ஜப்பான், ஓமன் தூதுவர்களை ஜனாதிபதி சந்தித்தார்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஜப்பான் மற்றும் ஓமன் தூதுவர்களை இன்று சந்தித்தார்.

கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்புகள் இடம்பெற்றன.

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்திற்கும் இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் தொடர்ச்சியாக ஒத்துழைப்புகளை வழங்குவதாக ஜப்பான் தூதுவர் Hideaki Mizukoshi தெரிவித்துள்ளார்.

இலங்கையுடனான பொருளாதார, சமூக, கலாசார தொடர்புகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துச்செல்ல நடவடிக்கை எடுப்பதாக ஜப்பான் தூதுவர் கூறியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கை தொடர்பில் ஜப்பான் வழங்கும் ஒத்துழைப்புகள் குறித்து இதன்போது ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 8 வருட சேவையின் பின்னர் நாட்டிலிருந்து புறப்பட்டு செல்வதற்கு முன்னர் ஓமன் தூதுவர் அஹமட் அலி சயிட் அல் ரஷீட், ஜனாதிபதியை சந்தித்துள்ளார்.

இலங்கைக்கு தேவையான எரிபொருள், எரிவாயு , முதலீட்டு சந்தர்ப்பங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக அவர் கூறியுள்ளார்.