மன்னார் பூநகரி காற்றாலை மின்சார திட்டம் அதானி குழுமத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்து!

மன்னார், பூநகரியில் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்த இந்தியாவின் அதானி குழுமத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் நேற்று கைச்சாத்தானது.

இதனிடையே, எந்த ஆய்வுகளும் அனுமதிப் பத்திரங்களும் இன்றி முதலீட்டு சபையும் இந்தியாவின் அதானி குழுமமும் நேற்று மாலை உடன்படிக்கையில் கையொப்பமிட்டுள்ளன என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ஒப்பந்தத்தின்படி மன்னாரில் 250 மெகா வோட்ஸ், பூநகரியில் 100 மெகா வோட்ஸ் காற்றாலை மின்சார உற்பத்தி திட்டம் 44. 2 கோடி அமெரிக்க டொலர்கள் – நம் நாட்டு மதிப்பில் சுமார் 16 ஆயிரத்து 129 கோடி ரூபாய் செலவில் அமையவுள்ளன. இது இரு ஆண்டுகளில் நிறைவுத்தப்படும் என்றும் அத்துடன் 1000 பேருக்கு வேலைவாய்ப்பு கிட்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

மன்னார் மற்றும் பூநகரியில் இரண்டு காற்றாலை திட்டங்களில் 50 கோடி அமெரிக்க டொலர்களுக்கு மேல் முதலீடு செய்வதற்கு அதானி கிறீன் எனர்ஜிக்கு அரசாங்கம் தற்காலிக அனுமதி வழங்கியுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர நேற்றிரவு தெரிவித்திருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இந்தியாவின் முதல்நிலை பணக்காரராகவும் உலகளவில் மூன்றாவது இடத்திலும் அதானி இருந்தார். வரி ஏய்ப்பு மற்றும் சர்ச்சைகளால் அவரின் குழுமத்தின் பங்குகள் சரியவே உலகளவில் 17ஆவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டார். இந்த நிலையில் கடந்த டிசெம்பரில் திட்டமிடப்பட்ட இந்த ஒப்பந்தம் திட்டமிட்டவாறு கைச்சாத்தாகியுள்ளது.

இதேசமயம், இந்த மின் உற்பத்தித் திட்டத்துக்குத் தேவையான சாத்தியக் கூறு ஆய்வுகள் மற்றும் அனுமதிகள் பெறப்படவில்லை. இதனால், இது சட்டவிரோதமான ஒப்பந்தம் என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.