ஐ.எம்.எவ் பிரதிநிதிகளை தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றாக சந்திக்க வேண்டும்- சபா.குகதாஸ் வலியுறுத்து

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் ஒன்றாக சந்திப்பது தமிழ் மக்களின் நிலைப்பாட்டை பலப்படுத்தும் என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று (13) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சர்வதேச நாணய நிதியம் இலங்கை அரசிற்கு வழங்கும் கடன்கள் மூலம் பிரச்சினைகளுக்கான நிரந்தர மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு இல்லை என்பதையும் , மேலும் அரசாங்கம் உடனடியாக செய்ய வேண்டிய விடயங்களை IMF பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்துவது காலத்தின் கட்டாயம் என்பதை உணர்ந்து தனித் தனியாக கருத்துப் பகிர்வது, சந்திக்காது ஒதுங்குவது போன்ற நடவடிக்கைகளை தவிர்த்து ஒற்றுமையாக சந்திப்பது சிறப்பாக அமையும்.

அரசாங்கத்திற்கு நெருக்கடி வழங்கும் தரப்புக்கள் மூலம் அழுத்தங்களை பிரயோகித்தல் தமிழ் மக்களின் பிரச்சினைகளின் எண்ணிக்கையை குறைக்க வாய்ப்புக்களை உருவாக்கும் என அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வவுனியா வெடுக்குநாறி மலை சம்பவத்திற்கு ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி கண்டனம்

வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலையில் நேற்று இடம்பெற்ற சிவராத்திரி பூஜை வழிபாடுகளின் போது பக்தர்களின் சமய வழிபாடுகளுக்கு பொலிசார் இடையூறு விளைவித்ததுடன் அங்கிருந்த சமய செயற்பாட்டாளர்கள் அரசியல் பிரமுகர்கள் மீதும் வன்முறையை மேற்கொண்டுள்ளனர் இந்த சம்பவமானது கண்டனத்திற்குரியது என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்

இந்த கருத்தினை இன்றைய தினம் (9) செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் அலுவலகத்தில் வைத்து தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கும் போது,

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயமானது காலங்காலமான சைவ சமய வழிபாட்டு தளமாக இருந்து வருகிறது இந்த நிலையில் நேற்றைய தினம் (8)சிவராத்திரி பூஜை வழிபாடுகளில் ஈடுப்பட்டிருந்த பக்தர்கள் பலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் இந்த சம்பவம் இன மத நல்லினக்கத்திற்கு பாதகமாக அமையும்

எனவே பொலிசார் எதற்nடுத்தாலும் பொது மக்களிடம் அத்துமீறும் செயற்பாட்டை நிறுத்த வேண்டும் தமிழ் மக்கள் அவர்களுக்குச் சொந்தமான பூமியில் அவர்களுடைய பாரம்பரிய சமய கடமைகளை செய்வதற்கு இடையூறு விளைவித்த இந்த செயற்பாட்டை நான் வன்மையான கண்டனத்தை தெரிவிப்பதுடன் எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக பொலிசார் செயற்படுவதை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையினையும் விடுக்கிறேன் என்று வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் தெரிவித்தார்

தமிழர்களிடம் வாக்கு கேட்க முன் ஐே.வி.பி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – சபா.குகதாஸ் வேண்டுகோள்

தமிழர்களிடம் வாக்கு கேட்க முன் ஐே.வி.பி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே.வி.பியினர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசியம் சார்ந்த கட்சிகள் பிரதிநிதிகளை சந்திக்க ஆரம்பித்துள்ளனர்.

அது அவர்களின் ஐனநாயக உரிமை ஆனால் தமிழர்களுடன் ஐே.வி.பி பேசுவதற்கு முன்பாக பிரதான இரண்டு விடயத்தை தெளிவுபடுத்த வேண்டும்.

ஒன்று ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்று அவர்கள் கோரி நிற்கும் சமஸ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இரண்டாவது ஐே.வி.பியின் முன்னாள் தலைவர் றேஹண விஐயவீர, ஈழத் தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளவில்லை. அத்துடன் 2006 இணைந்த வடகிழக்கு மாகாணங்களை சட்டரீதியாக பிரிப்பதற்கு ஐே.வி.பியின் உயர்நீதிமன்ற வழக்கே காரணமானது.

2009 முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலைக்கு தென்னிலங்கையில் சாரை சாரையாக சிங்கள இளைஞர்களை இராணுத்தில் இணைவதற்கு தமிழர்களை அழிக்க வேண்டும் என்ற வெறித்தனமான பிரசாரத்தை மேற்கொண்டதுடன் யுத்த வெற்றியை ராஐபக்ச குடும்பத்துடன் பாற்சோறு வழங்கி கொண்டாடியது தாங்கள் தமிழர்களுக்கு செய்த தவறு.

நிறைவேற்று அதிகாரம் உடைய அரசியலமைப்பு நாட்டின் சாபக்கேடு – சபா.குகதாஸ் தெரிவிப்பு

இலங்கையானது பாரிய பின்னடைவை சந்திப்பதற்கு நிறைவேற்று அதிகார ஐனாதிபதி முறையே காரணம் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் யாழ் மவட்ட பொறுப்பாளரும், முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

1978 ஆண்டு இரண்டாம் குடியரசு அரசியலமைப்புடன் கொண்டு வரப்பட்ட நிறைவேற்று அதிகார ஐனாதிபதி முறைதான் இந்த நாடு இவ்வளவு தூரம் பாரிய பின்னடைவை சந்திப்பதற்கு காரணமானது.

