சிவராத்திரி தினத்தில் வெடுக்குநாறி மலையில் பொலிஸாரின் அராஜகத்தைக் கண்டிக்கின்றோம் – யாழ்.பல்கலை இந்து மாமன்றம்

வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேசுவரர் கோவில் மகா சிவராத்திரி தின பொலிஸ் அராஜகங்களை தாம் கண்டித்துள்ளதாக யாழ்.பல்கலைக்கழகத்தின் இந்து மாமன்றம் அறிவித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் அந்த மன்றம் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெரும் ஜோதியான சிவபெருமானுக்குரிய விரதங்களுள் தலையாய விரதமே மகா சிவராத்திரி, வருடத்தில் ஒருமுறை வரும் இவ்விரதமானது ராத்திரி வேளை நான்கு சாம பூசைகளை மேற்கொண்டு இரவு முழுவதும் சிவனடியார்கள் கண்விழித்து சிவபெருமானை பூஜித்து சிவசிந்தையில் வழிபாடு மேற்கொள்வது மரபாகும். இம் மகாசிவராத்திரி தினத்திதை முன்னிட்டு தொன்று தொட்டு தமிழ்ச் சைவர்கள் வழிபட்டுவரும் வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேசுவரர் கோவில் மகா சிவராத்திரி தின விசேட பூசை வழிபாடுகளை மேற்கொள்வதற்கு நீதிமன்றம் வழங்கிய கட்டகளையின் படி பூசை வழிபாடுகள் ஒழுங்கமைக்கப்ட்டுள்ள நிலையில், ஆலய பூசகர் கைது செய்யப்பட்டமையும், வழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பொதுமக்களை பலவந்தமாக அகற்றியமையமையும், மாலை ஆறு மணியளவில் அங்கிருந்து அனைவரையும் வெளியேறுமாறு பணித்துள்ளனர்.

சைவர்களின் வழிபாட்டு உரிமையினையும், சைவ விழுமியங்களையும், புனித சடங்குகளையும் அவமதிக்கும் சம்பவங்கள் தமிழர்களின் தொன்மையான புனித பூமியில் இடம்பெற்றிருக்கிறது. அதன் உச்சகட்டமாக வெகுதூரத்தில் இருந்து வந்து விரதமிருந்து பூசை வழிபாட்டில் ஈடுபட்டிருந்த பக்தர்களது வழிபாடுகளை தடுத்தும், வழிபாட்டில் ஈடுபட்ட பெண்களை கழுத்தை பிடித்து இழுத்து விசியதுடன், தவறேதும் செய்யாத சிவனடியார்கள் விரதமிருந்து பூசையில் ஈடுபட்ட தருணம் மோசமாக கைதுசெய்யப்பட்டு, தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், சப்பாத்துக்கால்களுடன் வழிபாட்டிடதுக்குள் நுழைந்து பூசை மற்றும் படையல் பொருட்ககளையும் கொண்டு செல்லப்பட்டிருந்த பொருட்கள் என்பவற்றை பொலிசார் காலால் அப்புறப்படுத்தியதுடன், கோவிலில் நிகழ்ந்து கொண்டிருந்த யாகத்தையும் தடுத்து நிறுத்தியது போன்ற பொலிசாரது மிலச்சத்தனமான செயலானது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.

ஆலய வளாகத்திற்கு குடிநீர் தாங்கியை உள்ளே அனுமதிக்காது வழிபாட்டிற்கு சென்ற சிறுவர்கள் பெண்கள் பக்தர்கள் என பலர் அவதிப்பட்ட நிலையில் ஆலய வழிபாட்டிற்காக பக்தர்களின் தாகசாந்திக்கு கொண்டுவரப்பட்ட நீர் தாங்கியினை பொலிசாரால் ஆலயத்தில் இருந்து மூன்று கிலோமீற்றருக்கு முன்னரே தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததும், குடி தண்ணீருடன் ஆலயத்திற்கு கொண்டு வரப்பட்ட உழவு இயந்திரத்தினை உள்ளே அனுமதிக்காது அதனை உள்ளே அனுமதிக்குமாறு பக்தர்கள் அரைமணிநேர போராட்டத்தினை மேற்கொண்டமையும், குடிநீரை தடுத்து அடிப்படை தேவைகளில் ஒன்றான குடிநீரை வழங்க மறுத்த ஈனச் செயலானது, இலங்கை பொலிசாரது மனித நேயமின்மையினை குறித்து ஒட்டுமொத்தமாக மிகுந்த வேதனைக்குள்ளாக்கி இருக்கிறது.

