சிவராத்திரி தினத்தில் வெடுக்குநாறி மலையில் பொலிஸாரின் அராஜகத்தைக் கண்டிக்கின்றோம் – யாழ்.பல்கலை இந்து மாமன்றம்

வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேசுவரர் கோவில் மகா சிவராத்திரி தின பொலிஸ் அராஜகங்களை தாம் கண்டித்துள்ளதாக யாழ்.பல்கலைக்கழகத்தின் இந்து மாமன்றம் அறிவித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் அந்த மன்றம் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெரும் ஜோதியான சிவபெருமானுக்குரிய விரதங்களுள் தலையாய விரதமே மகா சிவராத்திரி, வருடத்தில் ஒருமுறை வரும் இவ்விரதமானது ராத்திரி வேளை நான்கு சாம பூசைகளை மேற்கொண்டு இரவு முழுவதும் சிவனடியார்கள் கண்விழித்து சிவபெருமானை பூஜித்து சிவசிந்தையில் வழிபாடு மேற்கொள்வது மரபாகும். இம் மகாசிவராத்திரி தினத்திதை முன்னிட்டு தொன்று தொட்டு தமிழ்ச் சைவர்கள் வழிபட்டுவரும் வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேசுவரர் கோவில் மகா சிவராத்திரி தின விசேட பூசை வழிபாடுகளை மேற்கொள்வதற்கு நீதிமன்றம் வழங்கிய கட்டகளையின் படி பூசை வழிபாடுகள் ஒழுங்கமைக்கப்ட்டுள்ள நிலையில், ஆலய பூசகர் கைது செய்யப்பட்டமையும், வழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பொதுமக்களை பலவந்தமாக அகற்றியமையமையும், மாலை ஆறு மணியளவில் அங்கிருந்து அனைவரையும் வெளியேறுமாறு பணித்துள்ளனர்.

சைவர்களின் வழிபாட்டு உரிமையினையும், சைவ விழுமியங்களையும், புனித சடங்குகளையும் அவமதிக்கும் சம்பவங்கள் தமிழர்களின் தொன்மையான புனித பூமியில் இடம்பெற்றிருக்கிறது. அதன் உச்சகட்டமாக வெகுதூரத்தில் இருந்து வந்து விரதமிருந்து பூசை வழிபாட்டில் ஈடுபட்டிருந்த பக்தர்களது வழிபாடுகளை தடுத்தும், வழிபாட்டில் ஈடுபட்ட பெண்களை கழுத்தை பிடித்து இழுத்து விசியதுடன், தவறேதும் செய்யாத சிவனடியார்கள் விரதமிருந்து பூசையில் ஈடுபட்ட தருணம் மோசமாக கைதுசெய்யப்பட்டு, தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், சப்பாத்துக்கால்களுடன் வழிபாட்டிடதுக்குள் நுழைந்து பூசை மற்றும் படையல் பொருட்ககளையும் கொண்டு செல்லப்பட்டிருந்த பொருட்கள் என்பவற்றை பொலிசார் காலால் அப்புறப்படுத்தியதுடன், கோவிலில் நிகழ்ந்து கொண்டிருந்த யாகத்தையும் தடுத்து நிறுத்தியது போன்ற பொலிசாரது மிலச்சத்தனமான செயலானது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.

ஆலய வளாகத்திற்கு குடிநீர் தாங்கியை உள்ளே அனுமதிக்காது வழிபாட்டிற்கு சென்ற சிறுவர்கள் பெண்கள் பக்தர்கள் என பலர் அவதிப்பட்ட நிலையில் ஆலய வழிபாட்டிற்காக பக்தர்களின் தாகசாந்திக்கு கொண்டுவரப்பட்ட நீர் தாங்கியினை பொலிசாரால் ஆலயத்தில் இருந்து மூன்று கிலோமீற்றருக்கு முன்னரே தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததும், குடி தண்ணீருடன் ஆலயத்திற்கு கொண்டு வரப்பட்ட உழவு இயந்திரத்தினை உள்ளே அனுமதிக்காது அதனை உள்ளே அனுமதிக்குமாறு பக்தர்கள் அரைமணிநேர போராட்டத்தினை மேற்கொண்டமையும், குடிநீரை தடுத்து அடிப்படை தேவைகளில் ஒன்றான குடிநீரை வழங்க மறுத்த ஈனச் செயலானது, இலங்கை பொலிசாரது மனித நேயமின்மையினை குறித்து ஒட்டுமொத்தமாக மிகுந்த வேதனைக்குள்ளாக்கி இருக்கிறது.

இலங்கையில் சமய நல்லிணக்கம் வலியுறுத்தப்பட்டு வரும் சூழலில் இந்த செயற்பாடுகள் இடம்பெற்றிருப்பது மத நல்லிணக்கம் தொடர்பான ஐயப்படுகளை ஏற்படுத்துவதாக இருக்கின்றது. சமயங்கள் மனிதனை அகரீதியாக மேம்படுத்தக்கூடியன. வழிபாடுகளும் இறை சார்ந்த நம்பிக்கைகளும் மனிதனை மனிதனாக பக்குவப்படுத்துகின்றனவே தவிர, ஒரு மதத்தினை மத வழிபாட்டினை நிந்திப்பதோ நிந்தனை செய்வதோ அல்லது தடுத்து நிறுத்துவதோ பொருத்துமற்ற ஒன்றாகவே கருதப்படும், சமயங்கள் சார்ந்த அரசியல் என்பது மக்களை முரண்பட்டுக் கொள்ளவும், இனரீயாக பிளவுபடுத்திக்கொள்ளவும் வழிசமைக்கும். ஆகவே சமயங்கள் மனிதர்களை பக்குவப்படுத்திக் கொள்வது எனும் வகையில், ஒவ்வொரு இனம்சார்ந்தவர்களும் பல்வேறுபட்ட நம்பிக்கைகளுடன் வாழ்ந்து வருகிறார்கள்.அவர்களுடைய நம்பிக்கைகள், வழிபாடுகள், வழிபாட்டுத்தலங்கள் சிதைக்கப்படுவதோ அல்லது அவர்களுக்கான வழிபாடுகள் மறுக்கப்படுவதோ, ஒரு சுதந்திரத்தன்மை என்பது வழிபாட்டு முறையில் தடுக்கப்படுகிறது என்பதுதான் அர்த்தமாக கருதப்படும்.

