கூட்டமைப்புடன் அனைத்து கட்சிகளும் இணைந்து பயணிக்க வேண்டும் -ஜனநாயகப் போராளிகள்

அனைத்து கட்சிகளும் எந்தவித பேதங்களுமின்ற தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து பயணிக்கவேண்டிய தேவையும் சூழ்நிலையும் இன்று ஏற்பட்டுள்ளது என ஜனநாயக போராளிகள் கட்சியின் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் ப.சாந்தன் தெரிவித்தார்.

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் கௌரவிப்பு நிகழ்வு மட்டக்களப்பு வெல்லாவெளியில் அமைந்துள்ள ஜனநாயகப் போராளிகள் கட்சி மட்டு அம்பாறை தலைமைக் காரியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் ப.சாந்தன், காரைதீவுப் பிரதேச சபைத் தவிசாளர் கி.ஜெயசிறில், வெல்லாவெளி பிரதேச சபை உறுப்பினர் தியாகராஜா, உள்ளிட்ட கட்சியின் பிரதிநிதிகள், மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

நிகழ்வின் ஆரம்பத்தில் மாவீரர்களை நினைவு கூரும் முகமாக மாவீரர்களின் பெற்றோர், ஜனநாயகப் போரளிகள் கட்சியின் உபதலைவர், காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் உள்ளிட்டோரால் ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து நினைவுரை, சிறப்புரைகள் இடம்பெற்று பின் மட்டக்களப்பு மாவட்ட மாவீரர்களின் பெற்றொர்களை கௌரவிக்கும் முகமாக அவர்களுக்கு உதவிகள் மற்றும் தென்னங்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

மாவீரர் நினைவு வாரத்தை அனுஸ்டிக்கும் முகமாக வடக்கு கிழக்கு பகுதிகளில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் பல செயற்திட்டங்கள், துயிலுமில்ல துப்பரவுப் பணிகள், மாவீரர் தின நினைவேந்தல் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் மாவீரர் குடும்பங்களைக் கௌரவிக்கும் முகமாக மேற்படி நிகழ்வு ஒழங்கு படுத்தப்பட்டு நடாத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், தமிழர்கள் இந்த நாட்டில் தங்களை தாங்களே ஆட்சி செய்து தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழவேண்டும் என்பதற்காக பல்வேறு அர்ப்பணிப்புகளை மாவீரர்கள் செய்துள்ளனர்.ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டாலும் தமிழ் மக்களின் உரிமையினை அடைவதற்கான அரசியல் ரீதியான போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவந்தது.அந்த அரசியல் ரீதியான நகர்வுகளில் மாற்றங்கள் ஏற்படவில்லை.

அனைவரும் சிந்தக்கவேண்டும்.எமது மக்களின் அபிலாசைகளில் விளையாடாமல் தமிழ் கட்சிகள் இணைந்து செயற்படவேண்டும்.தமிழ் மக்கள் நிம்மதியாக வாழவேண்டும் என்பதற்காகவே மாவீரர்களை பெற்றோர் தியாகம் செய்தார்கள்.

தமிழ் தேசிய பரப்பில் செயற்படும் கட்சிகள் அனைத்தும் ஒரு தீர்மானத்தை எடுக்கவேண்டிய நேரம் தற்போது வந்துள்ளது.நான் பெரிது நீ பெரிது என்று பார்க்காமல் தமிழ் மக்களின் விடுதலைக்காக உழைக்கின்றோம் என்று கூறிக்கொள்ளும் அனைத்து கட்சிகளும் எந்தவித பேதங்களுமின்ற தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து பயணிக்கவேண்டிய தேவையும் சூழ்நிலையும் இன்று ஏற்பட்டுள்ளது.அனைவரும் இணைந்து பயணிக்கவேண்டிய காலம் தற்போது கனிந்துள்ளது.

இந்த அழைப்பானது தமிழ் தேசிய கட்சிகளை அடிப்படையாக கொண்டே விடுக்கப்படுகின்றது.தமிழ் பேசும் சிங்கள கட்சிகளை சேர்ந்தவர்களுக்கு அல்ல என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும்.
தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து பயணிக்கவேண்டிய கட்டாயும் தற்போது ஏற்பட்டுள்ளது.அதற்கான சமிக்ஞையை தற்போது அரசாங்கம் காட்டியுள்ளது.இதனை விடுத்து தனித்து செயற்படமுனைந்தால் மாவீரர்கள் என்ன காரணத்திற்காக அர்ப்பணித்தார்களோ அந்த இலக்கினை அடையமுடியாத நிலைக்கு நாங்கள் தள்ளப்படுவோம்.

தமிழ் கட்சிகளுடன் பேசத்தயார் என ஜனாதிபதி ரணில் அவர்கள் கூறியுள்ள நிலையில் அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றாகும்போதே சாத்தியமான தீர்வினைப்பெறமுடியும்.நாங்கள் தனித்தனியா பயணித்தால் தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாசைகளை நோக்கி பயணிக்கமுடியாத நிலையே ஏற்படும்.

இந்த ஆண்டில் அனைவரும் தீர்மானம் ஒன்றை அனைவரும் இணைந்து பயணிக்கவேண்டும்.இம்முறை மாவீரர் தின நிகழ்வுகள் அனைத்து மாவீரர் துயிலும் இல்லங்களிலும் நடைபெறும்.உங்களது பிள்ளைகளுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்துவதற்கு உங்களுக்கு உரிமையிருக்கின்றது.

மாவீரர்களை நினைவு கூரும் நாளில் நாங்கள் அற்பசொற்ப சலுகைகளுக்கு சோரம்போகாமல் எமது இலக்கினை அடையக்கூடிய வழிவகைகளை நோக்கி பயணிக்கவேண்டும்.நாங்கள் அனைவரும் ஒருமித்து செயற்படவேண்டிய தேவையுள்ளது.

அனைவருக்கும் வாக்களிப்பதனால் தமிழ் தேசியம் உடைக்கப்படுகின்றது.நீங்கள் வாக்களிக்கும்போது உங்களது பிள்ளைகளை நீங்கள் நெஞ்சில் நிறுத்திக்கொள்ளுங்கள்.உங்கள் பிள்ளைகள் எதற்காக மண்ணில் மரணித்தார்கள் என்பதை நீங்கள் நெஞ்சில் நிலை நிறுத்திக்கொள்ளுங்கள்.

எங்களுக்குள் ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும் கொள்கைரீதியாக எமது அபிலாசைகளை பெற்றுக்கொள்ளும் வகையில் ஒன்றுபட்டுசெல்லவேண்டும்.மக்கள் வேறு திசைகள் நோக்கி பயணிக்காமல்,வேறு கட்சிகளுக்கு வாக்களிக்காமல் தமிழ் தேசியத்தினை வெல்லக்கூடிய கட்சிகளுக்கே வாக்களிக்கவேண்டிய தேவையுள்ளது.அதற்காகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் அவர்களினால் உருவாக்கப்பட்டது.

யாரின் ஏமாற்று பேச்சுகளுக:கும் இடமளிக்கவேண்டாம்.தெளிவான முடிகளை எடுத்து எமது அபிலாசைகளை பெற்றுக்கொள்வதற்கான பயணத்தில் இணைந்துகொள்ளவேண்டும்.