இந்த உண்மை தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகளாலும் ஐனாதிபதி வேட்பாளர்களினாலும் பேசு பொருளாக இருந்தாலும் ஆட்சிக்கு வந்தவுடன் மேலதிக நிறைவேற்று அதிகாரங்களை பலப்படுத்துவதில் ஐெயவர்த்னா முதல் கோட்டாபய வரை குறியாக இருந்துள்ளனர்.

இலங்கைத்தீவில் வாழும் சகல இனங்களுக்கும் நியாயமான அதிகாரப்பகிர்வு கிடைப்பதற்கு தடையாக இருப்பது இந்த சர்வ அதிகாரம் கொண்ட ஐனாதிபதி முறைமை தான்.

அத்துடன் கடந்த காலத்தில் நாடு பெரும் யுத்த அழிவுகளையும் இனங்களிடையே குரோத எண்ணங்கள் மேலோங்குவதற்கும் இனங்களிடையே சந்தேகங்கள்இ பயங்கள் ஏற்படுவதற்கும் காரணமானது.

தமிழர்களின் அரசியல் அதிகாரங்கள் இருப்புக்கள் பறிபோவதற்கும் தமிழர்களின் உரிமைப் போராட்டத்திற்கு எதிரான சக்திகளை தமிழர் தரப்புக்குள்ளேயே உருவாக்கி மேலோங்கச் செய்வதில் பக்க பலமாக இருந்தது இருப்பது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஐனாதிபதி முறையே ஆகும்.

நாட்டில் அதிகார துஸ்பிரையோகம்இ சுயாதீன ஆணைக்குழுக்கள் சுயாதீனத் தன்மையை இழத்தல் இ மாகாணங்கள் ஆளுநர்களால் ஐனாதிபதிமாரின் எண்ணங்களுக்கு ஏற்ப ஆழப்படுதல் இ தேசியக் கொள்கைகள் ஆட்சிகள் மாற நிலையான தன்மையை இழத்தல்இ அயல் உறவுக் கொள்கைகள் மாற்றம் அடைதல் போன்றன நிறைவேற்று அதிகார ஐனாதிபதி முறையால் நாட்டை மிகப் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கியதுடன் உள் நாட்டு அரசியல் அமைதியின்மையையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆகவேஇ நாட்டின் நிரந்தர அமைதிக்கும் நிலையான அபிவிருத்திக்கும் இனங்களிடையேயான நல்லிணக்கத்திற்கும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரசியலமைப்பு நீக்கப்பட்டு அதிகாரப் பகிர்வுடன் கூடிய அரசியலமைப்பே அவசியம் எனவும் தெரிவித்தார்.

அபிவிருத்தி என்ற கவசத்துக்குள் இனத்தின் தனித்துவத்தை சிதைக்க சிலர் முயற்சி- சபா.குகதாஸ் குற்றச்சாட்டு

தமிழர்களின் தனித்துவமான பண்பாடு, கலை கலாசாரங்களை சிதைக்கும் நோக்கிலும், இளைய தலைமுறையை திசை திருப்பும் வகையிலும் தமிழர் தாயகத்தில் முதலீடு செய்யும் நோக்கில் கால் பதித்துள்ள ஒரு சில புலம்பெயர்ந்த முதலீட்டாளர்களின் செயற்பாடு ஆரோக்கியமானதாக இல்லை என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் யாழ் மாவட்ட அமைப்பாளரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான சபா. குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழர் தாயகத்தில் முதலீடு செய்யும் நோக்கில் கால் பதித்துள்ள ஒரு சில புலம்பெயர்ந்த முதலீட்டாளர்கள் தமிழர்களின் தனித்துவமான பண்பாடு கலை கலாசாரங்களை சிதைக்கும் நோக்கிலும் இவற்றை பாதுகாக்க வேண்டிய இளைய தலைமுறையை திசை திருப்பும் வகையிலும் செயற்பட ஆரம்பித்துள்ளமை ஆரோக்கியமானதாக இல்லை.

யுத்தம் கோரமாக நடந்த இடங்களில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கொன்றொழிக்கப்பட்ட மண்ணில் பொழுது போக்கு மையங்கள் என்ற போர்வையில் அந்நிய கலாசார அடையாளங்களையும் அதன் நடைமுறைகளையும் உட் புகுத்தி பல சமூகப் பிறழ்வுகளை ஊக்குவிக்கும் செயற்பாடு மிக வேதனையாக உள்ளது.

அடுத்து, கல்வியில் ஏதோ மிக பின் தங்கிய இனமாக ஈழத் தமிழர்களை காட்டும் வகையில் இனி தாங்கள் தான் பல்கலைக் கழகங்களை நிறுவி கல்வியை ஊக்குவிப்பதாக கதை அளந்து கொண்டு பாரம்பரிய கலைகள் மற்றும் பண்பாட்டை சீரழிக்கும் வகையில் இனத்தை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் செயற்பாடு மிக கவலை அழிக்கிறது.

ஈழத் தமிழர்கள் மத்தியில் சரியான ஒரு மேய்ப்பன் இல்லை என்பதை காட்டும் சம நேரம், ஈழத் தமிழர்களை வைத்து எந்தப் பிழைப்பையும் நடத்தலாம் என்ற எண்ணமும் மேலோங்கி வருவதை காணமுடிகிறது.

சிங்கள ஆட்சியாளரும் சில வெளிச் சக்திகளும் விரும்பும் நிகழ்ச்சி நிரலில் புலம்பெயர் முதலீட்டாளர் என்ற வடிவத்தில் சிலர் கைக் கூலிகளாக மாறியுள்ளனர்.

