இலங்கையில் அதிகரித்த சீன ஆதிக்கம் – இந்தியா எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை!

இலங்கையில் கடந்த சில ஆண்டுகளாக சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. அங்குள்ள துறைமுகங்கள் மற்றும் கடற்கரை பகுதிகளை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர சீனா முயற்சிக்கிறது. இதற்காக இலங்கையில் உள்ள சில துறைமுகங்களை சீனா குத்தகைக்கு எடுத்துள்ளது.

இந்தியாவை ஒட்டியுள்ள இலங்கை கடல் பகுதியில் சீனா தனது போர்க்கப்பல்களை நிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக தமிழகம், கேரளா உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கு அச்சுறுத்தல் உருவாகியுள்ளது.

கூடங்குளம் அணுமின் நிலையம், மகேந்திரகிரி இஸ்ரோ மையம், தூத்துக்குடி ஜிர்கோனியம் தொழிற்சாலை, கனநீர் ஆலை, துறைமுகம், ஐஎன்எஸ் கட்டபொம்மன் கடற்படை தகவல் மையம் போன்ற முக்கிய கேந்திரங்கள் தென் தமிழகப் பகுதியில் அமைந்துள்ளன. மேலும், குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படவுள்ளது.

எனவே, தமிழக கடற்கரை பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால் இதற்கான பணிகளை இந்திய அரசு தொடங்கியுள்ளது. தூத்துக்குடியில் விமானப் படை மற்றும் கடற்படைக்கு சொந்தமான விமான தளங்கள் அமைப்பதற்கான ஆயத்தப் பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளன.

ராணுவ தளவாடங்களை எளிதாக கொண்டு செல்லும் வகையில் நாகப்பட்டினம் முதல் கன்னியாகுமரி வரை புதிதாக நான்குவழி தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்படவுள்ளது. ராணுவ விமானங்கள் அவசரமாக தரையிறங்கும் வசதியுடன் இச்சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான ஆய்வுப் பணிகள் மற்றும் நிலம் ஒதுக்கீடு செய்யும் பணிகள் நடைபெறுகின்றன.

இந்நிலையில், தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு நேற்று முன்தினம் இந்திய கடற்படைக்கு சொந்தமான ஏவுகணை தாங்கிய அதிநவீன நீர்மூழ்கி கப்பல் ‘ஐஎன்எஸ் சிந்து ஷாஸ்ட்ரா’ வந்துஉள்ளது. துறைமுகத்தில் இந்திய கடற்படைக்கு ஒதுக்கப்பட்ட தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பராமரிப்பு பணிகள் மற்றும் எரிபொருள், தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்வதற்காக இக்கப்பல் தூத்துக்குடி வந்திருப்பதாக கூறப்படுகிறது. தூத்துக்குடி துறைமுகத்தில் 10 நாட்கள் வரை இக்கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் எனக் கூறப்படும் நிலையில், இது பாதுகாப்பு ஒத்திகை நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. கடந்த 2000-ம் ஆண்டு ஜூலை 19-ம் தேதி இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்ட இக்கப்பலில் 13 அதிகாரிகள் உட்பட 52 கடற்படை வீரர்கள் உள்ளனர்.

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட இந்த நீர்மூழ்கி கப்பல், இந்திய கடற்படையில் உள்ள சிந்துகோஷ் வகையைச் சேர்ந்த 10-வது கப்பலாகும். சுமார் 300 கி.மீ. தொலைவுக்கு பாய்ந்து சென்று தரை, வான் மற்றும் கடல் இலக்கை தாக்கும் அதிநவீன குரூஸ் ஏவுகணைகள் மற்றும் கையால் தூக்கிச் செல்லும் அளவிலான சிறிய ஏவுகணைகள், நவீன ஆயுதங்கள் இந்த கப்பலில் உள்ளன.

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் வேளையில் இலங்கையை ஒட்டிய இந்திய கடல் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்த நீர்மூழ்கி கப்பல் தூத்துக்குடி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இக்கப்பல் வருகை தொடர்பாக கடற்படை தரப்பிலோ அல்லது துறைமுக தரப்பிலோ எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் தெரிவிக்கப்படவில்லை.