இறுதிப் போரில் 9 கப்பல்களை அழிக்க அமெரிக்காவே உதவியது – அலி சப்றி

தமிழ் மக்களின் சுய உரிமை பாதுகாக்கப்படுதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று கூறியுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, நாட்டில் இறுதி யுத்தத்தின் போது இலங்கைக்கு வந்த ஒன்பது கப்பல்களை எமது படையினர் வெற்றிகரமாக அழிப்பதற்கு அமெரிக்கப் புலனாய்வுத் தகவல்கள் உறுதுணையாக அமைந்தது என்பதை மறந்து விடக்கூடாது என்றும் தெரிவித்தார். நேற்று பாராளுமன்றில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தமிழ் மக்கள் இந்த நாட்டில் ஒன்றாக வாழும் மக்கள் என்பதை உணர்ந்து கொண்டு அவர்களின் சுய உரிமை பாதுகாக்கப்படும் வகையில் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். தமிழ் மக்களின் சுய உரிமை பாதுகாக்கப்படும் வகையில் அவர்களின், மொழி, கலாசாரம் உள்ளிட்டவைகளுக்கு உரிய வாய்ப்புகளை வழங்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இன மற்றும் மத பேதங்களுக்கு அப்பால் சிந்தித்து அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது அவசியம் பல்தன்மை ஒருமைப்பாட்டுடன் இவ்வாறு ஆரம்பிக்கப்படும் பயணமே வெற்றி பெற முடியும் அதன் மூலமான பொருளாதார முன்னேற்றமே நிலையானதாக அமையும்.

நாட்டில் இறுதி யுத்தத்தின் போது இலங்கைக்கு வந்த ஒன்பது கப்பல்களை எமது படையினர் வெற்றிகரமாக அழிப்பதற்கு அமெரிக்கப் புலனாய்வுத் தகவல்கள் உறுதுணையாக அமைந்தது என்பதை மறந்து விடக்கூடாது. அந்த வகையில் சர்வதேச நாடுகளுடனான நல்லுறவுக்கு முன்னாள் வெளிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் செயல்பாடுகள் மிகவும் காத்திரமானதாக அமைந்தது என்றும் மறந்துவிடக்கூடாது – என்றார்.