இலங்கைக்கான உதவி குறித்து மூத்த இராஜதந்திரி சர்வதேசநாணய நிதியத்துக்கு எச்சரிக்கை

ஜனநாயகத்தை நசுக்குவதற்கான நியாயப்படுத்தலாக சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தைக் குறிப்பிடவேண்டாமெனவும், தேர்தலொன்றின் மூலம் தமது தலைவர்களைத் தெரிவுசெய்வதற்கான வாய்ப்பு இலங்கை மக்களுக்கு வழங்கப்படவேண்டும் எனவும் ஓப்பன் சொஸைட்டி பவுண்டேஷன் அமைப்பின் தலைவரும், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக வங்கியின் முன்னாள் இராஜதந்திரியுமான மார்க் மலோச்-பிரவுன் வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்றத்தில் கடந்த வாரம் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ‘தேர்தலை நடாத்தவேண்டமென எதிர்க்கட்சியில் பலர் எம்மிடம் கூறியிருக்கின்றார்கள்.

தேர்தலை நடாத்துவதற்கான திகதியைத் தேர்தல்கள் ஆணைக்குழு இன்னும் தீர்மானிக்கவில்லை.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளின்படி எம்மால் பணத்தை அச்சிடமுடியாது’ என்று குறிப்பிட்டிருந்தார்.

அதனை மேற்கோள்காட்டி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருந்த வெரிட்டே ரிசேர்ச் அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் நிஷான் டி மெல், ‘தேர்தல்களை நடாத்துவதற்கான நிதியை அரசாங்கத்தினால் வழங்கமுடியாமல் இருப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளே காரணமென ஜனாதிபதி கூறுகின்றார்.

தேர்தல்களை நடாத்துவதற்கான நிதியை வழங்குவதற்கு அரச திறைசேரி மறுப்பதன் ஊடாக ஜனநாயகம் நசுக்கப்படும் விவகாரத்தில் சர்வதேச நாணய நிதியம் பலிகடாவாக மாற்றப்படும் சம்பவத்தை இப்போதுதான் முதன்முறையாகக் கேள்விப்படுகின்றேன்’ என்று தெரிவித்துள்ளார்.

நிஷான் டி மெல்லின் டுவிட்டர் பதிவை மேற்கோள்காட்டி, உலகளாவிய ரிதீயில் தமது மக்களுக்குப் பொறுப்புக்கூறத்தக்க அரசாங்கத்தைக்கொண்ட ஜனநாயக நாடுகளைக் கட்டியெழுப்புவதை இலக்காகக்கொண்டு பணியாற்றிவரும் ஓப்பன் சொஸைட்டி பவுண்டேஷனின் தலைவரும் ஐக்கிய நாடுகள் சபை, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித்திட்டம், உலக வங்கி உள்ளிட்ட முக்கிய சர்வதேசக்கட்டமைப்புக்களின் முன்னாள் பிரதிநிதியுமான மார்க் மலோச்-பிரவுன் அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்துள்ளார்.

ஜனநாயகத்தை நசுக்குவதற்கான நியாயப்படுத்தலாக சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டம் ஒருபோதும் அமையாது என்று அப்பதிவில் சுட்டிக்காட்டியுள்ள மார்க் மலோச்-பிரவுன், தற்போது நாடு மிகமுக்கியமான தருணத்திலுள்ள நிலையில், வாக்களிப்பின் மூலம் தமது தலைவர்களைத் தெரிவுசெய்வதற்கான வாய்ப்பு இலங்கை மக்களுக்கு வழங்கப்படவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.