தடுப்பிலுள்ள தமிழ், முஸ்லிம் இளைஞர்களுக்கு நியாயம் வழங்க பயங்கரவாத தடைச்சட்டதில் திருத்தம் செய்யவும் – ரிஷாத்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பல ஆண்டுகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களுக்கும், முஸ்லிம் இளைஞர்களுக்கும் நியாயம் வழங்கும் வகையில் பயங்கரவாத தடைச்சட்டம் திருத்தம் செய்யப்பட வேண்டும்.

இயற்றப்படும் சட்டங்கள் அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (10) இடம்பெற்ற நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான ஒளடதங்கள் (திருத்தச்) சட்டமூலம் உட்பட பல சட்டமூலங்களின் இரண்டாம் மதிப்பீட்டின் போது விசேட உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் போராட்டங்களும், எதிர்ப்புக்களும் வெளிப்பட்ட வண்ணம் உள்ளன.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பல ஆண்டு காலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளதை நான் சிறையில் இருந்த போது நேரடியாக உணர்ந்தேன்.

அதேபோல் முஸ்லிம் இளைஞர்கள் கடந்த மூன்று ஆண்டு காலமாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

இவர்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும். பயங்கரவாத தடைச்சட்டம் காலத்தின் தேவைக்கேற்ப திருத்தம் செய்யப்பட வேண்டும்.

ஆங்கில மொழியில் மாத்திரம் தான் சட்டக் கல்லூரி பரீட்சைக்கு தோற்ற வேண்டும் என்ற தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்துகிறோம். இவ்விடயம் தொடர்பில் பலர் எம்மிடம் வலியுறுத்ததியுள்ளோம்.

போதைப்பொருள் நாட்டின் தற்போதைய பிரதான பிரச்சினையாக உள்ளது, போதைப்பொருள் பாவனைக்கு பாடசாலை மாணவர்கள் அடிமையாகியுள்ளார்கள்.

பாடசாலை மாணவர்களை போதைப்பொருள் பாவனையில் இருந்து மீட்பதற்கு கல்வி அமைச்சு சிறந்த செயற்திட்டத்தை செயற்படுத்த வேண்டும்.

இயற்றப்பட்ட சட்டங்களை செயற்படுத்தாத காரணத்தினால் நாட்டில் பல பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன. அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டம் பல பிரச்சினைகளை தோற்றுவித்தது.

ஆணைக்குழுக்களின் சுயாதீனத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்பட்டது. அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து சுயாதீன ஆணைக்குழுக்களின் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றார்