பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இடைநிறுத்த ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல்

பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டிருப்போரை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், இனிவருங்காலங்களில் அச்சட்டத்தின் பிரயோகத்தை இடைநிறுத்துமாறும் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ள ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகள், நல்லிணக்கத்தை முன்னிறுத்தி நிறுவப்பட்டுள்ள கட்டமைப்புக்கள் சுயாதீனமாகச் செயற்படும் அதேவேளை பாதிக்கப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடவேண்டியது அவசியம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான கூட்டு ஆணைக்குழுவின் 25 ஆவது கூட்டம் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆசிய, பசுபிக் வெளிவிவகாரசேவையின் பிரதி நிறைவேற்றுப்பணிப்பாளர் பயோலா பம்பலோனி ஆகியோரின் தலைமையில் கடந்த 9 ஆம் திகதி கொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது.

அதனையடுத்து அக்கூட்டம் தொடர்பில் இருதரப்பினரும் இணைந்து செவ்வாய்க்கிழமை (16) வெளியிட்டுள்ள கூட்டறிக்கையிலேயே மேற்கண்ட விடயங்கள் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:

ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான கூட்டு ஆணைக்குழுவின் 25 ஆவது கூட்டத்தின்போது நல்லிணக்கம், மனித உரிமைகள், வர்த்தகம், அபிவிருத்தி ஒத்துழைப்பு, காலநிலை மாற்றம் மற்றும் சூழலியல் பிரச்சினைகள், துறைசார் ஒத்துழைப்பு, சர்வதேசப் பாதுகாப்பு ஒத்துழைப்பு என்பன உள்ளடங்கலாக இருதரப்பு உறவுடன் தொடர்புடைய பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இலங்கை சுதந்திரமடைந்து 75 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், மிகமுக்கியமானதொரு தருணத்திலேயே கூட்டு ஆணைக்குழுவின் சந்திப்பு இடம்பெற்றது.

இதனப்போது கடந்த சில வருடங்களாக சமூக மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவேண்டியிருப்பதன் அவசியம் குறித்து ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுக்கு இலங்கைத்தரப்பு விளக்கமளித்தது.

அதேவேளை இலங்கையின் ஜனநாயகக்கட்டமைப்புக்களின் மீண்டெழும் தன்மை குறித்தும் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் அரசாங்கம் அடைந்துள்ள முன்னேற்றம் குறித்தும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் தமது பாராட்டை வெளியிட்டனர்.

மேலும் உள்ளுராட்சி மன்றத்தேர்தல்கள் குறித்த ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளின் கேள்விக்குப் பதிலளித்த இலங்கை அதிகாரிகள், இவ்விடயம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் முன்னிலையிலுள்ள வழக்குகள் தொடர்பில் விளக்கமளித்தனர்.

அடுத்ததாகப் பொருளாதார மீட்சியைப் பொறுத்தமட்டில், இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதியுதவிச் செயற்திட்டத்துக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதியளித்துள்ளமை குறித்து ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எடுத்துரைத்த இலங்கை அதிகாரிகள், இவ்விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் உறுப்புநாடுகளால் வழங்கப்பட்ட ஒத்துழைப்புக்குத் தமது நன்றியை வெளிப்படுத்தினர்.

அத்தோடு இலங்கை அரசாங்கம் நாணய, நிதி மற்றும் ஆட்சிநிர்வாக மறுசீரமைப்புக்களை ஏற்கனவே மேற்கொள்ள ஆரம்பித்திருப்பது குறித்தும், இம்மறுசீரமைப்புக்களின் விளைவாக வறிய மற்றும் பின்தங்கிய சமூகப்பிரிவினர்மீது ஏற்படக்கூடிய தாக்கங்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பது பற்றியும் விளக்கமளிக்கப்பட்டது.