இந்த அடிப்டையிலே சைவர்களுடைய மிக முக்கியமான ஒரு வழிபாடு சிவாரத்திரி தினம். இந்த வழிபாட்டில் இவ்வாறான அசம்பாவிதங்கள் நடைபெற்றது என்பது உண்மையில் சைவர்களாகிய ஒவ்வொருவரையும் மிகவும் மனரீதியாக வேதனைப்பட வைக்கிறது, அவர்களுடைய வழிபாடுகளை சிதைப்பதனூடாக ஒரு இனத்தினுடைய பண்பாட்டு அடையாளங்களை கேள்விக்குட்படுத்துதல் என்பது உண்மையிலே ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்றாகவே இருக்கிறது. இவ்வடிப்படை வழிபாட்டுரிமையை மீறும் செயலானது உலகிற்கு எமது நிலையினை இவ் அரசாங்கம் வெளிப்படுத்தி இருக்கிறது. இவ்வகையில் வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேசுவரர் கோவிலில் நடைபெற்ற மோசமான வழிபாட்டுரிமை மீறல் மற்றும் மனிதநேயமின்மை சம்பவங்களை மிக கண்டித்தும் கைது செய்ப்பட்ட பக்தர்களை விடுவிக்ககோரியும் வலியுறுத்தி நிற்கின்றோம். இலங்கை பொலிசாரது அட்டூழியங்களையும். இலங்கை அரசின் இவ்வாறான செயலை இந்து மன்றமாக கண்டித்து நிற்கின்றோம். என யாழ்.பல்கலைக்கழக இந்து மாமன்றம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எங்கள் தாய்நிலம் விடிவுறும் நாளே தமிழர் எமக்கு சுதந்திர நாள் – வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

எங்கள் தாய்நிலம் விடிவுறும் நாளே தமிழர் எமக்கு சுதந்திர நாள் என வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஞாயிற்றுக்கிழமை (04) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சிறிலங்காவின் சுதந்திரநாளை கறுப்பு நாளாகப் பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும், மக்கள் சமூக அமைப்புக்களும், தமிழ் மக்களுமாக இன்று 2024, பெப்ரவரி 4ஆம் திகதி பேரெழுச்சியாக நாம் ஒன்று திரண்டிருக்கின்றோம்.

ஈழத் தமிழர்களாகிய நாம் மரபு வழி தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமைக்கு உரித்துடைய ஒரு தேசிய இனம் என்பதை மீண்டும் உலகுக்கு பிரகடனப்படுத்துகின்றோம்.

வட்டுக்கோட்டைத் தீர்மானம், திம்பு கோட்பாடு, பொங்கு தமிழ் பிரகடனம் என்பவற்றின் ஊடாக வரலாற்றில் தமிழ் மக்களின் அபிலாசைகள் கூட்டாக பலமுறை வெளிப்படுத்தப்பட்ட போதிலும், ஈழத் தமிழர்களின் இனப்பிரச்சனைக்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய நிரந்தர அரசியல் தீர்வை காண்பதற்காக மீண்டும் ஒரு தடவை எமது ஏகோபித்த வெளிப்படுத்தலை வலியுறுத்திக்கூற வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து இன்று பேரெழுச்சியாக நமது தாயகத்தின் மட்டக்களப்பு, கிளிநொச்சியில் ஒன்று திரண்டு நிற்கின்றோம்.

தமிழ், சிங்கள தனித்தனி அரசுகளைக் கொண்டிருந்த இலங்கைத் தீவு காலனித்துவ ஆட்சியாளர்களின் நிர்வாகத் தேவையின் நிமிர்த்தம் இணைக்கப்பட்டது என்ற வரலாற்று உண்மையை முதலில் சிங்கள தேசம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

வரலாற்று நிகழ்வுகளை முற்றாக புறந்தள்ளி எண்ணிக்கையில் பெரும்பாண்மை அடிப்படையில் முழு நாட்டினதும் அதிகாரங்கள் சிங்கள தேசத்திடம் கையளிக்கப்பட்டமை என்பது ஈழத்தமிழினம் மீது தொடர்ச்சியான இன ஒடுக்குமுறைகளிற்கே வழிகோலியது என்பதோடு, சிறிலங்கா அரசு தமிழ் மக்களிடையே எழும் போராட்டங்கள் மற்றும் உரிமைக்கான குரல்களை இராணுவ பலம் கொண்டு நசுக்குவதிலும், சிங்கள வன்முறைக் கும்பல்களின் வெறியாட்டத்திற்கு அனுமதிப்பத்திரம் அளிப்பதிலுமே நம்பிக்கை கொண்டிருக்கின்றது.

சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தனியான சுதந்திர தமிழின அரசை அமைப்பற்கான வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு 1977 ஆம் ஆண்டு மக்கள் மகத்தான ஆணையை வழங்கி தங்கள் சுதந்திர வேட்கையை வெளிப்படுத்தியிருந்ததோடு, 1985ஆம் ஆண்டு திம்புப் பேச்சுவார்த்தையில் தமிழர்களின் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை கோட்பாடு ஏற்றுக் கொள்ளப்பட்டமையும் தீர்வுக்கான வழிகளில் முன்னேற்றம் காணப்படாமையின் விளைவாகவே தமிழரிடம் ஆயுதப் போரட்டம் கருக்காண்டது என்பதும் இங்கு நோக்கத்தக்கது.

தமிழர் மீதான திட்டமிட்ட இனப்படுகொலைகளை கடந்த 75 ஆண்டுகளிற்கு மேலாக அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த சிங்கள ஆட்சியாளர்களின் துணையோடு தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட, நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கின்ற கட்டமைக்கப்பட்ட படுகொலைகள் 2009 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அதியுயர் இனவழிப்பு படுகொலைகள் உட்பட மனித படுகொலைகள், நிலங்களை கையகப்படுத்துதல், பாலியல் வன்முறைகள், பண்பாட்டு மற்றும் பொருளாதார கட்டுமானங்களை அழித்தல் போன்ற வன்முறைகள் மூலம் தமிழ் மக்களுடைய தேசத்துக்கான தகுதிப்பாட்டை தாங்கிநிற்கும் அனைத்து விழுமியங்களும் அழித்தொழிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

தமிழ் மக்களிற்கான தீர்வு முயற்சிகள் யாவும் திம்புக் கோட்பாட்டினை அடியொற்றியே மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதோடு, தமிழ் மக்களினுடைய அபிலாசைகளை சிறிலங்காவின் ஒற்றையாட்சி அரசியலமைப்பின் பதின்மூன்றாம் (13ஆம்) திருத்தத்தினுள் முடக்க எத்தனிக்கும் அனைத்து முயற்சிகளையும் முற்றாக நிராகரிப்பதோடு, தமிழர் தேசிய இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வாக தமிழர்களை ஒரு தனித்த தேசமாக அவர்களின் பாரதீனப்படுத்தப்பட முடியாத சுயநிர்ணய உரிமை அங்கீகரிப்பது மட்டுமே மேலே குறிப்பிட்ட அனைத்து ஒடுக்கு முறைகளுக்கும் மீள நிகழாது இருப்பதை உறுதி செய்யும் என்பதை வலியுறுத்துகின்றோம்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் பின்வரும், தமிழ் மக்களின் சமகால அடிப்படைச் சிங்கல்கள் தீர்க்கப்பட வேண்டும் என்பதை குறிப்பிட்டுக் கொள்கின்றோம்.

