சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 42 மேலதிக வாக்குகளால் தோற்கடிப்பு

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை 42 மேலதிக வாக்குகளால் நேற்று பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது.

பிரேரணைக்கு எதிராக 117 எம்பிக்களும் ஆதரவாக 75 எம்பிக்களும் வாக்களித்தனர். இந்த பிரேரணை மார்ச் 19, 20 மற்றும் 21 ஆகிய திகதிகளில் விவாதிக்கப்பட்டது.

நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு மூன்று நாள் விவாதத்தின் முடிவில் மாலை 4.30 மணிக்கு நடைபெற்றது. எம்.பி.க்கள் யாரும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் மற்றும் எதிர்க்கட்சியில் இருந்து அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட இரண்டு உறுப்பினர்கள் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தனர்.

வாக்கெடுப்பின் போது 31 எம்.பி.க்கள் சபையில் இல்லை. ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தரப்புக்கள் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர். பிரதிக் குழுத் தலைவர் அங்கஜன் இராமநாதன், பிரியங்கர ஜயரத்ன, நிமல் லான்சா, வடிவேல் சுரேஸ், டபிள்யூ.டி.ஜே.சேனவிரத்ன, ஏ.எல்.எம்.அதவுல்லா மற்றும் ஏ.எச்.எம். பௌசி பிரேரணைக்கு எதிராக வாக்களித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தேசிய பொதுஜன பெரமுனவின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, டலஸ் அழகப்பெரம, அத்துரலியே ரத்தின தேரர், சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்டோர் வாக்களிக்கும் போது அவையில் இருக்கவில்லை. இதன்போது, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவும் பிரேரணைக்கு எதிராக வாக்களித்துள்ளார். சபாநாயகராக மஹிந்த யாப்பா அபேவர்தன தொடர்ந்தும் செயற்படுவார்.

ஐக்கிய மக்கள் சக்தி சமர்ப்பித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இரண்டு நாட்களுக்கு நடத்துவதற்கு முதலில் தீர்மானிக்கப்பட்டது, எனினும் பாராளுமன்ற அலுவல்கள் குழு அதன் பின்னர் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு விவாதம் நடத்த முடிவு செய்தது.

சபாநாயகருக்கு எதிரான பிரேரணை கடந்த மார்ச் மாதம் 5ஆம் திகதி எதிர்க்கட்சி உறுப்பினர்களால் பாராளுமன்ற பிரதிப் பொதுச் செயலாளரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தின் 13, 17, 20, 33 (6), 34 (1), 35 (1), 21, 22 மற்றும் 33 ஆகிய பிரிவுகள் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் பரிந்துரைகளை சபாநாயகர் புறக்கணித்ததாக நம்பிக்கையில்லா தீர்மானத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், அரசியலமைப்பு பேரவையில், ஐஜிபி தேசபந்து தென்னகோனின் நியமனத்தை உறுதிசெய்ய சபாநாயகர் ‘அரசியலமைப்புக்கு முரணாகவும் சட்ட விரோதமாகவும்’ தனது தீர்க்கமான வாக்கைப் பயன்படுத்தியதாகவும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூறுகின்றனர்.

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் – பாராளுமன்றத்தில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்

வெடுக்குநாறி ஆதிலிங்கேஷ்வரர் ஆலயத்தின் சிவராத்திரி தினத்தன்று கைது செய்யப்பட்ட 08 பேரை விடுவிக்குமாறு வலியுறுத்தி வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் பிரதிநிதிகள் சபை நடுவில் வந்து ‘ வெடுக்குநாறி,மாதவனை,குருந்தூர் எங்கள் சொத்து’ என்று உரத்த குரலில் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபை நடுவில் வந்து ‘நாட்டின் மத சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.தமிழ் பிரதிநிதிகளின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து உடன் விசாரணைகளை முன்னெடுங்கள் ‘ என்று வலியுறுத்தினார். இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினால் சபையில் அமளி துமளி ஏற்பட்டது.

நீதிமன்ற விசாரணைக்கு இடம்பெற்றுள்ள விடயத்துக்கு பாராளுமன்றத்தின் ஊடாக தீர்வு காண முடியாது. 08 பேர் கைது செய்யப்பட்ட விதம் முறையற்றதாயின் அது தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிப்பதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ சபைக்கு உறுதியளித்தார்.

