பிரதமரை சந்தித்தார் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் தலைவர்

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (JICA) தலைவர் கலாநிதி தனாகா அகிஹிட்டோவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு புதன்கிழமை (14) அலரி மாளிகையில் இடம்பெற்றது.

வடக்கு, கிழக்கில் மீள்குடியேறியோரின் காணிப்பிரச்சினைகளுக்கு 2 மாதங்களுக்குள் தீர்வு – பிரதமர் தினேஷ்

வடக்கு, கிழக்கில் இடம் பெயர்ந்து மீள் குடியேறியுள்ள மக்களின் காணிப் பிரச்சினைகள் மற்றும் காணி உறுதிப் பத்திரம் வழங்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் முன்னெடுக்கப்படும். அது தொடர்பில் ஜனாதிபதியின் வடக்கு விஜயத்தின் போதும் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்கில் மக்களின் காணி விவகாரங்கள் தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் சில கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவுகளில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு பல வருடங்கள் எடுத்தன. அதனால் சில பிரதேசங்களில் தற்காலிகமாக குடியேறியவர்களை நிரந்தர குடியேற்றவாசிகளாக்குவதற்கு தேவையான பாதுகாப்பு சான்றிதழ்களை பெற்றுக் கொள்வதிலும் ஏனைய நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்தப்பட்டது.

ஜனாதிபதி வடக்குக்கு விஜயம் செய்த ஒவ்வொரு தடவையும் அது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு அங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தைகளும் நடத்தப்பட்டன. அதற்கான மேலதிக நிதி ஒதுக்கீடுகளும் மேற்கொள்ளப்பட்டன.

1600 குடும்பங்கள் தொடர்பான ஆவணங்கள் இல்லாமலிருந்தன.அந்த வகையில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவு உள்ளிட்ட சில பிரிவுகளின் காணிகள் தொடர்பான தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக வடக்கு கிழக்கில் காணப்படும் காணிகள் அங்கிருந்து இடம் பெயர்ந்த மக்களுக்கு கட்டம் கட்டமாக வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சட்ட பூர்வமற்ற ரீதியில் குடியிருப்போரை அங்கு நிரந்தர குடியிருப்பாளர்களாக்குவதற்கான ஆவணங்களை பெற்றுக் கொள்வதில் சிக்கல்கள் காணப்படுவதால் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஊடாக அதன் முன்னேற்றம் தொடர்பான மீளாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு நடுத்தர மக்களின் காணிகளை மீளப் பெற்றுக் கொடுக்கும் திட்டத்தின் கீழ் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள காணிகள் தொடர்பில் அதன் முதல் உரிமையாளர்கள் உரிமை கோரி ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார்கள். எவ்வாறாயினும் இரு தரப்புக்குமிடையில் இணக்கப்பாடுகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எனினும் சில காணிகள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படாத நிலையில் அதற்கான நடவடிக்கைகள் தாமதமாகி யுள்ளன.

அத்துடன் இடம்பெயர்ந்தவர்கள் தற்போது வசிக்கும் காணிகளுக்கு சட்டபூர்வமான பதிவுகள் இல்லாத காரணத்தால் அந்த விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. காணி உறுதிப் பத்திரங்களை வழங்கும் நடவடிக்கைகள் தொடர்பில் வரவு செலவு திட்டத்தில் ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அந்த வகையில் வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்.

அவ்வாறான குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள் காணி உரிமைகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அனைவருக்கும் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அரசாங்கம் கொள்கை ரீதியாக அதனை மேற்கொள்ளவுள்ளது.

மாவட்ட செயலாளர்கள் கூட்டும் அபிவிருத்தி கூட்டங்களில் இதன் குறைபாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும். அவ்வாறான மக்கள் தமது வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்லும் வகையில் அனைவருக்கும் நலன்புரி மற்றும் நிவாரணங்கள் வழங்குவதில் கவனம் செலுத்தப்படும். விவசாயம், மீன் பிடி அல்லது வேறு தொழில்களில் ஈடுபடுவோர் அனைவருக்கும் அதனை வழங்குவதற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்.

அத்துடன் எந்த விவசாயக் காணிகளிலும் சட்டபூர்வமானாலும் சரி சட்டபூர்வமற்ற விதத்திலும் சரி குடியிருப்போரை துரத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட மாட்டாது என்பதை உறுதியாக தெரிவிக்க முடியும் என்றார்.

இலங்கையில் டென்மார்க் முதலீட்டை அதிகரிக்க நடவடிக்கை

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் டென்மார்க் தூதுவர் ஃப்ரெடி ஸ்வெயினுக்கும் இடையிலான சந்திப்பொன்று வியாழக்கிழமை (14) அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இலங்கைக்கும் டென்மார்க்கிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பு தொடர்பான கருத்துக்களை  பரிமாறிக் கொள்வதற்காக இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

புதுடில்லியில் வசிக்கும் டென்மார்க் தூதுவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை வழங்கக்கூடிய கோபன்ஹேகனில் உள்ள ஒரு பெரிய டென்மார்க் நிறுவனமான ஜி.பி.வி இன் இலத்திரனியல் உற்பத்தி தொழிற்சாலையை இலங்கையில் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டதாக தெரிவித்தார்.

