தமிழ் ஈழ விடுதலை இயக்கம் 11வது தேசிய மாநாட்டுப் பிரகடனம் 2024

எமது மக்களின் நீண்ட கால அரசியல் அபிலாசைகளான வடக்கு கிழக்கு இணைந்த, தமிழர் தாயகத்தில், தம்மைத்தாமே ஆளுகின்ற, சுயநிர்ணய உரிமையை அனுபவிக்க கூடிய, சுயாட்சி அரசியல் கட்டமைப்பினை உருவாக்குவதற்கான தொடர்ச்சியான அரசியல் வேலைத்திட்டத்தினை முன்னெடுப்பது என்றும்

இந்த இலக்கை அடைவதற்கான நிரந்தர பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து, அந்தப் பொறிமுறையை இந்தியாவினுடைய மேற்பார்வையிலும் சர்வதேச நாடுகளின் பங்களிப்போடும் ஐநாவின் வழிநடத்தலோடும் புலம்பெயர் உறவுகளின் ஒருங்கிணைப்போடும் உருவாக்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும்

எமது தாயக பிரதேசத்தை எமது பாரம்பரிய வதிமிடமாகவும், எமது தனித்துவமான இன அடையாளத்தையும், தமிழ் மொழிக்கான அங்கீகாரத்தையும் உறுதிப்படுத்திய இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கை அரசியல் யாப்பில் திருத்தங்களோடு உருவாக்கப்பட்ட மாகாண சபை ஆட்சி முறைமையை முற்று முழுதாக நடைமுறைப்படுத்த அரசுக்கு தொடர் அழுத்தங்களை பிரயோகிக்கவும்

எமது இனத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலை உட்பட மனித உரிமை மீறல்கள், யுத்த குற்றங்கள் மற்றும் மனிதத்துக்கு எதிரான குற்றங்களால் பாதிக்கப்பட்ட நீதி கோரி நிற்கும் எமது உறவுகளுக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க சர்வதேச நீதிப் பொறிமுறைக்காக தொடர்ந்தும் பாடுபடுவது என்றும்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கான நீதியை கோரி நிற்கும் எம் மக்களுக்கான நீதியை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்தும் மேற்கொள்வது என்றும்

அரச இயந்திரங்களினால் எமது தாயக பிரதேசத்தில் தொடர்ந்து அபகரிக்கப்பட்ட வந்த காணிகளை விடுவிப்பதற்கும், தொடர்ச்சியாக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் காணி அபகரிப்பின் விளைவாக எமது வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்படுவதாலும், பௌத்த சின்னங்களை நிறுவுவதன் ஊடாகவும் நமது மக்களின் வாழ்வாதாரத்தையும் இனக்குடிப் பரம்பலையும் சிதைத்து நமது சுயநிர்ணய உரிமைக்கான தகுதியை கேள்விக்குறி ஆக்க முயலும் செயல்பாடுகளுக்கு எதிரான சகல அரசியல் நடவடிக்கைகளையும் மேற்கொள்வது எனவும்

நமது இனக் குடிப்பரம்பலின் செறிவைப் பேண எமது எதிர்கால சந்ததிக்கான வளமான வாழ்வை உறுதிப்படுத்தி அதனூடாக எமது இனத்தின் இருப்பை தக்க வைக்க, எமது தாயக பூமியில் பொருளாதார அபிவிருத்தியை உறுதி செய்யும் தற்சார்பு பொருளாதார கட்டமைப்பை உருவாக்கி அதை செயல்படுத்த உரிய வேலைத்திட்டங்களை மேற்கொள்ளவும்

எமது இனத்தின் கல்வி, கலை, கலாச்சாரம், பண்பாட்டு விழுமியங்களை பாதுகாப்பதோடு அவற்றை வளர்ப்பதற்கும் செழுமைப் படுத்தவும் வேலை திட்டங்களை முன்னெடுப்பது என்றும்

நமது மக்கள் நலன் சார்ந்து பிராந்திய அரசியல் உறவை வலுப்படுத்தவும், சர்வதேச நாடுகளின் ஆதரவை திரட்டவும் அதற்கான பூகோள அரசியல் நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பது என்றும்

மேற்கூறிய எமது மக்களின் நலன் சார்ந்த அரசியல் அபிலாசைகளையும் உரிமையையும் வென்றெடுப்பதற்கு தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் உட்பட எமது தேசியத்தை நேசிக்கும் அனைத்து தமிழ் தரப்பினரையும் ஒன்றிணைத்து புலம்பெயர் உறவுகளையும் ஒருங்கு சேர்த்து ஒரு தேசமாக எமது இனத்தை கட்டி எழுப்பும் பணியில் முழு முயற்சியோடு ஈடுபடுவது என்றும் இந்த மாநாட்டில் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் பிரகடனப் படுத்தி நிற்கிறது.