இலங்கை குறித்து இந்தியாவும் அமெரிக்காவும் நேரடிப்பேச்சு!

இலங்கைத்தீவில் அண்மையில் ஏற்படுத்தப்பட்ட ஆட்சிமாற்றத்தின் இரண்டு முக்கிய பங்காளர்களாக கருதப்படும் இந்தியாவும் அமெரிக்காவும் கம்போடியாவில் இலங்கையின் சமகால நிலவரங்கள் குறித்து இன்று பேச்சுக்களை நடத்தியுள்ளன.

கம்போடியாவில் இடம்பெற்றுவரும் ஆசியான் நாடுகளின் அமைச்சர்களின் சந்திப்பின் பின்னணியில் அமெரிக்க ராஜாங்க செயலாளர் அன்ரனி பிளிங்கனும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் இன்று பனோம் பென்னில் இந்தப்பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.

இலங்கை, மற்றும் மியான்மார் ஆகிய சீன ஆதரவு நாடுகளில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் முக்கியமாக சவால்கள் இருப்பதை ஏற்றுக்கொண்ட இருவரும் இந்த விடயங்களை குறித்து விரிவாக பேசுவதற்காக விரைவில் தனித்துவமான சந்திப்பு ஒன்றை நடத்தவும் உடன்பட்டுள்ளனர்.

சீனாவின் உளவுக்கப்பல் இலங்கைக்கு வருவது குறித்து இந்தியா ஏற்கனவே ஆட்சேபம் தெரிவித்துள்ள நிலையில், இலங்கை குறித்து பேச வேண்டிய விடயங்கள் இருப்பதாக அன்ரனி பிளிங்கன் குறிப்பிட்டுள்ளார்