சீனாவை எதிர்க்கும் தைரியம் அரசாங்கத்தில் எவருக்கும் கிடையாது! – விஜேதாச ராஜபக்ச  

சீன உரக்கப்பல் விவகாரத்தில் இராஜதந்திர உறவை பாதுகாப்பதற்காக நஷ்டஈடு வழங்கப்படவில்லை சீனாவை எதிர்க்கும் தைரியம் அரசாங்கத்தில் எவருக்கும் கிடையாது என ஆளுந்தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ச  தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச அரசியல் ஆணவத்தில் எடுக்கும் தீர்மானங்களே நாட்டில் இவ்வாறானதொரு நிலைமை ஏற்படக் காரணமாகும். அமெரிக்க பிரஜையான அவரை இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம் சட்ட ரீதியாக நிதி அமைச்சராக ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே அவரை பதவி விலக்குவதற்காக ஜனவரியில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தனியார் ஊடகமொன்றிற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் வழங்கிய முழுமையான செவ்வி,

நிதி அமைச்சர்

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச அரசியல் ஆணவத்தில் எடுக்கும் தீர்மானங்களே நாட்டில் இவ்வாறானதொரு நிலைமை ஏற்படக் காரணமாகும். இதற்கு முன்னர் ஒரு சந்தர்ப்பத்தில் வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவின் பெயரைப் பயன்படுத்தி எரிபொருள் விலையை அதிகரித்து வெளிநாட்டுக்குச் சென்றார். தற்போது வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை மக்களின் சாபத்திற்கு உள்ளாக்கிவிட்டு அவர் அமெரிக்கா சென்றுள்ளார். இவ்வாறான ஒருவரால் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் என்று எவராவது எண்ணுவார்களாயின் அவர்கள் அங்கொடையிலுள்ள மன சிகிச்சை நிலையத்தில் இருக்க வேண்டியவர்களாவர்.

ஒரே நாடு – ஒரே சட்டம் செயலணி

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ ருவன்வெலிசாயவில் பதவிப் பிரமாணம் செய்ததோடு மாத்திரமின்றி தான் சிங்கள பௌத்த வாக்குகளாலேயே அரச தலைவராக தெரிவு செய்யப்பட்டேன் கூறினார். இது ஏனைய மதங்களைப் பின்பற்றும் மக்கள் பௌத்தர்கள் மீது விரோதம் கொள்ள பிரதான காரணியாக அமைந்தது.

இவ்வாறான நிலையிலேயே தற்போது ஞானசார தேரர் தலைமையில் ‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ அரச தலைவர் செயலணி நியமிக்கப்பட்டுள்ளது. நீதி அமைச்சருக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டிய பொறுப்பு நாடாளுமன்றத்தை மீறி ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறான செயற்பாடுகள் ஊடாக மதங்களுக்கிடையில் பழிவாங்கும் எண்ணங்களையே அரச தலைவர் ஊக்கப்படுத்தியுள்ளார். அது மாத்திரமின்றி மதகுமார்களுக்கிடையில் இவ்வாறான காரணிகளால் பிளவு ஏற்பட்டுள்ளது. பௌத்த சங்கங்கள் பிளவடையும் வகையில் செயற்பட்ட ஒரேயொரு அரச தலைவர் இவர் மாத்திரமேயாவார். இராணுவ மனநிலையைக் கொண்ட இவ்வாறான ஒருவரால் மக்களின் கஷ்டத்தை உணர முடியாது.

வரவு – செலவு திட்டம் சட்டரீதியானதல்ல

இம்முறை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வரவு – செலவு திட்டம் சட்ட விரோதமானதாகும். காரணம் வெளிநாட்டு பிரஜையான பசில் ராஜபக்சவை அரசியலமைப்பின் பிரகாரம் சட்ட ரீதியாக நிதி அமைச்சராக ஏற்றுக் கொள்ள முடியாது.

காரணம் அவர் 1952 அமெரிக்க சட்டத்தின் படி அந்நாட்டு குடியுரிமையைப் பெற்ற போது அமெரிக்காவுடனான அனைத்து தொடர்புகளையும் பேணுவதாகவும் அமெரிக்காவின் அரசியலமைப்பை பாதுகாப்பதாகவும், அமெரிக்காவுக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்படும் போது ஆயுதம் ஏந்தி அந்நாட்டை பாதுகாப்பதாகவும் சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்.

இவ்வாறு வெளிநாடுகளுக்கு சென்று சத்திப்பிரமாணம் செய்து கொள்ளும் இலங்கை பிரஜைகளின் குடியுரிமை இயல்பாகவே இரத்தாகும் என்று 1948 இல் சுதந்திரத்தின் பின்னர் டீ.எஸ்.சேனாநாயக்க முன்வைத்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சபதம்

இலங்கையின் குடியுரிமையைப் பெறாத ஒருவரால் எவ்வாறு நிதி அமைச்சு பதவியை வகிக்க முடியும்? அவரால் எவ்வாறு இரு நாடுகளினதும் அரசியலமைப்புகளை பாதுகாக்க முடியும்? எனவே தான் தற்போதைய நிதி அமைச்சரை சட்ட ரீதியாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறுகின்றேன்.

