கொரோனா தொற்றினால் பதிவாகிய இறப்பு எண்ணிக்கை 600 ஐ கடந்தது

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பதிவாகிய இறப்பு எண்ணிக்கை 600 ஐ கடந்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

மேலும் 04 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த இறப்பு எண்ணிக்கை 602 ஆக உயர்ந்துள்ளது என இன்று (செவ்வாய்க்கிழமை) அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காலியைச் சேர்ந்த 45 வயது ஆண் ஒருவரும் அக்குரஸவில் வசிக்கும் 71 வயது பெண் ஒருவரும் நேற்றைய தினம் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாரஹன்பிட்டவைச் சேர்ந்த 74 வயது பெண் நேற்று காலமானார் என்றும் அதே நேரத்தில் மகரகமவைச் சேர்ந்த 76 வயது ஆண் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை காலமானார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நிமோனியா மற்றும் முன்பே பிற நோய்களினால் அவர்கள் பாதிக்கப்பட்டதாகவும் பின்னர் கொரோனா தொற்று உறுதியாகி நால்வரும் உயிரிழந்துள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.