1. எமது உறவுகளை தேடும் உரிமை, கருத்துரிமை, பேச்சு உரிமை, வளங்களை அனுபவிக்கும் உரிமை, நீதி கோரும் உரிமை என்பன பயங்கரவாத தடைச் சட்டம், நிகழ் நிலை பாதுகாப்பு சட்டம் மற்றும் நிறைவேற்ற முன்மொழியப்பட்டுள்ள ஏனைய சட்டங்களால் மறுக்கப்படுகின்றது. ஆகவே இச்சட்டங்கள் மீளப்பெறப்பட வேண்டும்.

2. தொல்பொருட்த் திணைக்களம், வன அஜீவராசிகள் திணைக்களம். வனவள் பாதுகாப்பு திணைக்களம், மகாவலி அபிவிருத்தித் திணைக்களம் என்னும் போர்வையில் மேற்கொள்ளப்படும் அனைத்து வகையான நில அபகரிப்புத் திட்டங்களும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதோடு, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகள் உரியவர்களிடம் மீள ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட வேண்டும்.

3. தமிழர் தாயகத்தின் நில ஒருமைப்பாட்டை சிதைக்கும் நோக்கில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள அனைத்து சிங்கள குடியேற்றங்களும் அகற்றப்பட வேண்டும்.

4. விடுவிக்கப்படாது எஞ்சியுள்ள ஏனைய தமிழ் அரசியல் கைதிகளும் நிபந்தனை இன்றி விடுதலை செய்யப்பட வேண்டும்.

5. வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பான அனைத்துலக விசாரணைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படுவதுடன் அவர்களுக்கு அனைத்துலக நீதி வழங்கப்படுவதோடு குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

6. வடக்கு- கிழக்கு தமிழர் தாயகத்தில் தமிழ் இளையோர்கள் கூட்டாக சிந்திப்பதைத் தடுத்து உளவியல் ரீதியாக சிதறடிக்கும் நோக்கம் கொண்டு அரச படைகளின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் போதைப் பொருள் விநியோகம் உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்.

7. பிராந்திய பண்பாட்டுப் பல்கலைக்கழகங்களாக விளங்கும் எமது யாழ்ப்பாண, கிழக்கு, வவுனியாப் பல்கலைக்கழகங்கள் பிராந்தியம் சார் அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு அம்சங்களை மையமமாகக் கொண்டு செயற்படுதலையும் தமிழ் மாணவர்களின் கல்வி மற்றும் கல்வி சாரா செயற்பாடுகளில் அவர்களது வாய்ப்புக்களின் இருத்தலையும் உறுதி செய்ய வேண்டும்.

8. மனித உரிமை மீறல்கள் வெளிக்கொண்டுவரும் ஊடகவியலாளர்கள், திட்டமிட்ட இன அடக்குமுறைக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வரும் மாணவர்கள் மற்றும் மக்கள் சமூக செயற்பாட்டாளர்கள் மீதான அச்சுறுத்தல்கள் மற்றும் கைது செய்யப்படுதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

9. தமிழ் மக்களின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு ஏற்படுத்தப்படும் அனைத்து வகையான அச்சுறுத்தல்கள், தடைகளை முடிவுக்கு கொண்டு வரவும் நினைவு கூறும் உரிமையை உறுதி செய்யுமாறும் வேண்டுகின்றோம்.

10. கால காலமாக நடைபெற்று வரும் தமிழின அழிப்பிற்கு அனைத்துலக நீதி பொறிமுறை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் (ICC) அனைத்துலக நீதிமன்றம் (ICJ) ஊடாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு பரிகார நீதி வழங்கப்பட வேண்டும். அத்துடன் ஐக்கிய நாடுகள் அவையில் சிறப்பாக உருவாக்கப்பட்ட தீர்ப்பாயத்தின் பொறிமுறைகளும் அனுமதிக்கப்பட வேண்டும்.

11. தமிழினப் படுகொலையை நிகழ்த்தி தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து தொடர்ந்தும் உரிமை மீறல்கள், சமூக விரோதச் செயல்களுக்கு பாதுகாப்பாக உள்ள இராணுவத்தினர் தமிழர் தாயகத்திலிருந்து அப்புறப்படுத்துவதுடன், மக்களின் செயற்பாடுகளில் தலையிடுவதையும் முற்றாக நிறுத்த வேண்டும்.

இலங்கையில் நிலையான அமைதி ஏற்படுவதற்கு ஈழத்தமிழரின் தேசிய இன பிரச்சனையில் மரபு வழி தாயகம், தமிழ்த் தேசியம், சுயநிர்ணய உரிமை என்ற அடிப்படையில் எட்டப்படும் எந்தவொரு அரசியல் தீர்வும் அனைத்துலக சமூகத்தால் ஒழுங்குபடுத்தப்பட்டு கண்காணிக்கப்படும் பொது வாக்கெடுப்பின் மூலம் தமிழ் மக்களின் ஆணை பெறப்பட வேண்டும் என்பதே எமது உறுதியான நிலைப்பாடாகும். அத்துடன் ஈழத் தமிழர்களின் தலைவிதியை ஈழத் தமிழர்களே தீர்மானித்து எம்மை நாமே ஆழக்கூடிய நிரந்தர தீர்வும் பொது வாக்கெடுப்பில் உள்வாங்கப்பட வேண்டும் என்பதை தமிழ் மக்கள் சார்பாக இந்த பிரகடனத்தின் ஊடாக உலகுக்கு அறிவிக்கின்றோம் என்றுள்ளது.