நிதி அமைச்சரை பதவி நீக்குவதற்காக என்னால் தொடரப்பட்ட வழக்கில் ஜனவரி 12 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுதாக்கல் செய்யவுள்ளேன். அதன் மூலம் நிதி அமைச்சரவை பதவி விலகச் செய்வேன்.

20 ஆவது திருத்தத்திற்கு நம்பியே வாக்களித்தோம்

20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த இரட்டை குடியுரிமை விகாரம் தொடர்பில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 20 பேர் அரச தலைவரிடம் சில யோசனைகளை முன்வைத்திருந்தோம். அதன் போது 2021 நவம்பர் 18 ஆம் திகதிக்கு முன்னர் இந்த சர்ச்சைக்கு தீர்வு வழங்குவதாக வாக்குறுதியளித்தார்.

எனினும் அவரால் வழங்கப்பட்ட வாக்குறுதி இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை. அரச தலைவரின் வாக்குறுதிகளை நம்பியே 20 இற்கு நாம் வாக்களித்தோம்.

புதிய அரசியலமைப்பு சாத்தியமா?

இந்த அரசாங்கத்தின் கீழ் ஒருபோதும் புதிய அரசியலமைப்பை எதிர்பார்க்கக் கூடாது. இவர்கள் அதற்காக செயற்பட மாட்டார்கள். முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களை விலைக்கு வாங்கி அவர்களின் ஆதரவின் ஊடாகவே மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் 20 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் 19 ஆவது திருத்தம் உருவாக்கப்பட்ட போது ஐக்கிய தேசிய கட்சிக்கு நாடாளுமன்றத்தில் 40 ஆசனங்களே காணப்பட்டன. எனினும் இதனை 216 வாக்குகளுடன் நிறைவேற்ற முடிந்தது. இதற்காக எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பணமோ பதவியோ வழங்கப்படவில்லை. காரணம் 19 ஆவது திருத்தம் மக்களுக்கானதாகக் காணப்பட்டது.

எரிவாயு அடுப்புக்களின் வெடிப்பும் எதிராக வழக்குகளும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான வழக்கு விசாரணைகளின் போது தமது பொறுப்பிலிருந்து விலகியவர்கள் சிறை செல்ல நேரிட்டது. அதே போன்று சமையல் எரிவாயு சிலிண்டர்களை அண்மித்த வெடிப்பு சம்பவங்களுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்களும் சிறைசெல்ல வேண்டியேற்படும். அவ்வாறானவர்களுக்கு எதிராக பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் வழக்கு தொடர்வதற்கு நான் தயாராகிக் கொண்டிருக்கின்றேன்.

சீன உரக்கப்பல் விவகாரத்தில் இராஜதந்திர உறவை பாதுகாப்பதற்காக நஷ்டஈடு வழங்கப்படவில்லை. மாறாக அடிமைத்தனத்தின் காரணமாகவே அந்த நட்ட ஈட்டு தொகையை செலுத்த இணக்கம் தெரிவித்துள்ளனர். சீனாவை எதிர்க்கும் தைரியம் அரசாங்கத்தில் எவருக்கும் கிடையாது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள், சமையல் எரிவாயு விவகாரத்தைப் போலவே பேர்ள் கப்பல் விபத்துக்கு பொறுப்பு கூற வேண்டியவர்களும் ஒரு நாள் தண்டனையை அனுபவிப்பர்.

அரச தலைவர் விமர்சிக்கும் உரிமை உள்ளதா?

அரசாங்கத்தையும் அரச தலைவரினை விமர்சிப்பதால் எனக்கு எதிராக எவருக்கும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியாது. காரணம் நான் கட்சி அரசியலமைப்பை மீறி செயற்படவில்லை. அரச தலைவர் எமது கட்சியின் அங்கத்தவர் கிடையாது. எனவே அவரை விமர்சிக்கும் உரிமை எனக்கு இருக்கிறது. ஆளுந்தரப்பிலுள்ள 75 சதவீதமானோர் எனது நிலைப்பாட்டிலேயே உள்ளனர்.

வரவு – செலவு திட்டம் என்பது பொதுசன பெரமுனவுடையதல்ல. அது நாடாளுமன்றத்திற்குரியது. நாடாளுமன்ற வரப்பிரசாதங்களுக்கமைய அதற்கு வாக்களிக்காமல் இருக்கக் கூடிய உரிமை எனக்கிருக்கிறது. நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியலமைப்பை மீறி செயற்படவில்லை.

2022 இல் அதிகார மாற்ற புரட்சி நிச்சயம் ஏற்படும்

நாட்டில் தற்போது மிகவும் மோசமான சூழலே நிலவுகிறது. மக்கள் மத்தியில் கொரூரமும் , வன்முறையும் தலைதூக்கியுள்ளது. எனவே அவர்களை அடக்கி அரசாங்கத்தினால் முன்னோக்கிச் செல்ல முடியாது.

எதிர்வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நாடாளுமன்றத்திற்குள் பாரிய ஆட்சி கவிழ்ப்பொன்று ஏற்படும். அவ்வாறில்லை எனில் அரசாங்கத்தில் அதிகார மாற்ற புரட்சி நிச்சயம் ஏற்படும் என்றும் அவர் தனது நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.