இலங்கை – இந்தியா இடையே ஒத்துழைப்புக்களை மேம்படுத்துவதற்கான திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்

இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையில் ஒத்துழைப்புக்களை மேம்படுத்துவதற்கான உத்தேச திட்டம் தொடர்பில் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோருக்கிடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

அலரிமாளிகையில் வியாழக்கிழமை (22) பிரதமர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் இரு நாடுகளுக்கும் இடையிலான விமான சேவைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய உயர்ஸ்தானிகர் இதன் போது தெரிவித்துள்ளார்.

பொதுத்துறை மற்றும் தனியார் விமான நிறுவனங்கள் இலங்கையில் விமான சேவைகளை முன்னெடுக்க தயாராகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டிஜிட்டல் மயமாக்கல், வலுசக்தி மற்றும் விவசாயம் போன்ற துறைகளில் இந்திய முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் என்று பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டை எட்டுவதற்கு உரிய நேரத்தில் நிதி உத்தரவாதத்தை வழங்கியமைக்கு இந்திய அரசாங்கத்துக்கு நன்றி தெரிவிப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.