இனத்தின் ஒற்றுமை மற்றும் தனித்துவ அடையாளங்கள் போன்றவற்றை மாற்றியமைக்கும் அல்லது கொச்சைப்படுத்தும் நோக்கில் தங்களது செயற்பாடுகளை முன்நகர்த்தி வருகின்றனர்.

தாயகத்தில் உள்ள சக்திகளை விமர்சித்து தங்களை புனிதர்கள் போல புதிய தலைமுறைக்கு காட்ட முயல்கின்றனர். ஒரு சில முதலீட்டாளர்கள்.

ஆனால், எமது வலிகள் வேதனைகள் துயரங்கள் எவற்றிலும் பங்கெடுக்காத இவற்றை எல்லாம் மூலதனமாக வைத்து பணம் சம்பாதித்த குழு மீண்டும் பிறிதொரு வடிவில் மீண்டும் பணம் சம்பாதிக்க களம் இறங்கியுள்ளது.

இப்படியான இனப்பற்று இல்லாத வியாபாரிகள் மிக ஆபத்தானவர்கள் என்பதற்கு அப்பால் இனத்தை எதிரியானவன் அழிப்பதற்கு மிகப் பலமாக எதிரிக்கு கைகொடுப்பார்கள் கல்வியில் தமிழர்கள் அனைத்து துறைகளிலும் பிரகாசித்த காரணத்தால் தான் பல்கலைக்கழக தரப்படுத்தல் சிங்களவர்களால் கொண்டு வரப்பட்டது என்ற அடிப்படை வரலாற்றுப் பிரச்சினைகள் தெரியாத விபச்சார வியாபாரிகள் தான் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்களை கல்வியில் உயர்த்தப் போகிறார்களாம். இது மிக வேடிக்கையான கதை.

மிகக் கொடிய யுத்தத்திலும் தமிழர்கள் பலமாக வைத்திருந்த துறை கல்வித்துறை தான் இத்தகைய வரலாறுகள் தெரியாது வெளிச் சக்திகளின் நிகழ்ச்சி நிரலில் தமிழர்களை மீண்டும் குழப்பி தங்களுடைய தேவைகளை குளிர்காய சிந்திக்கும் தரப்புடன் எதிர்வரும் காலத்தில் பயணிப்பதை புலம்பெயர் முதலீட்டாளர்கள் தவிர்க்க வேண்டும்.

அத்துடன் தமிழர்களின் தனித்துவத்தை சிதைக்கும் முதலீடுகள் வருவதை தமிழ் மக்களும் ஏற்றுக் கொள்ள வில்லை.

ஆகவே தமிழர்களின் இருப்பை பாதுகாக்கும் வகையில் சமூக வளர்ச்சிக்குரிய முதலீடுகளை தமிழர்கள் இரு கரம் கூப்பி வரவேற்கின்றனர் அத்துடன் சிங்கள மற்றும் வெளிச் சக்திகளின் நிகழ்ச்சி நிரலில் வரும் புலம்பெயர் முதலீடுகளை தவிர்த்துக் கொள்ளுங்கள் எனவும் தெரிவித்தார்.

அரசுக்கு காணிகளை அன்பளிப்போர் மத்திய அரச தாபனங்களுக்கு வழங்குவதை தவிர்த்து உள்ளுராட்சி மன்றங்களுக்கு அன்பளிப்பதே இனம்சார் பாதுகாப்பானது! – நீர்வேலி தமிழ் முற்ற திறப்பு விழாவில் முன்னாள் தவிசாளர் நிரோஷ்

மக்கள் பங்கேற்பு அபிவிருத்தி என்ற எண்ணக்கருவுடன் மக்கள் பங்களிப்பு அபிவிருத்தித் திட்டங்களை வகுத்துச் செயற்படுத்துவதிலும் அரச தாபனங்கள் சிரத்தை எடுக்குமாயின் கிராம மட்ட உட்கட்டுமானங்களை விருத்தி செய்வது இலகுவாக அமையும் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட பொறுப்பாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

நீர்வேலியில் இன்று சனிக்கிழமை (10) இடம்பெற்ற தமிழ் முற்றம் மற்றும் தபாலகக் கட்டிடத் திறப்பு விழாவில் விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும்,

நீர்வேலி மண் தமிழ் மக்களின் பாரம்பரியத்திற்கு உரிய மண்ணாகும். இந்த மண்ணில் தமிழ் முற்றத்தினை அமைக்க வேண்டும் என நான் தவிசாளராக பதவி வகித்த காலத்தில் அவை தீர்மானம் உள்ளிட்ட  பூர்வாங்க ஏற்பாடுகளை மேற்கொண்டேன். இந்நிலையில் ஏற்கனவே நீர்வேலியில் தபாலகத்திற்கான கட்டிடத்தினை தனது கொடையாக அமைத்து வழங்குவதற்கான செயற்றிட்டத்தினை ஆரம்பித்திருந்த தொழிலதிபர் கிருபாகரன் அவர்கள் தமிழ் முற்றத்தினை அமைத்து அதில் பெரியார்களின் சிலைகளை நிறுவும் பொறுப்பினையும்  தானே முன்வந்து  ஏற்றுக் கொண்டு அதனை தற்போது அவர் முழுமையாகச் செயற்படுத்தியுள்ளார். அவரது முற்போக்கான கொடை எண்ணத்திற்கும் செயற்பாட்டுக்கும் பாராட்டுக்கள்.

