்டும் துப்பரவு பணியில் ஈடுபட்டுவருவதாகவும் மாறாக பண்ணையாளர்களை மகாவலி அதிகாரிகள் கைது செய்வதற்கு முயற்சிக்கின்றனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக வடக்கு கிழக்கில் தொல்பொருள் எனும் போர்வையில் தமிழர்களின் பாரம்பரிய காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கையில் சிறிலங்கா அரசாங்கம் மற்றும் பௌத்த மத இனவாத அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன.

தற்போது கிழக்கு மாகாணத்திலும் அவர்கள் தங்களது கைவரிசையை காட்ட ஆரம்பித்துள்ளமை பண்ணையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த காலங்களில் இருந்த கிழக்கு மாகாண ஆளுநர் கடும்போக்கு சிங்கள வாத சிந்தனையுடன் சிங்கள குடியேற்றம் இடம்பெற வேண்டும் என்றும் பண்ணையாளர்களை அடித்து துரத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பாக கள விஜயம் செய்த மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் கலாமதி பத்மராஜா இடமாற்றப்பட்டு சென்றிருந்தார்.

ஆனால் இன்று கிழக்கு மாகாணத்தில் ஒரு புதிய ஒரு ஆளுநர் வந்திருக்கின்ற போதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளும் ஒன்று சேர்ந்து இந்த கிழக்கு மாகாண பண்ணையாளர்களின் முதுகெலும்பாக இருக்கும் இந்த மாதவனை மயிலத்த மடு மேச்சல் தரை பகுதியை உடனடியாக பண்ணையாளர்களுக்கு வழங்கி அவர்களது வாழ்வாதாரத்தையும் கிழக்கு மாகாண மக்களுடைய பிரச்சனைக்கு உடனடியாக தீர்வையும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு காணி அபகரிப்புக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

முல்லைத்தீவு – அக்கரைவெளி காணி சுவீகரிப்புக்கு எதிராக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக இன்று மாலை 4 மணியளவில் ஒன்று கூடிய பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் இடம்பெற்றது.

இதன்போது மகாவலி அபிவிருத்தித் அதிகார சபையே நிலங்களை அபகரிக்காதே, எமது நிலம் எமக்கு வேண்டும் என பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.

அக்கரைவெளியில் 1500 ஏக்கர் காணியை சிங்களவர்களுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

29,000 ஏக்கர் காணிகளை மக்களிடம் மீளக் கையளிக்குமாறு ஜனாதிபதி செயலகம் அறிவுறுத்தல்

முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவள திணைக்களத்தினால் எல்லை நிர்ணயம் செய்யப்பட்ட 29,000 ஏக்கர் காணிகளை விடுவித்து மக்களிடம் கையளிக்குமாறு ஜனாதிபதி செயலகம் அனைத்து தரப்பினருக்கும் அறிவித்தல் விடுத்துள்ளது.

முல்லைத்தீவு மாகாண காரியாலயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில்இ வனத்துறை, மகாவெலிய மற்றும் தொல்லியல் திணைக்களம் முல்லைத்தீவு மக்களுக்குச் சொந்தமான சுமார் 100,000 ஏக்கர் காணிகளை எல்லைகளை பயன்படுத்தி ஆக்கிரமித்துள்ளதாக மாகாண கிராம அதிகாரிகள் மற்றும் மக்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பான அறிக்கையை ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பி வைத்த தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியதன் பின்னர் அந்த காணிகளை விடுவிப்பதற்கான உத்தரவு கிடைத்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரடியன்பற்று, புதுக்குடியிருப்பு,ஒட்டுச்சுட்டான், துணுக்காய், மாந்தை கிழக்கு மற்றும் வெலிஓயா ஆகிய மாகாணங்களின் காணிகளே இவ்வாறு விடுவிக்கப்பட உள்ளன.

விடுவிக்கப்படவுள்ள 29,000 ஏக்கர் காணிக்கு மேலதிகமாக மேலும் 17,000 ஏக்கர் காணியில் விவசாயம் செய்வதற்கு வன பாதுகாப்பு அதிகாரிகளால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மக்கள் ஜனாதிபதியின் செயலாளர் தலைமையிலான தேசிய கொள்கை வகுக்கும் குழுவிடம் மனுவொன்றை சமர்ப்பித்துள்ளனர்.