பாராளுமன்ற அமர்வு செவ்வாய்க்கிழமை பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் கூடிய போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் இராசமாணிக்கம்,செல்வம் அடைக்கலநாதன்,சார்ள்ஸ் நிர்மலநாதன்,தர்மலிங்கம் சித்தார்த்தன், வினோநோதராதலிங்கம்,எஸ். சிறிரன் ஆகியோரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்,ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களான வேலுகுமார்,உதயகுமார்,இராதாகிருஸ்ணன், நளின் பண்டார ஆகியோர் ‘பொலிஸ் அராஜகம் ஒழிக, அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க பதவி விலக வேண்டும்.வெடுக்குநாறி எங்கள் சொத்து,மாதவனை எங்கள் சொத்து,பொய் வழக்கை வாபஸ் பெறு,அப்பாவிகளை விடுதலை செய்,குருந்தூர் மலை எங்கள் சொத்து என கோசங்களை எழுப்பியவாறு சபை நடுவில் வந்து எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபை நடுவில் வந்து தமிழ் பிரதிநிதிகளுடன் போராட்டத்தில் கலந்துக் கொண்டார்.அத்துடன் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களும் இந்த போராட்டத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.ஆளும் கட்சியின் ஒருசில உறுப்பினர்களும்,பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் விமல் வீரவன்ச இது இனவாத செயற்பாடு ஆகவே இதற்கு இடமளிக்க வேண்டாம் என இந்த போராட்டத்துக்கு எதிராக உரையாற்றினார்.

இதன்போது சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ ‘உங்களின் எதிர்ப்புக்களை வெளிப்படுத்தி விட்டு ஆசனங்களுக்கு செல்லுங்கள்’ என்று குறிப்பிட்டு விட்டு சபை நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.

இதன்போது ஒழுங்கு பிரச்சினையை முன்வைத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ‘ வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் பிரதிநிகள் பாரதூரமான பிரச்சினைகளை முன்வைத்து சபையில் தமது எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார்கள்.ஆகவே அவர்களின் கருத்துக்களுக்கு செவிசாய்த்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுங்கள் ‘ என்றார்.

சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் ‘ சபை நடுவில் எதிர்ப்பு தெரிவித்த வண்ணம் இருந்த தமிழ் பிரதிநிதிகளை நோக்கி உங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தி விட்டு தயவு செய்து ஆசனங்களுக்கு செல்லுங்கள். நீங்கள் முன்வைக்கும் காரணிகள் பொறுப்பான தரப்பினருக்கு அறிவிக்கப்படும் ‘என்று அறிவித்து விட்டு சபை நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷமன் கிரியெல்ல ‘கோயிலில் வணங்கிக் கொண்டிருக்கும் போது சிவில் மக்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.இது முற்றிலும் தவறு ‘என்றார்.

சபைக்கு நடுவில் இருந்து எதிர்ப்பு தெரிவித்த தமிழ் பிரதிநிதிகள்’தொல்பொருள் அமைச்சர் உடன் பதவி விலக வேண்டும்.வெடுக்குநாறி எங்கள் சொத்து,மாதவனை எங்கள் சொத்து,குருந்தூர் எங்கள் சொத்து’ என உரத்த குரலில் தமது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.

மீண்டும் எழுந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர்’ மத சுதந்திரம் இந்த நாட்டின் அடிப்படை மனித உரிமைகளில் ஒன்றாகும்.கோயிலுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டவர்களை கைது செய்ய அதிகாரம் இல்லை.ஆகவே உடனடியாக நடவடிக்கை எடுங்கள்,மத சுதந்திரம் வடக்குக்கும் ,தெற்குக்கும் ஒன்றாக காணப்பட வேண்டும் என்றார்.

இதன்போது உரையாற்றிக் கொண்டிருந்த அரசாங்க நிதி தொடர்பான குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா’தயவு செய்து சபையை கட்டுப்படுத்துங்கள்’ என்றார்.

சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர்’ அவர்கள் ஆசனங்களுக்கு செல்லாவிட்டால் நாங்கள் என்ன செய்வது ‘என்றார்.தமிழ் பிரதிநிதிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் பிரதி சபாநாயகர் சபை நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.

இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபை நடுவில் வந்து தமிழ் பிரதிநிதிகளின் மத்தியில் நின்று ‘பிரதி சபாநாயகர் அவர்களே தயவு செய்து இவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளியுங்கள்.மத உரிமை மறுக்கப்பட்டுள்ளதை இவர்கள் வெளிப்படுத்துகிறார்கள்.நீங்கள் பதிலளியுங்கள் என்றார்.

சபைக்கு தலைமை தாங்கிய பிரதிசபாநாயகர் ‘ சபை நடுவில் வந்து போராட்டத்தில் ஈடுபடுவதால் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது.இவர்கள் முன்வைத்த விடயத்தை உரிய தரப்பினருக்கு அறிவிப்பதாக நான் குறிப்பிட்டேன்.அதனை கருத்திற் கொள்ளாமல் போராட்டத்தில் ஈடுபட்டால் என்ன செய்வது’ என்றார்.

பொலிஸ்மா அதிபரை பாராளுமன்றத்துக்கு அழைத்து விசாரணை செய்யுங்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.இதற்கு பதிலளித்த சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் நீங்கள் குறிப்பிடுவதை போன்று பொலிஸ்மா அதிபரை அழைக்க முடியாது.நான் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கிறேன் என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய ஆளும் தரப்பின் பிரதம கொறடாவான பிரசன்ன ரணதுங்க ‘ வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் பிரதிநிதிகளுக்கு பிரச்சினைகளுக்கு காணப்படுமாக இருந்தால் அவர்கள் ஆசனங்கள் இருந்தவாறு அவற்றை குறிப்பிடலாம்.எதிர்க்கட்சித் தலைவர் இவர்களுடன் ஒன்றிணைந்து ‘சோ’ காட்டுகிறார் .இவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளிக்க வேண்டாம் என்றார்.

சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் ‘ பெரும்பாலானோர் ‘சோ’தான் காட்டுகிறார்கள் என்றார்.தமிழ் பிரதிநிதிகள் சபை நடுவில் இருந்தவாறு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருந்தார்கள்.

இதன்போது எழுந்து உரையாற்றிய பிரதமர் தினேஷ’ குணவர்தன ‘சாணக்கியன் அவர்களே தயவு செய்து ஆசனத்துக்கு செல்லுங்கள்.இவர்களின் பிரச்சினைகள் பற்றி பேசுவதற்கு நாங்கள் எதர்ப்பு தெரிவிக்கவில்லை.ஆகவே ஆசனங்களுக்கு சென்று பிரச்சினைகளை குறிப்பிடுங்கள்.சட்டத்தின் பிரகாரம் உரிய நடவடிக்கைகளை எடுக்கலாம் என்றார்.

இதனை தொடர்ந்து சபை நடுவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் ஆசனத்துக்கு சென்று ஒழுங்கு பிரச்சினையை முன்வைத்து’ கடந்த 08 ஆம் திகதி சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறி மலையில் மத வழிபாட்டில் ஈடுபட்டவர்கள் தொல்பொருள் சின்னங்களுக்கு சேதம் விழைவித்ததாக பொய் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.ஆகவே 08 பேரையும் விடுவிக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கை என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ’08 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.முறையற்ற வகையில் கைதுகள் இடம்பெற்றிருந்தால் அது குறித்து பக்கச்சார்பற்ற வகையில் விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றத்துக்கு அறிவிக்க முடியும்.அதனை தொடர்ந்து நீதிமன்றம் தீர்மானம் எடுக்கும்.கைது செய்யப்பட்டுள்ளவர்களை பாராளுமன்றத்தால் விடுவிக்க முடியாது.ஆகவே இந்த விவகாரம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படும் ‘ என்றார்.

இதன்போது மீண்டும் எழுந்து உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்லஸ் நிர்மலநாதன் ‘ நீதியமைச்சரே நான் குறிப்பிடுவதை கேளுங்கள் தொல்பொருள் திணைக்களம் பொய் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

இதன்போது எழுந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச’ நீதியமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த நாட்டில் மத சுதந்திரம் உள்ளது.இது அடிப்படை உரிமை.மத தலங்களுக்கு சென்று வழிபட அனைவருக்கும் சுதந்திரம் உண்டு.225 உறுப்பினர்களும் மத சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும்.ஆகவே இந்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நீதியமைச்சரிடம் கேட்டுக் கொள்கிறேன்’ என்றார்.