இதற்காக அவருடன் உழைத்த ஓய்வுநிலை கல்விப் பணிப்பாளர் இ.குணநாதன் தலைமையில் குழுவினர்க்கு நன்றிகள். இன்றைய கால கட்டத்தில் அரசினால் மேற்கொள்ளப்படவேண்டிய அபிவிருத்திகள் பல நிதி பற்றாக்குறை மற்றும் அவற்றை செயற்படுத்துவதில் உள்ள செலவீனங்களை ஒழுங்குபடுத்துவதிலும் அவற்றை நிர்வாக ரீதியில் சட்ட திட்டங்களுக்கு உள்ளாக அணுவதில் காணப்படும் தாமதங்கள் வாயிலாக விரைவாக ஈடேற்றுவதில் இழுபறிகள் உள்ளன.

இந் நிலையில் மக்களுக்கு வேண்டிய எமது இனத்தின் பண்பாடு கலாச்சாரம் வரலாறு போன்றவற்றினை நிலைநிறுத்தத் தக்க செயற்றிட்டங்களை கொடையாளர்களிடம் கையளித்து அவற்றை மக்கள் மயப்படுத்துவது சிறந்த உத்தியாகும். அரச நிறுவனம் மேற்கோள்ளும் அபிவிருத்தியில் பங்கேற்பு அபிவிருத்தி என்பதற்கு மேலாகச் சென்று மக்களின் பங்களிப்பாக அபிவிரு;தியை முன்கொண்டு செல்வதும் அவசியமாகவுள்ளது. அது தனவந்தர்கள் கொடையாளிகளை கிராம மட்டத்தில் இணைப்பதாக அமையும்.

இதேநேரம் இன்று பலர் அரச தாபனங்களுக்கு தமது சொத்துக்களை நன்கொடை அளிக்க முன்வருகையில், அவ்வாறான சூழ்நிலைகளில் மத்திய அரசாங்கம் சார்ந்த தாபனங்களுக்கு அன்பளிப்பது இன முரன்பாடும் பல்வேறு பட்ட ஆக்கிரமிப்பினையும் எதிர்கொள்ளும் இனம் நாம் என்ற வகையில் சரியான தீர்மானம் இல்லை. மேலும், மத்திய அரசின் தாபனங்கள் கொழும்பு மட்ட முடிவுகளுக்கு கட்டுப்பட்டு செயற்படலாம். ஆனால், உள்ளுராட்சி மன்றத்திற்கு நிலங்களை அன்பளித்தால் அதில் எமது மக்கள் பிரதிநிதிகளின் முடிவே செல்வாக்குச் செலுத்தும். மத்திய அரசு சார்ந்த தாபனங்களுக்கு காணித் தேவை காணப்படின் அவற்றை உள்ளுராட்சி மன்றங்களுக்கு கையளித்து குறித்த உள்ளுராட்சி மன்றங்கள் மத்திய அரசின் தாபனங்களுக்கு வாடகைக்கு விட முடியும். இதன் வாயிலாக எமது நிலம் சார்ந்த இன ரீதியிலான பாதுகாப்பினை நாம் உறுதிப்படுத்த முடியும். இவ்வாறு முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். a

Posted in Uncategorized

தமிழரசு கட்சியையும் இணைத்து பொதுச் சின்னத்தில் ஒன்றிணைந்து செயற்படத் தயார்- செல்வம் எம்.பி

தமிழரசுக் கட்சியையும் இணைத்துக் கொண்டு பொதுச் சின்னத்தில் நாங்கள் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு எந்த விட்டுக் கொடுப்புக்கும் தயார் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐந்து தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து ஓரணியில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். பொதுச் சின்னமான குத்துவிளக்கு சின்னத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

ஏற்கனவே, நாங்கள் தமிழரசுக் கட்சியின் தனிச் சின்னத்தில் நாங்கள் பயணித்தோம். பல வருடங்களாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் பயணித்தோம்.

உள்ளுராட்சி மன்றம் மற்றும் மாகாண சபைத் தேர்தல்களில் தனித்து போட்டியிட வேண்டும் என்று அவர்கள் வெளியில் சென்றதன் காரணமாக நாங்கள் ஒன்றாக நிற்க வேண்டும் என்ற காரணத்தினால் நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுகின்றோம்.

எங்களை பொறுத்தவரையில் நாங்கள் அனைவரும் பொதுச் சின்னம் ஒன்றில் பயணிக்க வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.

தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் சிறிதரனின் கூற்றை நான் வரவேற்கின்றேன். ஒரு பொதுச் சின்னத்தில் நாங்கள் அனைவரும் அணிதிரள்வோம்.

பொதுச்சின்னத்திற்கு வீட்டுச் சின்னம் கூட மாற்றப்பட்டால் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை.தனிப்பட்ட கட்சிக்குள் கூட்டாக இருப்பது நன்றாக அமையாது. பொதுச் சின்னத்தில் நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவதற்கு எந்த விட்டுக் கொடுப்பையும் விட்டுக் கொடுக்க நாங்கள் தயாராக உள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் – ரெலோ செயலாளர் நாயகம் கோ.கருணாகரம் எம்.பி

தமிழ் மக்களுக்காக நீண்டகாலமாக பயணிக்கும் தாய்க் கட்சி தாங்கள்தான் என்று சொல்லும் தமிழரசுக் கட்சியினர், உங்களுக்குள் ஒற்றுமையைக் கொண்டு வந்து தமிழ் தேசியக் கூட்டடைமைப் பலப்படுத்த வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்கான அபிவிருத்திக்குழுக் கூட்டம் நேற்று (01.02.24) களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது கலந்து கொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தமிழ் மக்களுக்காக அரசியல் செய்யும் கட்சிகள், ஒன்றாக பயணிக்க வேண்டிய காலம் இதுவாகும். 2009 இற்கு முன்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பலமான ஒரு அரசியல் இருந்தது.

