அரசாங்கத்திற்கு எதிராக சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம்

ஜனாதிபதியை உடனடியாக பதவி விலகுமாறு கோரியும் அடக்குமுறைகளை நிறுத்துமாறு வலியுறுத்தியும் காலி சட்டத்தரணிகள் சங்கம் காலி நீதிமன்ற வளாகத்திலிருந்து கோட்டை வரை எதிர்ப்பு பேரணியொன்றை முன்னெடுத்திருந்தது.

காலி கோட்டை வளாகத்தில் சட்டத்தரணிகளை தடுத்து நிறுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.

காலி கோட்டை வளாகத்தில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் காரணமாக குறித்த வளாகத்திற்குள் பிரவேசிக்க சந்தர்ப்பமளிக்க முடியாது என பொலிஸார் இதன்போது அறிவித்தனர்.

தமது போராட்டத்தை நிறுத்துவதற்கு பொலிஸாருக்குள்ள சட்ட ரீதியான அதிகாரம் என்னவென இதன்போது சட்டத்தரணிகள் கேள்வியெழுப்பினர்.

காலி மாவட்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ் அத்தியட்சகரும் மாவட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்ததுடன், கலகத்தடுப்பு பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

இதனிடையே, காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலிருந்து காலி கோட்டையை பார்வையிடுவதற்கு இன்று எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

சட்டத்தரணிகள் காலி நகரில் கோஷங்களை எழுப்பிய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், இளைஞர்கள் சிலரும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

இதனையடுத்து, சட்டத்தரணிகள் தொடர்ந்தும் காலி நகரில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

அடக்குமுறை அரசாங்கத்தை விரட்டியடிப்போம் எனும் தொனிப்பொருளில் சட்டத்தரணிகள் கொழும்பிலும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சட்டத்தரணிகள் புதுக்கடை நீதிமன்ற கட்டடத் தொகுதி வளாகத்தில் இன்று காலை சத்தியாகிரகத்தில் ஈடுபட்டனர்.

ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சட்டத்தரணிகள் பேரணியொன்றை முன்னெடுத்து உலக வர்த்தக மைய வீதி ஊடாக இலங்கை வங்கி வீதியை அடைந்தனர்.

இதன்போது, நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொள்வதற்காக பொலிஸாரின் வாகனங்கள் தயார் நிலையில் இருந்ததை அவதானிக்க முடிந்தது.