பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு பதிலாக புதிய சட்டம் – விஜயதாஸ

நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்தம் செய்வதற்கு பதிலாக தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கும் வகையிலான புதிய சட்டத்தை உருவாக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கும் வகையிலான சட்டமூலம் மூன்று மாத காலத்திற்குள் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும் என நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (10) பல சட்டமூலங்கள் மீதான விவாதத்தின் போது பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் புதிய லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் குமார வெல்கம எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்;

2015ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை உருவாக்க அவதானம் செலுத்தப்பட்டு, அதற்கான சட்ட வரைபு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

2019ஆம் ஆண்டு துரதிஸ்டவசமாக ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலை தொடர்ந்து பயங்கரவாத தடைச்சட்டம் நடைமுறையில் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாடு ஏற்பட்டது.

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் தற்போது மாறுப்பட்ட நிலைப்பாடு காணப்படுகிறது. எக்காரணிகளுக்காகவும் தேசிய பாதுகாப்பை மலினப்படுத்த முடியாது.

தேசிய பாதுகாப்பு தொடர்பில் 2016 ஆம் ஆண்டு குறிப்பிட்ட விடயத்தை தொடர்ந்து நான் இனவாதியாக சித்தரிக்கப்பட்டேன்.

ஏப்ரல்21 குண்டுத்தாக்குதல் தொடர்பிலான விசாரணை ஆணைக்குழு உரிய தரப்பினர் பொறுப்பில் இருந்து விலகியுள்ளதுடன், தகவல் குறிப்பிட்டவர்கள் வஞ்சிக்கப்பட்டார்கள் என குறிப்பிட்டுள்ளது, எக்காரணிகளுக்காவும் தேசிய பாதுகாப்பையும், பொது மக்கள் பாதுகாப்பையும் அலட்சியப்படுத்த முடியாது.

நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்தம் செய்யும் நோக்கம் கிடையாது. தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கி புதிய சட்டத்தை உருவாக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அதற்காக விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது, குழுவினர் அறிக்கை சமர்ப்பித்ததும் மூன்று மாத காலத்திற்குள் தேசிய பாதுகாப்பிற்கான சட்டத்தை உருவாக்கும் சட்டமூல வரைபு பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும் என்றார்.