ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி இராஜினாமா

பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் மக்களுக்கு நல்லெண்ணம் இல்லை மக்களின் சாபம் எமது பிள்ளைகளையும் பாதிக்கும். அதனால் மக்களின் சாபத்தில் இருந்து எனது பிள்ளைகளை பாதுகாக்கும் பொருட்டு பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீங்கிக்கொள்ள தீர்மானித்தேன். சஜித் பிரேமதாச நாட்டின் அரசியல் அதிகாரத்தை அமைக்கும்போது மீண்டும் அரசியலில் ஈடுபட நடவடிக்கை எடுப்பேன் என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஜமிந்த விஜேசிறி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (9) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஆரம்ப பாடசாலைக்கு செல்லும் 3 பிள்ளைகள் எனக்கு இருக்கின்றனர். அவர்களை பாடசாலைக்கு அழைத்துச்செல்வும் பாடசாலையில் இருந்து அழைத்து வரவும் நானே செல்கிறேன்.

அந்த விடயத்தில் நான் அடிமையாகி இருக்கிறேன். எனது பிள்ளைகள் என்றதாலே அதனை நான் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் சமூகத்தில் ஏற்படும் பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கிறேன்.

குறிப்பாக மக்கள் பிரதிநிதிகள் தொடர்பாக சமூகத்தில் பாரிய விரக்தி ஏற்பட்டிருக்கிறது. 225பேரின் பிள்ளைகளும் மக்களின் சாபத்துக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

அதனால் இவற்றையெல்லாம் பொறுத்துக்கொண்டு தொடர்ந்து அரசியலில் இருக்கின்றதா என்ற கேள்வி தொடர்பில் தனிப்பட்ட ரீதியில் சிந்தித்தே எனது இராஜினாமா கடிதத்தை பாராளுமன்ற செயலாளருக்கு கையளித்தேன்.

பாராளுமன்ற சட்டதிட்டங்கள் புத்தகத்தில் இருந்தாலும் அது நடைமுறையில் செயற்படுவதில்லை. பாராளுமன்றம் தொடர்பாக மக்கள் மத்தியில் நல்லெண்ணம் இல்லை.

மக்களின் சாபம் எனது பிள்ளைகளையும் பாதிக்கும். அதனால் மக்களின் சாபத்தில் இருந்து எனது பிள்ளைகளை பாதுகாக்கவும் மக்கள் ஆணை இல்லாத பாராளுமன்றத்துக்கு எனது விடைகொடுப்பானது, மக்கள் ஆணையுள்ள புதிய பாராளுமன்றம் ஒன்றை அமைத்துக்கொள்ள ஓரளவு அழுத்தம் கொடுக்கும் என நான் நம்புகிறேன்.

அத்துடன் நான் அரசியலில் இருந்து விலகினாலும் தொடர்ந்தும் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இருப்பேன். ஐக்கிய மக்கள் சக்தியை தவிர வேறு கட்சி எனக்கு இல்லை. கட்சியில் எனக்கு எந்த அநீதியும் ஏற்படவில்லை. நாட்டின் எதிர்கால சிறுவர்களுக்கு பொறுப்புக்கூற முடியுமான தலைவர் ஒருவர் இருக்கிறார்.

அவர் நாட்டின் அரசியல் அதிகாரத்தை அமைக்கும்போது, எனக்கு முடியுமானால் நான் மீண்டும் அரசியலில் ஈடுபட நடவடிக்கை எடுப்பேன் என்றார்.