Posted in Uncategorized

குருந்தூர் மலை ஆதிசிவன் ஆலய கற்பூரத்தீயை சப்பாத்துக் காலால் மிதித்து அணைத்து பொலிஸாரும், சிங்கள இனவாதிகளும் அடாவடி

முல்லைத்தீவு குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் பொங்கல் வழிபாட்டுக்கு சென்ற தமிழ் மக்கள் பெரும் களேபரத்தின் மத்தியில் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். மலையிலிருந்து மக்களை கீழே இறக்குவதற்கு பொலிசார் பலப்பிரயோகம் மேற்கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பொலிசாரால் தாக்கப்பட்டதாகவும், தள்ளிவிழுத்தப்பட்டதாகவும் பலர் குற்றம்சுமத்தினர்.

குருந்தூர் மலையில் பொலிசார், விசேட அதிரப்படையினரின் பாதுகாப்பின் மத்தியில் சிங்கள இனவாதிகளும், பிக்குகளும் ஆடிய சன்னத்தினால் தமிழ் மக்களின் வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், முல்லைத்தீவு நீதிமன்றத்தின் உத்தரவும் கணக்கிலெடுக்கப்படவில்லை.

குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் இன்று பொங்கல் வழிபாடு மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது.

பொங்கல் விழாவுக்கு அனுமதி கோரி ஏற்பாட்டாளர்கள் நேற்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். நீதிமன்றம் அதற்கு அனுமதியளித்திருந்தது.

இன்று காலையில் பொங்கல் விழாவுக்காக தமிழ் மக்கள் சென்றபோது, அங்கு சிங்கள கடும்போக்காளர்கள் பலர் அழைத்து வரப்பட்டிருந்தனர். பௌத்த பிக்குகளும் குவிந்திருந்தனர். வெளியிடங்களில் இருந்து 2 பேருந்துகள் மற்றும் வாகனங்களில் அவர்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர்.

முல்லைத்தீவு மாவட்ட மக்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்கள். க.சிவனேசன், பா.கஜதீபன், து.ரவிகரன் உள்ளிட்டவர்களும் அங்கு சென்றிருந்தனர்.

பொங்கலுக்கான ஆயத்தங்கள் மேற்கொண்ட போது, அங்கு தீமூட்டி பொங்கல் செய்ய முடியாது என சிங்கள இனவாத தரப்பினர் மிரட்டல் விடுத்தனர். பிக்குகளும் சன்னதமாடினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. இரு தரப்பும் மோதுவதை போன்ற சூழல் ஏற்பட்டது.

முல்லைத்தீவு நீதிமன்றத்தின் அனுமதியுடனேயே பொங்கல் வழிபாட்டுக்கு வந்துள்ளதாக தமிழ் மக்கள் தெரிவித்த போதும், அதை சிங்கள இனவாத தரப்பினர் கிஞ்சித்தும் கணக்கிலெடுக்கவில்லை.

தொல்பொருள் திணைக்கள பிரதிநிதியொருவர் பிரசன்னமாகியிருந்தார். அவரும் பொங்கல் மேற்கொள்ள முடியாது என்றார்.

இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்று, நீதிமன்ற அனுமதியுடனேயே பொங்கலுக்கு வந்துள்ளதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் க.சிவனேசன் சுட்டிக்காட்டினார். அத்துடன், பொங்க முடியாது என்றால் அதை எழுத்துமூலம் தருமாறு கேட்டார்.

இதையடுத்து சுருதியை மாற்றிய தொல்பொருள் திணைக்கள பிரதிநிதி, கட்டுப்பாடுகளுடன் பொங்கல் செய்யலாம் என்றார்.

நிலத்தில் தீ மூட்டாமல், நிலத்தில் கல் வைத்து அதன் மேல் தகரம் வைத்து, அதன்மேல் கல் வைத்து தீமூட்டுமாறு கூறினார்.

தொல்பொருள் திணைக்களத்தினரின் அறிவுறுத்தலின்படி, தகரத்தின் மீது பொங்கல் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. தீமூட்ட தயாரான போது, மீண்டும் சிங்கள இனவாத தரப்பினரும், பிக்குகளும் ரகளையில் ஈடுபட்டனர்.

இதனால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது.

அப்போது முல்லைத்தீவு பொலிசார் அடாத்தாக செயற்பட்டு, பொங்கலுக்கு செய்யப்பட்ட ஏற்பாடுகளை சிதைத்தனர். பொலிஸ் அதிகாரியொருவர் சப்பாத்து காலால் கற்பூர தீயை மிதித்து அணைத்தார்.

மலைக்கு கீழே பொங்கி, பொங்கலை எடுத்து வந்து மேலே படையல் செய்யலாம் என பொலிசார் கடுமையான நிபந்தனை விதித்தனர். எனினும், தமிழ் மக்கள் அதை ஏற்கவில்லை. குருந்தூர் தலையில் தமக்குள்ள வழிபாட்டு உரிமையை சுட்டிக்காட்டினர்.

