தமிழர்களின் காணிகளை அரசாங்கம் அபகரிக்கவே பாதுகாப்பு அமைச்சுக்கு அதிக நிதி – சித்தார்த்தன் எம்.பி

வரவு செலவு திட்டத்தில் கூடுதல் நிதி பாதுகாப்பு அமைச்சுக்கு ஒதுக்கப்படுவதன் காரணம் தமிழர் பகுதிகளில் உள்ள காணிகளை கையகப்படுத்தவே என்று யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (17) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்காக சமர்ப்பிக்கப்பட்டிருந்த வரவு செலவு திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

“பொருளாதார நெருக்கடி நிலையில் நாடு வங்குரோத்து நிலையினை அடைந்துள்ளது. இந்த நிலையிலும் கூட இந்த வரவு செலவு திட்டத்திலே பாதுகாப்பு அமைச்சுக்கு அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. யுத்தம் முடிவடைந்து விட்டது இந்தநிலையிலும் பாதுகாப்பு அமைச்சுக்கு ஏன் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டு வருகின்றது என்ற கேள்வி எம்மத்தியில் எழுக்கின்றது. எம்மை பொறுத்தவரை இந்த கூடுதல் நிதி ஒதுக்கப்படுவதற்கான காரணம் எங்கள் பகுதிகளிலே உள்ள காணிகளை அபகரிப்பதற்கு, காணிகளை கையகப்படுத்தி அவற்றை வெவ்வேறு தேவைகளுக்காக பயன்படுத்துவதற்கு என அந்த நிதிகள் பயன்படுத்தப்படுகின்றது” எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

”யுத்த காலங்களில் நீங்கள் யுத்தம் புரிவதற்காக நீங்கள் வாங்கிய ஆயுதங்கள், தளவாடங்கள் சம்மந்தமாக செலவுகளை பார்க்கலாம். அவைகள் கூட இன்று இல்லாத நேரத்தில் கூட இந்த நிதிகள் எதற்காக? ஒதுக்கப்படுகின்றது. இன்றும் இந்த நாடு யுத்த மனப்பான்மையில் தான் இருக்கின்றதா? இதனை நாங்கள் மிகத்தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். ஆகவே இந்த பாதுகாப்புக்கு அமைச்சுக்கு ஒதுக்கபப்டுகின்ற நிதி நிச்சயமாக குறைத்துக்கொள்ள வேண்டும்.அரைவாசியாக கூட வெட்டிக்கொள்ள முடியும். அதேபோல் இன்றைய நாளாந்த வருமானத்தினை எதிர்பார்த்து வாழுகின்ற மக்கள் அந்த குடும்பங்கள் பட்டினியாக இருக்கின்ற நிலைமையை நாங்கள் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது.

அவர்களுக்கான நிவாரணங்களை சரியான முறையில் கொடுக்கப்பட வேண்டும். அது சரியாக கவனிக்க வேண்டும். இந்த முறை அதுக்காக நிதி ஒதுக்கப்படவில்லை. இதெல்லாம் இன்று இருக்கக்கூடிய பொருளாதார நிலையிலே மக்களுடைய வறுமையை போக்குவதற்கு முயற்சி எடுப்பது மிக முக்கியமான இருந்தாலும் அவர்கள் அதை செய்வதற்கு கால தாமதம் அல்லது செய்யாது விடுகின்ற நிலைமையை எங்களால் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது.

இந்த நாட்டினை பொறுத்த மட்டில் பேராதனை பல்கலைக்கழகத்தால் ஆய்வு செய்யப்பட்டு ஏறக்குறைய 40 வீதமானவர்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் மிக பாதிப்பான நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இந்த முடிவற்ற பொருளாதார நெருக்கடியால் வறுமை நிலைக்கு கீழ் சென்றிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது . அதேவேளையில் உலக வங்கியின் 2020இ2021 அறிக்கையில் வறுமை நிலையில் ஏறக்குறைய 13.1 வீதமான மக்கள் இந்த நாட்டில் வறுமை நிலையில் இருந்திருக்கிறார்கள். ஆனால் 2022 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அது 25.6 ஆக உயர்ந்து நிற்கிறது. இவ்வாறு படிப்படியாக மக்கள் வறுமை நிலைக்கு சென்றிருக்கிறார்கள் அவர்களை மீடடெடுப்பதற்கான முக்கியமாக வரவு செலவுத்திட்டத்தினை பொறுத்த மட்டில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுகின்றது.

