சவேந்திரவுக்கு எதிராக விமல் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு: மறுக்கும் பாதுகாப்பு அமைச்சு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச, பாதுகாப்புத் தலைமை அதிகாரி சவேந்திர சில்வாவுக்கு எதிராக சுமத்திய குற்றச்சாட்டை, இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது.

முன்னாள் இராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வா, அரகலய போராட்டத்தின்போது இடைக்கால நிர்வாகத்தை உருவாக்கும் சதித்திட்டத்திற்கு ஆதரவளித்ததாக விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியிருந்தார்.

2022ஆம் ஆண்டு மே 09ஆம் திகதி நடைபெற்ற போராட்டத்தின் பின்னணியில் இருந்தவர்களின் முதல் திட்டமாக, அப்போதைய நிறைவேற்று ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு தலைவர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் இருந்த நிலையில் கொலை செய்வதாகும் என்று குறிப்பிட்டிருந்த விமல் வீரவன்ச, அந்த நேரத்தில் ஜெனரல் சவேந்திர சில்வா இந்திய விஜயத்தை மேற்கொண்டமை இந்த சந்தேகத்தை எழுப்பியதாகவும் தெரிவித்திருந்தார்.