அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் நீக்கம்?

கொழும்பில் உள்ள பல விசேட பகுதிகளை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக பெயரிட்டு வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வலிதற்றதாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயுமாறு சட்டமா அதிபரால், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொது பாதுகாப்பு அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளுக்கு அமைய பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டது.

எனினும், கொழும்பின் மத்திய பொருளாதார வலயத்தின் வர்த்தக நடவடிக்கைகள் குறித்த வர்த்தமானி அறிவிப்பால், பாரியளவில் பாதிக்கப்படும் என பொருளாதார நிபுணர்கள்  ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.

கொழும்பில் அவ்வப்போது நடைபெறும் போராட்டங்களினால் ஏற்படும் பொருளாதார சேதங்கள் அதிகமாக உள்ளபோதும், அதியுயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்துவதன் மூலம் வேறு பிரச்சினைகள் ஏற்படக்கூடும் எனவும் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதற்கிணங்க, அதியுயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றி, புலனாய்வுப் பிரிவினரை ஒருங்கிணைத்து விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு, பொதுப் பாதுகாப்பு அமைச்சுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் விஜயத்தின் பின்னர், ஜனாதிபதி நாடு திரும்பியதும் வர்த்தமானி இரத்துச் செய்யப்படும் என நம்பத்தகுந்த வட்டாரங்களின் மூலம் அறிய முடிகிறது.