டென்மார்க்கில் பல முதலீட்டாளர்கள் எரிசக்தி துறை, ஆழ்கடல் மீன்பிடி, இயந்திர படகு, உற்பத்தி மற்றும் ஏனைய திட்டங்களில் முதலீடு செய்ய தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி, சர்வதேச நாணய நிதியத்தின் நிதிப் பொதியின் முன்னேற்றம் உள்ளிட்டவை குறித்து டென்மார்க் தூதரிடம் பிரதமர் தெரிவித்தார்.

முதலீட்டை ஊக்குவிப்பதன் மூலம் டென்மார்க் இலங்கையின் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் நன்றி தெரிவித்த பிரதமர் பொருளாதாரத்தை புத்துயிர் பெறச்செய்வதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க பரிஸ் கழகத்தின் உறுப்பினர் என்ற முறையில் வழங்கிய ஆதரவை நினைவு கூர்ந்தார்.

கொள்கலன் ஊக்குவிப்பு மையமாக இலங்கையின் கப்பல் போக்குவரத்தை  விரிவுபடுத்துவதற்கான முயற்சி குறித்தும் அவர்கள் கலந்துரையாடினர்.

இலங்கையில் கறுவா மற்றும் ஏனைய வாசனைப் பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான வசதிகளை டென்மார்க் வழங்குமாறும் பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிகழ்வில் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க மற்றும் டென்மார்க் தூதரக அதிகாரி ருச்சி டி சில்வா ஆகியோர் கலந்துகொண்டனர்.

அலரி மாளிகையில் மகாத்மா காந்தியின் 154வது பிறந்த நாள் விசேட நிகழ்வுகள்

மகாத்மா காந்தியின் 154வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோர் இன்று(02)அலரி மாளிகையில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பிரதி உயர்ஸ்தானிகர் சத்தியஞ்சல் பாண்டே மற்றும் ஏனைய இராஜதந்திரிகள், பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன மற்றும் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இலங்கையின் நிதி நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காண சீனா தயார்

இலங்கையின் நிதி நெருக்கடி சவால்களுக்கு தீர்வினை காண்பதற்கு உதவுவதற்கு தயார் என சீனா தெரிவித்துள்ளது.

சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வங் யி இதனை தெரிவித்துள்ளார்.

பிரதமர் தினேஸ் குணவர்த்தனவுடனான சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சீனா எப்போதும் இலங்கையின் நம்பகதன்மை மிக்க மூலோபாய சகா என தெரிவித்துள்ள அவர் இலங்கை எப்போதும் சீனாவிற்கு நட்பாகயிருந்துள்ளது முக்கிய நலன்கள் குறித்த விடயங்களில் சீனாவிற்கு ஆதரவாக விளங்கியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.

இறைமை சுதந்திரம் மற்றும் தேசிய கௌரவம் ஆகியவற்றை பாதுகாப்பதில் இலங்கைக்கு சீனா எப்போதும் ஆதரவை வழங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரச துறை மறுசீரமைப்புக்களுக்கு நியூசிலாந்தின் நிபுணர்கள் குழுவின் ஒத்துழைப்பு

அரச துறை மறுசீரமைப்புக்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக நியூசிலாந்தின் நிபுணர்கள் குழுவொன்று விரைவில் நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளது.

இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் எபல்டன் நேற்று புதன்கிழமை பிரதமர் தினேஷ் குணவர்தனவை அலரிமாளிகையில் சந்தித்து கலந்துரையாடினார். இதன் போதே இவ்விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டது.

இலங்கையுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்புக்களை மேலும் மேம்படுத்துமாறும் , கொழும்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஒத்துழைப்புக்களை அதிகரிக்குமாறும் பிரதமர் தினேஷ் குணவர்தன இதன் போது கோரிக்கை விடுத்துள்ளார்.

மஹரகம இலங்கை பல் மருத்துவக் கல்லூரிக்கு நியூசிலாந்து அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மானியத்தை நினைவு கூர்ந்த பிரதமர், அதற்கு வழங்கப்படும் வசதிகளை அதிகரிக்குமாறும் கோரிக்கை விடுத்தார். உயர்ஸ்தானிகர் அதனை ஏற்றுக்கொண்டதுடன், பல் மருத்துவப் கல்லூரியை மீண்டும் கண்காணித்து ஆதரவளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் அரசதுறை சீர்திருத்த வேலைத்திட்டங்களுக்கு நிபுணத்துவம் வழங்க நியூசிலாந்து தயாராக இருப்பதாக உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார். நியூசிலாந்தின் முன்னாள் பொதுச் சேவை ஆணையாளர் தலைமையிலான குழுவொன்று விரைவில் இலங்கை வரவுள்ளமை தொடர்பிலும் அவர் குறிப்பிட்டார்.