இலங்கையின் ‘சுதந்திர தினம்’ வடக்கு, கிழக்கில் கறுப்பு நாளாக பிரகடனம்

பிரித்தானியப் பேரரசின் காலனித்துவ நாடாக 133 வருடங்கள் இருந்த இலங்கையின் 76ஆவது சுதந்திர தினம் வடக்கு கிழக்கு மாகாணங்கள் முழுவதும் ‘கறுப்பு தினம்’ஆக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

பெப்ரவரி 4 ஆம் திகதி கறுப்பு நாளாக பிரகடனப்படுத்தப்படுவதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆகியன அறிவித்துள்ளன.

தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வுக்கான முன்னேற்றகரமான வேலைத்திட்டங்கள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கு.துவாகரன் குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் மக்களுக்கான உரிமைகள் மீறப்படுகின்றன. இருப்பு கேள்விக்குரியாகியுள்ளது. அச்சுறுத்தல்கள் தொடர்கின்றன. ஆட்சிகளும், ஆட்சியாளர்களும் மாறுகின்றார்கள். எனினும் தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு என்பது இன்றுவரை முன்னேற்றகரமான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை. அது வெறும் பேசுப்பொருளாக மாத்திரமே இருக்கின்றது. பெப்ரவரி ஆகவே வடக்கு, கிழக்கு தழுவிய கரிநாளாக பிரகடனப்படுத்துகின்றோம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் தீர்வு கிடைக்கும் வரை தமிழ் மக்கள் தொடர்ந்து போராட வேண்டும் என மாணவர் ஒன்றிய தலைவர் மேலும் வலியுறுத்தியிருந்தார்.

“அரசாங்கம் பல்வேறு புதிய சட்டங்கள் ஊடாக தமிழ் மக்களின் உரிமைப் போராட்டங்களை தடுக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது. அரசியல் தீர்வு, அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படும் அத்துமீறிய குடியேற்றங்கள், நிலங்களை கைப்பற்றி விகாரைகளை அமைக்கும் செயற்பாடுகளாகள் என இவை தொடர்கின்றன. ஆகவே தமிழர்களின் தீர்வு எட்டப்படும் வரை போராடியே ஆகவேண்டும் என்பதே வரலாற்று உண்மை.”

மட்டக்களப்பு ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய அம்பாறை மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணி, காணாமல் போனோர் அலுவலகம் (OMP) மற்றும் அரசாங்கத்தின் புதிய உண்மை ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் ஆணைக்குழு (TURC) என்பன தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காகவே எனத் தெரிவித்துள்ளார்.

“14 வருடங்களாக நாங்கள் எமது போராட்டத்தை முன்னெடுகத்துக்கொண்டிருக்கின்றோம். எத்தனை ஜனாதிபதி மாறி மாறி வந்தாலும். எனினும் எமக்கு இன்னமும் சுதந்திரம் கிடைக்கவில்லை. எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை யாரும் கூறவில்லை. 220ற்கும் மேற்பட்ட தாய்மாரை நாம் இழந்துள்ளோம். இவ்வாறான ஒரு சூழலிலேயே நாம் சர்வதேச நீதியை கோரி நிற்கின்றோம். ஓஎம்பி, டிஆர்சி என அனைத்தும் பொய்களே. எம்மை ஏமாற்றுவதற்காகவே இவைகள். பிள்ளைகளுக்கு , பாடசாலை மாணவர்களுக்கு என எவருக்கும் சுதந்திரம் இல்லை. எமது உரிமைக்காக போராடுவதற்கு எமக்கு சுதந்திரம் இல்லை. ஆகவேதான் நாங்கள் பெப்ரவரி 4ஐ கரிநாளாக பிரகடனப்படுத்துகின்றோம்.”

மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் செயலாளர் சஹராஜன் சுகந்தி, திருகோணமலை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி கே.செபாஸ்டியன் தேவி ஆகியோர் குறித்த ஊடக சந்திப்பில் பங்கேற்றனர்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பெப்ரவரி 4ஆம் திகதி மட்டக்களப்பில் கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்துவதற்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம் தீர்மானித்துள்ளதாக இந்த ஊடக சந்திப்பில் அறிவிக்கப்பட்டது.

தமிழ் மக்களின் அனைத்து பிரச்சினைகளிற்கும் தீர்வு காணப்படும் வரை போராடுவோம்: யாழில் வசந்த முதலிகே

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினருக்கும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினருக்குமாகிய விசேட கலந்துரையாடல் இன்றைய தினம் யாழ் நகரில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் காலை 10 மணியளவில் இடம்பெற்றது.

இதன் பொழுது அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் பயங்கரவாத தடைச்சட்டத்தினை முன்னிலைபடுத்திய போராட்டம் மற்றும் எதிர்காலத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துடன் இணைந்து செயற்படவேண்டும் என்று கோரிக்கை யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திடம் முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழ் மக்களின் பிரச்சின என்பது தனியே எரிவாயு அடுப்பு,மின்சாரம் என்பனவற்றுக்குள் எமது கோரிக்கைகள் உள்ளடங்கவில்லை மாறாக பயங்கரவாத தடைச் சட்டம் என்பதும் எமது தமிழ்மக்களின் பிரச்சினைகளில் ஒரு பகுதியாகவே இருக்கின்றது. வசந்த முதலிகே ஆறுமாத காலம் பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட பின்னர்தான் இது குறித்து ஆழமாக நீங்கள் பார்க்கின்றீர்கள் ஆனால் எமது யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் காணாமலாக்கப்பட்டும் சுட்டுபடுகொலையும் செய்யபட்டுள்ளார்கள். ஆக போராட்டம் என்பது எமக்கு புதிதல்ல குட்டிமணி தங்கதுரை பயங்கரவாத தடைச் சட்டம் சிங்களவருக்கும் எதிராக திசைமாறும் போது சிங்களவர்கள் புரிவார்கள் என்று அன்று கூறியது இன்று நிச்சயமாகியுள்ளது.

ஆக எமது பிரச்சினைகளை தெற்கிற்கு கொண்டு சென்று இனி போராட்டங்களின் போது இதனை முன்னிலைபடுத்துகின்ற பொழுது எமது நிலைப்பாடுகள் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துடனான உறுவுநிலைகளை ஆரோக்கியமாக்கும் என தெரிவித்திருந்தோம்.