ஆனால் இவைகள் செயற்படுத்தப்பட வேண்டும். இதற்கு நிதி எங்கிருந்து வரும்? ஏனென்றால் இந்த நாட்டின் மொத்த கடன் 51 பில்லியனுக்கு கூடுதலாகும். இதில் இறையாண்மை வரி 35 பில்லியன் இருக்கிறது. ஆனால் இந்த வரவு செலவுத்திட்டம் முழுமையாக ஐ.எம்.எவ் ஊடாக வரக்கூடிய அந்த நிதியினை எதிர்பார்த்து போடப்பட்ட வரவு செலவுத்திட்டமாகவே பார்க்கபப்டுகின்றது. எதிர்பார்க்கின்ற நிதியை 2.9 பில்லியன். இதை பார்க்கின்ற போது எவ்வாறு சாத்தியமாகப்போகிறது நாட்டினை எவ்வாறு மீண்டும் கட்டியெழுப்புவது என்ற பல கேள்விகள் இருக்கின்றது. ஒரு விடயத்தினை மறந்து விட கூடாது ஜனாதிபதி அவர்கள் மீண்டும் மீண்டும் பல தடவைகள் சொல்லியிருக்கிறார் கடந்த காலங்களிலே மக்களுக்கு பிரபல்யமான தீர்மானங்களை எடுத்தார்கள்.

சில கடுமையான தீர்மானங்களை எடுக்காமல் விட்டதால் தான் இந்த நாடு இப்படி போய் இருக்கின்றது. ஜனாதிபதி கூறிய கூற்று 100 வீதம் சரிஇ அவர் ஒரு இடத்தில் ஒரு உதாரணம் கூறுகின்றார் முன்னாள் சிங்கப்பூர் பிரதமர் அவர்கள் கூறியிருக்கிறார் நான் கடுமையான தீர்மானங்களை எடுத்தேன். பண்டார நாயக்க அவர்கள் பிரபல்யமான திருப்திப்படுத்துகின்ற தீர்மானகளை எடுத்தார். அதனால் தான் இலங்கை பின்னடைவுக்கு போய் இருக்கின்றது என்று கூறியிருக்கிறார். இவர் கூறிய விடயம் நிச்சயிக்க இனப்பிரச்சனைக்குரிய விடயம் தான். ஏனெனில் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்றால் இந்த 56 சிங்களம் மாத்திர சட்டம் அதிலிருந்து ஆரம்பிக்கப்பட்டது

தான் இந்த இனப்பிரச்சினை என்பது. அதன் சரித்திரத்துக்கு போக வேண்டாம் அதனால் ஏற்படட் அழிவுகள் தான் பெரிது. அதனால் தான் படிப்படியாக ஒரு யுத்தம் உருவாகி யுத்தத்திற்க்காக அரசாங்கம் கோடிக்கணக்கான மில்லியன் பணத்தினை செலவழித்து இந்த யுத்தத்தினை நடாத்தி அதற்காக கடனை பெற்று அந்த கடனை அடைக்க மீண்டும் கடனைப் பெற்று இந்த நாடும் அழிந்து பின்னடைவுக்கு செல்ல வேண்டிய நிலைமை வந்தது.

இதனை கூறிய ஜனாதிபதி ஒரு சரியான முடிவை எடுக்க வேண்டும். அவரும் பிரசித்தமான அல்லது மக்களுக்கு பிரபல்யமான தீர்வை எடுக்க கூடாது .இன்று இருக்கின்ற நிலையில் நியாயமான அரசியல் தீர்வை தான் முழுமையான ஒரு பிரச்சினைக்கு யாருமே தீர்வாக சொல்லுவார்கள். ஏனென்றால் ஒரு இனப்பிரச்சினை இருக்கும் வரை நல்லிணக்கத்தை அடைய முடியாது.” என்றார்.