நாங்கள் ஆயுத ரீதியாகவும். அரசியல் ரீதியாகவும் பலமாக இருந்தோம். 2009 இற்குப் பின்பு ஆயுத ரீதியாக நாங்கள் செயற்பட முடியாத நிலை இருந்து கொண்டிருக்கும் இந்நிலையில் மிகவும் பலமாக இருக்க வேண்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு இக்காலகட்டத்தில் சிதைந்து பல்வேறு குழுக்களாக இயங்கிக் கொண்டிருக்கின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து 2004 ஆம் அண்டிலிருந்து இலங்கைத் தமிழரசுக் கட்சி முக்கியமான கட்சியாக இருந்தது. 2023 ஆம் ஆண்டு உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்காக தமிழரசுக் கட்சி தனியாக தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பை விட்டுப் பிரிந்து சென்றார்கள்.

அப்போது கூட்டமைப்பிலிருந்து தமிழீழ விடுதலை இயக்கமும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகமும், ஏற்கனவே கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்ற ஈழமக்கள் புரட்சிகர முன்னணி, ஜனநாயக போராளிகள் கட்சி, மற்றும் தமிழ் தேசியக் கட்சி ஆகியவற்றுடன் இணைந்து பதிவு செய்யப்பட்ட ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியை நாங்கள் உருவாக்கியிருக்கின்றோம்.

2009 இங்குப் பின்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பு சிதைவடைவதற்குக் காரணமும் கூட அக்கூட்டமைப்பை பதிவு செய்யாததுதான். இந்நிலையில் தமிழரசுக் கட்சிக்குள்ளேயே ஒரு குழப்ப நிலை உருவாகியிருப்பதை நாங்கள் அனைவரும் அறிவோம்.

அக்கட்சியின் தலைவர்கூட வரலாற்றிலே வாக்களிப்பின் மூலம் தெரிவாகியிருக்கின்றார். செயலாளர் மற்றும் ஏனைய நிர்வாகங்களுக்கான தெரிவுகள் கூட நடைபெற்றிருக்கின்றது ஆனால் அது ஒழுங்காக நடைபெறவில்லை என ஒருசாரார் சொல்கின்றார்கள்.

இந்த நிலையில் ஒன்றை தமிழரசுக் கட்சி உணரவேண்டும். தாங்கள் தமிழ் மக்களுக்காக நீண்டகாலமாக பயணிக்கும் கட்சி தாங்கள்தான் தாய்க் கட்சி என்று சொல்பவர்கள், உங்களுக்குள் ஒற்றுமையைக் கொண்டு வந்து தமிழ் தேசியக் கூட்டடைமைப் பலப்படுத்த வேண்டும்.

அக்கட்சிக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்கள்கூட 2009 இற்கு முன்பு இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று சொல்லியிருக்கின்றார்.

தமிழர்களுக்கு என்று ஒரு நிரந்தரமான, உறுதியான தலைமை அற்ற நிலைமையில் இருக்கின்றோம் – ஜனா எம்.பி தெரிவிப்பு

தமிழ் தேசியத்தை நேசிக்கும் கட்சிகள் சிதைந்து சின்னாபின்னமாகி இன்று தமிழர்களுக்கு என்று ஒரு நிரந்தரமான, உறுதியான தலைமை அற்ற நிலைமையில் இருக்கின்றோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசு கட்சி இன்று ஒரு மோசமான நிலையில் இருக்கின்றது தமிழ் மக்களின் நிலையினை கருத்தில் கொண்டு இவர்கள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். ஒற்றுமையாக செயல்படுவது மாத்திரமல்ல அவர்களது கட்சிக்குள்ளே தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் இவர்கள் பலப்படுத்த வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை படுகொலையின் 37 வது ஆண்டு நினைவு தினம் (28) உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

வருடா வருடம் இந்த பகுதியிலே மரணித்தவர்களுக்காக நாங்கள் அஞ்சலி செலுத்துவது வளமை ஆனால் ஒரு வருடம் அஞ்சலி செலுத்துவதற்கு பாதுகாப்பு படையின் அச்சுறுத்தல் தடைகள் இருக்காது சில நேரங்களில் தடைகள் காணப்படும் குறிப்பாக 2022 ஆம் ஆண்டு பெரியதொரு தடை இருந்தது அனைவருக்கும் நீதிமன்ற கட்டளைகள் வழங்கப்பட்டது இங்கே எதுவிதமான நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தக் கூடாது என்று.