ஒழுங்கு பிரச்சினையை முன்வைத்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் ‘தொல்பொருள் திணைக்களத்தின் அடாவடித்தனத்தால் தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.முறையான விசாரணைக்கு பின்னர் அவர்களை விடுதலை செய்ய முடியும் என்று நீதியமைச்சர் குறிப்பிடுகிறார்.ஆனால் குருந்தூர் மலை விவகாரத்தில் ஒருசில பௌத்த பிக்குகளுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.தமிழர்களுக்கு ஒரு நீதி,சிங்களவர்களுக்கு பிறிதொரு நீதி இதுவே இந்த நாட்டின் அடிப்படை பிரச்சினை என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, ‘தொல்பொருள் கட்டளைச்சட்டம் தொடர்பில் பொதுவான பிரச்சினைகள் காணப்படுகின்றன.மத தலங்கள் உள்ள பெரும்பாலான இடங்கள் தொல்பொருள் பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.அதில் பௌத்த விகாரைகள் பெருமளவில் காணப்படுகின்றன.தொல்பொருள் திணைக்களத்தினால் பௌத்த பிக்குகளும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

தொல்பொருள் சட்டத்தின் ஊடாக கைது செய்யப்பட்டவர்களுக்கு பிணை வழங்கும் அதிகாரம் நீதவான் நீதிமன்றங்களுக்கு கிடையாது.ஆகவே இவ்விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.தொல்பொருள் சட்டத்தில் உள்ள குறைப்பாடுகளுக்கு தீர்வு காணும் வகையில் திருத்தங்களை முன்வைக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.ஆகவே தொல்பொருள் சட்டத்தின் குறைப்பாடுகளை ஒரு இனத்துக்கு மாத்திரம் வரையறுக்க வேண்டாம் என்றார்.

இதனை தொடர்ந்து சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ ‘ இந்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்று விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.பாராளுமன்றத்தின் ஊடாகவும் உரிய கவனம் செலுத்தப்படும் ‘ என்று சபைக்கு அறிவித்தார்.

Posted in Uncategorized

பெறுமதி சேர் வரி (திருத்தச்) சட்டமூலம் 24 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

பெறுமதி சேர் வரி (திருத்தச்) சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு 24 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. ஆதரவாக 59 வாக்குகளும் எதிராக 35 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (6) இடம்பெற்ற பெறுமதி சேர் வரி, சமூக அறவீட்டு வரி உள்ளிட்ட வரி சட்டமூலம் மீதான இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் இடம்பெற்றது.இதன்போது பெறுமதி சேர் வரி சட்டமூலத்துக்கு சபை அனுமதி வழங்குகிறதா? என சபாநாயகர் வினவிய போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன வாக்கெடுப்பை கோரினார்.

அதன் பிரகாரம் வாக்களிப்பு கோரப்பட்ட போது பெறுமதிசேர் வரி (திருத்தச்) சட்டமூலத்துக்கு ஆதரவாக 59 வாக்குகளும்,எதிராக 35 வாக்குகளும் அளிக்கப்பட்டன. 24 மேலதிக வாக்குகளால் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது .

பொதுத் தேர்தலை முதலில் நடத்துவதே பொதுஜன பெரமுனவின் நிலைப்பாடு – உதயங்க வீரதுங்க

பொதுத்தேர்தலை முதலில் நடத்துவதையே பொதுஜனபெரமுனவின் பெரும்பாலான அங்கத்தவர்களின் நிலைப்பாடாகவுள்ளதாகத் தெரிவித்துள்ள ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவரும், ராஜபக்ஷக்களின் சகோதரருமான உதயங்க வீரதுங்க, அதற்கான வியூகத்துடன் பஷில் ராஜபக்ஷ மார்ச் மாதத்தில் நாடு திரும்பவுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பொதுஜனபெரமுன மற்றும் பஷில் ராஜபக்ஷவின் அடுத்தகட்டச் செயற்பாடுகள் சம்பந்தமாக கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொதுஜனபெரமுனவினை ஸ்தாபித்து கடந்த காலத்தில் நாட்டில் நடத்தப்பட்ட அனைத்து தேர்தல்களிலும் பெருவெற்றிபெறச் செய்ததில் பஷில் ராஜபக்ஷவின் புத்திசாதுரியம் மிகவும் முக்கியமானது.

அந்த வகையில், அவர் நாட்டிலிருந்து வெளியேறியபோது, நாமல் ராஜபக்ஷவிடத்தில் கட்சிப்பணிகளை ஒப்படைத்துவிட்டுச் சென்றிருந்தார்.