இந்நிலையில் எதிர்காலத்தில் இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களில் எமது தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் குறித்து பல்கலைக்கழக மாணவர்களிடையே தெளிவுபடுத்தல்களை மேற்கொள்வதற்கும்சிங்கள நகரங்களில் சிங்கள மக்கள் மத்தியில் கவனயீர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் எதிர்காலத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் அனைத்தா பல்கலைக்கழகத்திற்கும் வருகை தந்து புரிதலை ஏற்படுத்தவேண்டும் எனவும் இதே நிலையில் இலங்கையில் இடம்பெற்ற இனவழிப்பு யுத்தமே பொருளாதார நெருக்கடிக்கு காரணமா எனவினவிய பொழுது அது பிரதான காரணியாக தாம் ஆமோதிப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் கருத்து தெரிவித்த எமது பிரதிநிதிகள் இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களில் மாணவர்களிடையை தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் குறித்து புரிதலை ஏற்படுத்தும் செயற்திட்டத்தை வரவேற்கின்றோம் இதே நேரம் முறைமையான கலந்துரையாடல் ஒன்றை யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமாக எடுத்து அதன் பின்னர் தொடர்ச்சியாக தமிழ் மக்களின் அபிலாசைகளை அடிப்படை பிரச்சிகனைகளுக்கு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குரல் கொடுக்கின்ற பொழுது அது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்று எனவும் மாணவர்களுக்கூடாகவே நாட்டின் பிரச்சினைகளை தீர்கமுடியும் அந்த அடிப்படையில் சிங்கள மாணவர்களின் லெளிவுபடுத்தலுக்காக பின்வரும் விடயமும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கு கையளிக்கப்பட்டது.

வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் தமது உரிமைக்காக கடந்த 70 வருடங்களுக்கு மேலாக அகிம்சை வழியிலும் ஆயுத வழியிலும் போராடினர். தமிழ் மக்களின் உரிமை போராட்டத்தினை பயங்கரவாதமாக தெற்கில் சிங்கள மக்களிடத்திலும், சர்வதேசத்தின் மத்தியிலும் சித்தரித்த சிறிலங்கா அரசானது இலட்சக்கணக்கான தமிழ் மக்களை படுகொலை செய்து, கொடுங்கோல் அடக்குமுறை இராணுவத்தினால் தமிழர் தாயகம் எங்கும் ஆக்கிரமித்து உள்ளனர்.

இலங்கைத் தீவு பிரித்தானியாவின் காலனித்துவத்திலிருந்து விடுதலை அடைந்த காலம் முதல், ஈழத் தமிழர்களாகிய நாங்கள் எமது சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி சாத்வீக முறை போராட்டங்களை மேற்கொண்டு வந்தோம். இப்போராட்டங்கள் வன்முறையினூடாக அடக்கப்பட்டதினால், ஆயுதப் போராட்டத்தினை முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டோம். தமிழ் மக்களின் தேசிய ஆயுதப் போராட்டம் சிறிலங்கா பேரினவாத அரசினால் கொடுங்கரம் கொண்டு மிகப்பெரும் மனிதப் பேரழிப்பினூடாக முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட்டது. இந்த இறுதியுத்தத்தின் போது இறுதி ஆறு மாதங்களில் மட்டும் எழுபதினாயிரத்துக்கு (70,000) மேற்பட்ட எமது உறவுகள் கொல்லப்பட்டதை ஐநா செயலாளர் நாயகத்தின் உள்ளக மீளாய்வுக்குழுவின் 2012 கார்த்திகை மாத அறிக்கையில் தெரிவித்துள்ளார். கைக்குழந்தைகள், சிறுவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டனர். 2017 ஆம் ஆண்டு மாசி மாதம் உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேசக் கருத்திட்டமானது (ITJP), தமிழ்ப் பெண்கள் “பாலியல் அடிமைகளாக” கையாளப்பட்டு இலங்கை இராணுவத்தினரால் நடாத்தப்பட்ட “பாலியல் வன்முறை முகாங்கள்” பற்றிய விபரங்களை ஐ.நா விடம் கையளித்தது. ஐக்கிய இராச்சியத்தின் வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய அலுவலகத்தின் 2013 சித்திரை மாதத்திற்குரிய அறிக்கைக்கு அமைவாக, தமிழர் தாயகத்தில் 90,000 க்கும் மேற்பட்ட யுத்தமூல விதவைகள் உள்ளனர். இவ்வாறு நீண்ட நெடிய காலமாக இனவழிப்புக்கு உள்ளாகிக்கொண்டிருக்கும் எமதினதிற்கான நீதி தொடர்ந்தும் மறுக்கப்பட்டு வருகின்றது.

யுத்தம் நிறைவடைந்து கடந்த பதினொரு ஆண்டுகளில் வடக்கு-கிழக்கை இராணுவ மயமாக்கிவரும் சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்களின் கலாசார, பண்பாட்டு அடையாளங்களை அழிப்பதுடன் வடக்கு-கிழக்கு பூர்வீக குடிகளான தமிழர்களின் இனப்பரம்பலில் மாற்றத்தை உருவாக்கி, தமிழ்த் தேசியத்தைச் சிதைவடையச் செய்து, அவர்களது இருப்பை இல்லாமல் செய்வதற்காக பல வகையிலும் கட்டமைக்கப்பட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. இதன் அடிப்படையில் தொல்பொருள் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், வனப் பாதுகாப்புத் திணைக்களம், நிலவள திணைக்களம், பௌத்த சாசன அமைச்சு மற்றும் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை ஊடாக பௌத்த மயமாக்கல், திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை சிறிலங்கா அரசாங்கமானது முனைப்போடு நடைமுறைப்படுத்தி வருகிறது. வடக்கு-கிழக்கில் உள்ள சுமார் 200 ற்கும் மேற்பட்ட தொன்மை வாய்ந்த தமிழ் ஆலயங்களை கையகப்படுத்துவதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகிறன. அத்துடன் தமிழர் தாயகம் எங்கிலும் பெளத்த விகாரைகள் அமைக்கப்பட்டும், தொடர்ந்தும் அமைக்கப்படுவதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன.

இன்று பொருளாதார பிரச்சனையாலும், சிறிலங்கா அரசின் அடக்குமுறையாலும் பாதிக்கப்பட்டுள்ள தென்பகுதி சிங்கள தரப்பினர், தற்போது வடக்கு கிழக்கு தமிழ் மக்களை அணுகத்தொடங்கி உள்ளார். அவ்வாறு அணுகும் எந்த தரப்பினரும் தமிழ் மக்களின் இனப்பிரச்சனையின் அடிப்படைகளை புரிந்துகொள்ளவதுடன் பின்வரும் விடயங்களில் தமது உறுதியான நிலைப்பாட்டினை வெளிப்படுத்த வேண்டும்.