அந்த வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு அதையும் மீறி நான் அஞ்சலி செலுத்தியிருந்தேன் ஆனாலும் எனக்கு நீதிமன்ற கட்டளை வழங்கப்படவில்லை நீதிமன்ற கட்டளைகள் வழங்கப்பட்டவர்கள் இங்கு அஞ்சலி செலுத்த வரவில்லை எனக்கு நீதிமன்ற கட்டளை வழங்காததன் நிமித்தம் நான் அஞ்சலி செலுத்தியிருந்தேன். இருந்தும் எனக்கு எதிராக கொக்கட்டிச்சோலை போலீசார் வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள் எதிர்வரும் 31 ஆம் தேதி அந்த வழக்குக்கான ஆரம்பம் நடைபெற இருக்கின்றது மட்டக்களப்பு நீதிமன்றத்தில் அதனை எதிர்கொள்வதற்கும் நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

இந்த அரசாங்கம் ஒன்றை நினைத்துக் கொள்ள வேண்டும் வடக்கிழக்கிலே பல ஆயிரக்கணக்கான போராளிகள் இலட்சக்கணக்கான பொதுமக்கள் இந்த போராட்டத்தின் மூலமாக கொல்லப்பட்டிருக்கின்றார்கள் நாங்கள் அவர்களை எந்த காலத்திலும் மறக்க முடியாது நாங்கள் எங்களது எதிர்கால சந்ததியினருக்கு இந்த வடுக்களை கொண்டு செல்வதற்காகவே இந்த நினைவஞ்சலிகளை ஒவ்வொரு வருடமும் எங்கெங்கு மக்கள் படுகொலை செய்யப்பட்டார்களோ அங்கெல்லாம் நாங்கள் செய்து கொண்டு வருகின்றோம்.

அந்த வகையில் எங்களது தலைமுறை இல்லாவிட்டாலும் எதிர்வரும் தலைமுறையாவது இவைகளை நினைத்துப் பார்க்க வேண்டும் நினைத்துப் பார்ப்பதன் மூலமாக எங்களுக்கு எதிராக இடம் பெற்ற அநியாயங்கள், அட்டூழியங்கள், அடக்குமுறைகள், படுகொலைகள் ஞாபகத்தில் அவைகளை வைத்துக்கொண்டு தமிழர்கள் அனைவரும் ஒன்று இணைந்து எமது மக்களின் விடுதலையை வேண்டி போராடினோமோ அந்த விடுதலை கிடைப்பதற்காக தொடர்ச்சியாக நாங்கள் போராட வேண்டிய ஒரு நிலையில் இருக்கின்றோம்.

உண்மையில் 2009 ஆம் ஆண்டு எங்களுடைய ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டது 2009 வரைக்கும் தமிழ் தேசிய இனம் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்கின்ற அரசியல் சக்தியின் ஊடாக எமது ஒற்றுமையை இந்த நாட்டிற்கு மாத்திரமல்ல சர்வதேசத்திற்கு கூட வலுப்படுத்தி இருந்தோம் அந்த காலகட்டங்களிலே 2004 ஆம் ஆண்டு இடம் பெற்ற பாராளுமன்ற தேர்தலில் 22 பாராளுமன்ற உறுப்பினர்களை வடகிழக்கில் இருந்து தமிழ் மக்கள் தங்களுடைய ஒற்றுமையை வாக்கு உரிமைகள் மூலமாக நிரூபித்திருந்தார்கள் ஆனால் 2009 பிற்பாடு ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பிற்பாடு தமிழீல விடுதலை புலிகள் இயங்கு நிலை அற்றதன் பிற்பாடு இன்று வரை எங்களுடைய தமிழ் தேசியத்தை நேசிக்கும் கட்சிகள் சிதைந்து சின்னாபின்னமாகி இன்று தமிழர்களுக்கு என்று ஒரு நிரந்தரமான, உறுதியான தலைமை அற்ற நிலைமையில் இருக்கின்றோம்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அன்று உருவாக்கப்பட்டது தமிழ் மக்களின் அரசியல் சக்தியை வெளி உலகிற்கு கொண்டு வருவதற்கும் தமிழ் மக்களின் ஏகோபித்த பிரதிநிதிகளாக எங்களுடைய மக்களின் பிரச்சினைகளை பேசி தீர்ப்பதற்குமாக உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று பிரிவடைந்து இருக்கின்றது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி என்கின்ற ரீதியிலே நாங்கள் ஐந்து கட்சிகள் இருக்கின்றோம் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலே பெரிய கட்சியாக கடந்த காலங்களிலே இருந்து கொண்டு வந்த இலங்கை தமிழரசு கட்சி இன்று ஒரு மோசமான நிலையில் இருக்கின்றது தமிழ் மக்களின் நிலையினை கருத்தில் கொண்டு இவர்கள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் ஒற்றுமையாக செயல்படுவது மாத்திரமல்ல அவர்களது கட்சிக்குள்ளே தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் இவர்கள் பலப்படுத்த வேண்டும்.

2009 க்கு பின்னர் சிங்கள பெரும் தேசியவாதம் தமிழ் தேசியக் கட்சிகளை பிரித்தாலும் தந்திரத்தைக் கொண்டு பிரித்து எங்களுக்குள்ளே பிரித்து கையாள்வதற்கு முயற்சிக்கின்றார்கள் அதற்காக ஒன்று இரண்டு முகவர்கள் கூட தமிழ் தேசியத்துக்குள்ளே வந்திருப்பதாக தான் நாங்கள் அறிகின்றோம் ஏனென்றால் சிங்கள பெரும் தேசிய வாதம் என்ன நினைத்ததோ அதை அவர்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 2023 ஆம் ஆண்டு இடம்பெற இருந்த உள்ளூராட்சி தேர்தலில் பலவீனம் அடைந்தது இன்று தமிழரசு கட்சி கூட ஏனையவர்கள் கூறும் அளவிற்கு அவர்களது நடவடிக்கைகள் இருக்கின்றது.