கட்சிக்கும், கிராமங்களில் உள்ள சாதாரண பொதுமக்களுக்கும் இடையிலான பிணைப்பினை வலுவாக வைத்துக்கொள்வதற்குரிய நடவடிக்களை தொடர்ச்சியாக முன்னெடுப்பதோடு அவர்களின் கோரிக்கைகள், பிரச்சினைகள் சம்பந்தமாக கவனம் செலுத்துவது தான் நாமல் ராஜபக்ஷவின் பிரதான பணியாக இருந்தது.

இவ்வாறான நிலையில், பஷில் ராஜபக்ஷ மீண்டும் எதிர்வரும் மார்ச் மாதம் நடுப்பகுதியில் நாடு திரும்பவுள்ளார். அவர் நாடு திரும்புவது, ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதி ஆசனத்தில் அழகுபார்ப்பதற்காக அல்ல.

பொதுஜனபெரமுனவை பாதுகாக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும், கட்சியின் பெரும்பாலானவர்களின் நிலைப்பாடுகளுக்கு அமைவாக பொதுத்தேர்தலை நடத்துவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகும்.

பொதுத்தேர்தலை நடத்துவதாக இருந்தால் அதற்கான அறிவிப்பினை ஜனாதிபதியே செய்ய வேண்டும். இருப்பினும், பஷில் ராஜபக்ஷ நாடு திரும்பியதும் இந்த விடயம் சம்பந்தமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

இதனடிப்படையில், பொதுத்தேர்தல் நடத்தப்படும் போது, அதற்கான வெற்றி வியூகங்களை வழங்கும் பிரதான பணியை பஷில் ராஜபக்ஷவே முன்னெடுப்பார்.

மேலும், பெரமுனவின் உறுப்பினர்களில் சிலர் ஜனாதிபதிக்கு ஆதரவாக நிற்கின்றபோதும், முதலில் ஜனாதிபதி தேர்தலை நடத்தினால் அதில் ரணில் வெற்றியைப் பெற்றுக்கொள்ள முடியாது. ஆகவே பொதுத்தேர்தலை நடத்துவதே பொருத்தமான நகர்வாக இருக்கும்.

ஏவ்வாறாயினும், பஷில் ராஜபக்ஷ மீண்டும் பொதுஜனபெரமுனவினைப் பதவியில் அமர்த்துவதற்கு நடவடிக்கைகளை எடுக்கவுள்ளார் என்றார்.

கோப் மற்றும் கோபா குழுக்களின் தலைவர் பதவிகளை எதிர்கட்சிக்கு வழங்குமாறு கோரிக்கை

கோப் மற்றும் கோபா குழுக்களின் தலைவர் பதவிகளை எதிர்க்கட்சிக்கு வழங்குமாறு எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று (22) காலை ஆரம்பமான பாராளுமன்ற அமர்வின் போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் எதிர்க்கட்சிகளுக்கு இந்த பதவிகளை வழங்குவதாக எழுத்து மூலம் உறுதியளித்ததாகவும் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, இது தொடர்பான நிலைமையை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக பிரதி சபாநாயகர் தெரிவித்தார்.

Posted in Uncategorized

நிகழ்நிலைக் காப்புச் சட்டம் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் அதிருப்தி

இலங்கையில் நிறைவேற்றப்பட்டுள்ள நிகழ்நிலை காப்புச் சட்டம் மனித உரிமைகள் அம்சங்களில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் அலுவலகம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

இந்த சட்டத்தினால் ஏற்படும் பாதிப்புக்களை மீளாய்வு செய்து சட்டத்தை திருத்தம் செய்யுமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகம் தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் வலைத்தளத்தில் மேற்கண்டவாறு பதிவேற்றம் செய்துள்ளது.

நிறைவேற்றப்பட்டுள்ள நிகழ்நிலை காப்புச் சட்டத்தினால் கருத்து மற்றும் பேச்சு சுதந்திரத்துக்கு தடையேற்படும்.இந்த சட்டத்தின் ஊடாக சிவில் சமூகம்,கைத்தொழிற்றுறை உள்ளிட்ட பல துறைகளுக்கு ஏற்படும் பாதிப்புக்களை மீள்பரிசீலனை செய்து சட்டத்தை திருத்தம் செய்ய இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்துவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை குறிப்பிட்டுள்ளது.

நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தில் உயர்நீதிமன்றத்தின் பரிந்துரைகள் உள்வாங்கப்படும் – வஜிர அபேவர்த்தன

நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்துக்கு உயர் நீதிமன்றம் வழங்கியிருக்கும் திருத்தங்கள் உள்வாங்கப்படும். அவ்வாறு உள்வாங்காமல் இருந்தால், அது தேவையில்லை என்பதால் உள்வாங்காமல் இருக்க முடியும். அத்துடன் உலக நாடுகளில் இருக்கும் சட்டத்தை விட மிகவும் தளர்வான சட்ட திட்டங்களே குறித்த சட்டமூலத்தில் உள்வாங்கப்பட்டிருக்கின்றன என ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் குறித்து தெரிவிக்கப்படும் விமர்சனங்கள் தொடர்பில் குறிப்பிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறு‍கையில்,

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் காரணமாக டிஜிட்டல் பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படும் என சிலர் தெரிவித்து வருகின்றனர்.

உலகில் 137 நாடுகளில் இந்த சட்டம் செயற்பட்டு வருகிறது. அப்படியாயின், அந்த நாடுகளில் டிஜிட்டல் பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு எதுவம் இல்லை. அதனால் இதனை அரசியலாக்க வேண்டாம். ஒட்டுமொத்த இலங்கை நாகரிகத்தை எதிர்பார்ப்பதாக இருந்தால் இந்த விடயங்கள் செயற்படுத்தப்பட வேண்டும்.

அத்துடன், உலகில் 194 நாடுகளில் 137 நாடுகளில் சமூக வலைத்தளங்கள் தொடர்பில் இருக்கும் சட்ட திட்டங்களைவிட மிகவும் இலகுவானதாகும். அதன் பிரகாரம் இலங்கையின் நாகரிகம் இந்த சட்டத்தின் மூலம் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. இந்த சட்ட திட்டங்கள் போதாது. உலகில் வளர்ச்சியடைந்த நாடுகளில் போன்று இதனை செயற்படுத்த வேண்டியிருக்கிறது.

மேலும், இந்த சட்டமூலத்துக்கு உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கும் திருத்தங்களை உள்வாங்குவோம். அவ்வாறு உள்வாங்காமல் இருப்பதாக இருந்தால் அது தேவையில்லை என்பதால் உள்வாங்காமல் இருக்க முடியும். என்றாலும், உயர்நீதிமன்றம் சில பிரிவுகளில் மாற்றங்களை மேற்கொள்ளுமாறு தெரிவித்த விடயங்களுக்கு மாற்றமாக எதுவும் இடம்பெறப்போவதில்லை.

அத்துடன், இந்த சட்டத்தை செயற்படுத்த ஆணைக்குழு ஒன்று அமைக்கப்படும். உலக நாடுகளிலும் இதற்காக ஆணைக்குழு அமைக்கப்பட்டிருக்கிறது. தற்போது இலங்கையில் கொண்டுவந்திருக்கும் இந்த சட்டம், சிங்கப்பூரில் இருப்பதை விட கடுமையானது அல்ல. சிங்கப்பூரில் சில விடயங்களுக்கு ஒரு மில்லியன் டொலர் வரை தண்டப்பணம் விதிக்க முடியும். அந்தளவு கடுமையான சட்டமல்ல.

மாறாக, அவற்றை விட இலகுவான, ஜனநாயக ரீதியான, பிரித்தானிய அரசியலமைப்புக்கு அமைய, இந்தியாவின் அரசியலமைப்புக்கு அமைய ஆசிய நாடுகளின் அரசியலமைப்புகளுக்கு அமைவாக மிகவும் தளர்வான அளவே இந்த சட்டமூலத்தின் ஊடாக சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது என்றார்.

Posted in Uncategorized

20 ஆவது திருத்தச் சட்டத்திற்கு நேர்ந்த கதியே நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலத்திற்கு நேரிடும் – கிரியெல்ல

மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் என்பனவற்றில் சிங்கப்பூர் முன்னேற்ற நிலையில் இல்லை. ஆகவே சிங்கப்பூர் நாட்டின் மாதிரியிலான வகையில் நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு நேர்ந்த கதியே நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்துக்கும் நேரிடும். அரசாங்கத்துக்கு எதிரான கருத்தை குறிப்பிடும் சகலரையும் பயங்கரவாதிகள் என்றும் சித்தரிக்கும் நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு அரசாங்கம் செயற்படுகிறது என எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (24) இடம்பெற்ற உத்தேச நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இணையவழிப் பாதுகாப்புச் சட்டமூலம் 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட இணைய பாதுகாப்புச் சட்டமூலம் 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

சட்டமூலத்திற்கு ஆதரவாக 108 வாக்குகளும் எதிராக 82 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில், எதிர்க்கட்சியினர் சட்டமூலத்திற்கு கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டு சபையில் இன்று உரையாற்றியிருந்தனர்.