எனினும், பொலிசார் பொங்கலுக்கு அனுமதியளிக்கவில்லை.

பொலிசார், விசேட அதிரடிப்படையினர் அங்கு குவிக்கப்பட்டனர்.

பின்னர் பொங்கலுக்கு சென்ற தமிழ் தரப்பினர் அனைவரையும் மலையிலிருந்து கீழே இறங்கி செல்லுமாறு பொலிசார் கட்டளையிட்டனர். அதே சமயத்தில், இன்று குழப்பத்தில் ஈடுபட்ட சிங்கள தரப்பினர், சட்டவிரோத விகாரை பகுதியில் பொலிசாரின் பாதுகாப்பில் தங்கியிருந்தனர்.

தமிழர்களுக்கு ஒரு சட்டம், சிங்களவர்களுக்கு ஒரு சட்டமா என கேள்வியெழுப்பிய தமிழ் தரப்பினர்,அங்கு கூடி, சிறிய மத அனுட்டானத்தில் ஈடுபட்டனர்.

சிங்களவர்களையும் மலையிலிருந்து இறக்கினாலே நாமும் இறங்குவோம் என பொங்கலுக்கு சென்ற தமிழ் தரப்பினர் குறிப்பிட்டனர். இதையடுத்து, பொலிசார் பலப்பிரயோகத்தை மேற்கொண்டு, தமிழ் தரப்பினரை மலையிலிருந்து கீழே இறக்கினர்.

இதன்போது, பலரை பொலிசாரால் பலவந்தமாக தள்ளினர். சிலர் தாக்கப்பட்டனர். அண்மையில் முல்லைத்தீவில் முஸ்லிம் காங்கிரசின் தராசு சின்னத்தில் இணைந்து உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த பீற்றர் இளஞ்செழியன் என்ற இளைஞன் தாக்கப்பட்டு, இரத்தம் வழிந்த நிலையலிருந்தார்.

வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபனும், து.ரவிகரனும் தள்ளிவிழுத்தப்பட்டனர். இதனால் தமது காலில் உபாதையேற்பட்டுள்ளதாக கஜதீபன் குறிப்பிட்டார்.

மண்டைதீவில் கடற்படையினரின் காணி சுவீகரிப்புக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்

யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் கடற்படையினருக்கு காணி சுவீகரிப்பதற்கான நடவடிக்கைக்கு எதிராக பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலணைப் பிரதேச செயலாளர் பிரிவின், மண்டைதீவு கிழக்கில் ஜே/07 கிராம சேவகர் பிரிவில் உள்ள, 29 பேருக்குச் சொந்தமான 18 ஏக்கருக்கும் அதிகமான தனியார் காணிகளை, வெலிசுமன கடற்படை முகாம் அமைப்பதற்காக சுவீகரிக்கும் நோக்கில், இன்று புதன்கிழமை (12) அளவீட்டுப் பணிகளை ஆரம்பிக்கப்போவதாக நில அளவைத் திணைக்களத்தினரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இவ் அளவீட்டுப் பணிகளை தடுத்து நிறுத்துவதற்காக, மக்கள் பிரதிநிதிகள், காணி உரிமையாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள்மண்டைதீவு கிழக்கு முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு அருகில் இன்று புதன்கிழமை(12) காலை 7.30 மணியளவில் ஒன்று கூடியவர்கள் நகர்ந்து சென்று வெலிசுமன கடற்படை முகாம் முன்பாக கூடி எதிர்ப்பை வெளியிட்டனர்.

இதன்போது கடற்படை முகாம் முன்பாக பொலிஸார் கடற்படையினர் மற்றும் புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டு இருந்தனர்.

கலகமடக்கும் கடற்படையினர் தயார் நிலையில் இருந்ததுடன் கடற்படையினர் போராட்டகாரர்களை அச்சுறுத்தும் வகையில் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை எடுத்து கொண்டிருந்தனர்.

போராட்டத்தின் நிறைவில் போராட்டகாரர்களுக்கு பிஸ்கட் குளிர்பானம் வழங்க வந்த கடற்படையினருக்கு பொதுமக்கள் கோஷம் எழுப்பி கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதன்போது “எங்கட காணியை விட்டு எழும்பி போங்கோ பிஸ்கட் சாப்பிடுவோம்” என கடற்படை அதிகாரியை பார்த்து காணி உரிமையாளர் பேசினார்.

போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், காணி உரிமையாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.