அதை விடுத்து நாங்கள் ஒற்றுமையாக தமிழ் மக்களது உரிமைகளை பெறுவதற்காக பதவி ஆசைகள் தங்களது கட்சிகளை தாங்களே தலைமை தாங்க வேண்டும் என்கின்ற அந்த ஆசைகளை விடுத்து உண்மையிலேயே விடுதலை போராட்டத்திற்கு சென்ற இளைஞர்கள் நான் உட்பட இந்த பதவிகளுக்காக சென்றவர்கள் அல்ல நான் உயிருடன் இருந்தாலும் என்னைப் போன்று எத்தனையோ போராளிகள் இந்த வடகிழக்கிலே போராட்டத்திற்காக மரணித்திருக்கின்றார்கள் அவர்களின் ஆசை நிறைவேற வேண்டும் அவர்களது ஆத்மாக்கள் சாந்தி அடைய வேண்டும் என்றால் நாங்கள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் அந்த ஒற்றுமையினை ஒவ்வொரு கட்சியும் நிலை நிறுத்த வேண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட ஒன்றாக இருக்க வேண்டும்.

இன்று நாடு பொருளாதார ரீதியாக மிகவும் அதள பாதாளத்தில் இருக்கின்றது ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருக்கின்றார் இந்த வருட இறுதியிலே ஜனாதிபதி தேர்தல் வர இருக்கின்றது ஜனாதிபதி கூட இந்த நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுகின்றேன் என்று சொல்லிக்கொண்டு அரசியல் நாடகம் ஆடிக் கொண்டிருக்கின்றார் வடகிழக்கிலே ஆயிரக்கணக்கான பிரச்சினைகள் இருக்கின்றது அத்தனை பிரச்சினைகளையும் நான் தீர்க்கின்றேன் என்று கூறுகின்றாரே தவிர எந்த ஒரு பிரச்சனையும் தீர்வதாக தெரியவில்லை.

ஐக்கியமாக அனைத்து கட்சிகளும் இலங்கையிலே செயற்பட வேண்டும் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்துபணத்தைப் பெற்று இந்த நாட்டை மீட்டெடுக்க வேண்டும் என்கின்ற ரீதியில் அவர் செயல்படுகின்றார் அதே நேரத்தில் இலங்கையில் ஒவ்வொரு குடிமகனுக்கும் எதிரான சட்டங்களை 79 ஆம் ஆண்டு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினை தமிழர்களுக்கு எதிராக கொண்டு வந்தார்கள் இன்று நிகழ்நிலை காப்புச் சட்டத்தை ஒட்டுமொத்த மக்களது குரல்வளயை, குரலை நசுக்குவதற்காகவும் ஊடகங்களை அடக்குவதற்காகவும் தனக்குத் தேவையான சட்டங்களை அவர் கொண்டு வருகின்றார் அதே நேரத்தில் மறுபக்கம் அனைத்து அரசியல் கட்சிகளும் தன்னுடைய நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்கின்றார்.

இதை எல்லாவற்றையும் பார்க்கின்ற போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தான் வெல்வதற்கான ஒரு சூழ்ச்சியை, தந்திரத்தை தான் செய்து கொண்டிருக்கின்றாரே தவிர இந்த நாட்டிலே இருக்கின்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அல்லது வடகிழக்கிலே புரையோடிப் போய் உள்ள இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கு அல்லது மயிலத்தமடு மாதவனை போன்ற தமிழ் மக்களது காணிகளை அபகரிக்கின்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இவர் நினைக்கின்றார் இல்லை.

உண்மையிலேயே நாங்கள் இதேபோன்று ஒவ்வொரு பிரதேசத்திலும் உயிரிழந்தவர்களை என்றும் நாங்கள் தொடர்ச்சியாக நினைவில் வைத்துக்கொண்டு அவர்களுக்கான நினைவேந்தலை நாங்கள் செய்து கொண்டு இருக்கின்றோம் ஏனென்றால் வடகிழக்கு மக்களுக்கான ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வு கிடைக்கும் வரை நாங்கள் இதனை ஒற்றுமையாக செய்ய வேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கை. என்கிறார்.

மக்களை அடக்கி ஒடுக்கும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், ஊடகங்களை அடக்கும் நிகழ்நிலை காப்புச் சட்டம் மீளப்பெறப்பட வேண்டும் – கோ. கருணாகரன் (ஜனா)

இலங்கை பாராளுமன்றத்தில் மக்களை அடக்கி ஒடுக்கும் சட்டங்கள் தான் கொண்டுவரப்படுகின்றன. 1979ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டம் இன்று ஒட்டுமொத்த இலங்கை மக்களுமே இந்த சட்டத்தின் மூலமாக பாதிக்கப்பட்டு, இதன் வலியை உணர்ந்துகொண்டிருக்கின்றார்கள். எனவே, இந்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், ஊடகங்களை அடக்கும் நிகழ்நிலை காப்புச்சட்டம் மீளப்பெறப்பட வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று சனிக்கிழமை (27) கறுப்பு ஜனவரியை முன்னிட்டு ஊடக அடக்குமுறையை எதிர்த்து, காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

1979ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக 6 மாதத்துக்கு தற்காலிகமாக கொண்டுவரப்பட்ட பயங்கரவாத சட்டம் இன்று வரை தொடர்ச்சியாக இருக்கின்றது. இந்த நிலையில் ஊடகங்களையும் மக்களின் கருத்து சுதந்திரத்தையும் அடக்குவதற்காக இந்த நிகழ்நிலை காப்பு சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.