1. வடக்கு கிழக்கை தாயகமாக கொண்ட தமிழ் மக்கள் தனித்துவமான மொழி, மதம், கலாச்சார அடையாளங்களை கொண்ட தனித்துவமான தேசிய இனம் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

2. ஒன்றிணைத்த வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழ் மக்களின் பாரம்பரிய மரபுவழி தாயகம் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

3. தமிழினம் தன்னாட்சிக்கு உரித்துடையவர்கள் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

4. தேசிய இனத்துக்குரிய சுயநிர்ணயம், தமிழினமும் உரித்துடையது என்பதை ஏற்றுக்கொள்வதுடன், அதன்வழி தமது அரசியல் தலைவிதியை தீர்மானிக்கும் உரிமையும் அவர்களுக்குண்டு என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

5. தமிழினம் தமது அரசியல் தலைவிதியை தீர்மானிக்க, சர்வதேசத்தினால் நடாத்தி கண்காணிக்கப்படும் சர்வஜன வாக்கெடுப்பினுடாக சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

6. தமிழினத்தின் மீது காலகாலமாக நிகழ்த்தப்பட்ட இனவழிப்பு, இனப்டுகொலை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதி பொறிமுறையினுடாக நீதி வழங்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

7. தமிழர் தாயகத்தில் நிலைகொண்டுள்ள சிங்கள ஆக்கிரமிப்பு இராணுவம் உடனடியாக வெளியேற்றப்படவேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

8. ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழரின் நிலங்கள் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

9. சிறிலங்கா அரசியல் அமைப்பின் 6ம் திருத்தச் சட்டம் நீக்கப்பட்டு தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாசையை வெளிப்படுத்தும் அரசியல் வெளி ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

10. பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட்டு, நீண்டகாலம் சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் உடனடியாக எவ்வித நிபந்தனைகளுமின்றி விடுவிக்கப்படவேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மேற்படி விடையங்கள் தீர்க்கமான வெளிப்படுத்தலை வெளியிடும் இடத்தேதான் இனப்பிரச்சனைக்கு நிரந்திர தீர்வையும் அதன்வழி பொருளாதார பிரச்சனைக்கு ஓர் தீர்வையும் எட்ட முடியும்.

இதன் பொழுது அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே,யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் அழகராசா விஜயகுமார்,யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் ஜெல்சின் ,திறந்த பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் றிபாத், தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் திலான்,ரஜரட்ட பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் அசான்,ஜெயவர்த்தனபுர,கொழும்பு,இணைப்பாளர் பிரசாந், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜப்பானிய தூதரக அதிகாரி யாழ். பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்தார்

ஜப்பானிய தூதரக அரசியல் பிரிவு அதிகாரியொருவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகளுடன் நேற்று (திங்கட்கிழமை) மாலை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

கலைப்பீட மாணவர் ஒன்றிய அறையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

ஜப்பானிய தூதரக அரசியல் பிரிவு அதிகாரி ஹனா ,யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் சில்வஸ்டார் ஜெல்சின், உபதலைவர் இரா தர்ஷன், மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது இலங்கையின் சுதந்திரதினத்தை முன்னிட்டு வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி முன்னெடுக்பட்ட போராட்டத்தின் நோக்கம் பற்றியும் தமிழ் மக்கள் மத்தியில் வடக்கு கிழக்கில் பொதுசன வாக்கெடுப்பின் முக்கியத்துவம் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வடக்கு கிழக்கு தழுவிய திட்டமிட்ட பௌத்தமயமாக்கல், திட்டமிட்ட நிலஅபகரிப்பு , அரசியல் கைதிகளின் விடுதலை, வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் , மகாவலி அபவிருத்தி திட்டமும் திட்டமிட்ட சிங்கள மயமாக்கமும், மட்டக்களப்பு மயிலத்தமடு மேய்ச்சல் தரவை பிரச்சினை,தமிழ் மாணவர் சமூகத்தின் மீதான அரச அடக்குமுறைகள் என பலதரப்பட்ட விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்.மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பு

இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை தமிழர்களின் கரிநாளாக அறிவித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தும் மாபெரும் பேரணிக்கு ஆதரவாக யாழ்.மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) யாழ்.நகரம் உட்பட மாவட்டத்திலுள்ள சகல நகரங்களிலும் வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு ஹர்த்தாலுக்கு வர்த்தக சமூகம் ஆதரவு தெரிவித்துள்ளது.

மேலும் யாழ்.நகரிலிருந்து இடம்பெறும் தனியார் பேருந்து சேவைகள் இடம்பெறவில்லை. இ.போ.ச சேவைகள் மட்டுமே இடம்பெற்று வருகின்றது.

இதனால் நகர பகுதிகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைவடைந்து காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

நாளை பேரணியில் சகலரையும் அணி திரளுமாறு யாழ்- கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு

தமிழ் மக்களின் கரிநாளான நாளைய தினம் வடக்கிலிருந்து கிழக்குக்கு எழுச்சிப் பேரணி ஆரம்பமாகவுள்ளது. இந்தப் பேரணியில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று யாழ்ப்பாணம், கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

நேற்றைய தினம் யாழ். பல்கலைக் கழகத்தில் யாழ்ப்பாணம் – கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் கூட்டாக நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இந்த அழைப்பை விடுத்தனர். அத்துடன், தமிழ் மக்களின் அபிலாசைகளான பொங்கு தமிழ் எழுச்சியனூடாக வலியுறுத்தப்பட்ட சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாய கம், தமிழ்த் தேசியம் என்ப வற்றை முன்னிறுத்தி முன்னெடுக்கும் இந்த எழுச்சிப் பேரணியில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று அவர்கள் அழைப்பு விடுத்தனர். இதேநேரம் பேரணி ஆரம்பமாகி பயணிக்கும் இடங்களையும் வெளியிட்ட மாணவர்கள் அந்தப் பகுதிகளில் பெருந்திரளாக மக்கள் திரண்டு ஆதரவு அளிக்குமாறும் வேண்டுகோள் விடுத் தனர்.

பேரணி ஆரம்பமும் பயணமும் வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி யாழ். பல்கலைக்கழகத்திலிருந்து முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகும். நாச்சிமார் கோயிலடி ஊடாக பிரதான தபால் அலுலகம் தமிழாராய்ச்சி மண்டபம், மணிக்கூட்டுக்கோபுரம், ஆஸ்பத்திரி வீதி வழியாக கச்சேரியடியை வந்தடைந்து பின்னர் செம்மணியை சென்றடையும்.

