சீனா இலங்கையை கடன்பொறிக்குள் தள்ளவில்லை – அலி சப்ரி

அண்மைய ஆண்டுகளில் இலங்கையில் சீனா அதிகளவான முதலீடுகளை மேற்கொண்டுள்ளதாகவும், பரஸ்பர நன்மை பயக்கும் பங்காளித்துவத்தை விரிவுபடுத்துவதற்கு இலங்கை எதிர்பார்த்துள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

பெய்ஜிங்கில் இடமபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர், சீனாவுடனான நாட்டின் உறவு மற்றும் இலங்கையின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கு அது எவ்வாறு உதவியது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் முன்முயற்சி இலங்கையை கடன் பொறிக்குள் தள்ளியுள்ளது என்ற மேற்கத்திய ஊடக அறிக்கைகாலை முற்றாக நிராகரிப்பதாகவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வளர்ச்சிக்கு மட்டுமன்றி பல அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கும் சீன முதலீடு மிகவும் முக்கியமானது எனவும் வெளிவிவகார அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் தற்போது ஸ்திரமடைந்து வருவதாகவும், இந்த சந்தர்ப்பத்தில் சீனாவின் முதலீடு மிகவும் முக்கியமானது என்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இலங்கையின் முன்னேற்றத்தில் சீனா நம்பகமான நண்பராகவும், பங்காளியாகவும் இருந்து வருகிறது என்றும், தொடர்ந்தும் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.