தமிழரின் தலை பற்றிப் பேசும் மேர்வினுக்கு தலையில் சுகமில்லை என்பது நாடறிந்ததே! – மனோ கணேசன்

“தமிழரின் தலையைக் கொய்து வருவேன் எனக் கொக்கரிக்கும் மேர்வின் சில்வாவுக்குத் தலையில் சுகமில்லை என்பது நாடறிந்த சங்கதி. கூடவே ராஜபக்ச குடும்பத்தைத் திருடர்கள், தரகுப் பணம் பெற்றவர்கள் என்கிறார். அந்தக் குடும்பத்துடனேயே மேர்வின் சில்வா குடும்பம் நடத்தினார் என்பதும் நாடறிந்த சங்கதி. ஒருவேளை அத்தகைய திருட்டுத் தரகுப் பணம் பெரும் பிரச்சினையால் ராஜபக்சர்களுடன் நடத்திய குடும்பம் பிரிந்ததோ என்ற கேள்வியும் எப்போதும் இந்நாட்டு மக்கள் மனங்களில் இருக்கும் சங்கதி.”

– இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

“எல்லாவற்றையும் மிஞ்சிய உலக மகா கேலிக்கூத்து என்னெவென்றால் உலகத்துக்கு அஹிம்சையைப் போதித்த போதிசத்துவர் பெயரில் இவர் தமிழர்களின் தலையை வெட்டுவாராம். இவரைப் போன்றவர்களிடமிருந்து பெளத்தைப் போதிசத்துவர்தான் மீண்டும் பிறந்து வந்து காப்பாற்ற வேண்டும்” என்றும் மனோ எம்.பி. குறிப்பிட்டார்.

இது பற்றி அவர் மேலும் கூறியதாவது:-

“முன்னையை ராஜபக்ச ஆட்சி காலத்தில், ஊடகவியலாளர்களின் கால்களை உடைப்பேன் என்றும் இந்த மேர்வின் சில்வா சொன்னார். அப்புறம் அரச ரூபவாஹிணிக் கூட்டுத்தாபனத்துக்குச் சென்று தன் தலையையே உடைத்துக்கொண்டு வந்தார். பின்னர் தேர்தலில் போட்டியிட்டு சிங்கள மக்களாலேயே அரசியலில் இருந்து விரட்டப்பட்டார்.

நாட்டில் விகாரைகளையோ, கோயில்களையோ, பள்ளிகளையோ, தேவாலயங்களையோ கட்டுவிப்பதில், பூஜைகளைச் செய்வதில் இடைஞ்சல்கள் ஏற்பட்டால், அதைச் சட்டப்படி அணுக வேண்டும். அந்தச் சட்டமும் அனைவருக்கும் பொதுவாக இருக்க வேண்டும்.

தமிழர் தலைகளைக் கொய்து வருவேன் என்ற இப்படி தலை வெட்டும் காலம் எல்லாம் இப்போது மலையேறி விட்டது. இவரைப் பாரதூரமானவராக எடுக்கத் தேவையில்லை. ஆனால், இவரது கருத்து பாரதூரமானது. நாட்டில் இன மத குரோதத்தை உருவாக்கும் கருத்து. இவருக்கு எதிராகச் சட்டம் பாய வேண்டும். அரசில் இருக்கும் தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் இது பற்றி தங்கள் தலைவர்களான மஹிந்த ராஜபக்ச, ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடம் புகார் செய்ய வேண்டும்.” – என்றார்.