அமெரிக்க இராஜாங்க செயலாளரை சந்தித்தார் அலி சப்ரி

அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கெனை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

வோசிங்டனில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் கடன்மறுசீரமைப்பு மற்றும் சர்வதேச நாணயநிதியத்தின் உதவி குறித்து ஆராயப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சந்திப்பிற்கு முன்னர் கருத்து தெரிவித்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் அமெரிக்காவிற்கு இலங்கையுடன் உள்ள நீண்;ட உறவை நினைவுகூர்ந்துள்ளார்.

இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான கூட்டாண்மையின் 75வருடத்தினை அடுத்த வருடம் கொண்டாடுகின்றோம் காலநிலை நெருக்கடி உட்பட சர்வதேச விவகாரங்களில் இலங்கையுடன் இணைந்து செயற்படுகின்றோம் என தெரிவித்துள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர் காலநிலை மாற்றம் குறித்தவிடயத்திற்கு தீர்வை காண்பதற்கு இலங்கை சில முக்கியமான நடவடிக்கைகளை எடுக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை மிகமோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ள நிலையில் அமெரிக்கா இலங்கையுடன் மிக நெருக்கமாக இணைந்து செயற்படுகின்றது எனவும் பிளிங்கென் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு அமெரிக்கா 240 மில்லியன் டொலர் உதவிகளையும் கடன்களையும் வழங்கியுள்ளது,பொருளாதார ஸ்திரதன்மையை ஏற்படுத்துவதற்கு மாத்திரமில்லாமல் அரசியல் ஸ்திரதன்மை முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கும் இருநாடுகளும் இணைந்து செயற்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.