எந்த அரசியல்வாதிகளுக்கும் ஹிட்லர் முன்னுதாரணமாக இருக்க முடியாது -ஜேர்மன் தூதுவர்

மில்லியன் கணக்கானவர்களின் இறப்புகளிற்கும் மனித துயரங்களிற்கும் காரணமாகவிளங்கியவர் ஹிட்லர், எந்த அரசியல்வாதிகளுக்கும் முன்னுதாரணமாக இருக்க முடியாது என இலங்கைக்கான ஜேர்மனியின் தூதுவர் ஹோல்ஹெர் சூபேர்ட் தெரிவித்துள்ளார்.

”ஒரு சர்வாதிகாரி போன்று செயற்படுவார் என எதிர்பார்த்தே மக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு வாக்களித்தனர். ஆனால் இன்று அவரது அரசாங்கத்தின் செயற்பாடின்மைக்காக மக்கள் அவரை குற்றம்சாட்டுகின்றனர். ஜனாதிபதி ஒரு ஹிட்லர் போல செயற்பட்டால் எவரும் குறைகூறமாட்டார்கள். குற்றம் சாட்ட மாட்டர்கள். தற்போதைய நிலைமை மாறாவிட்டால் அது ஜனாதிபதி ஹிட்லராக மாறும் நிலையை உருவாக்கும். ஜனாதிபதி அவ்வாறு செயற் பட விரும்பவில்லை”

என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஹிட்லராக மாறும் சாத்தியக் கூறுகள் குறித்து இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ள இந்த கருத்துக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ள ஜேர்மனியின் தூதுவர், “ஹிட்லர் ஒருவர் காணப்பட்டால் அது இலங்கைக்கு நன்மைபயக்கும் விடயம் என தெரிவிக்கப்படுவதை அறிந்துள்ளேன். இவ்வாறு கருத்து தெரிவிப்பவர்களிற்கு நான் ஒரு விடயத்தை நினைவுபடுத்த விரும்புகின்றேன் – மில்லியன் கணக்கான இறப்புகளுக்கும் கற்பனைக்கு அப்பாற்றபட்ட மனித துயரங்களுக்கும் விரக்திக்கும் காரணமாகயிருந்தவர் ஹிட்லர். எனவே எந்த அரசியல்வாதிக்கும் ஹிட்லர், நிச்சயமாக முன்மாதிரியில்லை” என்று கூறியுள்ளார்.