ஈஸ்டர் தாக்குதல் குறித்த உண்மைகள் எதிர்காலத்தில் வெளிவரும் – பேராயர்

ஈஸ்டர் தாக்குதலை நடத்துவதற்கு உறுதுணையாக இருந்தவர்கள் ஊடாகவே, எதிர்காலத்தில் தாக்குதல் குறித்த உண்மைகள் வெளிவரும் வெளிவரும் என பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் 189 ஆவது வருடாந்த திருவிழாவின் விசேட ஆராதனையில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் 189 ஆவது வருடாந்த திருவிழா இன்று இடம்பெற்றது.

காலை 8 மணிக்கு ஆரம்பமாகிய இந்த திருவிழாவின் திருப்பலியை கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் அன்டன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகை தலைமை தாங்கி ஒப்புக்கொடுத்தார்.

விசேட ஆராதனை நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை, பணத்தை வீசி எறிந்து கொள்கைகளை காட்டி சுவர்க்கத்திற்கு செல்ல முடியாது என தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நான்கு வருடங்களுக்கு முன்னர் இந்த இடத்திலும் இன்னும் சில இடங்களிலும் குண்டுதாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இந்த தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் யாவர்? எவ்வாறு சம்பவித்தது என்று முறையான விசாரணைகளை நடத்தினார்களா? அதன் உண்மை தன்மை குறித்து ஆராய்தார்களா? சட்டம் எங்கே? நீதி எங்கே? இன்று வரையில் எதற்கும் பதில் இல்லை.
எங்களை ஏமாற்றலாம் என்று இவர்கள் நினைக்கின்றார்கள்.

நாங்கள் ஏமாறுவதில்லை. நீங்கள் தான் ஒருநாளில் ஏமாறுவீர்கள். தேவாலயங்களிலும் ஹோட்டல்களிலும் உயிர்களை காவுகொள்ள அனுமதி வழங்கியவர்கள், தைரியத்தை வழங்கியவர்கள், ஒத்துழைப்பு வழங்கியவர்கள் இன்று உயர்ந்த பதவிகளில் இருக்கின்றார்கள்.

ஆனால் அதற்கான பலன் உங்களை தேடி வரும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

கூடிய விரைவில் நீங்களே உங்களை காட்டிக்கொடுத்து உங்களுக்கூடாகவே அந்;த உண்மைகள் அனைத்தும் வெளிவரும்.
இந்த தேவாலயத்தில் மிகப்பெரிய உற்சவம் ஒன்றை நடத்துவதற்கு அந்த நாள் வரும் வரை காத்திருக்கின்றோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.