பின்னர் செம்மணியிலிருந்து வாகனங்கள் மூலம் நாவற்குழி, சாவகச்சேரி, கொடிகாமம், மிருசுவில், பளை, ஆனையிறவு, பரந்தன் ஊடாக கிளிநொச்சியை சென்றடைந்து இரணைடுவில் பேரணியின் முதல் நாள் நிறைவடையும். இரண்டாம் நாளான நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு பரந்தனில் ஆரம்பமாகும்.

வவுனியா மன்னார் அணிகளை இணைத்துக் கொண்டு 10.30 மணிக்கு புறப்படும் பேரணி புளியம்பொக்கணை, தர்மபுரம், விசுவமடு, உடையார்கட்டு, மூங்கிலாறு ஊடாக புதுக்குடியிருப்பை அடைந்து அங்கிருந்து முள்ளிவாய்க் கால் சென்று உறுதியெடுத்துக் கொண்டு முல்லைத்தீவில் நிறைவடையும்.

மூன்றாம் நாளான திங்கட்கிழமை காலை 7.30 மணிக்கு முல்லைத்தீவில் ஆரம்பமாகும் பேரணி தென்னமரவாடியூடாக திருகோணமலையை மதியம் 1.30 மணியளவில் சென்றடையும். பின்னர், திருகோணமலையின் எழுச்சி நிகழ்வுகளில் பேரணியினர் பங்கேற்பர். தொடர்ந்து பயணித்து வெருகலில் மூன்றாம் நாள் நிறைவடையும்.

நான்காம் நாளான செவ்வாய்க் கிழமை முற்பகல் 10 மணிக்கு பேரணி வெருகலிலிருந்து ஆரம்பமாகி வாகரை சென்று அங்கிருந்து மட்டு. நகரை சென்றடையும். இதேநேரம் அம்பாறை மாவட்டத்திலிருந்தும் பேரெழுச்சியாக மக்கள் வந்து இணைந்து மாபெரும் பொது கூட்டத்துடன் எழுச்சிப் பேரணி நிறைவு பெறும்.

இப்பேரணிகளில் மாணவர்கள், மதத் தலைவர்கள், பொதுமக்கள், சிவில் சமூக செயல்பாட்டாளர்கள், அரசியல் தரப்பினர் அனைவரும் அலைஅலையாக இணைத்து தமிழ்த் தேசத்தின் நிலைப்பாட்டை முழு உலகத்துக்கும் வெளிப் படுத்த அணிதிரளுமாறு அன்புரிமையுடன் வேண்டி நிற்கின்றோம் – என்று தெரிவித்தனர்.

சுதந்திரதினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி பேரணி

இலங்கையின் சுதந்திர நாள் தமிழர்களுக்கு கரி நாள் என தெரிவித்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பெப்ரவரி 4 ஆம் திகதி தமிழர் தாயகம் எங்கும் சிங்கள தேசத்தின் சுதந்திர தினத்தை புறக்கணித்து மக்கள் எழுச்சி பேரணியில் ஒன்றுகூடுமாறு அழைப்பு விடுத்துள்ளது.

பெப்ரவரி 4ஆம் திகதி யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் இருந்து ஆரம்பிக்கும் பேரணி, கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை மாவட்டங்கள் ஊடாக எதிர்வரும் 7ஆம் திகதி மட்டக்களப்பை சென்றடைய திட்டமிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று நடந்த ஊடக சந்திப்பிலேயே இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர்,

ஆங்கிலேயரிடம் இருந்து இலங்கை சுதந்திரம் அடைந்திருந்தாலும் தமிழ் மக்களாகிய எமக்கு இன்னமும் சுதந்திரம் கிடைக்கவில்லை.சிங்கள பேரின வாத அரசின் திட்டமிடப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைகள் தொடர்வதால் பெப்ரவரி 4 ஆம் திகதியை காலம் காலமாக தமிழர்கள் கரிநாளாக தான் அனுஸ்டித்து வருகிறோம்.

தமிழர் தாயகப்பகுதிகளில் மக்களின் பூர்வீகக் காணிகள் அபகரிப்பு, பௌத்தமயமாக்கல் என்பன இன்று வரை புதிய புதிய வடிவங்களில் தொடர்கிறது. போர் முடிந்து 14 ஆண்டுகள் கழிந்தும் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவில்லை, தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவில்லை, தமிழினப்இனப்படுகொலைக்கான நீதி கிடைக்கவில்லை, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் அரசு பொறுப்புக்கூறவில்லை. தமிழ் மக்களையும் சர்வதேசத்தையும் இலங்கை அரசு ஏமாற்றி வருகிறது.

அரச படைகளால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை தேடி வருடக்கணக்காக போராடி வருகிறார்கள், தமிழ் அரசியல் கைதிகள் 10 வருடங்களுக்கு மேலாக தமது விடுதலையை எதிர்பார்த்து சிறையில் வாடுகிறார்கள், தமது பூர்வீக நிலங்களை பறிகொடுத்துவிட்டு இன்றுவரை வீதியில் போராடி வருகிறார்கள்,தமிழர் பகுதிகளில் தமிழருக்கு அனுமதிவழங்காமல் சிங்கள குடியேற்றங்களுக்கு அனுமதி வழங்குகிறார்கள், தமது உரிமைகளுக்காக போராடும் மக்கள் கைதுசெய்யப்பட்டு அச்சுறுத்தப்படுகிறார்கள் இவ்வாறு தமிழர் தாயக்கதில் தமிழ் மக்களின் இருப்பு தற்போது கேள்விக்குறியாகியுள்ள நிலையில் இந்த சுதந்திர நாளை நாம் கரிநாளாக பிரகடனப்படுத்தி எமது எதிர்ப்பை இந்த அரசுக்கும் தெரிவிப்பதுடன் சர்வதேசத்துக்கு தமிழ் மக்களின் உண்மை நிலையை உரத்துக்கூற வேண்டும்.