இந்த சட்டத்துக்கு வடகிழக்கு சேர்ந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட கை உயர்த்தி ஆதரவு கொடுத்திருக்கின்றார்கள். தமிழ் மக்களுக்காக தான் இச்சட்டங்கள் கொண்டு வரப்படுகின்றதோ என சந்தேகங்கள் எழுகின்றன. ஏனென்றால், கூடுதலான ஆர்ப்பாட்டங்கள் நில அபகரிப்புகள், காணாமலாக்கப்பட்டவர்களை கண்டுபிடிப்பதற்கான ஆர்ப்பாட்டங்கள் வட கிழக்கில் அதிகமாக இடம்பெறுகின்றன.

2009ஆம் ஆண்டு யுத்தம் மௌனிக்கப்பட்டதற்கு பின் ஒரு மௌன யுத்தம் வடகிழக்கை பௌத்த மதமாக்குவது, காணி அபகரிப்புக்கு பெரும்பான்மையான மக்களை குடியேற்றி எமது இன பரம்பலை குறைப்பதுமான ஒரு நிகழ்ச்சி நிரலில் அரசும் அரச அதிகாரிகளும் புத்த பிக்குகள் கூட உள்வாங்கப்பட்டுள்ளதை காண முடிகிறது.

இப்படியான காலகட்டங்களில் வட கிழக்கிலே மக்கள் கிளர்ந்து எழக்கூடாது என்பதற்காகவும் இந்தச் சட்டம் கொண்டுவரப்படுகிறது.

இந்நாட்டின் அரகலய போராட்டம் என்ற போராட்டங்கள் கூட இனி ஏற்படக் கூடாது எனவும் அரசுக்கு எதிராக மக்கள் கருத்து கூறக்கூடாது என்றும் அரசு நினைக்கிறது.

ஒன்றை மட்டும் இந்த அரசு உணர்ந்துகொள்ள வேண்டும். இன்றிருக்கும் அரசு நாளை மாறலாம். நாளை மாறும்போது தனக்கு சாதகமாக தற்போது இருக்கும் அரசு அங்கத்துவம் பெறுபவர்கள் கூட இந்தச் சட்டத்தினால் பாதிக்கப்படலாம்.

இச்சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்தில் கை உயர்த்திய பாராளுமன்ற உறுப்பினர்களும் அவர்களது ஆதரவாளர்கள் கூட இன்னொரு ஆட்சி மாற்றம் ஏற்படும்போது இச்சட்டத்தினால் பாதிக்கப்படலாம் என்பதை உணராமல், அவர்கள் இந்த சட்டத்துக்கு ஆதரவு கொடுத்திருக்கின்றனர்.

கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்ட, கொல்லப்பட்ட, ஊடக கலையகங்கள் எல்லாம் அடித்து நொறுக்கப்பட்ட வரலாறுகள் இருக்கின்றன. முப்பது நாற்பதுக்கு மேற்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். யாருக்குமே இன்று வரை நீதி கிடைக்கவில்லை. நீதி கிடைக்கும் என்று கூட எதிர்பார்க்க முடியாது.

2009 தனது குடும்ப உறுப்பினர்களை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட உறவினர்கள் கூட இன்னும் எங்கு இருக்கின்றார்கள் என்று தெரியாமல் மக்கள் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கான நீதியை கேட்டுக்கொண்டிருக்கின்றார்கள். இந்த நீதியைக் கூட கொடுக்காத அரசு இப்படியானவர்களுக்கு நீதி கொடுக்குமா என்பது சந்தேகம்தான்.

இருந்தாலும் இன்னும் ஒரு கருத்தும் இருக்கிறது. ஊடகங்களை ஒழுங்குபடுத்தக்கூடிய ஒரு தேவையும் இருக்கிறது. தற்போது ஊடகங்களுக்கு அப்பால் சமூக வலைத்தளங்கள் ஊடாக சில பாதிப்புகளும் மக்களுக்கு ஏற்படுகிறது. குறிப்பாக சிலர் தற்கொலை செய்யுமளவுக்கு போலி முகநூல் மூலமாக சில பிரச்சாரங்கள் செய்யப்படுவதனால் அதனை கட்டுப்படுத்த வேண்டிய ஒரு தேவை அரசாங்கத்துக்கு இருக்கிறது.

இருந்தபோதும் அதை விடுத்து ஊடகங்களை அடக்கி, தனக்கு எதிரான கருத்துக்களை யாருமே கூறக்கூடாது என்றொரு நிலையில் தான் இந்த நிகழ்நிலை காப்புச் சட்டம் வருகிறது என்பதை நாங்கள் எல்லோரும் நன்றாக உணர்ந்து கொண்டிருக்கின்றோம். இதனை அரசாங்கம் மீளப்பெற வேண்டும்.

இந்த நிகழ்நிலை காப்புச் சட்டத்துக்கு எதிராக 56 அமைப்புகள் குரல் கொடுத்திருக்கின்றார்கள். எனவே, சர்வதேசத்தின் கவனம் இலங்கை அரசு மீது திரும்பி இருக்கின்றது. ஏற்கனவே பயங்கரவாத தடை சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும் என்று சர்வதேசம் கூறுகின்றது.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்துக்கு பதிலாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஒன்றைக் கொண்டு வருவதற்கு அரசு சிந்திக்கிறது. எங்களை பொருத்தமட்டில் பயங்கரவாத தடுப்புச் சட்டமும் வேண்டாம்; பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமும் வேண்டாம்; ஊடகங்களை அடக்கும் இந்த நிகழ்நிலை காப்புச் சட்டமும் வேண்டாம் என்பதே எங்களுடைய உறுதியான நிலைப்பாடு என்றார்.