காலாவதியான காணி கட்டளைச் சட்டத்தை திருத்தவும் திட்டமிட்டுள்ளதோடு , பழங்குடியின மக்களின் காணி உரிமைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நியூசிலாந்து அரசாங்கத்துடன் அனுபவங்களைப் பரிமாறிக் கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் காலாவதியான காணிச் சட்டத்தை திருத்தியமைப்பதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் இதன் போது தெளிவுபடுத்தியுள்ளார்.

தற்போதைய பொருளாதார சவால்களை சமாளிப்பதற்கான இலங்கையின் நடவடிக்கைகள், கடன் மறுசீரமைப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடு, தேர்தல் சட்ட திருத்தம் குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கை – இந்தியா இடையே ஒத்துழைப்புக்களை மேம்படுத்துவதற்கான திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்

இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையில் ஒத்துழைப்புக்களை மேம்படுத்துவதற்கான உத்தேச திட்டம் தொடர்பில் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோருக்கிடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

அலரிமாளிகையில் வியாழக்கிழமை (22) பிரதமர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் இரு நாடுகளுக்கும் இடையிலான விமான சேவைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய உயர்ஸ்தானிகர் இதன் போது தெரிவித்துள்ளார்.

பொதுத்துறை மற்றும் தனியார் விமான நிறுவனங்கள் இலங்கையில் விமான சேவைகளை முன்னெடுக்க தயாராகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டிஜிட்டல் மயமாக்கல், வலுசக்தி மற்றும் விவசாயம் போன்ற துறைகளில் இந்திய முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் என்று பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டை எட்டுவதற்கு உரிய நேரத்தில் நிதி உத்தரவாதத்தை வழங்கியமைக்கு இந்திய அரசாங்கத்துக்கு நன்றி தெரிவிப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.

அரச நிறுவனங்கள் அரச நிதியை வீணடிக்கின்றன – பிரதமர் தினேஷ் குணவர்த்தன

திணைக்களங்கள் மற்றும் அரச நிறுவனங்களில் வீண் விரயங்கள் காணப்படுவதாகவும் இது நாட்டுக்கு பாரிய பிரச்சினை என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வரவு செலவு திட்ட அலுவலகம் சட்டமூலம் மீதான நேற்றைய விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், இந்த வீண் விரயங்களை கட்டுப்படுத்த முன்னுரிமையளித்து செயற்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த வீண் விரயங்களை குறைத்துக் கொள்வதே எமது இலக்காகும். அதனை முக்கியமான இலக்காகக் கொண்டு அதற்கு முன்னுரிமையளித்து நாம் செயற்படவேண்டியது அவசியமாகும்.

யார் என்ன சொன்னாலும் திணைக்களங்கள் மற்றும் அரச நிறுவனங்களில் வீண் விரயங்கள் கிடையாது என எவராலும் கூற முடியாது. இது நாம் முகம் கொடுக்கும் பாரிய பிரச்சினையாகும்.

சில புள்ளி விபரங்களில் காணப்படும் பிழைகள் மற்றும் அதிலிருந்து திசை திருப்பும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மோசடிகள் குறிப்பிடத்தக்கவை.

இவ்வாறான மோசடிக்காரர்களின் சுமையையும் இறுதியில் திறைசேரி அல்லது நாடாளுமன்றத்திற்கே பொறுப்பேற்க வேண்டியுள்ளது. அது பொது மக்களுக்கான பாரிய பாதிப்புகளுக்கே வழிவகுக்கும் எனக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

தேர்தல் ஆணைக்குழுவுக்கு பிரதமருடன் கலந்துரையாடலை மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை

தேர்தலுக்கு தேவையான நிதி தொடர்பில் கலந்துரையாடுவதற்கு உள்ளூராட்சி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமரிடம் சந்தர்ப்பம் கோரப்பட்ட போதிலும், இதுவரை அதற்கும் எவ்வித சாதகமான பதிலும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமருடனான கலந்துரையாடலை நடத்துவதற்கு இனியும் எதிர்பார்க்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.

இதேவேளை, உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கான பணத்தை வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திற்கு இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

நிதி அமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி ஒரு மாதம் நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.

உள்ளூராட்சி சபைகளை கண்காணிக்கும் குழு பிரதமர் இடையே சந்திப்பு

உள்ளூராட்சி சபைகள் செயலாளர்கள் மற்றும் ஆணையாளர்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததன் பின்னர் அவற்றின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கு பொருத்தமான வேலைத்திட்டத்தை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு பிரதமர் தலைமையில் நேற்று கூடியது.

மேற்படி குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள், ஆளுநர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களும் நேற்று (திங்கட்கிழமை) அலரிமாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இணைந்து கொண்டனர்.

உள்ளூராட்சி நிறுவனங்களின் நிதி ஒதுக்கீட்டை நிர்வகிப்பது இந்தக் குழுவின் ஊடாகவே மேற்கொள்ளப்படுவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி நிறுவனங்களின் நிர்வாக நடவடிக்கைகளை ஆளுநர்களும் மாவட்டச் செயலர்களும் கண்காணித்து முன்பைப் போன்று மக்களுக்கு எவ்வித அசௌகரியமும் இன்றி இந்த நிறுவனங்களை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார்.