இணைய பாதுகாப்புச் சட்டமூலம் நாடாளுமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்ட காலத்திலிருந்து பெரும் சர்ச்சைகளுக்கு இது முகம் கொடுத்திருந்தது.

ஊடக நிறுவனங்கள் மட்டுமன்றி, சிவில் சமூக அமைப்புக்கள், சர்வதேச அமைப்புக்கள், புத்திஜீவிகள் என பலரும் இதற்கு எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.

இந்த சட்டமூலமானது பல்வேறு திருத்தங்களுக்கும் உள்ளாக்கப்பட்டதையடுத்து, நேற்றும் இன்றும் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதம் இடம்பெற்றது.

இன்று சபையின் இரண்டாம் வாசிப்பின் மீதான இரண்டாம் நாள் விவாதம் இடம்பெற்ற நிலையில், வாக்கெடுப்பு நடைபெற்றது.

இதில் ஆளும் தரப்பினர் சட்டமூலத்திற்கு ஆதரவாகவும் ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, உத்தரலங்கா சபாவ, ஜே.வி.பி. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிராக வாக்களித்தன.

அந்தவகையில், குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 108 வாக்குகளும் எதிராக 82 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில், 46 மேலதிக வாக்குகளால் இது நிறைவேற்றப்பட்டது.

இலங்கையில் நீதியை நிலைநாட்டும் சட்டங்கள் சர்வதேச தரத்துக்கு அமையவே கொண்டுவரப்படுகின்றன – நீதியமைச்சர் விஜயதாஸ

இலங்கையில் நீதியை நிலைநாட்டும் நடவடிக்கையை உறுதிப்படுத்துவதற்காக கொண்டுவரப்படும் புதிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகள் சர்வதேச தரத்துக்கு உட்படும் வகையில் வெளிப்படைத் தன்மையை பாதுகாத்துக்கொண்டு கொண்டுவரப்படுகின்றன என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் அன்றூ பிரேன்ச் மற்றும் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ ஆகியோருக்கிடையில் வியாழக்கிழமை (18) நீதி அமைச்சில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்ற போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது இலங்கையில் நீதியை நிலைநாட்டும் நடவடிக்கையை உறுதிப்படுத்துவதற்காக கொண்டுவரப்படும் புதிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகள் சர்வதேச தரத்துக்கு இசைவாக வெளிப்படைத் தன்மையை பாதுகாத்துக்கொண்டு கொண்டுவரப்படுகின்ற விடயத்தை சுட்டிக்காட்டியதுடன் உலக நாடுகளில் நீதியை நிலைநாட்டும் செயற்பாடுகளை வெற்றிகரமாக்கிக்கொள்ளும் காலத்தில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அனுபவங்கள் தொடர்பாகவும் ஒருங்கிணைப்பாளர் அமைச்சருடன் கருத்து பரிமாறிக்கொண்டுள்ளார்.

அத்துடன் நீதியை நிலைநாட்டும் நடவடிக்கையை மிகவும் உறுதிமிக்கதாக முன்னெடுத்துச் செல்வதற்காக கடந்த காலத்தில் கொண்டுவரப்பட்ட புதிய சட்டங்கள் அனைத்தும் மிகவும் ஜனநாயக முறையில் அனைவரின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை பெற்றுக்கொண்டு அந்த சட்டங்கள் அமைக்கப்பட்ட முறை தொடர்பாகவும் அமைச்சர் ஒருங்கிணைப்பாளருக்கு தெளிவு படுத்தியிருந்தார்.

அதேபோன்று எதிர்காலத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவுடன் இணைந்து செயற்படுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவதற்காக இலங்கை மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல் மிகவும் முக்கியமாகும் எனவும் அமைச்சர் இதன்போது எடுத்துரைத்துள்ளதாக நீதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.