அதற்குத் துலங்கலை வெளிப்படுத்திய ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் சமூகப்பாதுகாப்பு செயற்திட்டங்களின் அவசியம் மற்றும் சுயாதீன கட்டமைப்புக்களின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தியதுடன் தற்போது திட்டமிடப்பட்டுள்ள மறுசீரமைப்புக்கள் ஊழலுக்கு எதிரான வலுவான நடவடிக்கைகளை உள்ளடக்கியுள்ளமையைப் பாராட்டினர்.

அதேபோன்று ஜனநாயக நிர்வாகத்தை மேலும் விரிவுபடுத்தக்கூடிய அரசியலமைப்புக்கான 21 ஆவது திருத்தம் தொடர்பில் ஐரோப்பிய அதிகாரிகள் தமது வரவேற்பை வெளிப்படுத்தினர்.

அதுமாத்திரமன்றி ஆட்சிநிர்வாகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைகள் தொடர்பான செயற்பாட்டுக்குழுவினால் கடந்த 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட விடயங்கள் தொடர்பில் நினைவுறுத்திய ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகள், அக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தினர்.

மேலும் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் தொடர்பான கலந்துரையாடலின்போது, அச்சட்டமூலத்தைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு முன்னதாக அதில் திருத்தங்களை மேற்கொள்ளும் நோக்கில் நீதியமைச்சானது பொதுமக்களிடமிருந்தும், ஏனைய சம்பந்தப்பட்ட தரப்புக்களிடமிருந்தும் திருத்த யோசனைகளைக் கோரியிருப்பதாக இலங்கைப்பிரதிநிதிகள் மற்றைய தரப்புக்கு எடுத்துரைத்தனர்.

அதுமாத்திரமன்றி வெகுவிரைவில் பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யவிருக்கின்ற இச்சட்டமூலம் சர்வதேச நியமங்களுக்கு ஏற்புடையதாக அமைந்திருப்பதை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

அதனையடுத்துக் கருத்து வெளியிட்ட ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகள் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டிருப்போரை விடுதலை செய்வதற்கான இலங்கையின் கடப்பாடு குறித்து நினைவுபடுத்தியதுடன் பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பயன்படுத்தவேண்டாம் எனவும் வலியுறுத்தினர்.

இதன்போது இலங்கையின் நீதித்துறைசார் மறுசீரமைப்புக்கள் மற்றும் நல்லிணக்க செயன்முறையில் தமது தொடர்ச்சியான ஆதரவை மீளுறுதிப்படுத்திய ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகள், புதிதாக நிறுவப்படவுள்ள உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, ஏற்கனவே இயங்கிவரும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் ஆகிய அனைத்துக்கட்டமைப்புக்களும் சுயாதீனமாக செயற்படவேண்டியதன் அவசியத்தையும், பாதிக்கப்பட்ட தரப்பினருடனான தொடர்ச்சியான கலந்துரையாடல்களின் முக்கியத்துவத்தையும் மீண்டும் சுட்டிக்காட்டினர்.

அடுத்ததாக இருதரப்பினருக்கும் இடையிலான வர்த்தகத்தொடர்புகளின் முக்கியத்துவம் குறித்து இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகள் அவதானம் செலுத்தினர்.

இதில் குறிப்பாக ஐரோப்பிய உற்பத்திகள் இலங்கையின் சந்தைக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில் விதிக்கப்பட்டுள்ள இறக்குமதிக்கட்டுப்பாடுகளைத் தளர்த்துமாறு ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகள் இலங்கை அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டனர்.

அதேபோன்று இலங்கை – ஐரோப்பிய ஒன்றிய முதலீட்டாளர்களின் கலந்துரையாடலை வெகுவிரைவில் இலங்கையில் நடாத்துவதற்கும் இருதரப்புக்கும் இடையில் இணக்கம் காணப்பட்டது.

மேலும் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதியிலிருந்து அடுத்த 10 வருடகாலத்துக்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை தொடர்பான புதிய வழிகாட்டல்களை முன்வைத்த ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள், 2020 – 2022 ஆம் ஆண்டு வரையான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை மீளாய்வு அறிக்கை எதிர்வரும் மாதங்களில் வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்டனர்.