அந்த வகையில் மாணவர்களாகிய நாம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி பாரிய மக்கள் எழுச்சி பேரணி ஒன்றை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம். அதற்கு கட்சி பேதங்களை கடந்து சகல தரப்பினரின் ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கிறோம். எமது உரிமைகளை நாம் விடடுக்கொடுக்காமல் எமது இருப்பை உறுதி செய்வதற்கு நாம் போராட வேண்டும். ஆகவே பெப்ரவரி 4 ஆம் திகதி தமிழர் தாயகம் எங்கும் சிங்கள தேசத்தின் சுதந்திர தினத்தை புறக்கணித்து இந்த மக்கள் எழுச்சி பயணத்தில் எம்முடன் ஒன்றுகூடுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றனர்.

யாழில் ஜனாதிபதி கலந்து கொள்ளும் தேசிய பொங்கலுக்கு எதிர்ப்பு – யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

தேசிய பொங்கல் விழாவிற்கு யாழ்ப்பாணத்திற்கு  பயணம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதி போராட்டத்தினை முன்னெடுக்க அனைவரும் ஒன்றிணையுமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

யாழ்.பல்கலைக்கழகத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் அவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த ஊடக சந்திப்பில், யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய  தலைவர் அழகராசா விஜயகுமார் கருத்து தெரிவிக்கையில்,
 எங்களுடைய தமிழ் மக்கள் வடகிழக்கு எங்கிலும் பல்வேறு பிரச்சனைகளுக்குள் சிக்குண்டு தொடர்ச்சியாக எதுவித அரசியல் தீர்வுகளும் இன்றி தங்களுடைய நாள் ஒவ்வொன்றையும் கழித்து வருகின்ற நிலையில் காணாமலாக்கப்பட்டோர் , அரசியல்கைதிகள், காணி விடுவிப்பு ,இராணுவ ஆக்கிரமிப்பு,பௌத்தமயமாக்கல் என அரசின்  திட்டமிடப்பட்ட இனபிரச்சனைகளுக்குள் இருந்து மக்கள் இதுவரை வெளிவராத நிலையிலும், தேசிய பொங்கல் விழா ஒன்றினை இந்த ஜனாதிபதி எவ்வாறான மனநிலையில்  யாழ்ப்பாணத்தில் நிகழ்த்த முடியும்?
 ஜனாதிபதி பொங்கல் விழாவை  மேற்கொள்வதில் எங்களுக்கு எதுவித ஆட்சேபனையும் கிடையாது. தமிழர்களுக்குரிய பிரச்சினைகளுக்குரிய தீர்வு ஒன்றினை  வழங்கிய பின்னர் அவர் குறித்த பொங்கல் நிகழ்வினை முன்னெடுப்பதற்கு தமிழ் மக்களாக நாங்களும் இணைந்து கொள்வோம்.எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 3 மணியளவில் ஜனாதிபதி கலந்து கொள்ளும் பொங்கல் நிகழ்வு நல்லூர் சிவன் ஆலயத்தில் இடம் பெற இருக்கின்ற தருணத்தில் 1 மணியளவில் யாழ் பல்கலைக்கழக முன்றலில் கவனயீர்ப்பு  போராட்டம் ஆரம்பமாகி தொடர்ச்சியாக பொங்கல் நிகழ்வு இடம்பெறும்  இடத்திற்கு சென்று நிறைவவடையும்.

அதேவேளை மக்கள் பிரதிநிதிகள், கட்சித் தலைமைகள் அரசியல் பேதமின்றி குறித்த பொங்கல்  நிகழ்வை முற்றாக நிராகரிப்பதோடு, எங்களுடைய இந்த சாத்தவீக போராட்டத்தில் பங்கு கொள்ள வேண்டும் என அழைப்பு விடுப்பதோடு, அனைத்து சிவில்  அமைப்புக்கள் பொதுமக்கள் என அனைத்து தரப்பினருக்கும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம் என மேலும் தெரிவித்தார்.

மலையக தியாகிகளை நினைவு கூர்ந்தனர் யாழ் பல்கலை மாணவர்கள்

யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் மற்றும் மலையக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வியாழக்கிழமை (12) நண்பகல் 12:00 மணியளவில் மலையக தியாகிகளுக்கான நினைவேந்தல் யாழ் பல்கலைக்கழக பிரதான நினைவுத்தூபியில் நடைபெற்றது.

மலையகத் தமிழர்களுக்கான தொழிற்சார் மற்றும் இதர உரிமைகளை வென்றெடுப்பதற்கான உரிமை போராட்டத்தில் உயிர்நீத்த அனைத்து தியாகிகளும் குறித்த நினைவேந்தலில் நினைவுகூரப்பட்டதோடு 1930க்கு பிற்பட்ட காலங்களில் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்கங்களால் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க அரசியல் உரிமைப் போராட்டங்களில் பங்கு பற்றி உயிர் நீத்த அனைத்து தோட்டத் தொழிலாளர்களையும் “மலையக தியாகிகள்” என அடையாளபடுத்துகின்ற நிலையில் பெருந்தோட்டதொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு போராட்டத்தில் அதிகார வர்க்கத்தின் அடக்கு முறையின் பேரில் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டு தனது உயிரை தியாகம் செய்த முல்லோயா கோவிந்தனின் உயிர்த்தியாகம் ஜனவரி 10 ஆம் திகதி நடந்தது.

மலையக தியாகிகள் வரலாற்றை ஆரம்பித்து வைத்த இத்திகதி மலையக தியாகிகள் தினமாக அனுஷ்டிக்கப்படுவதற்கு கடந்த 2019 டிசம்பர் 15ஆம் திகதி தலவாக்கலை டெவனில் நடைபெற்ற நினைவேந்தலின் போது தீர்மானிக்கப்பட்டது.

2020 ஆம் ஆண்டு இந்த நிகழ்வு மஸ்கெலியாவில் நடைபெற்றது. 2021 ஆம் ஆண்டு பத்தனை சந்ததியில் நடைபெற்றது. 2023 ஆம் ஆண்டு கொட்டக்கலை கொமர்சியல் பகுதியில் இடம்பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனை மையப்படுத்தியே குறித்த நினைவேந்தல் யாழ். பல்கலையின் கலைப்பீட மாணவர் ஒன்றியம் மற்றும் மலையக மாணவர் ஒன்றியங்களினால் இணைந்து முன்னெடுக்கப்பட்டது.

இதன்பொழுது மலையக வாழ மக்களின் அறப்போராட்டங்களில் உயிர்நீத்த தியாகிகளின் நினைவுருவ படத்திற்க்கு ஈகைசுடரேற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தி அகவணக்கமும் செலுத்தப்பட்டது.

இதன்பொழுது பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்,கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினர், மலையக மாணவர் ஒன்றியத்தின்,கல்விசாரா ஊழியர்கள்,மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.