சீனாவில் இருந்து 10000 ரயில் தண்டவாளங்களை இறக்குமதி செய்வதற்கு தீர்மானம்

சீனாவில் இருந்து 10000 ரயில் தண்டவாளங்களை இறக்குமதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடன் உதவியின் கீழ் இந்த ரயில் தண்டவாளங்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

அடுத்த மாத இறுதியில் குறித்த ரயில் தண்டவாளங்கள் நாட்டிற்கு கிடைக்கப்பெறும் என போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, ரயில் மார்க்கங்களை பராமரிப்பதற்கு அவசியமான ஆணிகள் உள்ளிட்ட பல்வேறு உதிரிப்பாகங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரயில் தண்டவாளங்கள் கிடைக்கப்பெற்றதன் பின்னர், ரயில் மார்க்கங்களை புனரமைக்கும் நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியும் என அதன் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறினார்.

ரயில் மார்க்கங்கள் சேதமடைந்துள்ளதன் காரணமாக பல இடங்களில் ரயில்களின் பயண வேகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், இதன் அதிகளவான பாதிப்பிற்கு கரையோர மார்க்கம் முகங்கொடுத்துள்ளது.

இதன் காரணமாக கொழும்பு கோட்டை முதல் பாணந்துறை வரையிலான ரயில்களின் பயண வேகத்தை மணிக்கு 30 கிலோமீட்டர் வரை குறைப்பதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.