இலங்கையில் சமய நல்லிணக்கம் வலியுறுத்தப்பட்டு வரும் சூழலில் இந்த செயற்பாடுகள் இடம்பெற்றிருப்பது மத நல்லிணக்கம் தொடர்பான ஐயப்படுகளை ஏற்படுத்துவதாக இருக்கின்றது. சமயங்கள் மனிதனை அகரீதியாக மேம்படுத்தக்கூடியன. வழிபாடுகளும் இறை சார்ந்த நம்பிக்கைகளும் மனிதனை மனிதனாக பக்குவப்படுத்துகின்றனவே தவிர, ஒரு மதத்தினை மத வழிபாட்டினை நிந்திப்பதோ நிந்தனை செய்வதோ அல்லது தடுத்து நிறுத்துவதோ பொருத்துமற்ற ஒன்றாகவே கருதப்படும், சமயங்கள் சார்ந்த அரசியல் என்பது மக்களை முரண்பட்டுக் கொள்ளவும், இனரீயாக பிளவுபடுத்திக்கொள்ளவும் வழிசமைக்கும். ஆகவே சமயங்கள் மனிதர்களை பக்குவப்படுத்திக் கொள்வது எனும் வகையில், ஒவ்வொரு இனம்சார்ந்தவர்களும் பல்வேறுபட்ட நம்பிக்கைகளுடன் வாழ்ந்து வருகிறார்கள்.அவர்களுடைய நம்பிக்கைகள், வழிபாடுகள், வழிபாட்டுத்தலங்கள் சிதைக்கப்படுவதோ அல்லது அவர்களுக்கான வழிபாடுகள் மறுக்கப்படுவதோ, ஒரு சுதந்திரத்தன்மை என்பது வழிபாட்டு முறையில் தடுக்கப்படுகிறது என்பதுதான் அர்த்தமாக கருதப்படும்.

இந்த அடிப்டையிலே சைவர்களுடைய மிக முக்கியமான ஒரு வழிபாடு சிவாரத்திரி தினம். இந்த வழிபாட்டில் இவ்வாறான அசம்பாவிதங்கள் நடைபெற்றது என்பது உண்மையில் சைவர்களாகிய ஒவ்வொருவரையும் மிகவும் மனரீதியாக வேதனைப்பட வைக்கிறது, அவர்களுடைய வழிபாடுகளை சிதைப்பதனூடாக ஒரு இனத்தினுடைய பண்பாட்டு அடையாளங்களை கேள்விக்குட்படுத்துதல் என்பது உண்மையிலே ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்றாகவே இருக்கிறது. இவ்வடிப்படை வழிபாட்டுரிமையை மீறும் செயலானது உலகிற்கு எமது நிலையினை இவ் அரசாங்கம் வெளிப்படுத்தி இருக்கிறது. இவ்வகையில் வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேசுவரர் கோவிலில் நடைபெற்ற மோசமான வழிபாட்டுரிமை மீறல் மற்றும் மனிதநேயமின்மை சம்பவங்களை மிக கண்டித்தும் கைது செய்ப்பட்ட பக்தர்களை விடுவிக்ககோரியும் வலியுறுத்தி நிற்கின்றோம். இலங்கை பொலிசாரது அட்டூழியங்களையும். இலங்கை அரசின் இவ்வாறான செயலை இந்து மன்றமாக கண்டித்து நிற்கின்றோம். என யாழ்.பல்கலைக்கழக இந்து மாமன்றம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.